Saturday, February 12, 2022

அப்பாக்களின் தியாகம்...


பத்து மாதம் கருவைச் சுமந்து ஈன்றெடுப்பதால் பெண்ணொருத்தி தாய் என்ற பதவியை அடைகிறாள், அந்தத் தாயையும் சுமக்கும் தந்தையின் கண்ணீரை யாரேனும் கண்டீரோ!

அன்று கருவுற்ற நாளில் பிள்ளையிடம் தொடங்கும் அவளன்பு தான் கண்மூடும் நாள் வரை மாறாது. என் சிறு வயதில் பலரும் என்னிடம் அதிகம் கேட்ட கேள்வி – நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா? இக்கேள்விக்கு நான் சொன்ன/சொல்லும் ஒரே பதில் `அம்மா செல்லம்` என்பது தான்.  பல காலம் நிலைக்கவில்லை அப்பதிலும், அப்பா என்ற தியாகியை நான் உணரும்வரை!

என்னைக் கேட்டால் அம்மாவின் பாசத்திற்கும் அப்பாவின் பாசத்திற்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு என்பேன். அம்மாவின் அன்பு எதையும் எதிர்பார்க்காது. பிள்ளையின் பிறப்பிலிருந்து அவர்கள் வளரும்வரை முப்பொழுதும் அம்மாக்கள் உடனிருப்பதால் அம்மாவே உலகம் என்ற நிலைப்பாடு இருக்கும், அதுவே நியதி, அதுவே உண்மை. 

அப்பாக்களின் அன்பும் பாசமும் பிள்ளை வளரும் போது தேய்பிறை போல் மறைவதாகத் தோன்றும். அதுவே நியதி, ஆனால் அந்நியதி உண்மையல்ல என்பது பின்னொரு நாளில் அப்பிள்ளை தன் மகனை வளர்க்கும்போது தான் புரியும்!

அப்பா என்றாலே திட்டுவதற்கும் அடிப்பதற்கும்தான் என்று பிள்ளைகள் எண்ணுவதுண்டு. அப்பிள்ளைகள் தவறே செய்தாலும் கட்டியணைப்பது தாயுள்ளம், தவறைச் சுட்டிக்காட்டி அன்பையும் கண்டிப்பாய் காட்டுவது  தந்தையுள்ளம். 

ஒரு தாயின் அன்பு, பிள்ளை பிறந்த நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைதான் அவன் வளர்ந்து, பெரியவனாகி அவனுக்குத் திருமணமான பின்பும் மாறாது. அவனுக்கென்று பெண்ணொருந்தி வந்த பின்பும் அவள் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சி தருவான். எனவே அம்மாவின் அன்பிலும் பாசத்திலும் வேறுபாடு காண்பதறிது, அவ்வன்பு ஈடு இணையற்றது.

இத்தகு அன்னையரின் அன்பையும் பாசத்தையும் பற்றி பல்வேறான கவிதைகளும் கதைகளும் இங்குள்ளன. என்ன காரணத்தாலோ இவற்றிற்கெல்லாம் பின்புலமாக விளங்கும் நம் தந்தையரைப் பற்றிய பாடல்களும் கவிதைகளும் மிகக்குறைவே! அப்பாக்களின் அன்பும் பாசமும் காலச் சுழற்சியில் மறைந்துவிடுகின்றன. 

பிறந்த குழந்தை தன் அம்மாவின் பாலை ருசிக்கும் போது அவள் முழுமையடைவதாகச் சொல்கிறது இவ்வுலகம். என்ன காரணத்தினாலோ அவ்விறைவன் தந்தையருக்கு கருவறையையும் பால் சுரக்கும் பேறையும் அளிக்காமல் தானும் ஒரு ஆணாதிக்கவாதியாக நிற்கிறான். இதுவும் ஆண்களுக்கெதிரான இறைவனின் ஓரவஞ்சனை அல்லவா?

குழந்தை தவழத் தொடங்கும் பொழுது தரையில் விழும் நொடியில் தாங்கிக் கொள்ள முனைபவள் அம்மா. அய்யோ என் செல்லத்திற்கு எங்காவது அடி பட்டுவிட்டதா என்று தேடி அழுவாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் உடனே அப்பா சொல்வார் - `அவனைத் தூக்காதே, இரண்டு மூணுதடவ விழுந்தாதான் தவழ்ந்து பழகுவான்` என்று. அம்மா நினைப்பாள் `என்ன மனுஷன் இவர், புள்ள கீழ விழுந்திருச்சு கொஞ்சம் கூட பாசமே இல்லாம பேசராரு, நீ அம்மாகிட்ட வாடா செல்லம்` என்றழைத்துக் கட்டியணைத்துக் கொஞ்சுவது அம்மாக்களின் இயல்பு. 

இதுபோன்ற அப்பாக்களின் செயல்களுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களும் இடர்களும் மாறி மாறி வரும், எனவே இதுபோன்ற நிலைகளில் மனதை தளரவிடாமல் வலிகளைத் தாங்கித் திரும்பத் திரும்ப முயற்சி செய்தால் மட்டுமே நம் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்த்துவதற்காக செய்யும் செயலாக இருக்கும். அனைவரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் பிள்ளை விழுந்த இடத்தில் தடவிப்பார்த்துவிட்டு வருத்தப்படும் அவன் தான் நம் அப்பா!

இதே நிலைதான் பின் மிதிவண்டி பயிலும் நாட்களில் கீழே விழுந்து கிடக்கும் பிள்ளையை பார்க்கும் அம்மா, அப்பாக்களின் செயல். அம்மாவின் அன்பு இது சரியா? தவறா? என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. பிள்ளைக்கு வலிக்குமே என்ற ஏக்கம் தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளையின் மேலிருக்கும் அன்பு மாறவே மாறாது. கீழே விழுந்தா பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் முயற்சி செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பது தந்தையின் பாசம். 

அம்மாவிற்கு பிள்ளையிடம் ஒரே ஒரு முகம் மட்டுமே இருக்கும், ஆனால் அப்பாவிற்கு பல முகங்கள் இருக்கும். உள்ளேயிருக்கும் அன்பை வெளிக்காட்டாமல் துக்கப்படும் அப்பாக்களின் தியாகமே அப்பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கும். நம் அப்பாக்கள் பலரும் உணர்ச்சியை அடக்கி அவற்றின் கலவையாய் இருப்பர் (Emotional mixture & non-expresssive).

இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் அப்பாதான் கதாநாயகன். அவரிடமிருந்தே பலவற்றையும் கற்கத் தொடங்குகிறோம். அப்பாவின் முதல் எழுத்தை நம் பெயருடன் இணைத்தெழுதும் நாமனைவரும் பாக்கியசாலிகள். பிள்ளைகளின் வளர்ச்சியில் ஆனந்தமடையும் முதல் ஜீவனும் அவரே. ஒவ்வொரு அப்பாக்களின் உழைப்பும் அவர்களின் பொருளாதாரமும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நன்கு அமைப்பதிலேயே இருக்கும். 

பிள்ளைகள் வாழ்வில் பயணிக்கும்போது அவர்களின் வழி நெடுக வரும் கற்களையும் முட்களையும் அகற்றுவதில் தான் அவர்களின் வாழ்க்கையையே செலவழிக்கிறார்கள். தனக்கென்று அவர்கள் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை, பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி என்று அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கிலே தங்கள் இளமையையும், இன்பத்தையும் விட்டுக் கொடுக்கின்றனர். 

பிள்ளைகளின் சுதந்திரத்திற்காகவும், அவர்களின் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் தன் நிம்மதியைத் தொலைத்து, அவமானங்களை ஏற்று உடல், மனச்சோர்வடையும் அப்பாக்கள் போற்றப் படவேண்டியவர்கள். அம்மாவின் அன்பை அவள் முத்தத்திலும், கண்ணீரும் காணலாம், ஆனால் அப்பாவின் அன்பை அவரின் கண்களிலும், அவரின் கை நம் தோல்மீது வைத்து அழுத்தும்போதும் உணரலாம். 

அணைத்துத் தூங்க வைப்பவள் அம்மா; தூங்கிய பிள்ளைக்குத் தெரியாமல் பிள்ளையின் பாதத்தில் முத்தமிட்டு தன் கண்ணீரை மனதில் சிந்துபவன் அப்பா! உள்ளத்து உணர்வுகளை மறைத்து அவற்றை வெளிக்காட்டாமல் நம்முன் கண்டிப்பாய் நடக்கும் ஒரு ஜீவன்தான் நம் அப்பா!

பிள்ளையின் ஆனந்தத்தில் தன் தூக்கத்தையும், வலிகளையும் தொலைத்து, காலைப் பேருந்தில் நிற்க இடமில்லாமல், நெடுதூரம் பயணித்து வேலை செய்துவிட்டு, பிள்ளை உறங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் வீட்டிற்கு வந்து, தூங்கும் மகனின் தலைமுடியை வருடும் தியாகிதான் நம் அப்பா!

அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் சேர்ந்து, நண்பர்களுடன் சந்தோசமாக சினிமாக்களிலும் பொழுதுபோக்குகளிலும் உறைந்து, பெற்றோரை மறந்திருக்கும் தருணங்களில்- `பாவம் ரொம்ப வேலை போலிருக்கு அதனாலதான் ஃபோன் பண்ணமுடியலைன்னு உங்கிட்ட சொல்லச் சொன்னான்` என்று மனைவியிடம் பொய்யுரைப்பவனே நம் அப்பா!

வலிகளையும், வேதனைகளையும் செய்வதறியாது கண்ணீராகக் கொட்டுபவள் அம்மா; அவ்வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு வயோதிகத்தில் அமைதியாய் பிள்ளைகள் முன் எதுவும் சொல்லாமல் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி நிற்கும் ஒரு குழந்தைபோல நிற்பவர்தான் நம் அப்பா!

இப்படி பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபோன் பண்ணிப் பேசுவான் என்று வலிகளைத் தாங்கி விழி பார்த்து நிற்பவன் தான் நம் அப்பா!

வாழ்வின் பல நிலைகளில் அப்பாக்கள் தான் பிள்ளைகளுக்கு ஆசானாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கற்றல் என்பது அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே நம் வீட்டினுள்ளேயே ஆரம்பமாகிறது. 

பிள்ளைகள் அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களில் சில:

நேர்மை

அமைதி

நியாகக் கோபம்

விடா முயற்சி 

நேரம் தவறாமை

பிறரை துன்புறுத்தாதே 

பயப்படாமல் தைரியமாக இருப்பது

பணத்திற்காக எதுவும் செய்யக்கூடாது

பணியை நிறைவுடன் செய்வது

சோர்வடையாமல் தன்னம்பிக்கையோடு இருப்பது

வலிகளைத் தாங்குவது

தோல்வியைக் கண்டு கலங்காமலிருப்பது

சகிப்புத்தன்மை

பழி பாவங்கள் செய்யக் கூடாது

தவறைத் தட்டிக் கேட்கவேண்டும்

இதனால் தான் நம் அப்பாக்கள் நமக்கு முதல் ஆசானாக இருக்கிறார்கள்.

அப்பாக்களின் மன அறையிலிருக்கும் பூட்டு என்றும் திறப்பதேயில்லை. அதனை திறந்து பார்ப்பதும் அவசியமற்றது – அவ்வறையினுள் இருப்பது கண்ணீரும் வலிகளுமே! அப்பாவின் அன்பும் தாயின் கருவறையைப் போன்றது தான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அக்கருவறையிலிருக்கும் அன்பு, பாசம் என்ற குழந்தை பிரசவிப்பதே இல்லை. அது தன் பிள்ளைகளின் ஆனந்தத்தைப் பார்த்துப் பார்த்து கருவறையினுள்ளே அழிந்துபோகும். 


இப்படி அப்பாவின் நிழலில் வளரும் பிள்ளைகள், பின்னாளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்பது எவ்வளவு கொடுமையானது! கல்வியையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து, நாமே கதி என்றிருந்தவர்களுக்கு இதுதான் நாம் செய்யும் கடமையா? என்னவொருக் கோழைத்தனம், இது மனிதத் தன்மையற்ற செயல். இக்காரியத்தைச் செய்யும் எவரும் வெட்கித்தலை குனியவேண்டும். அவர்களுக்கு இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் நிம்மதி வராது. 

அம்மாவின் கண்ணீரையும், தந்தையின் தியாகத்தையும் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் என் மனைவி சொல்வது – நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் அப்பாவை பிரதிபலிப்பதாகத் தோன்றுவதாகக் கூறுவார். என் பிள்ளையிடம் கண்டிப்பைக் காட்டும் பொழுதும், என்னுடைய நடை, பேச்சு என்று சொல்லும்போது ஆனந்தமாக இருக்கும். அவராக நான் மாறும் தருணங்கள் தரும் நிம்மதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா! அதை என்னென்று சொல்வது!

என் அப்பா எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை, மாறாக அப்படியே வாழ்ந்து காட்டினார். அவரது அலுவலக நண்பர்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு - `என்னய்யா இப்படி அரசு வேலையிலிருந்துவிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறே`. அதற்கு அப்பா சொல்லும் ஒரே பதில் `பிள்ளைகளுக்காகப் பெரிய சொத்துச் சேர்த்து வைக்காவிடிலும் பழி பாவங்களைச் சேர்த்து வைக்க மனமில்லை` என்பதுதான். இன்றும் அவரது வெள்ளைச் சட்டையில் பாக்கெட் வைத்துக் கொள்ளாமல், நேர்மையாக இருக்கிறார். அவருக்கு மகனாகப் பிறந்ததே நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

அவரிடமிருந்த அனைத்தையும் எனக்காகக் கொடுத்துள்ளார்; பெரிதாக   ஆசையொன்றுமில்லை, என் அப்பாவிடம் கேட்கும் வரம் இதுவே - இப்பிறவியைப் போல் எப்பிறவியிலும் என் பெற்றோருக்கே நான் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்பதே!

     என்னிடம் அவர் அடிக்கடிக் கூறும் வார்த்தைகள்;

எல்லாம் சரியாப் போகும் 

நான் இருக்கேன் 

நல்லதே நடக்கும் 

உடம்பைப் பார்த்துக்கொள் 

உன் மேலே நம்பிக்கை இருக்கு, நீ நல்லா வருவே 

பிள்ளையையும் மனைவியையும் நல்லா பார்த்துக்கொள்

      என் தந்தையைப் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது, பின்னொரு பதிவில்      அவற்றை எழுத முனைகிறேன்.

      என்னைப் பொறுத்தவரையில் அம்மாவின் பாசமும், அப்பாவின் தியாகமும் போற்றப்பட வேண்டியவை. அவர்களின் கண்ணீரும் தியாகமும் தான் நம்மை நன்னிலையில் வாழ உதவும். நம்மை வாழ்வின் ஒவ்வொரு சோகத்திலுமிருந்தும் காப்பது நம் பெற்றோர்கள் செய்த புண்ணியமும், நற்பலனுமேயாகும்.   

  இதுபோன்ற அப்பாக்களின் தியாகங்களுக்கு எனது வணக்கத்தைச் சமர்பிக்கிறேன்.

தாயின் காலடியே சொர்க்கம்!

 


உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்...அம்மாவைக் குறிக்கும் சொல்!

பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது. தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை!

கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமீபத்தில் தான் பெற்ற விழியற்ற இரு பிள்ளைகள் பார்வையைப் பெறுவதற்காகத் தன் விழிகளைத் தரும் நோக்கில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்செல்வியைச் சிந்தித்தால் போதும், இதயமுள்ள அனைவரையும் அழச் செய்த தமிழ்ச்செல்வியின் தற்கொலை ஒரு தவறான நடவடிக்கை...ஆனால், அதைச் தன்னலமற்றஒரு தாயால் மட்டுமே செய்ய முடியும்.

தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள் தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவு விடுகிறாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா'!

இந்தியாவில் ஓர் லட்சிய பெண் தாயே. அவள்தான் தன்னலமற்று துன்பங்களைச் சகித்துக்கொள்கிற எந்த பாவத்தையும் மன்னிக்கிற மனோபாவம் கொண்டவள்.

மேலை நாடுகளில் பெண் ஒருவனால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால் கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பூ அரும்பாகி, மலராகி, கனியாய் கனிவது போல், பெண்களுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என் மூன்று நிலைகள் உண்டு. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும்.  மலையில் உள்ள கல்லை யாரும்  மதித்து வணங்குவதில்லை. அது சிற்பியின் கைப்பட்டு சிலையாகும்போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்த சிலைக் கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. கன்னிப் பெண் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகிறாள். தாயாகும்போது குடும்பக்கோவிலில் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.

உலகத்தின் எந்த இடத்திலும் கெட்ட பிள்ளை உண்டு. ஆனாலும் எங்கேயும் கெட்ட தாய் இல்லை. இதற்கு நம் இதிகாசத்திலும் சான்று உண்டு.

கெளரவர்களின் தாய் காந்தாரி. கணவன் காணமுடியாத உலகைத் தானும் காண்பதில்லை என்று கண்களைப் பட்டுத்துணியால் மூடி மறைத்துக் கொண்டவள். காலம் முழுவதும் கற்புத் தவம் புரிந்த அந்த தாயுள்ளம், பாண்டவர்களால் துரியோதனனுக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என்று கலங்கித்தவித்தது. போர் மேகம் சூழ்ந்த போது அவள் துரியோதனனை அழைத்தாள். 'மகனே என் கற்புத் தவத்தை உன் உடலுக்கு கவசமாக்குகிறேன். குழந்தையாய் பூமியில் நீ பிறப்பெடுத்த போதிருந்த நிர்வாணகோலத்தில் என் முன் வந்து நில். துணியால் மூடிவைத்திருக்கும் என் விழி துறந்து உன் மேனி பார்க்கிறேன். என் பார்வை படும் இடமெல்லாம் உருக்கின் வலிமை பெறும்.  அதன் பின் உன்னை யாராலும் அழிக்க முடியாது!' என்றாள்.

தாயின் முன்னால் நிர்வாணமாக நிற்க நாணிய துரியோதனன் இடுப்பில் ஓர் ஆடையை அணிந்து வந்தான். கணவனின் கரம் பற்றிய காலம் தொட்டு  மூடிவைத்த விழிகளைப் பட்டுத் திரை விலக்கி, முதன்முதலாக மகனைப் பார்த்தால் காந்தாரி.  ஆடை மூடிய தொடைப் பகுதியில் அவள் பார்வை படாததால் அந்த இடம் மட்டும் பலவீனமுற்றது. அதை அறிந்து வைத்திருந்த கண்ணன் காட்டிய சமிஞ்சையின்படி, களத்தில் பீமன் துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து நிலத்தில் வீழ்த்தினான். ‌

தான் பெற்ற நூறு பிள்ளைகளும் அழிந்ததற்கு மூல காரணம் கண்ணனே என்று புரிந்துகொண்டாள் காந்தாரி.  'கண்ணா! நான் ஒரு பத்தினி என்பது உண்மையானால் இவ்வளவு அழிவுக்கும் அடித்தளமான நீ அழிந்து போவாய்.  இன்றிலிருந்து முப்பத்தாறு ஆண்டுகள் முடியும்போது உன் குலம் முழுவதும் அழியும். உறவுகளின்றி அநாதையாய் நீ மரணத்தைச் சந்திப்பாய். இது சத்தியம்!' என்று சபித்தாள். அவளுடைய சாபம் அப்படியே நிறைவேறியதாக பாரதம் கூறுகிறது. கெட்ட பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தாலும், பாசமில்லாத கெட்ட தாயை எங்கும் பார்க்க முடியாது. அவதார புருஷனையும் சபிக்கும் ஆற்றல் பெற்றது தாயின் பாசம்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. பற்றுகளிலிருந்தும் விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம். ஒரு துறவியை, அவரைப் பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால், தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும்.  ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால், அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழ வேண்டும். தந்தைகட்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

கேரளத்தில் உள்ள காலடியில் அவதரித்த ஆதிசங்கரர், எட்டு வயதில் நான்கு வேதங்களைக் கற்று முடித்து, பன்னிரண்டு வயதில் சாத்திரங்கள் அனைத்தையும் தேர்ந்து தெளிந்து, பதினாறு வயதில் பாஷ்யம் எழுதி, முப்பத்திரண்டு வயதில் அத்வைதியானார்.  அவர் துறவுக் கோலம் பூண்ட போது, தன் மட்டும் தனி மரமாக எப்படி வாழ்வது என்று தவித்தாள் அன்னை ஆர்யாம்பிகை. மரணத்தின் மடியில் மூச்சுத் திணறும் போது மகனுடைய மடியில் தலைசாய்க்கும் வரம் வேண்டினாள். 'தாயே! நான் எங்கிருந்தாலும் உன் மரணப் பொழுதில் வந்து மடி சுமப்பேன்' என்று சத்தியம் செய்தார் சங்கரர்.

காலம் அதன் போக்கில் வேகமாக ஓடியது. ஒருநாள் சிருங்கிரியில் சீடர்களுக்கு நடுவே அமர்ந்திருந்தபோது அவருடைய நெஞ்சில் தாயின் மரணப்படுக்கை நிழலாடியது. உடனே, காலடி நோக்கி விரைந்தார். மரண வாசலில் தடுமாறிக் கொண்டிருந்த தாயின் தலையை மடியில் சுமந்தார். ஆரியாவின் ஆன்மா அமைதியடைந்தது. ஊரும், உறவும் கூடியது. ஈன்ற அன்னைக்கு இறுதிக்கடன் முடிக்க சங்கரர் முடிவெடுத்தபோது 'துறவிக்கு ஏது உறவு?' என்று உரத்த குரலில் ஊர் கேட்டது. 'சந்நியாசம் வாங்கியவன் பிரேத சம்ஸ்காரம் செய்ய முடியாது' என்று அது தீர்ப்பு வாசித்தது. 'தர்மத்தை மீறினால் தள்ளி வைத்துவிடுவோம்' என்று சனாதனச் சமூகம் மிரட்டியது.

ஊரின் மிரட்டலுக்கும், உறவின் ஒப்பாரிக்கும் சங்கரர் வளைந்து கொடுக்கவில்லை. தன்னைப் பெற்ற தாயின் சடலத்தைத் தோளில் சுமந்தார். தனியனாய் கொல்லைப்புறம் நோக்கி நடந்தார். அன்னையின் சடலத்தை இறக்கி வைத்து, 'அக்கினித் தேவனே! சந்நியாச தர்மத்தைத் தாங்கி நிற்கும் நான் இதுவரை உனக்கு அவிர்ப்பாகம் அளிக்கவில்லை. இன்று என் தாயின் தேகத்தை உனக்கு ஆகுதியாய் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்' என்றார். அன்னை ஆர்யாவின் உடலை உடனே நெருப்பு சூழ்ந்தது. விருப்புவெறுப்புகளைக் கடந்து ஞானநிலை அடைந்த ஆதிசங்கரர், சுகதுக்கங்களுக்கு ஆட்பட்ட சாதாரண மனிதனைப் போல் தாயின் அன்பை நினைத்து நெஞ்சம் உருகி, ஐந்து பாடல்களில் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார்.  அந்த பாடல்கள் வடமொழியில் 'மாத்ருகா பஞ்சகம்' என்று அமரத்துவம் பெற்றுவிட்டன.

வாழ்க்கை உறவுகளை ஒரே நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தாராலும் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. தெரு மண்ணில் உருண்டும், குப்பையில் புரண்டும், காடு மேடுகளில் கால் கடுக்கத் திரிந்தும் பட்டினத்தாரின் காலம் நடந்தபோது, ஒருநாள் அவரைப் பெற்றெடுத்த தாய் கண் மூடிய செய்தி வந்து சேர்ந்தது. மயானம் நோக்கி ஓடினார். சுற்றத்தார் அடுக்கியிருந்த சிதையைத் தள்ளிவிட்டுப் பச்சை வாழை மட்டையில் தாயின் சடலத்தைக் கிடத்தி ஞான நெருப்பால் எரித்தார்.  பாசத்தால் ஆற்றமாட்டாமல் அனைவரும் தேம்பித் தேம்பிஅழும்படி பத்துப் பாடல்கள் பாடினார்.  தாயின் தியாகத்தை விளக்கும் பட்டினத்தாரின் பத்துப் பாடல்களை விஞ்சி நிற்கும் படைப்பு உலகத்தின் எந்த மொழியிலும் இருக்க முடியாது.

கன்னிமேரிக்கு மகனாய்ப் பிறந்த கர்த்தர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, கண்மூடும் கடைசி நிமிடத்தில் தன் தாயை நினைத்தார். உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறக்கும் அந்தக் கடைசி நொடியில் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தாயின் நினைவே நிழலாட வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே தன்னுடைய மரணப் பொழுதில் அவர் தாயை நினைத்தார்.

'தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது' என்று நபிகள் நவின்றார். 'ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்' என்கிறது திருக்குர்-ஆன்.

நிலத்துக்கடியில் நிறைந்து நீர் கிணற்றில் தெரிவதுபோல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் டிக்காம்பில் சுரப்பது போல், தெய்வம் ஒவ்வொருவனுக்கும் தாயில் தரிசனம் தருகிறது' என்பது நம் வைதீக மதத்தின் வாக்கு. ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேசுவரம் காளி கோயிலில் அம்பிகை தரிசனத்தில் ஆழ்ந்து கிடந்தாலும், பெற்ற தாயை இறுதிவரை பராமரிக்க மறக்கவில்லை. அவருடைய ஆன்மிகச் சீடர் விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்ற நிலையிலும், தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிடினும் கங்கையில் நீராடி, ஈர உடையுடன் காளி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்யத் தயங்கவில்லை.

'என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன். 'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றான் நெப்போலியன். 'அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவளால்தான் என் இலக்கிய ரசனையும் வளர்ந்தது' என்று நன்றி செலுத்தினார் காந்தியை சிந்தனையில் மகாத்மாவாகச் செதுக்கிய ரஸ்கின்.

கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில்  கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது.  இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

'முள்ளில் படுக்கையிட்டுப் பெற்றோர் இமையை மூடவிடாத பிள்ளைக் குலங்கள்' பல்கிப் பெருகுவது பாரதப் பண்பாட்டுப் பெருமைக்கு உகந்ததன்று.  முதியோர் இல்லங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த மண்ணுக்குரிய நாகரிகத்தின் நல்ல அடையாளமில்லை. குடந்தையில் தாயைத் தவிக்கவிட்டு, காசியில் கோதானம் செய்பவனைக் கடவுள் கண் திறந்து பார்க்க மாட்டான்.  நன்றி மறந்து தாயையும், தந்தையையும் புறக்கணிப்பவன், நரகத்தை வாழும் உலகிலேயே நாள்தோறும் அனுபவிப்பான். பெற்றோர்க்குச் சோறு போடாதவன் வாழ்க்கையில் உயர்ந்ததாக வரலாறில்லை.

அரசியலும், சினிமாவும் நம்மைப் பாதித்தபோல் வேறு எதுவும் பாதித்ததில்லை.  ராஜரிஷியாய் வாழ்ந்த காமராஜர் தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பிவைத்தார்.  கலைஞர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் தாயைத் தெய்வமாகத் தொழுதிடும் ஆத்திகர்.  எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அம்மா என்ற சொல்லின் ஆழம் கண்டவர்கள்.  இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர்ந்தவர்களே தவிர, வீழ்ந்தவர்களில்லை.  இந்த இரண்டு துறைகளாலும் எத்தனையோ வழிகளில் மோசமாகப் பாதிக்கப்பட்ட என் வாழ்கால இளைஞர்கள் தாயைப் போற்றுவதில் இவர்களைத் தாராளமாகப் பின்பற்றலாம்.

பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது.  தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் சிலர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், ஆதரவற்று நிற்கும் பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.  அப்படிப் புறக்கணிக்கப் பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரையப் பட்டதுதான் இந்தக் கவிதை...

மகனே...

நீ பிறந்த அன்று

தோட்டத்தில் வைத்தோம்

ஒரு தென்னங்கன்று

எங்கள் வியர்வையில்

நீ உயர்ந்தாய்

நாங்கள் வார்த்த தண்ணீரில்

தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்

எங்கள் இருவருக்கும்

சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒருநாள்...

நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது

எங்களை மொய்த்த செய்தி வந்து சேரும்

இறுதிப் பயணத்தில்

நீ இல்லாமற் போனாலும்

தென்னை ஓலை

எங்கள் கடைசி மஞ்சமாகும்!

பாசத்தின் வேர்களினால் தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள். மறைந்த காஞ்சி மகாப் பெரியவர் சொல்கிறார்..."தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவுமில்லை. பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள்.  பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு! துஷ்டப் பிள்ளை உண்டு. துஷ்ட அம்மா கிடையவே கிடையாது.  பரிபூரணமான அன்பையும் தன்னலமற்ற உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம் மட்டுமே பார்க்க முடியும்."

'அம்மா என்று

அழைக்காத உயிர்

இல்லையே

அம்மாவை வணங்காமல்

உயர்வில்லையே'

என்னும் வாலியின் வைர வரிகள் எப்போதும் வேத மந்திரமாக நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

(22.04.05ல் ஆனந்த விகடனில் வெளியான அம்மா பற்றிய ஒரு கட்டுரை...)

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...