Tuesday, March 15, 2016

காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்...

பிரபஞ்சன்
பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1
தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.
o
நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.
இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
o
சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.
சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)
first-row-erotic-sculptures.jpg
குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.
காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.
‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’
- குறுந்தொகை
இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.
சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.
‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’
பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.
குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.
பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
o
தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.
1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.
2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.
3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.
4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.
5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.
மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.
பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.
‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.
காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’
இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.
இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)
தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.
o
சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.
காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.
இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.
சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.
வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .
ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.
o
தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.
காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.
திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.
ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.
கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.
“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”
கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?
o
1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.
2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.
3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.
4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.
5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.
6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.
7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.
o
1. தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.
2. சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.
3. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம், பதிப்பு 1989.

தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் ...




 இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள், மீதுயர்ந்த மலைகள், ஆழமான நதிகள் நிறைந்த இயற்கைச் சூழல்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன. இவற்றின் இயல்பான விளைவாக மிகச் செழுமையான உயிரினங்களின் பன்மீயப் பெருக்கத்தை (Bio-Diversity) இப்புவியியல் பிரதேசம் கொண்டமைந்துள்ளது. அதுபோலவே இந்நாடுகள் பல வகையான பண்பாட்டு வகையினங்களைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. மொழி, பிரதேசம், சமயம், பண்பாடு என்ற பல்வேறு அடையாளங்களைக் கொண்டு அணுகும்போது தெற்காசிய நாடுகளின் தொன்மையும் செழுமையும் வியப்பினை ஏற்படுத்துவதாக நம் கண் முன் விரிகின்றன.
 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரலாற்றின் எல்லாக்கட்டத்திலும், மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரை, எப்போதுமே இவ்வகையான பண்பாட்டுச் செழுமையைக் கொண்டிருந்தன என நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியும். பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், சீனம் போன்ற பல மொழிகளை இந்நாடுகளில் நாம் காணமுடிகிறது. ஒவ்வொரு மொழியும் அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் கிளை பிரிந்து பல நூறு மொழிகளாகச் செழித்தன என்பதையும் காணுகிறோம். சமணம், பௌத்தம், வைதீகம், தாந்திரிகம், தாவோயிசம், கன்பூசியனிசம், சாக்தம், சைவம், வைணவம், இஸ்லாம் போன்ற பல சமய நிறுவனங்களையும், இவற்றை ஏதோ ஒருவகையில் ஊடுருவி நிற்கும் இயற்கை நெறிகளையும் இந்நாடுகளில் நாம் தரிசிக்க முடியும். இத்தனை வேறுபட்ட பண்பாட்டுப் பரப்புக்களைக் கொண்டிருந்த போதிலும், இப்பண்பாடுகளுக்கிடையில் ஆசியப் பெரும்பரப்பு சார்ந்த ஒரு பொதுமையும் நிலவுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய உண்மையாகும். மிகப் பழங்காலந்தொட்டே கடல் வழியாகவும் நில வழியாகவும் மிகச் செழுமையான கொடுக்கல், வாங்கல்களைச் செயல்படுத்தி வந்த மக்களாக ஆசிய மக்கள் விளங்கி வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும். வித்தியாசமான சமூகத் தகவுகளைக் கொண்டவர்களாக நாம் விளங்கிய போதிலும்யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற பொதுமை மரபும் நம்மில் முகிழ்த்திருக்கிறது என்பதையே இங்கு நான் வலியுறுத்த விழைகிறேன். ஒவ்வொரு பண்பாட்டின் தனித்தன்மைகளைப் பாதுகாத்துக் கொண்டு ஒன்றுபட்ட ஆசியப் பண்பை நேசிப்பவர்களாக நம்மால் வாழமுடிந்திருக்கிறது என்பதை நம் மக்களின் நீண்ட நெடிய வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
 காலனிய ஆட்சிக்காலம் ஆசிய நாடுகளின் வாழ்வில் சில தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆசிய ஒற்றுமை என்ற பண்பு சில புதிய வரவுகளை அக்காலத்தில் சந்தித்தது. ஐரோப்பியப் புதிய வரவுகளை நாம் எதிர்கொண்ட சூழல்களில் நமது பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைந்தன என்ற நவீன நிகழ்வை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவை ஏன் அவ்வாறு கூர்மையடைந்தன? என்ற கேள்வியும் கூட மிக முக்கியமானதே. மிகப் பழமையான சமூகங்களைக் கொண்ட நமது நாடுகள் மேற்கத்திய சமூகத்தின் அனுபவங்களிலிருந்து வந்த புதிய வரவுகளைத் தமக்கே உரிய முறையில் உரசிப்பார்த்து, மதிப்பிட்டு உள்வாங்கும் ஒரு நிகழ்வுப் போக்கிலேயே, அத்தகைய உள்முகமான பண்பாட்டுத் தன்னுணர்வுகள் கூர்மையடைதல் என்பதுவும் நிகழ்ந்தது எனக் கூறலாம். ஆசிய நாடுகளின், பண்பாடுகளின் நவீனமாதல் என்ற நிகழ்வுப் போக்கின் ஊடாக அத்தகைய பண்பாட்டுத் தன்னுணர்வுகளின் கூர்மையடைதலும் நடந்தேறியது எனவும் இதனை மதிப்பிடலாம். நவீனகாலத்திய சுய பண்பாட்டுக் கூர்மையடைதல்கள் மேற்கத்திய வரவுகளோடு சந்தித்துப் பொருந்தி, நமக்கே உரிய நவீனமயமாக்கலைச் சாதித்தன என்றும் கூறலாம்.
 காலனிய ஆட்சிக்காலம் முடிந்து ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்தபோது நமது பிரச்சினைகள் இன்னொரு புதிய வடிவத்தை ஏற்றன. நவீனமயமாக்கம் என்ற சர்வதேசத் தொடர்புடைய நிகழ்வுப் போக்கு நமது பண்பாட்டுத் தனித்தன்மைகளையும் நம்மிடையிலான பண்பாட்டு ஊடாட்டங்களையும் மறுவரையறை செய்யுமாறு நிர்ப்பந்தித்தன. நவீனமயமாக்கம் நம்மிடையில் தீவிர தனிமனிதவாதப் போக்குகளை வளர்த்து வருகிறது என்ற உண்மையை மனதில் கொள்ளுவோமேயெனில், அவை சார்ந்து நமது பண்பாட்டுப் பரிமாற்றங்களின் சிக்கல்களையும் நம்மால் அவதானிக்க முடியும். எல்லா வேளைகளிலும் நம்மிடையிலான உறவுகள் நியாயமாக எதிர்கொள்ளப்படுகின்றன என்று சொல்லிவிட முடிவதில்லை. சமீப காலங்களில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நெருக்கடியான பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன என்பதை நாம் காணுகிறோம். அவை எத்தனை நெருக்கடியானவையாக இருப்பினும் பல்லினக் கலாச்சாரச் சூழலுக்கு மரியாதை கொடுக்கும் ஆசிய மரபை மீட்டெடுக்கும் கடப்பாடு நமக்கு உள்ளது என்ற உணர்வோடு இப்பிரச்சினையை அணுக வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இப்படிப்பட்ட வரலாற்றுக் கடமையின் ஊடாகவே பண்பாட்டுக் கல்வி என்பது முதன்மையான ஒன்றாக, உயிரோட்டமான ஒன்றாக, செயலூக்கமான ஒன்றாக நம்மிடையே தொழில்பட்டு வருகிறது. பண்பாட்டுக் கல்வி என்பது நமது வாழ்வுரிமைகள் சார்ந்த ஒன்றாகவும், நமது சொந்த மரபுகளினின்றும் நமது படைப்பாற்றலை மறு உருவாக்கம் செய்து கொள்ளும் ஒன்றாகவும் நம்முன் நிற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்ற சொற்களின் பொருள் விளக்கம்
 இவ்வுரையில் நான் மரபு, பாரம்பர்யம், பண்பாடு, கலாச்சாரம் என்பன போன்ற பல சொல்லாக்கங்களைப் பயன்படுத்துகிறேன். இக்கலைச் சொல்லாக்கங்கள் பற்றிய சில விளக்கங்களை வழங்கிவிட்டு நான் எனது உரைக்குள் செல்லுவது நியாயமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மரபு, பாரம்பர்யம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய சொற்கள் ஒன்றுக்குள் ஒன்றாகத் தொடர்புடைய சொற்கள். நாம் இங்கு பேசமுனைகின்ற பண்பாட்டுக் கல்வி எனும் தலைப்புடன் அவை அனைத்துமே நேரடி உறவு கொண்டவை. இவற்றில் மரபு என்ற சொல்லும் பாரம்பர்யம் என்ற சொல்லும் ஒரே பொருளுடையன. மரபு என்பது தூய தமிழ்ச் சொல். பாரம்பர்யம் என்பது வடமொழியிலிருந்து தமிழ் எடுத்தாண்டு பயன்படுத்தி வரும் சொல். இவ்வுரையில் பெரும்பாலும் மரபு என்னும் சொல்லையே நாம் பயன்படுத்த உள்ளோம். அதுபோலவே பண்பாடு எனும் சொல்லும் கலாச்சாரம் எனும் சொல்லும் ஒரு பொருளுடையன. Culture என்ற ஆங்கிலச் சொல்லை நாம் தமிழுக்கு மொழிபெயர்க்க முனைந்தபோது, வடமொழித் தொடர்பால் கலாச்சாரம் என்ற சொல்லையும் தூய தமிழ்ச் சொல்லாக பண்பாடு என்ற சொல்லையும் பயன்படுத்தினோம். நாம் இவ்வுரையில் பெரும்பாலும் பண்பாடு என்ற சொல்லையே அதிகம் பற்றி நிற்கப் போகின்றோம்.
 இனி மரபு என்ற சொல்லுக்கும் பண்பாடு என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைத் தெளிவு படுத்துவோம். இவை இரண்டும் நெருக்கமான தொடர்புடைய சொற்கள் என்பதை முதலில் தெரிவித்து விடுவோம். மரபு என்ற சொல் ஆங்கிலச் சொல்லான Tradition என்ற சொல்லைப் பற்றி நிற்பது ஆகும். ஒரு சமூகம் கடந்த காலத்தில் பின்பற்றியொழுகிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தகவுகள், அவை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவை மரபு என்ற சொல்லால் குறிக்கப்படும். ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவங்களும் அபிலாசைகளும் மறு தலைமுறைக்கு கையளிக்கப்படும் போது அவை மரபு என்ற தொகுப்புச் சொல்லால் குறிக்கப்படுகின்றன. இதன் படி, கடந்த காலத்தினின்றும் இன்னொரு தலைமுறையை வந்து சேரும் சகல பழக்க வழக்கங்களையும் அவற்றின் ஊடாக அமைந்திருக்கும் தகவுகளையும் மரபு என்ற சொல் குறிக்குமாக இருக்கலாம்.
 மரபு என்ற சொல்லிலிருந்து பண்பாடு என்ற சொல் குறிப்பிடத்தக்க முறையில் வேறுபடுகிறது. குறிப்பிட்ட அச்சமூகம் கடந்த காலத்தைத் தாண்டி, சமகாலத்தினுள் நுழையும் போது, இன்னும் கூடுதலாக அது சமகாலத்தில் நின்று கொண்டு தனது எதிர்காலத்தை வரையறுத்துக் கொள்ளும்போது, தனது மரபை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. சமகால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப அது தனது பழம் மரபை மறுவரையறை செய்து கொள்ளுகிறது. இதுவே பண்பாடு எனப்படும். இந்த வகையில் மரபு என்பது ஒரு பெரிய வட்டமாகவும் அதனுள்ளிருந்து தேர்வு செய்யப்பட்ட பழக்க வழக்கங்கள், தகவுகள் ஆகியவற்றின் தொகுதியான பண்பாடு ஓர் உள்வட்டமாகவும் குறிக்கப்படலாம். மரபு என்பது ஒரு பெருந்தொகுப்பு, அது மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்பட்டு, புதிய தேவைகளுக்கேற்ப தகவமைக்கப்படும்போது பண்பாடு உருவாகிறது. மரபு எனும் பெருந்தொகுப்பிலிருந்து பண்பாடு தன்னை எடுத்துரைக்கிறது. நாங்கள் இன்னவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்ற எடுத்துரைப்பே பண்பாடு எனப்படும். மரபை விட பண்பாடு நெகிழ்வானது. அது விவாதத்திற்கும் தேடலுக்கும் இடமளிப்பது. புதிய வரையறைகளை அது ஏற்றுக் கொள்வது.
தமிழர் பண்பாட்டின் தனித்துவங்கள்
1. தொன்மையும் தொடர்ச்சியும்: தமிழர் பண்பாடு அதன் தொன்மை, தொடர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது. தமிழ் அகழ்வாய்வாளர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கி.மு ஆறாம் நூற்றாண்டு ஆகிய வரலாற்றின் மூத்த அடுக்குகளிலிருந்து தமிழ்ப் பண்பாட்டின் பழமையை எடுத்துரைக்கிறார்கள். சங்க இலக்கியம் என அறியப்படுகின்ற செவ்வியல் இலக்கியங்கள் இக்காலப்பகுதியிலிருந்து தொடங்குகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இக்காலப்பகுதியையும் தாண்டி, பஃறுளி ஆறு, குமரிக் கண்டம், லெமூரியா, சிந்து வெளி நாகரீகம் ஆகிய மிகப் பழங்கால அடுக்குகளையும் நோக்கித் தமிழின் தொன்மை பயணப்பட்டு வருகிறது. தமிழர்கள் ஏன் பழமையைத் தேடுகிறார்கள்? என்பது ஒரு சுவையான கேள்வியாக இருக்கலாம்.
          தமிழர்கள் மட்டுமல்ல, சமகால வரலாற்றில் பல மக்கள் கூட்டத்தினர் கடந்த கால வரலாற்றின் பழம் அடுக்களில் ஒரு பொற்காலத்தைத் தேடி வருகின்றனர். இது ஏன்? என்பது ஒரு பொதுமைப்பட்ட கேள்வியாக நம் முன் நிற்கிறது எனலாம். மக்கள் கூட்டங்களின் இடைக்கால வீழ்ச்சிகள் பற்றிய தன்னுணர்வு பழங்காலத்தில் ஒரு தூய மரபைத் தேடுவதற்குக் காரணமாக அமைகிறது எனலாம். சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்கள் நம்மை அவையில்லாத ஒரு பழம்பெரும் வாழ்வைத் தேடச் செய்கின்றன. பிற மொழிக் கலப்புகள், பிற நாட்டவரின் படையெடுப்புகள், சொந்த சமூகத்திற்கு ஏற்பட்ட பண்பாட்டு நெருக்கடிகள் போன்றவை அத்தகைய ஒரு பூர்வ மரபைத் தேடுவதற்கான உந்துதலைத் தருகின்றன எனக் கூறலாம். இதே சூழல்களின்தான் தமிழர்களும் தமது தூய மரபைத் தேடி வரலாற்றின் இடுக்குகளின் ஊடாகப் பயணப்பட்டு வருகின்றனர் எனலாம். தொன்மை, நாம் விருப்புடன் காண விழையும் ஒரு கனவு போல நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவு என்பதால் அதன் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைக்க விரும்புகிறேன் எனக் கருதிவிடாதீர்கள். நாம் வாழும் எதார்த்தத்தைவிட அதிக ஆற்றல் கொண்ட கனவு அது. 
 தமிழின் தொன்மையை விட தமிழின் தொடர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என சில அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கருத்தில் உள்ள நியாயங்களைச் சற்றே நோக்குவோம். மிகப் பழமையான தமிழ் இலக்கியங்கள் நமக்கு தொகை நூல்களாகக் கிடைக்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற அனைத்துப் பழம் நூல்களுமே தொகுக்கப்பட்ட பாடல் தொகைகளாக நம்மை வந்தடைந்துள்ளன. இன்னும் விரிவாக அந்நூல்களைச் சங்க இலக்கியம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். இவற்றோடு தொடர்பு கொண்ட வகையில் மூன்று சங்கங்கள் இருந்தன என்றும் கூறுகின்றனர். பழம் தமிழின் நீதி நூல்களும் கூட நாலடியார் நானூறு, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, பழமொழி, ஆசாரக் கோவை எனத் தொகுப்பு நூல்களாகவே அமைந்துள்ளன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற ஒரு மரபுக்கும் நாம் சொந்தக்காரர்களாக இருக்கின்றோம். இவை எல்லாவற்றிலும் தென்படும் நானூறு, ஐந்நூறு, நாற்பது போன்ற எண்ணிக்கை சார்ந்த தொகுப்புகள் நமது கவனத்தைக் கவருகின்றன. தனித்தனியாக எழுதப்பட்ட பாடல்கள் பொதுப்பண்புகளின் அடிப்படையில் அடுத்துவந்த காலத்தில் தொகுக்கப்பட்டு ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை வழங்குகின்றன என்பதைக் காணுகின்றோம்.
 இடைக்காலத் தமிழகத்திலும் இந்த மரபு தொடர்வதைக் காணுகிறோம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களெல்லாம் அழகுறத் தொகுக்கப்பட்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றும் தேவாரம் என்றும் பெயரிடப்படுகின்றன. பன்னிரு திருமுறைகள் என்றும் பதினான்கு சாத்திரங்கள் என்றும் சைவ இலக்கியங்கள் தொகுப்பு அடிப்படையிலான பெயர்களைப் பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது. பழைய நூல்களுக்கும் புதிய நூல்களுக்கும் விரிவான உரைகள் எழுதப்பட்டு ஓர் உரையாசிரியர் மரபு உருவாக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இந்தத் தொகுப்புகளும் உரைகளும்தான் தமிழ்ப் பண்பாடு குறித்த அடையாளப்படுத்தலுக்கு இன்று வரை அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன என்பதைக் காணுகிறோம்.
 பழந்தமிழர்கள் தமது பாடல்களை ஏன் தொகுத்தார்கள்? ஏன் உரை எழுதினார்கள்? என்ற கேள்விகளும்கூட நமக்கு முக்கியமானவை. சமூக வரலாற்றின் ஒவ்வொரு நகர்வுக் கட்டத்திலும் முந்திய காலப் பாடல்களைத் தமிழர்கள் தொகுத்திருக்கின்றனர். முறைப்படுத்தியிருக்கின்றனர். உரை எழுதி விவாதித்துப் பார்த்திருக்கின்றனர். இது தான் பண்பாட்டின் இயங்கியல். முந்திய காலத்தின் மரபுகளில் புதிய சூழல்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தியபோது, பழைய மரபுகளை பழந்தமிழர்கள் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்தியிருக்கின்றனர். கடந்த காலத்தின் செல்வங்களை இழந்து போய் விடுவோமோ என்ற ஓர் அச்சம் அவர்களை வாட்டியிருக்கவேண்டும். நாம் வேரிழந்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற பதற்றம் அவர்களைத் தொகுக்கச் செய்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகத்து இயற்கை என அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். இருப்பினும் தாம் வாழ்ந்த பழைய முறைமைகளை அவர்கள் இழந்துவிடத் தயாராகவில்லை. பழையவற்றை மீட்டுரைத்து புதிய சூழல்களுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ள அவர்கள் முயன்றிருக்கின்றனர். தொகுப்பு, தொடர்ச்சி, தகவமைத்தல் என்பவை தமிழர் வரலாற்றில் இணைந்து பயணம் செய்திருக்கின்றன. இன்றும் கூட தமிழர்கள் தமது எழுத்திலக்கியங்களை மட்டுமின்றி, நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்களையும் தமிழர் திருவிழாக்கள், விளையாட்டுகள், உணவுவகைகள், ஆடைகள், மருந்து வகைகள், வீடுகள் கட்டும் முறைமைகள், நீரைச் சேமிக்கும் முறைகள் ஆகியவற்றையும் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துப் பேணி வருகிறார்கள். இன்றைய கணினி, வலையகங்கள் போன்ற மிக நவீன அறிவியல் ஆதாரங்களும் நமது பண்பாட்டுச் சேமிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு ஞாபகம் அல்லது பண்பாட்டு நினைவுகள் (Cultural Memory) என்ற விடயம் குறித்து சமீப காலங்களில் அறிஞர்கள் பேசிவருகிறார்கள். பண்பாட்டு நினைவுகளே தமிழர்களின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் துணையாக நிற்கின்றன.                  
2. உலகியல் வளமை யும் செழிப்பும்: தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வாழ்நிலைகளின் வழியாகவும் நமக்குக் கிடைக்கும் மற்றுமொரு முக்கியமான பண்பு பழந்தமிழர்கள் உலகியல் செழிப்பைப் பாராட்டும் பாங்காகும். ஐங்குறுநூறு நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ள சில பாடல் வரிகளை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
 “நெற்பொலிக, பொன் பெரிது சிறக்க..
 விளைக வயலே..
 பால் பல ஊறுக, பகடு பல சிறக்க..
 பசியில்லாதாகுக, பிணி சேண் நீங்குக..
 மாரி வாய்க்க, வளம் பல சிறக்க..
பண்டைத் தமிழரின் இப்பாடல் வரிகள் தமிழர்களிடையில் இப்போதும் வழக்கிலுள்ள பொங்கள் திருநாள் கொண்டாட்டங்களை நினைவு படுத்துகின்றன. பொங்கல் திருநாளில் போற்றப்படும் மஞ்சளும் கரும்பும் புது அரிசியும் பாலும் சர்க்கரையும் வாழைக் குலைகளும் இப்பாடல்களின் ஊடாக நம் கண் முன் தோன்றுகின்றன. மாட்டுப் பொங்கலின்போது அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் அணிவகுக்கும் மாடுகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.
 எல்லாப் பழைய சமூகங்களுமே செழிப்பையும் வளமையையும் கொண்டாடின. இதற்கு தமிழர்களும் விதி விலக்கல்ல. பல தமிழர் திருவிழாக்களிலும் சடங்குகளிலும் நீரும் நெல்லும் தானியங்களும் காய் கனிகளும் முன்வைத்து வணங்கப்பட்டன. முளைப்பாரி, பொங்கல், கூட்டு உணவு ஆகியவை தமிழரின் திருவிழாக்கள் அனைத்திலும் மையமான இடம் வகிக்கின்றன.
 செழிப்புக்கும் வளமைக்கும் எதிராக நிற்கும் பசிப் பிணியை நீக்கும் வழிகளைத் தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டே தேடித் தெரிந்து பாராட்டி வந்துள்ளனர். புலவர்களும் பாணர்களும் வறுமை நிலையை அடைந்தபோது அவர்களைப் பொருள் படைத்த மன்னர்களை நோக்கி ஆற்றுப்படுத்தும் பாடல்கள் தமிழில் மலிந்துள்ளன. பசிப்பிணி மருத்துவன் என்ற சொல் புறநானூற்றில் பயின்று வருகிறது. நீர், நிலம், உடல், உயிர், உணவு ஆகியவை மிக அற்புதமாக மற்றொரு புறநானூற்றுப் பாடலில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
 “நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
 உண்டி முதற்றே உணவின் பிண்டம்
 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
 நீரும் நிலனும் புணரியோர்
 ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே
உடம்பையும் உயிரையும் ஒன்றாக்கிப் பேசும் வித்தையை தமிழின் எழுத்திலக்கணம் கூட பதிவு செய்துள்ளது. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த வந்த தொல்காப்பியர், அவற்றின் இரண்டு வகையினங்களை மெய் எழுத்து என்றும் உயிர் எழுத்து என்றும் பிரித்துக்காட்டி உயிருள்ள மொழிப் பயன்பாட்டில் அவை இரண்டும் எப்போதும் இணைந்தே தொழில்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையேஎன்று நூற்பா எழுதினார். இது மொழியிலக்கணமா? மெய்யியலா? வாழ்வியலா? என்று பிரித்துப் பார்க்க இயலா நிலையில் தொல்காப்பியர் பேசியிருப்பதைக் காண்கிறோம். 
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பசிப்பிணி நீக்குதலை எல்லா அறங்களிலும் மிக உயர்ந்த அறமாக எடுத்துக்காட்டுகின்றது. உலகை மறுத்துத் துறவு மேற்கொள்ளச் செல்லும் மணிமேகலையும் ஆபுத்திரனும் அமுதசுரபி எனும் அட்சயபாத்திரம் பெற்று வறியவரின் பசியை நீக்குகின்றனர். அறம் பேசும் நூல்களும் செய்க பொருளை..என்று கட்டளையிட மறக்கவில்லை. செல்வம் சேர்த்தவர் பழமரம் உள்ளூர் பழுத்தமை போல எல்லோருக்கும் பயன் தருபவராக வேண்டும் எனத் திருக்குறள் இயம்புகிறது.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்எனும் நாலடியாரின் பாடல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் நடுவணது, அதாவது பொருளீட்டல், முதன்மையானது என உரைக்கிறது.
3. இயற்கை நெறி: பண்டைத் தமிழர் பண்பாடு இயற்கையைச் சார்ந்ததாக அமைவு பெற்றுள்ளதைக் காணுகிறோம். இயற்கை, பண்டைத்தமிழருக்கு இன்று கூறப்படுவது போல சுற்றுச் சூழல் அல்ல. மனிதரோடு இரண்டறக் கலந்ததாக இயற்கை பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கணும் காட்சியளிக்கிறது. தொல்காப்பிய நூல்,
          “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
            இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரேஎன்று தெளிவாகப் பேசுகிறது.  எது முதல் பொருள் என்ற கேள்வியை இன்று நாம் கேட்டால் முதற்பொருளாவது இறைவன் என்று பலர் பதில் கூறுவார்களாக இருக்கலாம். ஆயின் பண்டைத் தமிழரின் இலக்கணநூல் முதல் எனப்படுவது நிலமும் பொழுதும் என வரையறுக்கிறது. புராணங்களும் நம்பிக்கைகளும் நிறைந்ததாகக் கருதப்படும் பண்டைய உலகில் நிலமும் பொழுதுமே மானுடரின் முதற்பொருட்கள் என வரையறுத்திருப்பது ஓர் அதிசயம். இந்த அதிசயத்தைத் தமிழ் அன்று செய்திருக்கிறது. நிலங்களைப் பழந்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்தனர். மலைகள், காடுகள், நதிகள், வயல்கள், கடல்கள் இவற்றைக் கொண்டே தமிழர்கள் தமது வாழ்விடங்களை, பண்பாட்டைக் கருதியிருக்கிறார்கள். மலர்களின் பெயர்களைக் கொண்டு தமிழர்கள் தமது வாழ்விடங்களையும் செயல்பாடுகளையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இயற்கை, இயல்பு ஆகியவற்றை ஒட்டி நின்றே தமிழர் அன்று சிந்தித்தனர் என்பதைக் காணமுடிகிறது.
பொழுது என்பதைக் காலம், நேரம் என அருவமாகத் தமிழர் வரையறுத்தாரில்லை. அல்லது அதனை அறிவியலாளர் போல புறவயப்படுத்தவுமில்லை. பொழுது ஓர் ஆண்டின் பருவ காலங்களாகவும் ஒவ்வொரு நாளின் சிறுபொழுதுகளாகவும் புலநெறித்தளத்தில் மிகவும் பிரத்தியட்சமாகத் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நிலங்களிலிருந்தும் பொழுதுகளிலிருந்தும் தாவரங்களையும் உயிரினங்களையும் நம்பிக்கைகளையும் தமிழர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள். அவற்றைச் சார்ந்தே, அவற்றிலிருந்தே மானுடர்களின் உணர்வுகள் வருவிக்கப்பட்டுள்ளன. காதலும் பிரிவும் இருத்தலும் இரங்கலும் நிலம் சார்ந்து, பொழுதுகள் சார்ந்து வரையறை பெற்றுள்ள அற்புதத்தைத் தமிழில் காணமுடிகிறது. நிலம், பொழுது, பயிரினங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், அவர்தம் உணர்ச்சிகள் என்ற கோர்வையான, இடையீடற்ற தொடர்ச்சியைத் தமிழர்தம் பண்பாட்டில் காணமுடிகிறது.  
                    
4. அகமும் புறமும்: இயற்கையிலிருந்து, நிலமும் பொழுதும் என்ற முதற் பொருட்களிலிருந்து பண்டைத் தமிழர் படிப்படியாக சமூக வாழ்வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். திணை எனும் நிலவியல் பகுப்பு அகத்திணை, புறத்திணை எனும் போது சமூகப் பகுப்பாகிறது. அகத் திணை பெண்ணின் வாழ்விடமாகவும் பெண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும், புறத்திணை ஆணின் செயல்பாட்டுத் தளமாகவும் ஆண் சார்ந்த பண்பாட்டுப் பரப்பாகவும் உருவெடுக்கிறது. இங்கு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வைப் பற்றியும் சமூக வாழ்வைப் பற்றியும்தான் பேசப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொருவரின் நோக்கிலிருந்து அவரவரின் பிரத்தியேக வாழ்வியல் குறிப்பாகப் பேசப்படுகின்றது.
 “ஒன்றே வேறெ என்றிரு பால்வயின்
 ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
 ஒத்த கிழவனும் கிழத்தியும்..என்று தமிழ்க் காதலின், தமிழ்க் குடும்பத்தின் அடிப்படை தொல்காப்பிய நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் வேறுபட்ட இருபாலார் ஆயினும், ஒன்றி உயர்ந்த பாலது ஆணை அவர்களை இணைவிக்கிறது என அந்த வரையறை கூறுகிறது. உலக வரலாற்றை ஆய்வு செய்யும் சமூகவியலாளர்கள் வரலாறின் மிகப் பழமையான, மிக அடிப்படையான வேலைப்பிரிவினை, வாழ்வியல் நோக்கு ஆண், பெண் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர். தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் வரலாற்றின் அந்த முதன்மையான வாழ்வியல் நோக்குகளை மிக அற்புதமாகப் பதிவு செய்துள்ளன.
 அகமும் புறமும், பெண்ணும் ஆணும் வாழ்வின் தவிர்க்கவியலாத இணைகள் என்றாலும் கூட, அவற்றின் பரந்த அர்த்தத்தில், அவற்றிற்கிடையில் அகத்திணை முதன்மையானது என்பதைப் பண்டைத்தமிழரின் நூல்கள் வலியுறுத்தத் தவறவில்லை. பேராசிரியர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்க் காதல்என்ற நூலை இங்கு நான் நினைவுபடுத்த விழைகின்றேன். அன்னார், முன்பு நாம் பேசிய இயற்கை நெறியின் இடையீடற்ற தொடர்ச்சியாக அகத்திணை மரபைச் சுட்டிக்காட்டுகிறார். அகத்திணை என்பதை பேராசிரியர் வ.சு. மாணிக்கனார் காமம் என அடையாளப்படுத்துவதில் கூச்சப்படவில்லை. அஃது இயற்கையின் தொடர்ச்சி, அஃறிணை, உயர் திணை உயிர்களுக்கெல்லாம் அது பொதுவானது, உயிர்கள் பிறப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் அதுவே அடிப்படை, அது மெய்வேட்கை, அது உயிர் வளர்க்கும், அது பாலாற்றல் என்றெல்லாம் பலவாறாக பேராசிரியர் வ.சுப. அவர்களால் பாராட்டப்படுகிறது.
 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
 தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாம்என்று தொல்காப்பியம் கூறுவதைப் பேராசிரியர் வ.சுப எடுத்துக்காட்டுகிறார். மிக இயற்கையான, ஆனால் உறுதியான அடிப்படைகளின் மீது தமிழ்ச் சமூகம் தனது பண்பாட்டு நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதைக் காணுகிறோம்.
5. தமிழர் சமத்துவம்: தமிழர் வரலாறு ஒரு புராதன சமத்துவத்திலிருந்தே தொடங்குகிறது. பாடறிந்து ஒழுகும் பண்பினைக் கொண்ட சீறூர் மன்னர்களைக் கொண்டதாகவேப் பண்டைத்தமிழகம் வருணிக்கப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று பழம்நூல்கள் விதிக்கின்றன. இன்றும் தமிழ் நாட்டில்  நடைபெறும் கிராமக் கோயில் விழாக்கள் கொடை விழாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கொடை எனில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் தானம் என்பதை விட, அனைவரும் ஒரே இடத்தில் கூடி உணவு சமைத்து ஒரே வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்பதாகவே அர்த்தப்படுகிறது. பாரி, ஓரி, காரி, அதியமான், குமணன் போன்ற தமிழ் மன்னர்கள் அவர்தம் வள்ளற் குணத்துக்காக இன்றும் பாராட்டப்படுகிறார்கள்.
 “உண்டாயின் பதம் கொடுத்து
 இல்லாயின் உடன் உண்ணும்
 இல்லோர் ஒக்கல் தலைவன்என்று அவ்வையார் அதியமானைப் பாராட்டுகிறார். தமது பகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்என்றே பழங்குடி மக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். புரவுக் கடன் பூண்ட வண்மையானேஎன்று மற்றொரு புறநானூற்றுக் கவிஞன் அரசனைப் பாடுகிறான். பழைய இலக்கியங்கள் காட்டும் புலவர்-அரசர் நட்புறவு, சமூக உறவுகளை முடிந்தமட்டில் சமத்துவமாக ர் ஆதிக்கமும் தமிழர் மாண்பைச் சிதைத்துவிடக் கூடாதென்பதில் பல புலவர்கள் தமது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
 விருந்தினர் போற்றுதல், சுற்றம் ஓம்புதல், அன்புடமை போன்ற அற்புதமான தமிழ்ப் பண்பாட்டுத் தகவுகள் அன்றைய தமிழர்களின் புராதனச் சமத்துவத்திலிருந்தே முகிழ்த்து எழுந்ததாகச் சொல்ல முடியும். அடுத்து வந்த வரலாற்றுக் காலங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்ப் பண்பாடு தனது பூர்வீக சமத்துவத்தைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகிறது. தமிழில் மிகுந்துள்ள அற இலக்கியங்களின் அளவு தமிழர்களின் சமத்துவம் குறித்த நினைவுகளாலேயே ஊடுருவப்பட்டதாக உள்ளது. தன்க்கென வாழாப் பிறர்க்குரியாளன்என்ற சொற்களெல்லாம் தான், தனதுஎன்ற உணர்வைத் தாண்டி, சமூக முழுமையை நோக்கிப் பரவிச் செல்லும் மனோபாவங்களைத்தான் எடுத்துரைக்கின்றன. பின்னால் வந்த பக்தி இலக்கியங்களில் ஏராளமாகப் பேசப்படும் நெக்குருகி, நெஞ்சம் உருகி, அன்பு வயப்பட்டு, மனம் நெகிழ்ந்துஎன்பது போன்ற சொற்களெல்லாம், “யான், எனதுஎன்ற சுயதன்னிலை சார்ந்த உணர்வுகள் கரைந்து உலகை நோக்கி, எல்லா உயிர்களையும் நோக்கி விரிதலையே நோக்கமாகக் கொண்டிருந்தன எனலாம். உலகத்தோடு ஒட்ட ஒழுகி, இசைபட வாழ்வோர் இவ்வுலகில் புகழ் எனும் மதிப்பீட்டால் அங்கீகரிக்கப்படுகின்றனர். இசை என்ற சொல்லுக்கே தமிழில் புகழ் என்ற பொருண்மை உள்ளது. தனக்கென மட்டுமே வாழ்வோர் சமூகப் பழியைச் சுமப்பர் என்றும் சொல்லப்படுகிறது. புகழும் பழியுமே மானுட வாழ்வை மதிப்பிடும் பண்பாட்டு அளவுகோல்கள் என அன்றைய தமிழர்கள் வரையறுத்தனர் என்பதைக் காணுகின்றோம்.

முடிவுரை
 தமிழ்ப் பண்பாடு மிகத் தொன்மையானது, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது. அது பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில் தன்னை மீட்டு நோக்கி நெருக்கடிகளையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளது. அதன் தொன்மை எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு அதன் தொடர்ச்சியும் முக்கியமானது. தொகுப்புகள், தொடர்ச்சிகள், உரை வழங்குதல் ஆகியவற்றின் வழியாக அது காலரீதியாகவும் பரப்புரீதியாகவும் ஒரு தொடர்ந்த உரையாடலை நடத்தி வந்துள்ளது. வளமை, செழிப்பு ஆகியவற்றை மிகப்பழங்காலந்தொட்டே  சிறப்பித்துப் பாராட்டிய தமிழ்ப் பண்பாடு, தனது மிக அடிப்படையான அளவுகோல்களை இயற்கையினின்றே வருவித்துக் கொண்டிருக்கிறது. முதற்பொருளாவன நிலமும் பொழுதும் என்ற அதன் வரையறை வரலாற்றுச் சிறப்பு மிக்கது; தத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வின் பரப்புகளை அது பெண் வெளி, ஆண்வெளி எனப் பகுத்துக் கொண்டு, அவற்றின் இயங்கியல் தொகுப்பாக வாழ்வை உள்வாங்கியுள்ளது. பழங்காலம் தொட்டே தமிழர் நேசித்த அவர்களது பூர்வீக சமத்துவமும் சமூக நீதியுணர்வும் அதன் வரலாறு முழுவதும் தொடர்ந்து பயணித்துள்ளது.
 தமிழர் பண்பாட்டின் தனித்துவங்களை முன்வைக்கும் இக்கட்டுரை எவ்வகையிலும் தமிழர் பண்பாட்டை பிற பண்பாடுகளினின்றும் ஆக உயர்வானது என்ற ஒற்றைப்படையான முடிவொன்றுக்கு இட்டுச் செல்லவில்லை. அத்தகைய முறையியலை இக்கட்டுரையாளர் கைக்கொள்ளவில்லை. ஒவ்வொரு பண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளோடு அடையாளப்படுத்துவோம் என்ற பல்லினக் கலாச்சாரச் சூழலில் நின்றே இக்கட்டுரை பேசுகிறது. தேர்தல் அரசியல் மூலமாக நமக்கு அறிமுகமாகியுள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ, அறிவுவாதத் தத்துவங்களின் மூலமாக நாம் அறிந்துள்ள உயர்ந்தது, தாழ்ந்தது என்ற கருத்தாக்கங்களின் வழியாகவோ பண்பாடுகளுக்கிடையிலான உறவுகளை மதிப்பிடக் கூடாது என்பதை நாம் உணர்ந்து வருகிறோம். அதிகாரங்களும் ஆதிக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தளத்தில் பண்பாட்டு அடையாள அரசியலைக் கொண்டு செல்லவேண்டும் என்றே நாம் கருதுகிறோம். தெற்கு, தென் கிழக்கு நாடுகளின் பரஸ்பரப் பண்பாட்டுப் பரிவர்த்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு பக்குவமான வாழ்நிலையை நோக்கி நகரவே நாம் விரும்புகின்றோம்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...