Saturday, December 24, 2016

கவிதையில் வாழ்பவன் - ரவிக்குமார்

அவர்கள் அவனைப் பிடித்தபோது
அவனிடம்
ஒரு துப்பாக்கியும் 
ஒரு பையும் தான் இருந்தன
குழந்தைகள் வைத்திருப்பதுபோன்ற 
நாய்க் காது பை
பச்சை நிறத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் அதில் எழுதப்பட்டிருந்தன 
நான்கு கவிகளின்
அறுபத்தொன்பது கவிதைகள்

துப்பாக்கியில் ரவைகள் இல்லை
பையில் ஒரு ரொட்டித் துண்டு இல்லை
குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை 

இத்தனை நாள் எப்படி உயிரோடிருந்தான்
எதனைக்கொண்டு சண்டை போட்டான்

எப்படியெப்படியோ விசாரித்துப் பார்த்தார்கள் 
சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை

அலுத்துப்போன சிப்பாய்கள் 
ஆணையின்படி அவனை சுட்டுக்கொன்றார்கள்

பச்சை நிற நோட்டுப் புத்தகம்
அதிலிருந்த
அறுபத்தொன்பது கவிதைகள்

தாகிக்கும்போது தண்ணீராகும்
பசித்திருக்கும்போது உணவாய் மாறும்
துப்பாக்கியில் போடும் தோட்டாக்களாய் உருவெடுக்கும் 

சுட்டுக் கொன்றார்கள்

ஆனால்,
பச்சை நிற நோட்டுப் புத்தகத்தில் 
படியெடுத்து வைத்த கவிதை வரிகளில்
இன்னமும் அவன் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் 

( அக்டோபர் 9 - சே குவேராவின் 48 ஆவது நினைவு நாள்)

புத்தகத்தின் நிறை - ரவிக்குமார்

பொருட்களின் நிறை 
எப்படி வருகிறதென 
அறிவியலார் சொல்லக்கூடும்
ஆனால் 
பொருட்களுக்கான விதி
புத்தகத்துக்குப் பொருந்தாது

புத்தகத்தின் எடையை 
காகிதங்களைக்கொண்டு 
தீர்மானிக்க முடியாது

ஒரு ஊர் சூறையாடப்பட 
ஒரு புத்தகம் காரணமானதுண்டு
ஒரு நாட்டையே 
உடைத்து நொறுக்கிய 
புத்தகங்களை அறிவோம் நாம்

இன்று ஒரு புத்தகம் கிடைத்தது
'இழந்த மாலைகள் 
இழந்த வாழ்வுகள்'
ஈழத் துயரம் கசியும் கவிதைகள்

கையில் எடுத்தபோது 
கனக்கவே இல்லை

படிக்கத் தொடங்கினேன் 
பாரம் தாங்காது 
செத்துக்கொண்டிருக்கிறேன் 

- 26.12.2015

நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னே இருக்கிறது- ரவிக்குமார்

" இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சொல்லப்போனால் தமிழ் தலித் இலக்கியம் கன்னட தலித் இலக்கியத்துக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பாவண்ணன் எனது வேண்டுகோளின் அடிப்படையில் சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும், அரவிந்த மாளகத்தியின் கவர்ன்மெண்ட் பிராமணன் ஆகிய சுய சரிதைகளையும், இதோ இந்த அரங்கில் இருக்கிறாரே மொகள்ளி கணேஷ் அவரது பம்பரம் உள்ளிட்ட சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றை நான் விடியல் பதிப்பகத்தின்மூலம் வெளியிடச் செய்தேன். அந்த சிறுகதைத் தொகுப்புக்கு புதைந்த காற்று என நான்தான்  தலைப்பிட்டேன். நானும் இன்னும் சில நண்பர்களுமாக சேர்ந்து நடத்திய நிறப்பிரிகை இதழின் சார்பாக தலித் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டுவந்தேன். அதில் சித்தலிங்கையாவின் நீண்ட பேட்டி இடம்பெற்றது. நான் நடத்திய தலித் என்ற இலக்கிய இதழில் தேவனூரு மகாதேவாவின் மிக முக்கியமான படைப்பான குசுமபாலெவின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தொடராக வெளியிட்டேன். நஞ்சுண்டன் மொழிபெயர்த்தார். 

மராத்தி தலித் இலக்கியத்தைவிட கன்னட தலித் இலக்கியம் தான் தமிழ் தலித் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. இதை நன்றியோடு கூறிக்கொள்கிறேன். 

கன்னடத்தைப் போலவே தமிழ் தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் யதார்த்தவாத எழுத்துமுறையையே கையாளுகிறார்கள். அவர்களது சித்திரிப்பு, தொனி போன்றவற்றில்கூட பெரிதாக வேறுபாடு இல்லை. 

ஆனால் தமிழ் தலித் இலக்கியம் வலுவான தத்துவார்த்த பின்னணியைக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கன்னடம், மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்  தலித் இலக்கியம் தொடர்பான விவாதங்களை முன்னெடுத்த என் போன்றோருக்கு இருந்த மார்க்சியப் பின்னணி. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த நானும் சில தோழர்களும் ரஷ்யாவின் தகர்வுக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அதுவரை சோஷலிசம் குறித்து சொல்லப்பட்டுவந்த கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தினோம். அந்த சிக்கலை விளங்கிக்கொள்ள மார்க்சிய மைய நீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட சிந்தனையாளர்களைப் பயின்றோம். 

அந்தப் பின்புலத்திலிருந்து வந்த நாங்கள்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்த விவாதங்களை முன்னெடுத்தோம் என்பதால் மிஷெல் ஃ பூக்கோ, எட்வர்ட் செய்த், பூர்தியூ,  முதலானோரின் சிந்தனைகளோடும், ஹெகல், பகூனின் உள்ளிட்ட கார்ல் மார்க்சுக்கு முந்திய சிந்தனைகளோடும் இணைத்து தலித் கருத்தியலை நாங்கள் பேசினோம். அரசு குறித்த அம்பேத்கரது பார்வை பகூனினின் கருத்துகளோடு ஒத்துப்போவதை நான் சுட்டிக் காட்டினேன். இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் பிற மொழிகளில் இல்லை. இது தமிழ் தலித் இலக்கியத்துக்கு இருக்கும் சிறப்பு. 

கருத்தியல் தளத்தில் இருக்கும் இந்த அனுகூலம் இன்னும் படைப்புகளில் சரிவர வெளிப்படவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் தலித் இலக்கியம் படைக்கப்படுகிறது. ஆனால் தேவனூரு மகாதேவாவைப் போல ஒரு படைப்பாளி தமிழில் உருவாகவில்லை. அந்தவிதத்தில் கன்னட தலித் இலக்கியம் தமிழைவிட முன்னே நிற்கிறது. 

பொதுவாகவும்கூட நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னால்தான் இருக்கிறது. இங்கே வந்து சிறப்பித்த ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரைபோல, யு.ஆர்.அனந்தமூர்த்தியைப்போல, சிவராம காரந்த்தைப்போல ஒருத்தரைக்கூட தமிழில் சொல்லமுடியாது. ஆற்றல்வாய்ந்த கன்னட படைப்பாளிகளுக்கு என் வணக்கம்.

தேர்தல் முறையை மாற்றுவோம்- ரவிக்குமார்

இந்தியாவின் ஜனநாயகம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு’ காரணம் நமது தேர்தல் முறை என்று சொல்லப்படுவதுண்டு. 'மக்களின் தீர்ப்பை மகேசனின் தீர்ப்பாக' மதித்து அமைதியாக ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடும் பக்குவத்தைப் பெற்றவர்கள் நமது அரசியல் தலைவர்கள். ஆனால் இந்தத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் இப்போது வலுவாக கேட்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனக்குரல் கொடுப்பவர் நமது தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி. இதற்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையராயிருந்த கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கருத்தை வலியுறுத்தியே வந்தார்.

 ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளைவிடக கூடுதலாக இருப்பதுண்டு.எனவே அந்த தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. எனவே இதை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்திவிடலாம். பல மாநிலங்களில் சுமார் தொண்ணூறு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி குறைந்த அளவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். பலபேர் இருபது சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் சராசரியாக பதினோரு சதவீத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள். மீதம் 89 சதவீதம் மைனாரிட்டி அளவு வாக்குகளால் வென்றவர்கள்தான். பீகாரில் 82 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 60 சதவீதமும், கர்னாடகாவில் அறுபத்தொன்பது சதவீதமுமான எம்எல்ஏக்கள் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றே ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே இதில் தமிழ்நாடு மட்டும் தான் விதிவிலக்கு. இங்கு 1991ஆம் ஆண்டு தேர்தலில் தொண்ணூறு சதவீதம் சட்டம்ன்ற உறுப்பினர்கள் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. சுமார் 67 சதவீத எம்.பி.க்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக உள்ளனர்.

 வெற்றி பெறுகிறவர் ஐம்பது சதவீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. இதனால் தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையை இது தகர்த்து விடுகிறது.

 இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இதுவே காரணமாகிறது. 'பரவலான மக்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளை சென்னாலே போதும்' என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கு இதுவே வழிகோலுகிறது.

 இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்பது ஒரு யோசனை.

 பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெற்றி பெறும் நிலை இருப்பதால் மறுதேர்தல் என்பது ஏறக்குறைய மாநிலம் முழுமைக்கும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது சிரமம் என்று சில விமர்சனங்கள் வரலாம். இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றை செலுத்தும்படி கோருவது. எந்தெந்த தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது. எந்திர வாக்குப்பதிவு வந்து விட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.

 அடுத்ததாக சொல்லப்படுகிற யோசனைதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Reservation ) என்பதாகும். இந்திய சட்ட கமிஷனும் இந்த முறையைத் தான் பரிந்துரை செய்திருக்கிறது. நமது தலைமைத் தேர்தல் ஆணையர் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்த முறையை பட்டியல் முறை (List system ) என்று குறிப்பிடுகின்றனர்.

 நபர்களை நிறுத்துவதற்கு பதிலாக அரசியல் கட்சிகளை முன்னிறுத்தித் தேர்தலை நடத்துவது, அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் இடங்களை வழங்குவது என்பதே இந்தத் திட்டம். இதில் தனி நபர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் கூடுதலாக ஒரு அம்சத்தை சட்டக்கமிஷன் கூறியுள்ளது. வாக்காளர்களிடம் இரண்டு வாக்குகளைத் தந்து ஒன்றை அரசியல் கட்சிக்கும், மற்றதை வேட்பாளருக்கும் அளிக்க கோருவது. கட்சிகள் வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் இடங்களை ஒதுக்கி அதன்பிறகு வேட்பாளர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நபர்களைத் தேர்வு செய்வது.

 விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மெஜாரிட்டி அரசாங்கம் உருவாவதற்கு வாய்ப்பு குறைவு. கூட்டணி அரசாங்கமே சாத்தியமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட்டியல் முறை என்பதும் கூட ஆட்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை ஊக்குவித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் கல்வியறிவற்றவர்கள் நிரம்பியிருக்கும் நமது நாட்டிற்கு இது சரிப்பட்டு வராது என்பதே அவர்களது கருத்து.

 நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் இந்த விகிதாச்சார பிரதிநித்துவத்தை செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்து விடும். தற்போது 172 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளன. இவற்றில் பல கட்சிகள் எப்போதாவது ஒருமுறை தான் தேர்தலில் போட்டியிடும். 'பதிவுக்காக சராசரியாக வாரம் மூன்று கட்சிகள் விண்ணப்பிக்கின்றன'' என்று கோபாலஸ்வாமி குறிப்பிடுகிறார். பலபேர் வருமானவரி விலக்கு பெறுவதற்காகத்தான் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலன்றி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.

 ஆகவே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடே எளிதானது. ஜனநாயகத்தை பாதுகாப்பது. இது மைனாரிட்டி வாக்கினால் ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கை கட்டுப்படுத்தும்.

 இந்த ஆலோசனைகள் சட்ட அறிஞர் சுபாஷ் காஷ்யப்பின் பொறுப்பில் அமைந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக்குழுவின் கீழ் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தக்குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தக்குழு ''ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வரவேண்டும். அதற்கான தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்'' எனப் பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்தக்குழு கூறியுள்ளது.
 தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைகளை 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது. ஆனால் அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எந்த காரியத்தையும் ஆட்சியாளர்கள் அவ்வளவு சுலபமாக செய்து விட மாட்டார்கள். அவர்களைச் செயல்பட வைக்கும் ஆற்றல் மக்களுக்குத்தான் இருக்கிறது.

தேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது

ஒரு மரணத்தை எப்படி உணர்வது
உறைய வைக்கும்  பயத்தோடா
தெவிட்டும் மகிழ்சியோடா

மரணத்திற்குக்  கோர உருவத்தைத் 
தீட்டிய கைகள் ரசனையற்றவை
மரணத்தை ஸ்நேகிக்கக்  கற்றுக்கொள்வோம் வாருங்கள்

நிச்சயமான மரணத்தை
நாம் நிச்சயமின்மைக்குள்
அடைக்க முயல்கிறோம்
ஆனால் மென்மையாக அலையும்
பூனையைப்   போல்
எப்போதும் அது நம்மைத் தொடர்கிறது

மரணத்தின் நிறம் கறுப்பு அல்ல
அதற்கு ஆயிரம் வண்ணங்கள்
திரவப் பளிங்கு  போலிருக்கும் அதில்
பிரதிபலிக்கிறது நம் உருவம்

பூக்களை உதிர்த்துச்  செல்லும்
காற்றைப் போல்
உயிர்களை உதிரச் செய்கிறது மரணம்
பூக்கள் உதிர்ந்த  பின்பு
மரங்களின் அழகு குறைந்தா  போகிறது?
பறவைகளைப் பாருங்கள்
அவை கோடை மழையில் நனைவதுபோல்
மரணத்தில் குளிக்கின்றன
ஒரு இறகைக் கூட  உதிர்ப்பதில்லை

முற்றத்தின்  மூலையில் படரும்
பட்டு ரோஜாவைப் போல
மரணத்தை வளரவிடுங்கள்
அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள வேண்டாம்
ஒரு குழந்தையை வாங்குவது  போல
ஏந்திக்  கொள்ளுங்கள்

மரணத்துக்கு அஞ்சி நாம் ஒளிந்துகொள்கிற இடம் யாவும்
சிறையாக மாறிவிடுகிறது
ஆயுளை நீட்டிக்க நாம் பருகும் அமிழ்தம்
நஞ்சாகிக் கொல்கிறது

மரணத்தை தண்டனை என்று
பழிப்பது சரியல்ல

பிறப்பே   தண்டனை
இறப்பு என்பது விடுதலை

காற்றின் விதைகள் - தேன்மொழி

விதை என்பது உயிர்சுழி. வாழ்க்கை முழுதாய் அடங்கிய ஒற்றைப்புள்ளி. விதையின் இருப்பு மரத்திற்கும் நிலத்திற்கும் இடையே கைமாறிக் கொண்டே இருக்கிறது. காற்றின் விதைகள் தங்கள் இருப்பை எழுத காற்றின் திசைகளில் நிலத்தைத் தேடி பயணிக்கின்றன. காற்றும் நிலமும் விதைகளை வேடிக்கைப் பொருளாக்கி விளையாடித் தீர்க்கின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் என்பது, காற்றில் பரவும் விதைகளுக்கு ஊடகமான காற்றும் நிலமும் போல அவர்கள் இருப்பை நிலைபடாததாக வைக்கிறது. 

இயற்கை உயிருள்ள, உயிரற்ற பொருட்களை எல்லாம் தகவமைத்துக் கொள்வதன் மூலம் தப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எச்சரிக்கை மொழியாக உருவெடுத்திருப்பதன் சாட்சிதான் ரவிக்குமாருடைய “சூலகம் - பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம்” கட்டுரைத்   தொகுப்பு - விதைகள் நீருக்காகவும் நிலத்திற்காகவும், காற்றிற்காகவும் தங்களை வேண்டியபடி தகவமைத்துக் கொள்கின்றன. காற்றை ஊடகமாக்கிக் கடந்து செல்லும் விதைகளுக்குக் கூடுதல் தகவமைதல் தேவைப்படுகிறது. உண்மையில் விதைகள் காற்றைச் சுமக்க வேண்டியுள்ளது. தாங்கள்  ஊன்றப்படுவதற்காக நிலத்தை இழுத்துக் கூட்டிக் கொண்டு பயணிக்கின்றன. நிலத்தை இழுத்துக் கொண்டு காற்றைச் சுமந்தபடி பறக்கும் அவைகள் கூடுதல் சுமையாளிகள். காற்று ஒருவேளை விதைகளைக் கடலில் கொண்டு சேர்த்து விடலாம். காற்று விதைகளைக் கடலில் கொண்டு சேர்க்கும் இடமாகத் தான் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் உள்ளது என்பதை சூலகம் கட்டுரை தொகுப்பு முன் வைக்கிறது.
“மாற்றம் என்பது இயற்கை” இந்தப் பழமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. இலக்கியங்களும், தத்துவங்களும் மாறிமாறி வெவ்வேறு அர்த்தங்களில் எழுதி பார்த்த சொல் மாற்றம். மாற்றம் நிலையாமையை முன் வைக்கிறது. ஆழ்ந்து நோக்கினால்  இயலாமையில் எடுக்கப்படும் முயற்சி தான் மாற்றமாக உருவெடுக்கிறது. பெண்களின் உலகம் மாற்றங்கள் நிறைந்தது.  பெண்களை தகவமைத்துக் கொள்ள, அதிகப்படியாயும், மறைமுகமாயும் இச்சமூகம் வற்புறுத்துகிறது.
மாற்றத்தை விரும்பும், கோரும் அல்லது முன்னெடுத்துச் செல்லும் சமூகம் அதன் மூலம் அல்லது $ந்தம் தொலைக்கப்படுவது குறித்த அக்கறையை காட்ட மறுக்கிறது. வினைபடுபொருளில் தொடங்கும். மாற்றம் வினைவினை பொருளில் முடிகிறது. வினைவினை பொருட்கள் தீயவையாகவும் இருக்கும் சாத்தியங்கள் உண்டு. நிகழ்காலத்தை சுமந்திருக்கும் சமூக மாற்றங்களில் பல பெண்களுக்கு எதிரானது என பகுத்து பிரித்து வைக்கிறது ரவிக்குமாரின் சூலகம். 
சூலகம் சுமந்து கொண்டிருக்கும் பெண்களை பருவத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்.
1) சிசுக்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகள்
2) இளம் பெண்கள்
3) பெண்கள்
 நாம் கொலை செய்த ஒருகோடி பெண் சிசுக்கள் என்ற கட்டுரையில் குழந்தைகளுக்கான செயல்பாட்டுக் குழுவின் அறிக்கை ஒன்றைக் குறிப்பிடுகிறார். பக்க - 13

 படிக்கும் போது நாம்    மனிதர்களோடு தான் வாழ்கிறோமா என்ற பயம் எழுகிறது. பசிக்காக திருடியவனுக்குக் கூட நம்மிடம் சட்டங்களும் தண்டனைகளும் நிறைய இருக்கின்றன. சிசுக்கள் என்பவை  விதைகளின் முதல் துளிர். பெண் சிசுக்களை கையிடுக்கில் வைத்து நசுக்கி விடுகிறோம். மனித நேயத்தை பசுத்தோலாய் போர்த்தியிருக்கும் மானுடத்தைக் காறி உமிழ்ந்து விட்டு அவைகள்  மறைந்துபோவது நமக்குத் தெரிவதில்லை. 

 பெண்களின் உலகை இச்சமூகம் குழந்தைத் திருமணம், பொட்டுக் கட்டுதல் போன்ற கொரில்லா போர் முறைகளால் தாக்கிக்கொண்டே இருக்கிறது. பெண்களிடத்தில் விழிப்பு நிலை மந்தமாகவே உள்ளது ( பக்கம் - 18.)

 இச்சமூகமும், மொத்த மானுடப்  பரப்பும் தனது வளர்ச்சிக்கு பெண்களை பலியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. படைப்பாளி முன் வைக்கும் பிரச்சனைகளால் பெண்களின் உலகம் காற்றின் விதைகளாய் அடித்து செல்லப்படுவது புரிகிறது. நொய்டா  படுகொலைகளை வறுத்து விழுங்கி செரித்து விட்டு, எளிதாக ஒரு குற்றத்தைக் கடந்து செல்லப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். ரவிக்குமார் போன்ற சில படைப்பு மனங்கள்  அதைச் சுமந்து கொண்டு சமுதாயத்தில் மனிதநேயத்தை இழுத்து வந்து திணிப்பது பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது.
 பெண்கள் தங்களைப் பற்றி மறந்து விடுகிறார்கள் என்பதை விடவும், தங்களை தொலைத்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய பிரக்ஞை மழுங்கடிக்கப்படும் நேரத்தில் அவர்களே சந்தித்திராத ஒன்றாய், ஒரு தோழனின் மனதோடு பெண்களின் கருப்பை புற்றுநோய் பற்றியும், பேறு கால விடுப்பு பற்றியும், இடஒதுக்கீடு, பெண் உடல் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கொடுமை பற்றியும், எய்ட்ஸைக் குணப்படுத்தும் முயற்சியில் பலியாகும் பெண்கள் குறித்தும் அக்கறையோடு முன் வைக்கப்படும் கட்டுரைகளில் மனித உறவுகளின் மீதுள்ள கரிசனையை எழுதிச்செல்கிறார். 

 பிரதீபா - முதல் குடிமகள்,  பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கு கிடைத்த நீதி குறித்த கட்டுரைகளில் பெண்ணுரிமையின் வளர்ச்சியை, பெண்மை மீட்கும் உரிமையைக் கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் படைப்புமனத்தைக் காண முடிகிறது.
 சமூகம் பெண்களைச் சுற்றிக் கற்கோட்டைகளையும், கலாச்சார மதில்களையும் எழுப்புகிறது. அதில் பெண்கள் தங்கள் மழுங்கடிக்கப்பட்ட தூரிகைகளால், சித்திரம் வரைந்தபடி இருக்கிறார்க்ள. அவர்கள் உலகம் சித்திரத்துள் அடைபட்டுக்கிடக்கிறது. அங்கு எழுப்பப்படாத கேள்விகளையும் கருத்துகளையும் ரவிக்குமார் தன் கட்டுரைகளில் பல இடங்களில் முன் வைக்கிறார்.

 ஒரு நலவாரியம் அமைத்துத் தர முடியும் என்ற எல்லைவரை, அவர்  புழக்கடை மனிதர்களை, சமுதாயத்தின் பொதுபுத்திக்கும் பார்வைக்கும் தன் எழுத்துக்களால் அடையாளப்படுத்தி உள்ளார். இன்று உழைப்பாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கூலியை, அரசு உறுதி செய்துள்ளது என்பது தொடர்பான கட்டுரை எழுத்தும் இலக்கியமும் என்ன செய்யும் என்ற கேள்வியின் பதில்களாக நிற்கின்றன.பெண் சிறைவாசிகள் குறித்த ஒரு சிறு சிந்தனை பொறிகூட நம்மை இயக்கியதில்லை என்ற குற்றவுணர்வைப் பெண் சிறைவாசிகள் குறித்த கட்டுரை உண்டாக்கிவிடுகிறது. 

தூரத்தில் தெரியும் நிலத்தில் இருக்கிறது புனலில் ஆடும் படகின் நம்பிக்கை. இது போன்ற கட்டுரைகள் பெண்களின் தடுமாற்ற இருப்பு நிலையில்  நம்பிக்கைகளாகத் தெரிகின்றன.    
சூலகம் - - - பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் 
-ரவிக்குமார் 
உயிர்மை வெளியீடு
டிசம்பர் 2009 

தேன்மொழி - கவிதை

ஒரு மரணத்தை எப்படி உணர்வது
உறையும் பயத்தோடா
தெவிட்டும் மகிழ்சியோடா
மரணத்திற்கு கோர உருவத்தை
தீட்டிய கைகள் ரசனையற்றவை
மரணத்தை ஸ்நேகிக்க நமக்கு
ஏன் கற்றுத்தரப் படவில்லை
மரணம் தன்னை நிச்சயிக்கிறது
நாம் நிச்சயமின்மைக்குள்
அதை அடைக்கிறோம்
மென்மையாக அலையும்
பூ னையைப் போல் நம்மோடு
தொடர்கிறது
வண்ணங்களின் தீவிரம்
கொண்ட கருமையை கொண்டு
அதை அடையாளப்படுத்தியது
நாகரீகமற்றது
கருமையை வாழ்க்கையோடு
அடையாளம் காண்போம்
மரணத்தை பற்பல வண்ணங்களால்
அடையாளப்படுத்துவோம்
பளிங்கு நீர; போலிருக்கும்
அதன் தோற்றம் நம்மை
பிரதிபலிக்கவில்லையா என்ன
நித்தம் உதிரும் பூக்கள் போல
நிமிடந்தோறும் உதிர்ந்து கொண்டிருக்கிறது
பூக்கள் உதிர;ந்த பின்பு
மரங்களின் அழகு கூடிப்போகிறதே
வசந்தத்தின் நிலாமாடம்வ
மரணத்தை தண்டனை என்று
உச்சரிப்பது கேவலம்
வேற்று கோணத்திலிருந்து நோக்குவோம்
புpறப்பு தண்டனை
இறப்பு விடுதலை
பறவைகளின் விலங்குகளின்
வாழ்க்கை அற்புதமானவை
கோடை மழையில் நனைவதைப் போல
அவை மரணத்தை எதிர்ப்பதில்லை

எததனை பறவைகள்
எத்தனை விலங்குகள் மடிகின்றன
மரணத்திற்கு பயந்து
நாம் வீடு கட்டுகிறோம்
அது சிறைக்கூடம்
பறவை ஒற்றை சிறகை கூட
உதிர;ப்பதில்லை
ராட்சத பறவையோடு
நாம் ஏன் அதை
பறக்கவிட வேண்டும்
முற்றத்தின் மூலையில்
பட்டு ரோஜா செடிபோல் வளர;ப்போம்
மரணத்தைப் போர்வீரன்
நெஞ்சை நிமிர;த்தி ஏற்றுக்கொள்வது
தவறான செயல்பாடு
மண்டியிட்டு தலை குனிந்து
தேவக்குழந்தையை பெற்றுக்கொள்வது போல
நாபிக் குழியிலிருந்து வரவேற்போம்

படுகளம் - லதா



சண்பகலட்சுமியின் உடலில் சன்னமாகச் சுருதியேறத் தொடங்கியிருந்தது
நாலாபுறமும் மக்கள் இடித்து நெரித்துக்கொண்டிருந்தனர்.
வசதியான இடத்தைப் பிடிப்பதில் ஒவ்வொருவரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சண்பகலட்சுமி 11 மணிக்கே வந்து மறைப்பில்லாத, வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து விட்டாள்.
பெரியாச்சி பூசையில் தொடங்கி தர்மராஜா பட்டாபிஷேகம் வரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நடைபெறும் தீமிதித் திருவிழாவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றுவிடாமல் தவறாமல் கலந்துகொள்ளும் சண்பகலட்சுமிக்கு, எந்த விழாவுக்கு எந்த நேரத்தில் வந்தால் இடம் கிடைக்கும், எங்கே நின்றால் வசதியாகப் பார்க்கலாம் என்பதெல்லாம் அத்துப்படி.
கோயிலில் பல முறை கட்டுமானப்பணிகள் நடைபெற்றிருந்தன. வழமைகளின் கால நேரங்களும் இடங்களும் அவ்வப்போது மாறியிருந்தாலும் அது எல்லாமே சண்பகலட்சுமிக்கு மிகச் சரியாகத் தெரிந்திருந்தது.
கூட்டம் நெருக்க நெருக்க அவளது இடத்தில் காற்றோட்டம் தடைப்படத் தொடங்கியது.
கிடைத்த சிறு இடைவெளியில் பாதை அமைத்து முன்னுக்குப் போயி நில்லுஎன்று தன் பேத்தியை தள்ளினார் ஒரு மாது.

எப்ப தொடங்குவாங்க.... அருகில் நின்ற சிறுவன் தொணதொணத்தான்.

இரு இரு. பாரு மணல்ல உருவம் எல்லாம் செஞ்சிருக்காங்க. இவங்க யாருன்னு தெரியுமா.. முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அது யாரு தெரியுமா.... என்று சிறுவனுக்குக் கதை சொல்லத் தொடங்கியிருந்தார் அவனுக்கு அருகில் நின்ற பெரியவர்.

நேரமாக ஆக எல்லாக் குழந்தைகளும் பொறுமையிழக்கத் தொடங்கினர். கூட்டத்தின் நெரிசலுடன் குழந்தைகளின் அழுகையும் நச்சரிப்பும் சண்பகலட்சுமிக்கு எரிச்சலுìட்டியது.
எம் பிள்ளையும் வெளியில வந்து இப்படித்தான் அழுது அடம்பிடிக்குமோ... நினைப்பே அவளைப் பயமுறுத்தியது. வெளிச் சத்தத்தை தன் உடலுக்குள் புகவிடாமல் தடுப்பதுபோல் இரு கைகளையும் பரப்பி வயிற்றைக் கெட்டியாக மூடிக்கொண்டாள்.

அபிமன்யூ அர்ஜுனனின் மகன். சிறந்த வீரன். இன்னிக்கு காலையில சக்கரவர்த்தி கோட்டை பார்த்தயில்ல. அதில செத்துப்போனானே அவன்தான்...

அத்தே... அது என்ன சக்கரவர்த்தி கோட்டை...

மறுபக்கம் நின்ற சிறுமி தன் அத்தையைக் குடைய ஆரம்பித்தாள்.

சக்ரவர்த்தி கோட்டை என்கிறது பாரதப் போரில வரும். சண்ட போடுற முறையில ஒண்ணு. சக்ரவியூகத்துக்குள்ள போன அபிமன்யூ வெளிய வரமுடியாம சிக்கின கதை...

சண்பகலட்சுமியும் எத்தனையோ முறை சக்கரவியூகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். அவள் பலமுறை பழகிய போர் வியூகம்தான். ஆனாலும் கடைசி நேரத்தில் அவளால் வெளியில் வரமுடியாமல் போய்விடுகிறது. எப்படியும் ஒருமுறையாவது வெற்றிகரமாகத் தப்பி வந்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பாள். ஆனால் முடிவதில்லை.
எதிரி இருந்தால்தானே அவள் போரிடமுடியும்... அவள் மாட்டிக்கொள்வது எதிரியிடம் இல்லையே...
ஆமாம்... எதிரியிடம் இல்லைதான்... தனக்குத்தானே சத்தமாகச் சொல்லிக்கொண்டாள். அருகில் நின்றிருந்தவள் ஒரு தரம் சண்பகலட்சுமியைத் திரும்பிப் பார்த்தாள்.
மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி சண்பகலட்சுமியிடம் இருந்தது.
அவள் மிக நேர்த்தியாகக் கட்டியிருந்த கடுமையான மஞ்சள் நிற காட்டன் புடவை, அவளின் மெருகேறிய கரு நிறத்தையும் தசைகள் கெட்டிப்பட்டு திண்ணென்றிருந்த உடல் வாகையும் மேலும் எடுப்பாகக் காட்டியது. நீளக் கூந்தலை அள்ளிக் கட்டியிருந்தாள். ரோஜாப் பூ ஒன்றையும் வேப்பிலைக் கொத்தையும் செருகியிருந்தாள். தோளில் தொங்கிய சிவப்புத் துணிப் பை அதன் சக்தியையும் மீறிப் புடைத்திருந்தது. சிவப்புக் கற்கள் பதித்த ஜிமிக்கி. இரு கைகளிலும் தங்க வளையல்கள். கழுத்தில் நீளமான உருத்திராட்ச மாலை.
அந்தப் பெண் மீண்டும் சண்பகலட்சுமியை உற்றுப் பார்த்தாள். அவள் காதில் புளூ டுத்தோ, எயர்போனோ இல்லை. கையிலும் போன் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கத்தில் நிற்பவரிடம் பேசுகிறாளா என்றும் பார்த்தாள். அதற்கான எந்த அடையாளமும் இல்லை... அருகில் நிற்பவர் தம் குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தார். மறுபடியும் சண்பகலட்சுமியிடம் பார்வையை ஓட்டினாள். அவள் லேசாகக் கண்களை மூடிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.
அந்தப் பெண் சற்றுத் தள்ளி நின்றாள்.


அபிமன்யூ தன் அம்மா சுபத்திரை வயித்தில இருக்கும்போது, சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணர் ஒருநாள் பொழுதுபோக்கா போர் வியூகங்களைப் பற்றிச் சுபத்திரைக்கு விளக்கினார். சக்ரவியூகம் பற்றியும் அதனுள் இருக்கும் பத்மவியூகம் பற்றியும் கிருஷ்ணர் சொன்னார். சுபத்திரை வயித்துக்குள்ள இருந்து அபிமன்யூவும் அதக் கவனமாகக் கேட்கிறான். சக்ரவியூகத்துக்குள் செல்லும் வழியைக் கூறி, அதிலிருந்து வெளியே வர்ற உத்தியைச் சுபத்திரைக்கு சொல்றதுக்கு முன்னாடி பொழுதுவிடிஞ்சு போச்சு. கிருஷ்ணர் கதையை அத்தோட நிறுத்திட்டார். பாரதப்போரில கௌரவர்கள் படை, அதேபோல் சக்ரவியூகம் அமைத்து, அதுக்குள்ள பத்மவியூகம் உண்டாக்கி, அதில் துரியோதனனை ஒளிச்சு வச்சிட்டாங்க. அந்தச் சமயத்தில அர்ஜுனன் அந்த இடத்தில் இல்லாததால, அங்கிருந்த அபுமன்யூ தானே படைக்குத் தலைமை தாங்கப் போறதாச் சொல்லிக் கிளம்பினான்.....
அத்தை தன் மருமகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்...
சிறுமி காலையில் தான் பார்த்த சக்ரவர்த்திக் கோட்டை சடங்கை அசை போடுகிறாள்....

அபிமன்யூ சக்ரவியூகத்தைக் காவல் புரியும் நான்கு பூதங்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறான். முதல் மூன்று பூதங்களான காளி, காண்டா பூதம், ஏலைய கன்னி ஆகிய பூதங்கள் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதி வழங்க மறுக்கிறது. ஆனால், நான்காவது பூதமான கரண்டர் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதிக்கிறது. சக்ரவியூகத்தை உடைத்துகொண்டு உள்ளே சென்ற அபிமன்யூவை கௌரவர்கள் படை சுற்றி வளைத்து கொள்கிறது. வெளியே வர வழித்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த அபிமன்யூ தமக்கு ஆபத்து என்பதைத் தன் தந்தைக்கு தெரிவிக்க தனது சங்கை ஊதுகிறான்.....
அந்தச் சங்கொலி அர்ஜுனன் காதுக்கு எட்டக்கூடாது என்ற காரணத்தால் கிருஷ்ணர் தனது சங்கை அதைவிட பலமாக ஊதி, அபிமன்யூவின் சங்கொலியை மங்கச் செய்கிறார். அந்தத் தருணத்தில் அபிமன்யூ கொல்லப்படுகிறான். இதுதான் சக்ரவர்த்தி கோட்டை”....
சிறுமியின் நினைவோடலும் அத்தையின் கதையும் முடிகிறது.

தானும் எப்போதாவது இதுபோல் ஒருமுறை கொல்லப்பட்டு விடக்கூடும் என்று நினைத்த சண்பகலட்சுமிக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. லேசாகக் குனிந்து மெதுவாகக் கேட்டாள்....
நீ அர்ஜூனனோட பிள்ளையா, கிருஷ்ணனோட பிள்ளையா... துச்சாதனனோட பிள்ளையா... அல்லது அம்மன் கொடியில பறக்கிற ஆஞ்சநேயரோட பிள்ளையா....
அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் குனிந்து, வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, நான் பேசுறது உன் காதில விழுதா... என்று உரக்கக் கேட்டாள்.

கேட்கும்... கேட்கும்... அருகில் நின்றவர்கள் கெக்கலித்தார்கள்.

சண்பகலட்சுமி காதில் அது விழவில்லை.

ஒருவேள என் குழந்தையும் அபிமன்யூபோல வெளியில் வரத்தெரியாம உள்ளேயே மாட்டிக்கொள்ளுமோ... பெரும் கவலை அவளைக் கனமாகப் போர்த்தியது. மூச்சு முட்டியது. அவள் பதற்றமுற்றாள். வியர்த்துக் கொட்டியது. தன்னைச் சுற்றிய வெளியைப் பெரிதாக்கிக் கொண்டாள்.

என்னம்மா இடிக்கிற... பக்கத்தில ஆளுங்க நிற்கிறது கண்ணுக்குத் தெரியலயா...

சொன்னவள் முறைக்க, சண்பகலட்சுமியின் பதற்றம் மேலும் கூடியது. பல மணி நேரமாகப் பிடித்து வைத்திருந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். வாட்டசாட்டமான அவளின் தோற்றம் அவளுக்குச் சுலபமாக இடம் பிடித்ததுத் தந்தது. துìணோரமாகச் சென்று சாய்ந்து கொண்டாள். மூச்சை இழுத்து விட்டாள்.

ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் மொட்டைக் கட்டை டீ சட்டையும் பேண்டும் அணிந்திருந்த ஒரு இளையர் கூட்டம் சலசலப்புடன் வந்து மண்டியது. அவர்களின் சிரிப்பிலும் பேச்சிலும் குழந்தைகளின் சிணுங்கல் மறைந்துபோயின.

என்னாலா மண்ணுல உருவம் செஞ்சிருக்காங்க. போமோ செய்யப் போறாங்கலா...

என்னா பேசுற நீனு... இந்த மாதிரி பேசினீன்னா உனக்கு ஏதாவது ஆயிடும்... ஆமா...

ஆமா உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்...

எனக்குத் தெரியும். நான் சின்னப்பிள்ளையா இருக்கேல்லேர்ந்து பாட்டிகூட வருஷாவருஷம் வருவேன். பாட்டி சொல்லுவாங்க. இதலெல்லாம் சும்மா இல்லை. இந்த திரௌபதி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவங்கன்னு. விளையாட்டா நினைச்சு கேலி செஞ்சா அவ்வளவுதான்னு பாட்டி சொல்லியிருக்காங்க....

பெரிசா தெரிஞ்சா மாதிரியே பேசற.. இந்தக் கத என்னான்னு சொல்லுபாப்பம்...

இது தெரியாதாக்கும்... முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அடுத்து பாண்டவர்களோட குரு, துரோணாச்சாரியார். மூணாவது கர்ணன். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிசா இருக்கிறது துரியோதனோட தம்பி துச்சாதனன். கடைசி இருக்கிற பெரிய உருவம் துரியோதனன்...

பரவால்ல. பெரிய புலவர்தான்லா நீ. எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க. இந்த பொம்மையைத் தான் பாஞ்சாலி உடைப்பாங்க இல்ல...

யா லா...

யாருலா அந்தப் பாஞ்சாலி.... அசல் ஒம்போது....

பாரு... நீ விளையாடத தெரியுமா. அவர் ஒம்போது இல்ல... ஆம்பிள... அவர்தான் பல வருஷமா பாஞ்சாலி வேஷம் போடுறாரு...

வெரிகுட் ஆக்டிங்லா... இவங்கல நம்ம பிராதனவிழா போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்லா....

ஒரு பெரும் சிரிப்பலை வெடித்தது. அருகில் நின்றவர்கள் முறைக்க அந்தக்கூட்டம் அமைதியானது.

வெயில் ஏறி ஏற, உஸ் உஸ் என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் முணகல்கள் பெருகின. ஆனாலும் ஆர்வத்தோடும் பரபரப்போடும் எல்லாரும் காத்திருந்தார்கள்.

சண்பகலட்சுமியின் கவனம் தன் குழந்தையிடம் திரும்பியது.
இது எப்போ என்கிட்ட வந்திச்சு... யோசித்து யோசித்து அவளுக்குத் தலை வலித்தது. கடைசியாக திங்கட்கிழமை வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அவளுக்குத் திங்கட்கிழமை என்றால் பிடிக்கும். ஒருமுறை கோயில் ஐயர் அவளிடம் சொன்னார், பாஞ்சாலிக்கு உகந்தநாள் திங்கட்கிழமை என்று. திங்கட்கிழமையில்தான் பாஞ்சாலி வயசுக்கு வந்தாளாம். பாஞ்சாலிக்குக் கல்யாணம் நடந்ததும் திங்கட்கிழமைதானாம். அதனாலதான் ஆடி மாசத் திங்கட்கிழமையில் கொடியேற்றம் நடக்குது என்றும் ஐப்பசி மாசம் திங்கட்கிழமையில தீமிதி நடக்குது என்றும் சொன்னார். அன்று முதல் தான் திங்கட்கிழமை பிறந்திருக்க வேண்டும் என்று சண்பகலட்சுமி தீர்மானித்து விட்டாள். தன் பிள்ளையும் திங்கட்கிழமைதான் பிறக்கும் என்று அவள் நினைத்தாள். ஆனால் எந்தத் திங்கட்கிழமை என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை...

அங்க பாரு, கிருஷ்ணர் போறாரு...

தொடங்கப் போகுதுலா...

பம்பையும் மேளமும் முழங்க குந்தம், மணிப்பலகைகள், மஞ்சள் தட்டு, சாட்டை, தீவிட்டி ஏந்தியவர்களும் வாள் ஏந்திய ஐந்து காவல்காரர்களும் கிருஷ்ணருடன் பெரியாச்சி சன்னதியை அடைந்தனர்.
கிருஷ்ணர், திரௌபதைக்கு மாலை போடுகிறார்.
திரௌபதைக்கு அருள் வருகிறது.

சண்பகலட்சுமி இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவளின் நரம்புகள் புடைக்கத் தொடங்கியிருந்தன.
எப்போதும் ஆம்பிளங்கதான் வேஷம் போடணுமா... ஏன் பொம்பிளயே பாஞ்சாலியா நடிக்கக்கூடாது... என்ன விட்டா நான செய்ய மாட்டேனா... சண்பகலட்சுமி அன்றும் புழுங்கத் தொடங்கினாள்...
நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே சண்பகலட்சுமிக்கு ஆசை. வகுப்பில் அவள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் முதலாம், இரண்டாம் வகுப்புத் தமிழாசிரியருக்கு அவளைப் பிடிக்காது போனது. பிறகு ஆறாம் வகுப்பு தமிழாசிரியருக்கு அவள் மீது அளவுக்குமீறி அன்பு ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாடகம் சொல்லித் தர அவரது வீட்டுக்கு வரச்சொன்னார். ஆனால் அவர் நாடகம் சொல்லித்தரவில்லை.
பிறகு வானொலி நாடகத்தில் நடிக்க பலமுறை எழுதிப் போட்டாள். நீண்ட நாள் கழித்து ஒரு தயாரிப்பாளர் அவளை நேர்முகத் தேர்வுக்கு வரச்சொன்னார். அவளை நேரில் பார்த்த தயாரிப்பாளர் அவள் கருப்பாகவும் குண்டாகவும் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டார். குரலுக்கும் உடலமைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சண்பகலட்சுமிக்குப் புரியவில்லை.
வேலைக்குப் போன பிறகு ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தாள். அந்தக் குழுவில் இருந்த பலரும் வசதியானவர்களாக இருந்தார்கள். நாடகத்தைவிட மற்ற அனைத்திலும் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர்களது ஆடம்பரமான பொழுதுபோக்குகளுக்கு சண்பகலட்சுமியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அம்மா சிறையில். அப்பா மறுவாழ்வு இல்லத்தில். அக்கா ஓடிப் போய் விட்டாள். அவளும் தம்பியும் மட்டும்தான். தம்பி படித்துக் கொண்டிருந்ததால், முழுப் பொறுப்பும் அவளுக்குத்தான். உயர்நிலைக் கல்வியை முழுமையாக முடிக்காததால் அவளுக்கு நல்ல வேலையும் கிடைக்கவில்லை. மேடை நாடக ஆசையும் அதோடு முடிந்துபோனது.
ஒரு தீமிதியில் அவள் சாமி வந்து ஆடியதை டிவி செய்தியில் காட்டினார்களாம். பலபேர் பார்த்திருக்கிறார்கள். செய்திக்கு மறுஒளிபரப்பு இல்லாததால் அதையும் அவளால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

கிருஷ்ணர் திரௌபதையின் கழுத்தில் சாட்டை அணிவிக்கிறார். பிறகு திரௌபதையைக் கூட்டிக்கொண்டு திரௌபதை சன்னதிக்குப் போகிறார். திரௌபதை காப்புக் கட்டிக் கொள்கிறாள்.
சாமி புறப்பாடு.
வீரபத்திரர், கிருஷ்ணர், அர்ஜுனர், திரௌபதை எல்லாரும் படுகளம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

படுகளம் தொடங்கி விட்டது.

யார் போட்ட படுகளமா, இது எவர் போட்ட படுகளமா...

பாடிக்கொண்டே சுற்றி வருகிறார்கள்.
பாட்டின் சுதி ஏற ஏற கூட்டத்திலும் கனம் கூடியது. வெய்யில் நெரிசல் புழுக்கம் எல்லாவற்றையும் மீறி கூட்டத்தில் ஒருவித தீவிர உணர்வலை படர்கிறது.

சொர்க்கமா... நரகமா...

ஒவ்வொரு உருவமாக கிருஷ்ணர் கேட்டுக்கொண்டே வருகிறார்.

இவன் உன் மகன் அபிமன்யூ...

சொர்க்கம்...

இவர் பாண்டவர்களுக்குப் போர் வித்தை சொல்லிக் கொடுத்த துரோணாச்சாரியார்...

சொர்க்கம் கண்ணா....

இவர் பாண்டவர்களின் மூத்த சகோதரர் கர்ணன்....

சொர்க்கமே கொடு....

இது துச்சாதனன்...

திரௌபதியின் உடலில் வேகம் கூடுகிறது... மண் உருவத்தைக் காலால் உதைக்கிறாள்...
இவனுக்கு நரகமே கிட்டட்டும்...

சுற்றிலும் பேரமைதி. பம்பையும் மேளமும் ஓங்கி ஒலிக்கிறது... தொண்டர்களின் பதற்றவொலி வேகமாக வெளியில் கேட்கிறது

இது உன்னைத் தொடையில் அமரச் சொன்ன துரியோதனன்..... கிருஷ்ணன் சொன்னதும் பாஞ்சாலியின் சன்னதம் உச்சம் கொள்கிறது.

கூட்டத்தில் நின்ற பலரும் ஆவேசம் கொள்கின்றனர். கூட இருப்பவருக்கு சாமி இறங்கக்கூடும் என எதிர்பார்த்து வந்திருந்தவர்கள், தயாராக அவர்களை அடக்கும் பணியில் இறங்குகின்றனர். சன்னதம் கொண்டவர்களுக்கு தொண்டர்கள் வீபூதியையும் குங்குமத்தையும் மாறி மாறி அப்புகின்றனர்.

சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்த, பக்கத்தில் நின்ற இரு தொண்டர்கள் அவளை அடக்க முயற்சி செய்கிறார்கள். அவள் திமிறித் திமிறி ஆடுகிறாள்.

துரியோதனின் உடல் மேல் பாய்கிறாள் திரௌபதை... அவன் ரத்தத்தை அள்ளிப் பூசிக் கொள்கிறாள்... எலும்பை உடைத்துத் தலை சீவுகிறாள்....

அவனுக்கு நரகம்தான் அவனைக் கொல்லு... கத்திக்கொண்டே திமிறுகிறாள் சண்பகலட்சுமி. கூட்டத்தின் கவனம் திசை திரும்புகிறது.

துரியோதணன் வேடத்தில் இருந்தவர் மயக்கமடைகிறார்.

ஒஹோ... ஹோய்... ஹூய்...சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்துகிறாள்

இத யாரு உள்ள விட்டா... வருசா வருசம் இதுகூட ஒரே தொந்துருவாப் போச்சு... அலுத்துக்கொண்டே அவளை அடக்குகிறார்கள் தொண்டர்கள்.

திரௌபதியின் சன்னதம் இன்னும் இறங்கவில்லை. அவள் உடல் ஆடிக்கொண்டே இருக்கிறது.

உயிர்த்தண்ணி கொடுக்க துரியோதனன் உடலைத் துìக்கிக்கொண்டு தொண்டர்கள் ஓடுகிறார்கள்.

சாமி வந்தவர்கள் ஒவ்வொருவராக மெல்ல அடங்குகிறார்கள். சண்பகலட்சுமியை அடக்க முடியாமல் கூடி நின்றவர்கள் திணறுகிறார்கள்...

திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிந்து கொண்டாள். ஒற்றையாடை நீக்கி செம்பட்டு அணிந்துகொண்டாள். அவள் கையில் வாள் கொடுக்கிறார்கள்.

சண்பகலட்சுமியின் கொண்டை அவிழ்ந்து நீளமான செந்நிற சுருட்டை முடி தீ போல் எரிந்தது.

உன்னை வெட்டாம அடங்க மாட்டேன்டா....

யார வெட்டப் போற.... சொல்லு.... கை நிறைய குங்குமத்தை அள்ளிக்கொண்டு கர்ணகடூரமாகக் கேட்கிறார் அவளுடன் போராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர்.

உன்னத்தாண்டா... உன்னைத்தாண்டா... அவள் எல்லார் முகத்திலுக் காறி உமிழ்கிறாள்....

சுற்றி நின்றவர்கள் ஆத்திரம் தாங்காமல் அவள் மேல் வாளி வாளியாக மஞ்சள் நீரைக் கொட்டுகிறார்கள்.

திரௌபதை வாள் கொண்டு தீக்குழிக்கு அடி அளக்கிறாள். நான்கு மூலையும் வரைந்து, திரௌபதை சூலத்தை அகற்ற கூட்டம் மெல்லக் கலைகிறது.

நாகஸ்வரம் மேளத்துடன் பூசை தொடங்குகிறது.

முகம் முழுக்க குங்குமமும் மஞ்சள் நீருமாக அந்த வெயியில் எரிந்துகொண்டிருந்த சண்பகலட்சுமியை மறந்து விட்டிருந்தார்கள்.

பாவிப்பயலுக. குடிக்கத் தண்ணி கேட்டா, தலையில கொட்டிட்டுப் போயிடானுங்க...

சண்பகலட்சிக்கும் உள்ளுக்குள்ளும் எரியத் தொடங்கியது.

ஏய் அந்தத் தண்ணியைக் கொண்டா...

அவளின் கடூரமான குரலில் நடுங்கிப்போன அந்தப் பெண் எட்டி நின்றவாறு கையிலிருந்த தண்ணி போத்தலை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்...

ஒருபோத்தல் தண்ணியையும் ஒரே மடக்கில் குடித்தாள். கொஞ்சம் பசி அடங்கியதுபோலிருந்தது.

ரெண்டு பேருக்கு நரகமாம்... மூணு பேருக்கு சொர்க்கமாம்.... என்னா நியாயம் இது... போருன்னா போர்தான்... எல்லாரும் கொன்னாங்க... எல்லாரும் செத்தாங்க... எல்லாரையும் ஒரே இடத்துக்குதான அனுப்பனும்... அது எப்படி ஒருத்தங்கல நரகத்துக்கும் ஒருத்தங்கல சொர்க்கத்துக்கும் அனுப்ப முடியும்.... அது என்னா நியாயம்....

அவளுக்கு பைத்தியம் முற்றி விட்டதாக அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

சண்பகலட்சுமிக்குத் தீக்குழி வெட்டுவதையும் தீ மூட்டுவதையும் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது.

ஒரு முறையாவது தானும் ஆம்பிளபோல் வேஷம் போட்டுத் தீக்குழிக்குள் இறங்கிப் பார்க்கவேண்டும் என்று அவள் எப்போதும் நினைத்துக்கொள்வாள்.
ஆனால் பொம்பிள எப்படி ஆம்பிள போல வேஷம் போடமுடியும்... ஆம்பிளன்னா ரொம்ப ஈஸ¬யா பொம்பிளையா மாறிடலாம். ஆனா அவள் எப்படி ஆம்பிளையாவது... எப்படி மஞ்சள் வேட்டியைக் கட்டிக் கொண்டு மேலாடையில்லாமல் வருவது.... சே...
பெண் போல் வேடமிட்டு உலா வந்த தன் கணவனை நினைத்துக்கொண்டாள். அவன் ஏன் பெண் வேடம் போடுவதன் காரணம் அவளுக்கு பல நாட்கள் புரியாமலே இருந்தது. அவன் ஏதோ நாடகத்தில் நடிக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் எப்போதுமே நாடகம் நடக்காதே என்றும் யோசித்தாள். ஒருநாள் ஆண் தோழன் ஒருவனை வீட்டுக்குக் கூட்டி வந்து, இனிமேல் இந்த வீட்டில் இவன்தான் இருப்பான், நீ வெளியே போ என்றான். அவள் முடியாது என்றாள். என்னா ரொம்ப திமிறா பேசற... வந்தவன் மிரட்டினான். அவளுக்கு ஆத்திரம் வந்தது. இந்த வீட்டில என்னோட சிபிஎப்பும் இருக்கு. என்ன வெளில போகச் சொல்ல நீ யாரு... அவள் கத்தினாள். அவன் அடித்தான். அவளும் அடித்தாள். அடிதடி ரத்தக் களறியானது. அவள் போட்டிருந்த டீ சட்டைக் கிழித்தெறிந்தான். அவமானமும் கோபமும் தாங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தன் கணவன் மீது கத்தியை வீசினாள். அந்த ஆத்திரத்தில் புதிதாக வந்தவன் அவளைப் பலாத்காரம் செய்தான்... ரத்தக் களறியில் ஒரு அத்தியாயம் முடிந்தது... இன்னொன்று தொடங்கியது...

தீமிதிக்காக புது மணல் கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள். இதன் மேல் தீக்குழி வெட்டுவார்கள்.
தீக்கட்டைகள் குவிந்து இருந்தன. திரௌபதை அளந்த இடத்தில் 18 அடி நீளத்துக்கு வெட்டப்படுகிறது.

அவளும் தெள்ளத்தெளிவான சுத்தமான மணலாகத்தான் இருக்கிறாள்.

அவள் மேல் சன்னதம் ஏற்படுத்திக் கோடு கிழிக்கிறார்கள்... அவளைச் சுத்தமாக்க மஞ்சளைக் கரைத்துக் கொட்டுகிறார்கள்... ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று பகுதிகளாக தீக்கட்டைகளை அடுக்கிறார்கள்... ஹோமத் தீயை எடுத்து வந்து தீ மூட்டுகிறார் தலைமைப் பண்டாரம்... மூன்று பகுதிகளிலும் எரிந்த தீ, ஒரு பெரும் தீயாகி, கொளுந்து விட்டு எரிகிறது. எரிந்து எரிந்து கட்டைகள் கருகி, அவிந்து தணலாகிறது.... தணல் சமன்படுத்தப்படுகிறது... பூசணிக்காய் உடைத்து காவல் கொடுக்கிறார்கள்... பூத் துìவி வழிபடுகிறார்கள்... பூக்குழி தயாராகிறது...
விரதம் இருந்து மஞ்சள் நீராடி ஒற்றைத் துணியுடுத்தி தணல் மேல் நடக்க ஆண்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்...
தலைமைப் பண்டாரம் வந்து விட்டார்... அவர் கரகம் சுமந்து ஆடுவது, திருமணமான நாளன்று குட்டையான கவுனைப் போட்டுக் கொண்டு அவளது கணவன் ஆடியதை ஞாபகப்படுத்தியது. அன்றைக்கு அவளும் அவனுடன் சேர்ந்து ஆடினாள்.
பண்டாரம் முதலடி வைத்து நடந்ததும் ஒவ்வொருவராக இறங்குகிறார்கள்...
வரிசையாக நடக்கிறார்கள்... நீறு பூக்காமல் தணலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்... பலர் ஓடுகிறார்கள்... பட்டும் படாமலும் சிலர் தாவுகிறார்கள்...
தீயில் நடந்தவர்கள் மிதித்து மிதித்து தெறித்த பால் அவளை முழுதாக நனைத்திருந்தது
தீ தணிந்து சாம்பல் சூடும் தணியும்போது அவள் தனித்துப் போயிருந்தாள்....

அவள்மீது புல்முளைக்கிறது.
புறாக்களுக்கு அரிசி வீசிக்கொண்டு வெறுமனே இருக்கிறாள். மறுபடியும் அவளை உழுகிறார்கள்..... மணலாகிறாள்... குழி வெட்டுகிறார்கள்... தீ மூட்டுகிறார்கள்...

பூக்குழி கணல்கிறது. சந்தனக்கட்டைகள் எரிந்து அணைந்து தணலாகும் வரை நேற்றிலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள் சண்பகலட்சுமி.
தீயின் சூட்டில் நெற்றியில் அப்பப்பட்டிருந்த குங்குமம் கரைந்து ஓடி அவளது மஞ்சள் சேலை சிவப்பு நிறமாகியிருந்தது.
பூக்குழி சுற்றுபவர்கள் வரிசையில் நிற்கும் அவளுக்கு முன்னும் பின்னும் இடம் விட்டே நிற்கிறார்கள்.

அவள் மீது ஒவ்வொருவராக நடந்து செல்கிறார்கள்.

கனத்த குரலில் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
வேகமான தாளத்துடன் பாடல் ஓங்கி ஒலித்தது.
சண்பகலட்சுமியும் பாடத் தொடங்கினாள்.
அவள் கையிலிருந்த எலுமிச்சம்பழம் மசிந்து வழிந்தது.
அவள் உடலும் கரையத் தொடங்கியது.
தீக்குழியைச் சுற்றிலும் செங்குருதி பரவி விரவியது.
பசும்பால் கலந்திருந்த வெண்மணல் செம்மண் ஆகிறது...
கைநிறைய வேப்பிலையும் எலுமிச்சம்பழமும் வைத்திருந்த ஒருத்தி தீட்டு தீட்டு என்று கத்தினாள்.. அவள் குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது...
தணிந்திருந்த தணல் திடீரென பற்றி எரியத் தொடங்கியது... நெருப்பின் நடுவே சண்பகலட்சுமியின் பாடல் உரத்து ஒலிக்கிறது...

அருள் வந்து ஆடிக்கொண்டிருந்தவர்களின் ஆட்டம் சட்டென அடங்கியது.
தீக்குளித்திருந்த ஆண்கள், பூக்குழி சுற்ற வரிசைபிடித்திருந்த பெண்கள், காவலுக்கு நின்றவர்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாருமே விதிர்த்துப் போயினர்.
கோயில் பூசாரிகளுக்கு வியர்த்துக் கொட்டியது... அங்கு நின்றிருந்த அவசர மருத்துவ சேவைத் தாதியர்களும் போலிஸ்காரர்களும் செய்வதறியாது நிற்க... சடசடவென்று மழை கொட்டத் தொடங்கியது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...