எனது பால்யத்தில், வீட்டிற்கு
அருகே ‘லாடக்காரர்’ தங்கராசு வைத்திருந்த பட்டறையின்
செந்தழல் என் நினைவுகளில் இன்றும் கனன்றுக்கொண்டே இருக்கிறது. என்னுடைய
பால்யத்தின் ஆகப்பெரிய வேடிக்கையாக இருந்தது அவரது பட்டறையில் இருந்த உலைதுருத்தி.
ஏழு, எட்டு வயது இருக்கும்பொழுது அடிக்கடி அங்கே போய்
வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். உலைத்துருத்தி வழியாக அழுத்தமாக
செலுத்தும் காற்று, பள்ளத்தில்
குவித்து வைத்திருக்கும் விறகுக்கரியைத் தனலேற்றும். சிவந்து கனிந்திருக்கும் அந்த
கனலுக்குள் புதைந்திருக்கும் அரிவாளுக்கான இரும்பும் கனன்று சிவந்தவுடன் உலைக்கல்லின் மீது வைத்து, கனத்த சம்மட்டியால் அடித்து வளைக்கப்படும். அந்த
கனலிலிருந்து அரிவாள், கடப்பாரை,
மாட்டின்
கால்களுக்கு கட்டுகிற லாடம் என உருவாவதைப் பார்க்க பார்க்க அத்தனை ஆச்சர்யமாக இருக்கும்.
லாடக்காரர் பழுத்த இரும்பை சம்மட்டியால் அடிக்க அவருடைய மனைவியோ மகளோ துருத்தியை
மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இரும்பை வணக்கிச் செய்யப்படுகிற இந்தக்கருவிகளைத்
தயாரிக்கும் மனித உழைப்புக்குத் துணையாக இருப்பது மாட்டுத்தோல் அல்லது ஆட்டுத்
தோலினால் ஆன துருத்தி. காற்று எப்போது உள்ளே செல்கிறது என்று அறியும் முன்பாக
நெருப்புக்கு நேராக இருக்கும் ஒற்றைத்துளையின் வழியாக
வெளியேறும் காற்றின் ஓசை எனக்கு மிகப்பிடித்ததாக இருந்தது. காற்று நுழைந்து அடிபட்டு
வெளியேறும் துருத்தியின் ‘‘தட் தட்’’
ஓசை
இப்போதும் கூட சில நேரங்களில் இதயத்துடிப்பு போலவே கேட்கிறது.
பொருளீட்டுதல் பொருட்டு வெவ்வேறு இடங்களில்
வசித்தாலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சொந்த ஊரைப் பற்றிய
நினைவுகள் படர்ந்து கிடக்கிறது. பூர்விகத்தைப் பற்றி நினைத்தவுடனே ஆறு,
குளத்துக்கரை,
கம்மாக்கரை, கோவில்
ஆலமரம், ஓடித்திரிந்த வீதிகள் என புற்றீசல் போல நினைவுகள் வரிசைகட்டி
வந்துக் கொண்டே இருக்கும். அப்படியான நினைவுகளில், வாசனைக்கும்
ஒரு தனித்த இடம் உண்டு. ஒருவகையில் எல்லா ஊர்களும் தங்களுக்கென தனித்த வாசனையைக்
கொண்டிருக்கின்றன. அம்மாவின் நினைவோடு அம்மாவின் வாசம் உணரமுடிவதுபோல ஊரைப்பற்றி
நினைவு வரும் பொழுது அந்த ஊரின் வாசமும் உணர்ந்துவிட முடியும். அவை, தெருப்புழுதியின் வாசம்,
எண்ணெய் செக்கு
ஆட்டுகிற வாசம், கரும்புப்பால் காய்ச்சுகிற வாசம், மஞ்சள் வாசம், வேர்கடலையின்
பச்சை வாசம், நெல் அவிக்கிற வாசம், வீட்டுச் சுவற்றுக்குப் பூசுகிற நீலம் கலந்த
சுண்ணாம்பு வாசம் என ஏதாவது ஒன்று நிச்சயம் நினைவில் இடறி,
நாசியில்
நுழையும். எனக்கு, எங்கள் ஊரைப்பற்றிய நினைவுகளில்
முதலிடத்தில் இருப்பது, தேங்காயை அதன்
பச்சைமட்டையிலிருந்து உரிக்கும் சமயத்தில் பரவுகிற பச்சை வாசனை. நினைக்கும் போதே
நாசியில் ஏறி குறுகுறுக்கும்.
எங்கள் பகுதி முழுக்க தென்னை சார்ந்த தொழில்
நடைபெறுகிறது. தென்னைமரம் ஏறும் மரமேறிகளுக்கான பிரத்யேக அரிவாளும்,
தேங்காய்
உரிப்பவர்களுக்கான பிரத்யேக கடப்பாரையும் முக்கியமானவை. நிலத்தில் புதைக்க
மழுங்கலாகவும், தேங்காய் உரிக்க பளபளக்கும் கூரிய மறுமுனையுடைய கடப்பாரையைப்
பார்க்கவே எனக்குப் பிடிக்கும். நிலத்தில் பதிந்திருக்கும் கடப்பாரையில் நீர்வழிய
பரவுகிற பச்சை வாசனைக்காவே தேங்காய் உரித்துப் பழகினேன்.
எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள ஏழெட்டு
கிராமங்களுக்கும் கடப்பாரை, கொழு,
கூந்தாலம்,
கோடரி,
அரிவாள்,
லாடம்,
லாடம்
கட்டப் பயன்படும் ஆணி ஆகியவை இன்றுவரை எங்கள் கிராமத்தில்தான் தயாராகின்றன.
மாட்டுக்குப் பயன்படுத்துகிற லாடம் குழிக்காடி, நெட்டுக்காடி
என இரண்டு வகையில் செய்யப்படுகிறது. நவீனமயத்தின் பயனாக,
இயந்திரங்களைப்
பயன்படுத்தியும் லாடங்கள் செய்யப்படுகின்றன. நவீனவகை லாடங்கள் பொருத்திய மாடுகள்,
பத்து
கிலோமீட்டர் கூட தொடர்ந்து நடக்க இயலாது என்கிறார்கள் எங்கள் ஊர் சம்சாரிகள். ஒரு
ஊருக்கான விவசாயக்கருவிகள் தயாரிக்கப் பயன்படும் கொல்லன்பட்டறையை விட பல ஊருக்காக
இயங்கும் பட்டறைகளில் எப்போதும் வெப்பம் கனன்றபடியே இருக்கும். வெப்பம் கனிந்த
இரும்பை நீரில் அமிழ்த்தும் வாசனையும் கொல்லனின் வியர்வையும் இந்த கிராமத்திற்கான
வாசனைகளில் மற்றும் ஒன்றாக இருக்கிறது. தொன்று தொட்டு நடந்து வரும்,
ஜல்லிக்கட்டும்,
ரேக்ளா
பந்தயமும் இந்த ஊரின் மரபுவழியின் தொழில் பற்றிய குறிப்புணர்த்தும்.
முனைவர் ப.சரவணன் தன்னுடைய ‘சங்ககாலம்‘
என்ற
நூலில், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட உலை,
துருத்தி
,இரும்புக்கருவிகள் பற்றிக்
குறிப்பிட்டுள்ளார். உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்து
வளைத்து கருவிகள், பொருட்கள் செய்யத்
சங்கத்தமிழர்களுக்கு நான்கு கருவிகள் பயன்பட்டன. உலைக்கல்,சம்மட்டி,
கொறடு,
பனைமடல்
ஆகிய பொருட்களின் பயன்பாட்டினை சங்கப்பாடல்களில் மூலம் அறியமுடிகிறது.
சங்ககாலத்தில் இரும்பை “பொன்”
என்று
கூறினர். வில், அம்பு, வேல்,
அரிவாள்,
ஆண்டலையடுப்பு,
ஈர்வாள்,
உடைவாள்,
கதிரருவாள்,
ஐயவித்தூலம்,
கதை,
கவை,
கல்லிடுகூடை,
கணையம்,
கவசம்,
குத்துவாள்,
கொடுவாள்,
கைவாள்,
கழுகுப்பொறி,
மழுவாள்,
கோல்,
சிறுவாள்,
தகர்ப்பொறி,
தொடக்கு,
பிண்டிப்பாலம்,
ஞாயில்,
அறிதூற்பொறி,
இருப்புமுள்,
எரிசிறல்,
கழு,
கழுவிலூகம்,
கல்லமிழ்
சதக்கணி, தண்டம், தூண்டில்,
தோமரம்,
புதை,
நாராசம்,
வச்சிரம்
போன்ற இரும்புக்கருவிகள் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய போர்ச்சமுதாயத்தின் நீட்சியாகத்தான்
இன்றைக்கும் கிராமத்துக்கோவில்களில் வேல், திரிசூலம்,
அரிவாள்
போன்றவை நேர்த்திக்கடனாக படைக்கப்படுகின்றன. போருக்காகவும் விவசாயத்திற்காகவும்
இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கும் சங்க காலத்தில், இவை அத்தனையையும்
செய்யத் தெரிந்தவர் இருப்பதும் அதனைச் சிறப்பாக செய்வதும் முக்கியமானது
என்பதனாலேயே “வேல் வடித்துக் கொடுப்பது கொல்லருக்குக் கடனே”
என்கிறது
புறநானூறு.
ஒரு ஊரில் வாழும் மக்களுக்கு, இத்தனை வகையான
கருவிகள் தேவைப்பட்டிருக்கின்றன. இவற்றை சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் சேர்த்து
ஒரு கொல்லன் பட்டறையில் செய்தால் அந்த ஊரும் கொல்லன்பட்டறையும் ஓயாமல்
இயங்கிக்கொண்டே இருக்கும். அந்தக் கொல்லன்பட்டறையில் பயன்படுகிற துருத்தி மிதிபட்டுக்கொண்டே
இருக்கும். உலையில் வெப்பம் கனன்றுகொண்டே இருக்கும். கொல்லன், சம்மட்டியால்
அடித்தபடி இருக்கிற ஓசை குறிப்பிட்ட இடைவெளியில் கேட்டபடி இருக்கும். இப்படி
சதாப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் உலைக்கலத்தின்
துருத்திபற்றி குறிப்பிடுகிற கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று,
“தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.”
மாலை வந்ததன் அறிகுறியாக இரவுப்பறவைகளான வௌவால்கள் பழுத்த மரம்
தேடிச் செல்லத் தொடங்குகின்றன. தனியாக இருப்பவருக்குத் துன்பம் தருகிற மாலைப்பொழுது,
தன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனுக்கு மட்டும் இன்பம் தருவதாக
இருப்பது சாத்தியமா என தோழியிடம் கேட்கிறாள் தலைவி. ஒரு ஊருக்கு மட்டுமல்லாமல் ஏழு
ஊர்களுக்கும் உரிய ஆயுதங்களையும் உழவுக்கருவிகளையும் தொடர்ந்து செய்து
கொண்டிருக்கும் கொல்லன் பட்டறையைப் பார்த்து வளர்ந்த தலைவி அவள். அல்லது அவளே கூட
கொல்லன் மகளாக துருத்தி மிதித்ருக்கலாம். அதனால்தான் ஏழு ஊருக்கும் சேர்த்து மிதிவாங்கும்
துருத்தியைப்போல தன்னுடைய நெஞ்சம் தலைவரம்பு அறியாத ஆற்றாமை மிகுந்து வருந்துகிறது
என்கிறாள் தலைவி.
தோல்துருத்தி ஓயாமல் ஏழூர் மக்களின் பார்வையில் பட்டு மிதி வாங்கிக் கொண்டே இருப்பதைப் போலத் தலைவனின் பிரிவால்
ஏற்படும் பசலையினால் மட்டுமன்றி, வீட்டிலிருப்பவர்களின் சந்தேகப்
பார்வைகள் ,ஊராரின் வம்புப் பேச்சுக்கள், ஒருவேளை தலைவன் திரும்பாமலே
இருந்து விட்டால் தன் நிலை என்னவாகுமோ என்ற தன் நெஞ்சின் தவிப்பு ஆகிய பல்வேறுபட்ட
துயரத்தினால் தான் அனுபவித்து வரும்
அலைக்கழிவுகளை மறைமுகமாக உணர்த்துகிறாள் தலைவி.
பிற பறவைகளைப் போலன்றித் தாவித் தாவி உயர்ந்தும்
தாழ்ந்தும் பறந்து செல்லும் இயல்பு கொண்டவை வௌவால்கள். சன்னமான துணியால்
நெய்யப்பட்டது போன்ற இறகுகளைக் கொண்டு மென்மையாக பறந்து செல்பவை. பகலெல்லாம்
தலைக்கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்கள் கூட பழுத்த மரங்களைத் தேடிச்
சென்றுவிட்டன என்று தலைவி குறிப்பிடுவது மெலிதான சோகத்தைக் கிளர்த்துகிறது.
இரவுப்பறவையான வௌவால் தனக்கான உணவென கனிமரத்தை நாடுவது போல தலைவனும் தன்னை
நாடிவரவேண்டாமா என நினைக்கிறாள். அதனால் தான் “தலைவனைப்
பிரிந்ததால் தான் வருந்துவதாக அவள் சொல்லவில்லை, தன்னைப்
பிரிந்ததால் தனித்திருக்கும் தலைவன் வருத்துவான்” எனத்
தான் வருந்துவதாகச் சொல்கிறாள்.
காதல் வயப்பட்ட பெண் ஒருத்தியின் தனிமை என்பது
தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலசமயம் தலைவன்கூட
அவளின் தனிமையை போக்க முடிவதில்லை. ஏனெனில் அவனிடமே கூட அவளின் மனத்தைச்
சொல்லிவிடுவதற்கான வார்த்தைகள் அவளுக்கு உதவுவதில்லை. அப்பொழுது, தலைவன் மீதான
காதலும் அது சார்ந்த நினைவுகளுமாக அவள் தனித்திருப்பாள். ஏழு ஊர்களுக்கு
தளவாடங்களைச் செய்கிற பட்டறையின் பரபரப்பு அவள் மனத்தில் பதிய மறுக்கிறது. மாறாக மிதிபடுதலில் துவலுகிற உலைத்துருத்தியின்
தவிப்பை, காதல் கொண்ட அவள் மனத்துக்கு இணையாக்குகிறாள். இந்தத் தவிப்பு சங்க
காலத்துக்கு மட்டுமே உரியது அல்ல. நவீனப்பெண் மனமும் அத்தகைய தனிமையை உணர்கிறதாகவே
இருக்கிறது. காதல் எப்பொழுதும் தனிமையை விரும்புவதாகவே
இருக்கிறது. காதலில் தவித்திருக்கும் பெண்ணின் தனிமைக்கு அவளின்
காதல் மட்டுமே துணையாக இருக்கமுடியும்.
புத்தகமாக வெளிவராத மதுமிதாவின் கவிதைகளை வாசிக்கும்
வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 150 கவிதைகளைப் புத்தகமாக்காமல்
தனக்குள் பத்திரப்படுத்தியிருக்கிறார் இவர். இந்தக் கவிதைகள் அன்பையும் காதலையும்
காமத்தையும் பிரிவையும் தனக்குள் ஏந்தியிருக்கின்றன. பெண்ணின் அகஉணர்வுகளைப்
பேசுபவையாக மட்டுமல்லாமல் அவளின் புறவாழ்வுக்கான சூழலில் நிகழ்கிற
அங்கீகாரமின்மையையும் இழப்புக்களையும் சில இடங்களில் மென்மையாகவும் சில இடங்களில்
வன்மையாகவும் சொல்லிச்செல்கிறார். காதலில் தன்னை இழக்கிற மனம் என்பது காலத்தின்
எந்த வரையறைக்கும் உட்பட்டதல்ல என்பதை இவரின் கவிதைகளின் வழியே
வெளிப்படுத்துகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக “உலைக்கலத்தின்
மிதித்தோல் போல” என்கிற மரபுவழி மனத்தைக் கொண்டவளாகவே இப்பொழும் பெண்
இருக்கிறாள். மதுமிதாவின் நினைவுக் கடத்தல் என்று தலைப்பிட்ட கவிதை,
“சந்திரன் முகம் காட்ட விரும்பும்
சந்தியா வேளை
பூங்காவின் மரங்கள் முழுக்க
தொங்கிக் கிடந்தும் பறந்தும்
கூட்டம் கூட்டமாய் வௌவால்கள்
கனி நிறைந்திருக்கும் மரம் நாடி
கழுகுகளைப் போலப் பறக்கின்றன
நீ இருக்கும் திசை நோக்கியே
என் நினைவுகளையும் கடத்திக்கொண்டு
காற்று மென்மையாக வருட
காற்றை ஊடுருவி மேலேபார்க்கிறேன்
நிலவில் ஒளிர்ந்து ஏதோ சேதி தருகிறாய்
வலசை செல்லும் பறவைகளைக் கண்டு
நீயும் அங்கே தவிக்கிறாயோ என் நினைவில்
பாலையின் வெக்கையுடன்
என் நினைவின் வெம்மை மட்டும்
உன்னைத் தீண்டிவிடக்கூடாது
உன் நினைவாலேயே உன் நினைவினை
அணைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வேன் எனினும்
உன் நினைவில் எழும் பெருமூச்சு
கொல்லனின் உலை துருத்தி போல்
தீயை வளர்த்து சுட்டெனைச் சாய்க்கிறது”
*************************************************************************************************************
கச்சிப்பேட்டு நன்னாகையார்:
நன்னாகை என்பது இவர் பெயர். கச்சிப்பேடு யாவருடைய
ஊர். காஞ்சிபுரத்திற்கு “கச்சி”
என்று
ஒரு பெயர் இருந்தது. இவரின் பாடல்கள் ஆறு குறுந்தொகையில் உள்ளன. ( 30,172,180,192,197,287
)
*************************************************************************************************************
சங்கச் செய்தி:

காலால் மிதித்து காற்றை
செழுத்துகிற மிதித்தோல் துருத்தி, சிறிய
சக்கரத்தைப் பயன்படுத்தி காற்றைச் செழுத்துகிற விசைவாங்கு
துருத்தி, கைத்துருத்தி மூன்று வகையான
துருத்திகள் சங்ககாலத்திலிருந்தே பயன்பாட்டில் இருக்கின்றன.
உலைக்கல்லில் வைத்து சம்மட்டியால் அடித்து தேவையான
பொருட்கள் செய்ததையும் யானையின் பெரிய தந்தத்திற்கு பூண் மாட்டியதையும் புறநானூறு(170
) குறிப்பிடுகிறது.
கொறடு பற்றி பெரும்பாணாற்றுப்படையும் (206,207 ) உருக்கி வார்க்கப்பட்ட இரும்பின்
அதிவெப்பம் தணிக்க பனைமடலில் நீரைத் தெளித்தது பற்றி நற்றிணையும் (133)
தீப்பொறியின்
காட்சியை அகநானூறும்(72) குறிப்பிடுகின்றன. தவிர,
கொல்லன்
என்னும் சொல் சங்க இலக்கியத்தில் 13 இடங்களில்
பயன்படுத்தபட்டிருக்கின்றன. கொல்லன்
அழிசி, மதுரைக் கொல்லன் புலவன்,
மதுரைக்
கொல்லன் வெண்ணாகனார், முடக்கொற்றனார்,
தங்கால்
முடக்கொல்லனார், மதுரை பொன்செய் கொல்லன் ஆகிய பெயர்களில் புலவர்கள்
இருந்திருக்கின்றனர்.