மொழி என்றால் என்ன? கருத்துக்களை பரிமாறக்
கொள்ளப் பயன்படும் ஒரு கருவி. இது எல்லோரும் சொல்கிற ஒரு சேதி. கருவி
என்றால் என்ன? ஆயுதமா? அரிவாளா? துப்பாக்கியா? இதற்கு விடையாக பெரியார்
இத்துடன் கூடுதலாக ஒன்றைச் சொல்கிறார். மொழி என்பது சப்தம் (ஒலி)
என்கிறார். விலங்குகளும் ஒலியை எழுப்புகின்றன. அது ஒலிக்குறிப்பு
என்கிறார். அதற்கு உதாரணம் தருகிறார், கோழி தன் குஞ்சுக்கு கருடன், கழுகு
போன்றவைகளால் ஆபத்து வரும் போது ஒரு வகையாக ஒலியை எழுப்புமாம். உடனே
கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியிடம் தஞ்சமடைகின்றன என்கிறார். இங்க பெரியார்
மற்றவர்களைப் போல் நூல்களில் படித்திருக்கிறேன் என்று சொல்லவில்லை. நான்
நேரில் பார்த்திருக்கிறேன் என்கிறார். இன்னொன்றையும் கூறுகிறார். குரங்கு,
தன் குட்டி குரங்கை அழைக்கும் போது பற்களைக் காட்டி, மேல் உதட்டையும் கீழ்
உதட்டையும் சேர்த்து ஏதோ முணுமுணுப்பது போல் செய்யும். உடனே குட்டிக்
குரங்கு தாய்க்குரங்குடன் வந்து சேரும் என்கிறார் பெரியார். அடுத்து
காக்காவுக்கு சோறு வைத்தால் எல்லா காகங்களையும் கூப்பிட்டு தானும் உண்ணும்
என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் பெரியார் சொல்கிறார், அந்த
காகம் அந்த சோற்றை உண்டு பார்த்து, அதனால் ஆபத்தில்லை என்றவுடன் மற்ற
காகங்களை கூவி அழைக்கிறது என்கிறார்.
மொழி
என்றால் சப்தம் என்று கூறிய பின், பல மொழி எப்படி ஏற்பட்டது? என்ற
கேள்விக்கும் பெரியார் விடை கூறுகிறார். மக்களிடையே போக்குவரத்துத்
தொடர்பின்மை, மலைகள், ஆறுகள் போன்றவைகளால் பிரிக்கப்படுதல் மற்றும்
தட்பவெட்ப நிலை ஆகியவையே காரணம் என்கிறார்.
தட்ப
வெப்ப நிலை எப்படி காரணமாக முடியும்? வடமொழியிலுள்ள ஹ போன்ற எழுத்துக்களை
அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டியுள்ளது. இது குளிர்ப் பிரதேசங்களில்
உள்ள ஆரிய பார்ப்பனர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் எளிதாகிறது. அவர்கள்
கொஞ்சிப் பேசினால் கூட சண்டை போடுவது போலத் தெரிகிறது என்கிறார் பெரியார்.
ஒரு
மொழி எவ்வாறு சிறப்படைகிறது என்ற கேள்விக்கு, அம்மொழியில் கிடைக்கும்
அரியக் கருத்துக்களாலும் முன்னேற்றக் கருத்துக்களாலும் என்கிறார் பெரியார்.
ஒரு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற போது பெரியார் சொல்கிறார், அது
நமது தன்மானத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்
என்கிறார்.
தமிழை ஏன் சிறந்த மொழி
என்பதற்கு பெரியார் சொல்கிறார், அது தகைமைசால் மொழி என்று
குறிப்பிடுகிறார். இங்கு தமிழறிஞர்கள் கூடியுள்ளீர்கள். இந்த தகைமைசால்
என்ற சொல்லுக்கு பொருள் கூற வேண்டும். பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று
சொன்னதை மட்டும் அந்த ஒரு சொல்லை மட்டும் உருவி வைத்துக் கொண்டு
பேசுகிறவர்கள் இந்த தகைமைசால் என்ற சொல் குறித்தும் விளக்க வேண்டும்.
தமிழ்
மொழி தொன்மையான நாகரிகம் உடைய மொழி. இயற்கையான நமது பழக்க வழக்கத்திற்கு
ஏற்றதாக உள்ளது என்று கூறுகிறார். வட மொழி சொற்களை நீக்கிவிட்டால் நம்முடைய
பழந்தமிழ் தானாகவே கிடைக்கும் என்கிறார். இங்கு தூய தமிழ், தனித் தமிழ்
என்றும் கூறுகிறார்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்களது கருத்துக்களைத் திணிப்பதற்கு வடசொற்களை புகுத்தினர். அதனால் தமிழ் மொழி சீரழிந்தது என்கிறார் பெரியார்.
சாதி,
திவசம், திதி, கலியாணம் என்று பண்பாட்டு சீரழிவைக் குறிக்கும் சொற்களை
கூறுகிறார். அடுத்து மோட்சம், நரகம், ஆத்மா என்ற மூடநம்பிக்கைச் சொற்களை
வகைப்படுத்துகிறார் பெரியார். இன்று வரை நாம் இந்தச் சொற்களைத்தான்
பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு ஆரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும்
புகுத்திவிட்டனர்.
தாய்ப்பால் என்ற
கருத்தையும் உடைக்கிறார் பெரியார். ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைக்
குழந்தைகளில் ஒன்றை தமிழ்நாட்டிலும் மற்றொன்றை வெளிநாட்டிலும் வளருங்கள்.
தமிழ் நாட்டில் வளர்ந்த குழந்தை தமிழிலும் மத வாதியாகவும் இலண்டனில்
வளர்ந்த குழந்தை ஆங்கிலத்திலும் அறிவியல்பூர்வ அறிவைக் கொண்டதாகவும்
வளருகிறது என்கிறார். எனவே ஒருவர் சிறப்படைவதற்கு சுற்றுபுறச் சூழலும்
காரணம் என்கிறார் பெரியார்.
பெரியாரைப்
பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப்
போரில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் பெரியார் என்பது. இது
அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு.
அப்போது
பெரியார் கூறுகிறார், எந்த பார்ப்பானாவது சமஸ்கிருதம், இந்தி வேணும் என்று
சொல்கிறானே தவிர அதில் கல்வி படிக்க விரும்புகிறானா? என்று கேட்டுவிட்டு,
தமிழையும் இந்தியையும் கூறி சண்டையை ஏற்படுத்தி விட்டு, அவன் ஆங்கிலம்
படித்து மேலே மேலே முன்னேறுகிறான் என்கிறார் பெரியார். 1965 இந்தி
எதிர்ப்பு போரில் இதுதான் பெரியாரின் நிலைப்பாடு. பேராசிரியர் சுப.
வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம் என்ற நூலில்
நடுநிலை என்ற பெயரில் இந்த தவறான செய்தியை பதிவு செய்கிறார்.
தமிழ்ப்
புலவர்களின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் பெரியாருக்கு பெருங்கோபம்
இருந்தது. 1920 வரை என்னிடம் வாதம் செய்யாத, கைநீட்டாத புலவர் இல்லை.
எனக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையைத் தெரியாது. ஆனால் எனக்கு உ.வே.சாமிநாத
அய்யரைத் தெரியும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை தெரியும். மறைமலையடிகளைத்
தெரியும் என்றார்.
தமிழைக்
கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், சொந்த புத்தி
இல்லாதவர்கள், புளுகர்கள் என்பதுதான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப்
புலவர்களைப் பற்றிய கருத்தாக பெரியாருக்கு இருந்தது. எனவே தமிழறிஞர்கள்
பெரியார் சொன்ன தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற சொற்றொடரை உருவி
எடுத்துக்கொண்டு பெரியார் மீது அவதூறு பேசுகின்றனர்.
தமிழ்
எழுத்துக்களைப்பற்றி பெரியார் சொல்வார், ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகள்
நேரடியாக உதவுவதில்லை. இவை உயிர் மெய் எழுத்துக்களாகத்தான் பயன்படுகின்றன
என்று ஆய்வு செய்து கூறுகிறார். தமிழறிஞர்கள் இது குறித்து பேச வேண்டும்.
பெரியாருக்கு தமிழ் எழுத்துக்கள் குறித்து ஒரு கணக்கு இருக்கிறது. மொத்த
தனி உருவ எழுத்துக்கள் தமிழில் அதிகம். மொத்த எழுத்துக்களில் 135
எழுத்துக்கள் தனி உருவம் கொண்டுள்ளது. அவற்றை தனியாக ஞாபகம் வைத்துக்கொள்ள
வேண்டியுள்ளது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்கிறார். ங, ஞ ஆகிய
எழுத்துக்கள் மெய் எழுத்து உருவத்தைத் தவிர வேற உருவங்கள் பயன்படுவதில்லை.
இப்படியெல்லாம் பெரியார் எழுத்துக்களைப் பற்றியும் கூறுகிறார்.
தமிழ்
எழுத்துக் கூட்டுவதும், உச்சரிப்பும் அதன் இலக்கணமும் இயற்கையை, இயல்பாகக்
கொண்டுள்ளது என்று கூறும் பெரியார் அதை செம்மைப்படுத்த வேண்டாமா என்று
கேட்கிறார்.
No comments:
Post a Comment