உதயசங்கர்
பீடிகை
கதையின்
தலைப்பைப் படித்தவுடன் இதென்ன கூத்து என்று நீங்கள் அங்கலாய்ப்பது
தெரிகிறது. பொதுவாக எழுத்தாளர்கள் தானே கதாபாத்திரங்களை உருவாக்குவார்கள்
இல்லை இல்லை சிருஷ்டிப்பார்கள். அவர்கள் தானே கதாபாத்திரங்களைப் பற்றி
அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி, அவர்களுடைய வாழ்வில் நிகழும் திடீர்
திருப்பங்களைப் பற்றி அவ்வளவு ஏன் அவர்களுடைய பிறப்பும் இறப்பும் கூட
எழுத்தாளர்களின் கையில் தானே இருக்கிறது. ஏனெனில் எழுத்தாளர்கள்
படைப்பாளிகள் இல்லையா? உலக நன்மைக்கும் தீமைக்கும் அவர்கள் தாங்களாகவே
முன்வந்து பொறுப்பாளிகளாகி விடுவார்கள். இவர்களுடைய கதைகளையோ கவிதைகளையோ
படித்துத் தான் உலகம் நல்வழியில் நடப்பதாக ஒரு பிரமை எப்போதும் இவர்களுக்கு
உண்டு. இவர்கள் தாங்கள் எழுதுவது எல்லாம் சாகாவரம் பெற்ற சரித்திரங்கள்
என்ற கற்பனை தாங்கள் எழுதவில்லையென்றால் கிழக்கில் சூரியன் உதிப்பது கூட
சந்தேகம் தான் அப்படின்னு ஒரு கெத்து. தங்களுடைய எழுத்துக்களைப்
படிப்பதற்காக உலகமே தவம் கிடப்பது மாதிரி கொஞ்சம் தலையைத்தூக்கிக் கொண்டு
நடப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு நாள் எழுத முடியாமல்
போய்விட்டால் காய்ச்சல் வந்து விடும் இந்த எழுத்தாளர்களுக்கு. இவர்களுடைய
கதைகளையோ, கவிதைகளையோ நாவல்களையோ படித்து விட்டு ஒரே ஒரு வாசகர்
பேசிவிட்டாலும் போதும் கால்கள் தரையில் தரிக்காது. அப்படியே மேகத்தில்
பறப்பார்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவர்களுடைய புத்தகத்தைப் பற்றிய
டாக் தான் போய்க் கொண்டிருப்பதாக பீத்துவார்கள். ஒருத்தரும்
பேசவில்லையென்றால் நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வருகிற
வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று பீலா விடுவார்கள். ஆனால் ஒரு
பயலும் படிக்கமாட்டேங்கிறானே என்று இரவில் தண்ணியப்போட்டுட்டு இவர்கள்
அழுகிற அழுகை இருக்குதே..!.
இதிலே என்ன பெரிய வேடிக்கை என்றால்
முற்றும் துறந்த விசுவாமித்திரமுனிவர்களைப் போல விருது, பரிசுகளைப்
பற்றி,ப் பேசுவார்கள். வேறு எழுத்தாளர் யாராவது வாங்கும் போது அவர்களுடைய
வயிற்றில் கொழுந்து விட்டு எரிகிற ஜூவாலைகள் தெரிவதை வெளியிலிருந்தே
நீங்கள் பார்க்க முடியும். உடனே விருது வாங்கிய எழுத்தாளர் அதை
வாங்குவதற்குச் செய்த பின் திரை வேலைகள் என்ன? என்று மகாபாரதக்கதை
அளவுக்கான கதைகளை உருவாக்கி மறைவெளியில் உலவ விடுவார்கள். அந்த
எழுத்தாளர்களை கடுமையாகத் திட்டக்கூடச் செய்வார்கள். ஏன் உங்களுக்குக்
கிடைக்கவில்லை என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்று பயந்து முன்கூட்டியே
இந்த விருதுகளால் என் எழுத்துக்களின் அக்னியை தாங்க முடியுமா? என்றும் இந்த
விருதுகளால் என் எழுத்தின் தகுதியை அளக்க முடியுமா? என்றும் மீசை துடிக்க
வீராவேசம் பேசவும் செய்வார்கள். இதைக் கேட்கும் வாசகனுக்கு எழுத்தாளனின்
கட்டபொம்ம வசனம் புல்லரிக்க வைக்கும் சிலர் நான் விருதுகளுக்காகவோ,
பரிசுகளுக்காகவோ எழுதுகிறவன் இல்லை. அப்படி யாராவது விருதோ பரிசோ
கொடுத்தால் மறுத்துவிடுவேன் என்றெல்லாம் ச்சீ..ச்சீ இந்தப் பழம் புளிக்கும்
நரிக்கதை பேசுவார்கள். இதெல்லாம் விருதுகள், பரிசுகள், இவற்றின் தொகை,
பிரபல்யத்தைப் பொறுத்து மாறும். கொஞ்சம் பெரிய தொகை கிடைக்கிறது, இதனால்
நம்முடைய மூஞ்சியும் மீடியாவில் தெரியும் என்றால் போதும். உடனே என்
எழுத்துகளுக்கு விருது கொடுத்ததின் மூலம் தன்னை அந்த விருது பெருமைப்
படுத்திக் கொண்டதாகச் சமாளிப்பார்கள். என்ன ஜகஜ்ஜாலம் காட்டுவார்கள்
தெரியுமா இந்த எழுத்தாளர்கள்?
எத்தப்பெரிய தமிழ் எழுத்தாளருக்கும்
ஒரு ஆயிரம் பேர் தான் வாசகர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்களின் புகழைப்
பொறுத்து அவர்களுடைய புத்தகங்களும் எல்லோர் வீட்டு அலமாரிகளில் இருக்கும்.
ஆனால் யாரும் படிக்க மாட்டார்கள். படிக்கிறதுக்கு யாரு புத்தகம்
வாங்குகிறார்கள். எல்லாம் ஒரு கௌரவத்துக்காகத் தான். இந்த ஆயிரம், ஐநூறு
வாசகர்களுக்காகத் தான் எழுத்தாளர்கள் விழுந்து விழுந்து
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதான் தெரியுமே என்கிறீர்கள் இல்லையா?
இதிலே
இன்னொரு கொடுமை என்னன்னா இந்த எழுத்தாளர்கள் சூரியனுக்குக் கீழே இருக்கிற
அத்தனை விசயங்களைப் பற்றியும் எழுத, விமரிசிக்க, குற்றம் சொல்ல, மறுக்க,
உரிமை உண்டு. ஆனால் இவர்களுடைய எழுத்துக்களை நீங்கள் யாரும் விமரிசிக்க,
குற்றம் சொல்ல, மறுக்க உரிமை கிடையாது தெரியுமா? அப்படி யாராச்சும்
சொல்லிவிட்டால் அவ்வளவு தான் தங்களுடைய அத்தனை உரிமைகளும் பறிக்கப்பட்டு
விட்டதாக கூப்பாடு போட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்ல ஒரு எழுத்தாளர் தான்
இமயமலை மீது ஏறி தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக அறிக்கை விடுவார்.
இன்னொருவர் தான் இனிமேல் எழுத மாட்டேன். என் பேனாவை ( அ ) கம்யூட்டரை மூடி
வைத்து விட்டேன் என்று முழக்கமிடுவார். மற்றொரு எழுத்தாளர் உலகம் முழுவதும்
எழுத்தாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு சர்வதேச
எழுத்தாளர்களைப் போராட்டத்துக்கு ஆதரவாக அறைகூவி அழைப்பார். கொஞ்சம்
எழுத்தாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். கொஞ்சம் எழுத்தாளர்கள்
தெளியத் தெளிய மது அருந்திக் கொண்டேயிருக்கும் போராட்டத்தைத்
தொடங்குவார்கள். ஆக இவர்கள் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் பேசலாம்,.
ஆனால் இவர்களைப் பற்றி யாரும் பேசப்பொறுக்காத சூராதிசூரர்கள்.
இவ்வளவு
கடுமையாக எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற என்னை யார் என்று கேட்கிறீர்கள்
? உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்கிறீர்கள்? என்னுடைய பெயர்
தங்கலட்சுமி. நான் என்னுடைய எழுத்தாளரின் படைப்பு. அவர் இந்தப் பெயர் தான்
எனக்கு வைத்திருக்கிறார். அவரிடமிருந்தே நான் உருவானேன் அதனால் அவருடைய
உள்ளும்புறமும் எனக்குத் தெரியும். அவர் எப்படி சிந்திப்பார், எப்படி
பேசுவார், எப்படி சாப்பிடுவார், எப்படி உறங்குவார் எல்லாம் எனக்குத்
தெரியும். எனக்கு மட்டுமல்ல என்னை மாதிரி அவருக்குள் ஒளிந்திருக்கும் நிறைய
கதாபாத்திரங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். இப்போது சமாதானமாகிவிட்டதா
உங்களுக்கு!
இதோ அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னை
உருவாக்குவதற்காக யோசித்து யோசித்து மதிமயங்கி உறங்கிவிட்டார். எப்போது
வேண்டுமானாலும் அவர் எழுந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. அப்படி அவர்
எழுந்து நான் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டால் அவ்வளவு
தான். என்னை ஒரே ஒரு கோடு கிழித்து சாகடித்து விடுவார். எந்தப்
படைப்பாளிக்கும் தன்னை மீறி தன்னுடைய படைப்பு பேசுவது பிடிக்காது. அதுவும்
எழுத்தாளர்களுக்கு ஈகோ அதிகம். தன்னைத் தவிர உலகத்தில் எழுத்தாளர்களே
இல்லையென்றும் தன்னுடைய படைப்புகளைத் தவிர மற்ற படைப்புகள் எல்லாம் குப்பை
என்றும் சாதாரணமாகவே சொல்லுவார்கள். அப்படி இருக்கும் போது அவருடைய
படைப்பான நான் அவருடைய எழுத்திலிருந்து தாவிக் குதித்து வந்து உங்களிடம்
இப்படி குசுகுசு வென பேசினால் என்ன நினைப்பார்? தன்னுடைய கதாபாத்திரம்
சோரம் போய்விட்டதாக நினைக்க மாட்டாரா? அதுவும் அவரைப் பற்றி பேசிக்
கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால் அம்மாடி.. அவ்வளவு தான்..
நேற்று
ராத்திரி தான் அவர் என்னைப் பற்றி எழுதத் துணிந்தார். அவருடைய மனைவி
கமலத்துடன் சிறு சண்டை. நல்லவேளை அந்த அம்மாள் அவருடைய கதைகளை
வாசிப்பதில்லை. அவருடைய கதைகளை மட்டுமல்ல யாருடைய கதைகளையும்
வாசிப்பதில்லை. அந்த அம்மாளுக்குக் கதை கட்டுரை எழுதுகிறவர்கள்
உதவாக்கரைகள் என்று நினைப்பில் உள்ளவள். ஏதோ என்னுடைய எழுத்தாளர் அரசு
உத்தியோகத்தில் இருந்ததினாலேயே கலியாணத்துக்கு சம்மதித்தாகவும், இந்தக்
கோட்டிக்காரத்தனத்தையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் தன்னுடைய
பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால் என்னுடைய எழுத்தாளர்
இருக்கிறாரே வில்லாளகண்டன் விடுவாரா? அந்த அம்மாளிடம் நிதம் டால்ஸ்டாய்,
டாஸ்டாவ்ஸ்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா.வண்ணதாசன், வண்ணநிலவன் என்று
ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் பேசிப் பார்த்தார். அந்த அம்மாளும் கட்டிய
பாவத்துக்காக கொஞ்ச நாள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கும்
பொறுக்க முடியவில்லை. கொட்டாவி விட்டது. வேலை கிடக்கு என்று சொல்லி
தப்பிக்கப் பார்த்தது. அவர் பேச ஆரம்பித்ததும் “ ஏங்க கேஸுக்குப்
பதியணும்….” ” ஏங்க நாளைக்கி ரேஷன் கடையில துவரம்பருப்பு போடறானாம்…
ஞாபகமாக வாங்கணும்..” “ உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா இந்தப்பய
ரித்தேஷ்..ஜூவாலஜி நோட்ஸ் கேட்டானே வாங்க வேண்டாமா? “ என்று கேட்க
ஆரம்பித்தாள். உடனே நம்ம எழுத்தாளருக்குக் கோபம் வந்து ” நான் எவ்வளவு
பெரிய விஷயத்தைச் சொல்லிக்கிட்டிருக்கேன்…..நீ இப்படி அல்பமா பேசறியே..”
என்று ஏச ஆரம்பிப்பார். அந்த அம்மாளும் ” இந்த அல்பம் இல்லைன்னா
சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க…. நாங்க என்ன பெரிய இலக்கிய வாதின்னோ…
அப்புறம் என்னவோ சொல்லுவீங்களே வாசுகியா வாசகியா…அப்படின்னு
சொன்னோமா….அல்பம்னு தெரிஞ்சி தானே கலியாணம் முடிச்சீங்க… ” என்று
வாக்குவாதம் செய்வாள். பல்வேறு வகையான சொல்லாயுதங்கள் இரண்டு
தரப்பிலிருந்தும் ஏவப்படும். கடைசியில் கமலம் அழுது கொண்டே விருட்டென
எழுந்து போய் விடுவாள். உடனே என்னுடைய எழுத்தாளருக்கு சுதி இறங்கி விடும்.
பேசாமல் இந்த இலக்கியம் சமூகம் புரட்சி இந்தக்கண்றாவியெல்லாம் விட்டுருவோமா
என்று விரக்தியடைவார். எல்லாம் ஒரு மணி நேரத்துக்குத் தான். அப்புறம்
மறுபடியும் இலக்கிய சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்து விடுவார்.
பாருங்கள்..
என்னுடைய எழுத்தாளர் மெல்ல அசைகிறார். ஒருவேளை அவர் எழுந்து மீண்டும்
என்னைப் பற்றி எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார். அந்த நேரத்தில் நான்
கதைக்கு வெளியில் இருந்தால் என்னைத் தேட ஆரம்பித்து விடுவார். என்ன
இருந்தாலும் நான் அவருடைய படைப்பு தானே. அவருக்கு கஷ்டத்தைக் கொடுக்கலாமா?
சரி… நான் போய்ட்டு அவர் வேறு வேலை பார்க்கும்போது உங்களை மறுபடியும்
சந்திக்கிறேன். சரியா?
எழுத்தாளர் எழுதிய கதை
வேணு
கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். முருகன் வேணு வாங்கிக் கொடுத்த
டீக்காகவும் சிகரெட்டுக்காகவும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். வேணு
எழுதப்போகும் கதைகளை உரசிப்பார்க்கும் உரைகல்லாக முருகன் இருந்தான்.
ஏனெனில் வேணுவுக்கு வேறு நண்பர்கள் கிடையாது. அவன் அவ்வப்போது பேசுகிற
மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம் என்று
எல்லாவற்றுக்கும் காது கொடுக்கிறவனாக முருகன் இருந்தான். அந்தரங்கத்தில்
வேணு மீது ஒரு கிரேஸும் இருந்தது. ஒரு வேளை நாளைப்பின்ன வேணு பெரிய ஆளாகி
விட்டால் அவருடைய நண்பர் என்று சொல்வதில் பெருமை தானே.அதனால் அவன் என்ன
சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று அவனுடைய மனைவி சுனந்தா அவனைச்
சீக்கிரமாக வரச்சொல்லியிருந்தாள். கடையில் சில சாமான்களும் வாங்க
வேண்டியதிருந்தது. ஆனாலும் வேணு சொல்லி விட்டான்.
“ டேய் முருகா..
இன்னிக்கு ஒரு பெண்ணியக்கதை எழுதலாம்னு இருக்கேன். சொல்றேன் கேளு….எப்படி
இருக்குன்னு நீ தான் சொல்லணும்..நீ சொன்னா கரெக்டா இருக்கும்…
முருகனுக்குப் பெருமை தாங்கவில்லை.
அம்மா தங்கலட்சுமியைத் தட்டி எழுப்பினாள்.
” அம்மாடி தங்கம் நீ போய் அந்த அறை வீட்டுக்குள்ள படுத்துக்க...”
என்று
பட்டாசலில் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பிச் சொன்னாள். கண்விழித்த தங்க
லட்சுமிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. மின்னலென மூளைக்குள் வெளிச்சம்
பரவ அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். கலியாண அரவம் ஓய்ந்து
விட்டது. விருந்தாளிகள் யாரையும் காணோம். அவளுக்கு உடம்பெல்லாம் அடித்துப்
போட்டது மாதிரி அசதி. இருக்காதா பின்னே!
காலையில் மூன்று மணிக்கே
தங்கலட்சுமியை எழுப்பிக் குளிக்கச்சொல்லி அலங்காரம் பண்ணி முடித்த போது மணி
ஐந்தரை. அதற்குள் பெண் அழைப்புக்கு கார் வந்து விட்டது. ஏற்கனவே இரவில்
சரியான தூக்கம் இல்லை. ஆட்கள் நடமாட்டமும் பேச்சுச் சத்தமும் கேட்டுக்
கொண்டேயிருந்தது. காரில் உட்கார்ந்ததும் வெளிக்காற்று, அவள் சூடியிருந்த பூ
மணம், பவுடர், சந்தன வாசனைகள் எல்லாம் சேர்ந்து தங்க லட்சுமியைக் கிறக்கி
விட்டது. கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த
நாச்சியாராச்சியின் மடியில் படுத்து விட்டாள். நாச்சியாராச்சி சிரித்துக்
கொண்டே,
“ ஏட்டி கோமு..போனதும் பிள்ளைக்கி சூடா காப்பிய வாங்கிக்
கொடு… இப்பமே ஒறங்கி விழுதா பாரு… இப்படியே போனா மாப்பிள்ள தாலி
கட்டும்போது இவ அவம் மடியில தான் கிடப்பா பாத்துக்க…”
என்று
சொன்னாள். காருக்குள் ஒரே சிரிப்பாணி. அவளும் ஒறக்கச்சடவுடன் புன்னகைத்துக்
கொண்டாள். பொழுது விடிய விடிய அவளுக்கும் தெளிச்சி வந்து விட்டது.
கலியாணம்
என்றால் சினிமாக்களில் பார்ப்பது போல ஒரு பரவசமான அநுபவம் என்று
நினைத்திருந்தாள் தங்க லட்சுமி. ஆனால் கலியாணக்கூட்டம், சத்தக்காடு,
எல்லோரும் அவளையே பார்ப்பது போன்றவற்றால் ஒரு பதட்டம் மட்டும் இருந்தது.
அதுவும் தாலி கட்டும் போது ஏதோ ஒரு அலை வந்து நெஞ்சில் பொங்கும்.. அது
அப்படியே அவளை உணர்ச்சிமயமாக்கும் என்று கற்பனை செய்திருந்தாள். அப்படி
ஒன்றும் நடக்கவில்லை. சப்பென்றிருந்தது. கண்களில் ஏற்பட்ட எரிச்சலைத் தான்
அவள் முதலில் உணர்ந்தாள். மகிழ்ச்சியும் இல்லை. பயமும் இல்லை. ஒரு வேளை
தூக்கமில்லாததால் இருக்கலாம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டாள். மாப்பிள்ளை
கண்ணனும் அவளிடம் பெரிய ஆவலைத் தூண்டவில்லை. மாடர்ன் மோஸ்தர் படி
நிச்சயத்துக்குப் பிறகு இரண்டு முறை சந்தித்து பேசியிருந்தான். கடிதங்களும்
போட்டிருந்தான். தினசரி செல்ஃபோனில் மெசேஜும் அனுப்புவான். எதிலும் காதல்
மொழிகள் இல்லை. எல்லாம் அவனைப் பற்றி தான் இருந்தது. பொதுநலம், கட்சி,
மார்க்சியம், ஆண்பெண் சம உரிமை, ஈகோ, என்று ஒரு புதிய அகராதியே இருந்தது.
அவளுக்குள் முதலில் இதெல்லாம் பயத்தை உருவாக்கியது. என்ன மாதிரியான ஆள்
இவன் என்று யோசித்தாள். அவளுக்குத் தெரிந்தது சினிமாவில் பார்த்த கணவன்
மனைவியின் ரெடிமேட் வாழ்க்கை தெரியும். அப்புறம் தினசரி ஒருதடவையாவது, “
உன்னக்கட்டிகிட்டு நாஞ்சீரழியுதேன்..” என்று இம்போஷிசன் போட்ட மாதிரி மாறி
மாறி ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டே சேர்ந்து வாழ்கிற அவளுடைய அப்பா,
அம்மாவைத் தெரியும். சேர்ந்து இருந்து விட்டால் போதும் ஒரே சிரிப்பாணியாய்
சிரிக்கிற கனகாக்காவையும் அவளுடைய மாப்பிள்ளையையும் தெரியும். குத்துப்போணி
மாதிரி இருந்த காந்திமதியை. தெருவில் தரையில் உருட்டி மிதிக்கும் அவளுடைய
புருஷனைத் தெரியும்.. தினமும் அம்பது அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிட்டு
போகிற அம்மையப்பன் அண்ணனைத் தெரியும். இப்படி அவளுடைய தெருவில் இருக்கும்
பல தினுசுகளை அறிவாள். ஆனால் இது மாதிரியான புது தினுசை அவளுக்குத்
தெரியாது. அவளுடைய நெருங்கிய சேக்காளியான சுந்தரியிடம் சொன்ன போது,
“
அட லூசு.. இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்… அவ
அவன் பொண்டாட்டியை நாய் மாதிரி சொடக்கு போட்டு கூப்புடுதான்.. அவரு உனக்கு
சம உரிமை தாரேங்காரில்ல.. அப்புறம் ஒன் சாம்ராச்சியம் தான்…”
என்று
சொன்னதைக் கேட்டபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பயம் தெளிந்தது.
தங்கலட்சுமி எழுந்து பாத்ரூமுக்குப் போனாள். போய் விட்டு வந்து முகத்தைக்
கழுவி வாயைக் கொப்பளித்து விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். பின்பு
அறைவீட்டுக்குள் அவள் நுழைந்தாள். அங்கே புது ஜமுக்காளம் விரித்து புதிய
தலையணைகள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஓரத்தில் தாம்பாளத்தில் இரண்டு
ஆப்பிள் பழம், கொஞ்சம் திராட்சைப்பழங்களும் லட்டு, மைசூர்பாகு இனிப்பும்
இருந்தன. ஒரு தம்ளரில் பால். ஒரு சொம்பில் தண்ணீர். தங்கலட்சுமிக்கு
அதையெல்லாம் பார்த்ததும் எதையாவது எடுத்து திங்கலாமா என்று எண்ணம் ஓடியது.
அவள் தாம்பாளத்தை நோக்கி கையை நீட்டவும் அறைவீட்டுக் கதவைத் திறந்து கண்ணன்
வரவும் சரியாக இருந்தது. கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுவிட்டு
ஜமுக்காளத்தில் உட்கார்ந்தான். அவளுடைய கையைப் பிடித்து அவனுடைய பக்கமாக
இழுத்தான்.
“ தங்கம் என்ன உனக்குப் பிடிச்சிருக்கா..”
“ ம் “
அவள்
சொல்லி முடிக்குமுன்னர் அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தான். அவளுடைய
தலையில் மாட்டிருந்த சடை மாட்டிகள் அழுத்தியது. அவள், “ கொஞ்சம் இருங்க..”
என்று சொல்லியபடியே அந்த சடைமாட்டிகளை கழட்டி ஓரமாக வைத்தாள். அவன் அவளுடைய
வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தான். அவளுக்கு கூச்சமாக இருந்தது.
“ என்ன தங்கம் ஏதாவது சொல்லேன்..”
“ என்ன சொல்ல..”
“ என்னயப்பத்தி என்ன நினைக்கிற..”
என்று
சொல்லிக் கொண்டே சேலையை விலக்கி அவளுடைய மார்பில் கை வைத்தான். அவளுக்கு
ஒரு மாதிரியாக இருந்தது. நேற்று வரை அவள் அந்தரங்கம் என்று நினைத்துக்
கொண்டிருந்த அவளுடைய உடலை அவன் அவ்வளவு சுலபமாய் ஆக்கிரமிப்பது ஒரு வித
அருவெறுப்பைத் தோற்றுவித்தது. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவன்
அவளுடைய உதடுகளில் முத்தமிட்டான். அவளும் அவனுடைய கன்னத்தில்
முத்தமிட்டாள். அவன் மீண்டும் அவளுடைய மார்பில் கையை வைத்து பிசைய
ஆரம்பித்தான். அவள் மெல்ல அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே,
“ கூச்சமாயிருக்குங்க.. நாளைக்கு..”
“ அதெல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும்..கொஞ்ச நேரத்தில சரியாயிரும்..”
என்று
சொல்லிக் கொண்டே அவளுடைய சேலையை உருவினான். அப்போது அவனுடைய கண்களில்
இருந்த வெறி பசி கொண்ட ஒரு மிருகத்தின் வெறியைப் போலிருந்தது. அவள் பயந்து
போனாள். அவனுடைய கைகள் போன திசையெங்கும் அவளும் தன் கைகளால் தடுக்க முயற்சி
செய்தாள். ஆனால் அவளுடைய ஆடை குலைய குலைய அவனுக்கு அருள் வந்த மாதிரி அவளை
இறுக்கி அணைத்தான். உடலெங்கும் முத்தமிட்டான். அவளுக்குக் கிளர்ச்சியாக
இருந்தாலும் உடம்பு வலி அதிகமாகி விட்டது. அவன் அவளை முழுமையாக
ஆக்கிரமிக்கும் போது அவள் பலகீனமாக, “ ப்ளீஸ் இன்னக்கி வேண்டாம்..” என்று
சொன்ன வார்த்தைகள் அவனுடைய உதடுகளுக்குள் புதைந்து போனது. அவன் அவளை
என்னவெல்லாமோ செய்தான். குழந்தை தன் கையில் கிடைத்த பொம்மையைத் தன்னிஷ்டம்
போல வைத்து விளையாடுவதைப் போல அவன் அவளுடைய உடலை கையாண்டான். அவளுக்கு
மூச்சுத் திணறியது. வலியும் வேதனையும் கூடி வந்தது. அவனைக் கீழே
தள்ளிவிடக்கூட முயற்சித்தாள். முடியவில்லை. அவன் இன்னும் இறுக்கினான்.
இப்படியே போனால் அழுது விடுவாளோ என்று கூடப் பயந்தாள். கடவுளே எப்போது இது
முடியும் என்று நினைத்தாள். திடீரென அவன் அவளுடைய கீழுதட்டையும் மார்பையும்
கடித்தபடி விரைப்பானான். அவள் வலி தாங்காமல் லேசாகக் கத்தி விட்டாள். அவன்
மெல்ல அவள் மேலிருந்து கீழே சரிந்தான். அவளுக்கு ஒரு பெருஞ்சுமை இறங்கிய
விடுதலை உணர்வு தோன்றியது. உடனே உதடுகள், மார்புகள், அடிவயிறு எல்லாம்
ரணவேதனை எடுத்தன. கண்களை மூடிப் படுத்துக் கிடந்தவன் மெல்லத் திறந்து
அவளைப்பார்த்துச் சிரித்தான். ஒருக்களித்து படுத்துக் கொண்டே அவனுடைய வலது
கையை அவளுடைய மார்பில் வைத்தான். தீப்பட்ட மாதிரி இருந்தது. அவனுடைய
கைகளைத் தட்டி விட்டாள். அவன்,
“ எம்பிரண்டு முருகேசனுக்கு அந்த
இடத்தைக் கண்டு பிடிக்கவே ஒரு மாசமாச்சாம்…” என்று சொல்லி விட்ட
அசட்டுத்தனமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தெரிந்த வெற்றிக்களிப்பு
அவளை என்ன வோ செய்தது.அவள் எழுந்து சேலை கட்டப் போனாள். அவன் அவளுடைய
கையைப் பிடித்துக் கொண்டு
“ இன்னிக்கி ராத்திரி இப்படித்தான்..” என்றான். அவள் ஒருபோதும் அப்படிப் படுத்தவள் கிடையாது.
“ இல்லீங்க… காலையில அம்மா கூப்புடும்போது அவசரம் அவசரமா சேலை கட்ட முடியாது…”
“ அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா? எதுக்காக பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே ரூமுக்குள்ளே அனுப்புறாங்க.. நீ பேசாம இரி…”
என்று
சொன்னான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி அவன் தூங்கியதும்
எழுந்து கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். அவள் கண்களை மூடியதும்
உறங்கியும் விட்டாள். திடீரென அவள் மீது பெரிய பாறாங்கல் விழுந்து அமுக்கிய
மாதிரி இருந்தது. மூச்சுத் திணறியது. செத்து விடுவோமோ என்று கூட
நினைத்தாள். கைகளால் அந்தப் பாறாங்கல்லைத் தள்ளிவிட முயற்சி செய்தாள்.
முடியவில்லை. கண்ணீர் வந்து விட்டது. அடிவயிற்றில் வலி அதிகமாகி விட்டது.
அவன் மறுபடியும் சரிந்து படுத்து உறங்கி விட்டான். அவளால் அவளுடைய உடம்பையே
தொட முடியவில்லை. அப்படி வலித்தது. அந்த வலி வேதனையுடன் மீண்டும்
உறக்கத்தின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டாள். மறுபடியும் ஒரு பெரிய
திமிங்கிலம் அவளை விழுங்கியது. அவள் அதனுடைய பற்களில் அரைபட்டு
சித்ரவதைப்பட்டாள். கண்களைத் திறக்கவேயில்லை.
இது தான் கலியாணமா?
இதற்குத் தான் கலியாணமா? இதற்காகவா அம்மாக்கள், அப்பாக்கள், பெண்கள்
கவலைப்படுகிறார்கள்.? அப்போது யாரோ எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து அவள்
பெயரைச் சொல்லி அழைப்பது போல் இருந்தது. ஆனால் அவள் தானே கிணற்றுக்குள்ளே
இருந்தாள். ஏற முடியாத வழுக்குக் கிணறு. எத்தனை முறை ஏற முயற்சித்தாலும்
வழுக்கிக் கீழே விழுந்து அடிபட வைக்கும் கிணறு..இப்படியே வாழ்நாள்
முழுவதும் அடிபட்டுச் சாக வேண்டியது தானா? அவளை அழைக்கும் குரல் வலுத்தது.
இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள். அருகில் வேட்டையாடித் தின்ற
களைப்பில் மூச்சு ஏறி இறங்க வாயைத் திறந்து குறட்டை விட்டுத் தூங்கிக்
கொண்டிருந்தான் கண்ணன். அவளால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அம்மாவின்
குரல் மீண்டும் ஒலித்தது. எரிச்சலும் கோபமுமாய்,
“ இரி.. வாரேன்.. காலைலே வந்து உயிர எடுக்கா…”
என்று
கத்தினாள். அவள் போட்ட சத்தத்தில் அவன் ஹாங்.. என்று முழித்துப் பார்த்து
விட்டுத் திரும்பிப் படுத்தான். அப்போது அவள் அவனைப் பார்த்த பார்வையில்
அவ்வளவு வன்மமும் குரோதமும் இருந்தது.
” எப்படி இருக்கு
கதை..முருகா..” என்று கேட்டான் வேணு. முருகன் கைக்கடிகாரத்தைப்
பார்த்தபடியே “ சூப்பர்..” என்றான். வேணுவின் முகத்தில் பெருமிதம்
பொங்கியது. அந்தக்குழைவுடன்
“ சரி முருகா நான் வாரேன்.. வீட்ல
ஒய்ஃப் தனியா இருக்காங்க.. நான் சீக்கிரம் போய் சீக்கிரம் தொந்திரவு
பண்ணனும்..இன்னக்கி ரெம்ப சந்தோஷமா இருக்கு.. கொண்டாடனும்ல.. “ என்று
கண்களைச் சிமிட்டி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் வேணு. முருகனும்
சேர்ந்து சிரித்தான்.
ஒரு இடைவெட்டு
ஸ்ஸ்ஸ்.அங்க
எங்க பாக்கறீங்க….நாந்தான் தங்கலட்சுமி.. என்னோட எழுத்தாளர் இன்னும் கதையை
முடிக்கல. ஒரு பிரேக் விட்டு காப்பி குடிக்கப்போயிருக்காரு. இதுவரை
எப்படியிருக்கு கதை. எழுத்தாளர் எழுதிக்கிட்டிருக்கிற கதையை அவருக்கு
முன்னாடி அவருடைய கதாபாத்திரமே வாசகருக்குச் சொல்வது இது தான் முதல் தடவை.
இந்தக் கதையை எழுத இரண்டு வருசம் ஆயிருக்கு இவருக்கு. எனக்குத் தெரியாதா.
உலக சரித்திரமே பெண்ணுடலில் எழுதப்பட்டது தானே. பெண்ணுடலைப் பிரதிகளாக்கி
ஆண்கள் சாதனை என்று பீத்திக் கொள்வது தானே நடக்கிறது. என்னுடைய எழுத்தாளர்
எழுதியிருப்பதுபோல நான் ஒன்றும் அப்பாவியில்லை. என்னோட கணவனாக
எழுதியிருக்கிற கண்ணன் ஒன்றும் மார்க்சியவாதியுமில்லை. ஆனாலும் என்ன?
விஞ்ஞானி, பத்திரிகையாளர், அரசியல்வாதி, முதலாளிகள், தொழிலாளிகள்,
சாமியார்கள், எழுத்தாளர்கள் என்று யாராக இருந்தாலும் சரி பெண்ணை உயிராக
பார்ப்பவர்கள் இல்லையே. பெண் என்பவள் ஒரு உடல் என்பதைத் தாண்டி அவர்கள் ஒரு
கணமேனும் சிந்தித்திருப்பார்களா? கதைக்காக என்ன வேண்டுமானாலும்
எழுதுவார்கள். பெண்ணைத் தெய்வமும் ஆக்குவார்கள். அவிழ்த்தும்
பார்ப்பார்கள். இது ஆண்களின் உலகம் தானே. அவர்களின் பொய்களாலும்,
கற்பனைகளாலும் புனைவுகளாலும் உருவாக்கப்பட்ட உலகம் இது. இங்கே அவர்களைத்
தவிர யாரும் முக்கியமில்லை. பெண்கள் மட்டுமில்லை, குழந்தைகள் மட்டுமில்லை,
காற்று, ஆகாயம், இயற்கை என்று தான் வாழும் இந்தப்பூமியையே ஒரு பெண்ணுடலாகப்
பாவித்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள். எல்லா எழுத்தாளர்களின் கதைகளிலும்
அவர்கள் இருப்பார்கள். இந்தக் கதையிலும் என்னுடைய எழுத்தாளர் இருக்கிறார்.
அட அதுக்குள்ளே வந்து விட்டார். சரி நான் ஒரு பிரேக் எடுத்துக்கிறேன்.
மீண்டும் பிரதி
முருகன்
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே வீட்டிற்கு நடந்தான். காலிங் பெல்லை
அழுத்தியதும் கலைந்த முடியும், சோர்வான நடையுடன் வந்த முருகனின் மனைவி
சுனந்தா கதவைத் திறந்தாள்.
“ கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா…
வயித்துவலி.. இப்பவே வந்துருச்சி.. பீரிய்ட்ஸுக்கு முன்னாடியே இப்படி
வலிக்கி… பேசாம கர்ப்பப்பையை வெட்டி எறிஞ்சிரலாமான்னு இருக்கு…..”
அவள்
சொல்வதைக் கேட்டுக் கொண்டே கைலிக்கு உடை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளில்
எடுத்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டான். அவன் வருவதற்குள்
சுனந்தா உறங்கியிருந்தாள். அவன் அவளருகில் போய்ப்படுத்து அவளைத் திருப்பி
முத்தமிட்டான்.
“ ஐயா சாமி.. வேண்டாம்.. என்னால முடியாது…” என்று
கெஞ்சும் குரலில் சொன்னாள். முருகன் அதைக் காதில் வாங்கிய மாதிரியே
தெரியவில்லை. அவள் உடைகளைக் களையத் தொடங்கினான். அவள் பரிதாபமான ஆட்சேபணைக்
குரலில்,
“ கலியாணம் முடிஞ்சன்னக்கிலிருந்து இந்தப் பிடிவாதம் தானே… நானும் ஒரு மனுசப்பிறவின்னு நெனச்சாத்தானே… பொண்ணாப் பொறந்ததே பாவம்…”
சொன்னதையெல்லாம் அவன் சட்டை செய்யவில்லை. அவன் அதற்குள் வெகுதூரம் முன்னேறியிருந்தான்.
தங்கலட்சுமி எழுதும் கதை
மேலே
எழுதிய வரியுடன் பேனாவை மூடி வைத்தார் என்னுடைய எழுத்தாளர். கடிகாரம் இரவு
இரண்டரை காட்டியது. அப்படியே கால்களை நீட்டி தலையைப் பின்னுக்குச்சாய்த்து
சில நொடிகள் கண்களை மூடினார். கைகளை வெட்டி முறித்து சொடுக்கு போட்டார்.
பின்பு கண்ணாடியைக் கழட்டி மேஜையின் மீது வைத்தார். எனக்கு உண்மையில்
என்னுடைய எழுத்தாளரை நினைத்தால் பெருமையாக இருந்தது. எழுத்து எப்பேர்ப்பட்ட
வலிமை வாய்ந்தது. ஆனாலும் என்ன எழுத்தாளர்கள் தங்களுக்குத் தேவைப்படுகிற
அளவுக்கு வாழ்க்கை எனும் மகாத்திரைச்சீலையில் ஒரு தையல்காரரைப்போல
கத்தரித்து தங்களுடைய படைப்பை வாசகர்களுக்குக் கொடுக்கிறார்கள் இல்லையா?
ஆனால் அவர்கள் தங்களுடைய படைப்புக்குத் தேவையில்லை என்று கத்தரித்துப்
போடும் வாழ்க்கைத்துண்டுகளில் அவர்களால் கைவிடப்பட்ட உண்மைகள்
கலைடாஸ்கோப்பைப் போல பலமுகங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கதையில்
வருகிற தங்கலட்சுமியோ சுனந்தாவோ பாலுறவே வேண்டாம் என்று வெறுப்பவர்கள்
அல்ல. அதன் இன்பத்தை அவர்களும் அநுபவிப்பவர்கள் தான். இனவிருத்திக்கு
இயற்கையின் கொடை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால் ஆண்கள் பாலுறவைப்
பற்றி மட்டுமே கவலைப்படும் போது பெண்கள் குழந்தைப் பேற்றைப் பற்றிக்
கவலைப்படுகிறார்கள். ஆக்கிரமிப்பு, வன்முறை, இவற்றைத் தான்
வெறுக்கிறார்கள். உயிரற்ற ஒரு பாலுறவுச்சாதனமாக தங்களைக் கருதுவதை அவர்கள்
ஒருபோதும் ஏற்பதில்லை. இந்தக்கதைக்குப் பின்னால் நான் வாழ்ந்த வாழ்க்கையைப்
பற்றி என்னுடைய எழுத்தாளர் எழுதாமல் நான் சொல்ல முடியாது. அது
காப்புரிமைப் பிரச்னையாகி விடும். என்றாலும் மற்றவர்களைப் போல என்னுடைய
எழுத்தாளர் கிடையாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவர்
உறங்கும்வரை அல்லது அடுத்த கதையை யோசிக்கும்வரை அவருடன் இருப்பதற்கான உரிமை
எனக்கிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?
இதோ அவர்
எழுந்து அறையிலிருந்து வெளியே வந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தார்.
விடிவிளக்கு வெளிச்சத்தில் அவருடைய மனைவி கமலம் ஆழ்ந்த
உறக்கத்திலிருந்தாள். அவள் விடும் மூச்சின் ஒலி சீராக வந்தது. அருகில்
குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் காலைப் போட்டுக் கொண்டு தூங்கிக்
கொண்டிருந்தனர். மேஜை மீதிருந்த சொம்பை எடுத்து தண்ணீரைக் குடித்தார்
என்னுடைய எழுத்தாளர். பின்னர் அவருடைய மனைவியின் அருகில் சென்று
இந்தப்பக்கமாகத் திரும்பிப் படுத்தார் என்னுடைய எழுத்தாளர். ஒரு நிமிடம்
கண்களை மூடியவர் என்ன நினைத்தாரோ திரும்பினார். கமலத்தைக்
கட்டிப்பிடித்தார். திடீரென தூக்கம் கலைந்த கமலம் அவருடைய கைகளை
விலக்கினாள். மீண்டும் அவர் அவள் மீது கைகளைப் போட அவள்,
“ சும்மாருங்க..ரெம்ப டயர்டாருக்கு…..காலைல அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும்..”
என்றாள். அவர் எதுவும் பேசவில்லை. அவளுடைய நைட்டியை மேலே உயர்த்தினார்.
“ என்னக்கி சொன்னதக் கேட்டிருக்கீங்க..”
என்று
திரும்பி மல்லாந்து படுத்துக் கொண்டாள். என்னுடைய எழுத்தாளர் அவள் மீது
சரிந்த போது கண்களை மூடி உறங்க நினைத்தாள் கமலம். ஆனால் முடியவில்லை.
எனக்கும் அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை வாசகரே! நான்
பிரதிக்குள்ளேயே இருந்து விடுகிறேன்.
நன்றி புதுவிசை