Saturday, February 11, 2017

அம்மாவின் நண்பர்

-நா.முத்துகுமார் 
ஆரம்ப பாடசாலையில்
அம்மாவுடன் படித்தவரை
நேற்று ஒரு திருமணத்தில்
சந்திக்க நேர்ந்தது.

முப்பது வருடத்திற்குப்  பிறகு
சென்னைக்கு வருகிறாராம்.

கப்பலில் வேலையாம்
பர்மா மலேசியா சிங்கப்பூரென்று
கோபால் பல்பொடியைப் போல்
சென்று வந்த நாடுகளை
சிலாகித்துக்கொண்டிருந்தார்.

கடலோடிய களைப்பு
முன் வழுக்கையில் தெரிந்தது
அவரது பால்யத்தில் ஒளிந்திருந்த
அம்மாவின் பால்யத்தை
ஆர்வமுடன் விசாரித்தேன்

சிறுசிறு சண்டையில் தொடங்கி
பேனா முள்ளாய்
அம்மா கிழித்துவரை
சிரித்தபடி சொன்னார்.

அம்மாவின் கோபம்
அவரது வலது கையில்
தழும்பாக இருந்தது.

அம்மாவின் கையெழுத்து
அழகாக இருக்குமாம்
அவரது மூத்த மகளும்
அம்மாவைப் போலவே
அழகாக எழுதுவாளாம்
அவருக்கும்
அம்மாவுக்கும்தான்
படிப்பில் போட்டியாம்.

கடிகாரங்கள் திருடிவிட்ட
ஐம்பது வருடங்களை
திரும்பவும் கொண்டு வந்து
கண்முன் கொண்டுவந்தவர்
கிளம்புமுன் கேட்டார்.
அம்மா வரலையா
தம்பி.

வழக்கம்போல் அழாமல்
வார்த்தைகள் சேகரித்து
மென்மையாகச் சொன்னேன்
எனக்கு ஐந்து வயது
இருக்கும்போதே
அம்மா இறந்துட்டாங்க

ஒலித்துகள் மூர்ச்சையாகி
மெளனம் எங்களை சூழ்ந்த பிறகு
ஆரம்ப பாடசாலையில்
அவரை அமர வைத்துவிட்டு
நான் வெளியேறினேன்.

                      

தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் உளவியலும்

தாய் என்ற சொல் மந்திரச்சொல் அல்ல. ஆனால், மந்திரமாய்ப் போற்றுகின்ற சொல். தாயைப் போற்றுகின்றவன் தெய்வத்தினைப் போற்றுகின்றவன் ஆவான். நேரில் வருகின்ற தெய்வம் போன்றவள்தான் தாய். தாய்க்கு நிகரான உயிர் உலகத்தில் இல்லை.
“மீண்டும் செல்ல முடியாத
கோவில் கருவறை
அம்மாவின் கர்ப்பப்பை!”

என்று புதுக்கவிஞர்கள் கருவறை குறித்துக் கவிதை இயற்றுகின்றனர்.
அறிவியல் ஆயிரம் வடிவத்தில் வந்தாலும், இயற்கையை மிஞ்சும் விதத்தில் செயற்கையில் அற்புதங்களைச் செய்தாலும், தாய்மையை அதனால் உருவாக்க முடியாது.
பெண் முழுமை அடைவதே தாய்மையில் தான். பெண்மையின் சிறப்பும், பேரழகும் தாய்மையில் தான் இருக்கின்றன. அழகும், கவர்ச்சியும் பருவம் ஆட்சி செய்யும் காலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், தாய்மை பருவங்களைக் கடந்து நிற்பது! குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற தாயாக அவள் இருக்கிறாள். சங்க இலக்கிய நூல்கள் பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என ஐவகைத் தாயார்களை அறிமுகம் செய்கிறது.
பருவம் வந்த பெண்பிள்ளைக்கு உதவுபவள் செவிலித்தாய். பருவம் எய்திய பெண்ணின் காதல் உணர்வுகளையும், மன உணர்வுகளையும் குறிப்பால் அறிந்து நற்றாய்க்கும் (பெற்ற தாய்) இல்லத்தார்க்கும் எடுத்துக் கூறி, தலைவிக்கு (அதாவது, அந்தப் பெண்பிள்ளைக்கு) நல்நெறி காட்டுபவளாக அமைபவள் செவிலித்தாய். செவிலித்தாயைக் குறித்து நாற்கவிராச நம்பி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய ஆகும் என்ப”

என்று செவிலித்தாயின் செயல்களை அறிமுகப்படுத்துகிறார்.
வீட்டை விட்டுத் தலைவனுடன் (காதலன்) போன தனது மகளை நினைத்து வளர்ப்புத் தாயான செவிலி, தன்னிடம் வளரும்போது அவளைத் தான் வளர்த்த விதத்தினையும், தன்னிடம் தன் மகள் நடந்து கொண்ட நிலையையும் எண்ணி வருந்திக் கூறியதாகச் சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, “நெருப்பு போன்ற வெய்யில் எரிக்கும் பாலை நிலத்திற்குத் தன் காதலனுடன் மகள் போனதால் செவிலித்தாய் வருந்துகிற” செய்தியை,
“கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
சென்மழை தவழுஞ் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே"
(குறுந்தொகை – 144)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இதில் “காவிய (பூங்கா) மலர்களைப் பறித்தும், கடலில் உள்ள வெள்ளியாய்த் தெரிகிற அலைகளில் விளையாடியும், பிரியாத தோழிமார் தத்தமக்குரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கு உடன்படாமல், விரைந்து செல்லும் மேகங்கள் தவழுகின்ற விண்ணளவு உயர்ந்த மலைகள் கொண்ட நாட்டுக்கு, மெல்லிய பாதங்கள் வருந்த, பருக்கைக் கற்கள் நிறைந்த பாலை வழியே போய்விட்டாளே அவள்!” எனச் செவிலித்தாய் கலங்குவது சுட்டப்படுகிறது. காதல், சுட்டெரிக்கும் வெயிலையும் சுகமாக மாற்றும் வள்ளன்மை கொண்டது என்பதை அறியாமல் வருந்துகின்றாள் செவிலித்தாய். மேலும் செவித்தாய் வருந்துவதைக் குறுந்தொகைப் பாடல்,
“செம்பொற் புனைகலத்து அம்பொரிக் கலந்த
பாலும் பலஎன உண்ணாள்
கோல்அமை குறுந்தொடித் தளிர்அன் னோளே?"
(குறுந்தொகை -356)
எனப் பதிவு செய்கிறது. இப்பாடலில், “செம்பொன்னால் ஆன பாத்திரத்தில் அழகிய பொரியோடு கலந்த பாலை வேண்டாம் என்று சொல்பவள், அழகிய ஆபரணங்கள் அணிந்தவள், மாந்தளிரை ஒத்த மென்மையானவள் என் மகள். வீரங்கொண்ட தலைவன் பாதுகாப்பான் எனக் காதலனோடு போய் நீர் வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட, மிக்க வெப்பத்தையுடைய கலங்கல் நீரைக் குடிக்க எவ்வாறு வலிமை பெற்றாளோ?” எனச் செவிலித்தாய் வருந்துகின்ற நிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
தலைவனோடு கொண்ட அன்பின் காரணமாகத் தாய் வீட்டில் இன்பமாக வாழ்ந்ததைத் துறந்து தன் தலைவனுக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளத் தன்னை மாற்றிக் கொள்வது காதல் கொண்ட பெண்களின் உண்மையான நிலைப்பாடாகும்.
உடன்போக்கில் (வீட்டை விட்டு) சென்ற மகளைத் தேடிச் செல்கின்ற செவிலித்தாய் வழியில் கண்ட செடி, கொடிகளிடமெல்லாம் புலம்பும் நிலையும் இலக்கியத்தில் காட்டப்படுகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் செவிலி வயக்கொடியிடம் தன் வருத்தத்தைச் சொல்வதாகப் பாடல் உண்டு. அதனை,
“வாடினை – வாழியோ, வயலை! – நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினைஅமை வரல்நீர் விழுந்தொடி தத்தக்
கமஞ்சூல் பெருநிறை தயங்க முகந்துகொண்டு
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை? அளியை நீயே"
(அகநானூறு – 384)
என்ற அடிகள் விளக்குகின்றன.
உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடி வழி நெடுகச் செல்கிறாள் செவிலித்தாய். அப்படிச் செல்லும்பொழுது கண்டோர் அவளை நோக்கி, தலைவன் தலைவியின் பெருமையைக் கூறி, ‘வருந்தாதே’ எனச் சொல்லும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே"
(கலித்தொகை – 8)  

என்று கலித்தொகைப் பாடல் செவிலித்தாயை வழியில் கண்டோர் கூற்றினை வெளிப்படுத்துகிறது. இதில், "நாங்கள் அவர்கள் இருவரையும் கண்டோம். ஆண்மையின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்த ஓர் இளைஞனும் சென்றதைக் கண்டோம். அணி புனைந்த மடவாளின் தாயே! நீர் இனி மன அமைதியோடு நும் வீட்டுக்குச் செல்லுக! மணப்பொருள் பலவும் கூட்டிய நறும் சந்தனம், தம் உடம்பில் பூசிக்கொள்ளுமிடத்து அல்லாது, மலையில் பிறந்தாலும் அம்மலைக்கு என்னதான் நன்மை செய்யும்? அது போலத்தான் உன் மகளும். கடலில் முத்துக் கிடைத்தாலும் கடலுக்கு என்ன பயன்? அது அணிந்து கொள்பவருக்கே பயனைத் தரும். உன் மகளும் அப்படித்தான்! யாழில் எழும் இனிய இசை அதை மீட்டுபவர்களுக்கல்லாமல், யாழுக்கு என்ன செய்யும்? உன் மகளும் அது போன்றவள்தான்! ஆகவே நீ வருந்தாமல் செல்வாயாக" என்று கூறுகின்றனர்.
இவ்வாறு உடன்போக்கிலே சென்றுவிட்ட மகளுக்காக வருந்துகிற செவிலித்தாய் குறித்துப் பல பாடல்கள் இலக்கியங்களில் அமைந்துள்ளன. ஆனால், தந்தையின் உணர்வுகள் என்ன என்பது பற்றி எங்கும் குறிப்புகள் இல்லை. பெரும்பாலான பாடல்களில் தாய் உடன்போக்காய்ச் சென்றுவிட்ட மகளின் காதலை எதிர்க்காமல், அவள் தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாளே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் நிலையே காட்டப்படுகிறது.
நற்றிணையில் தலைவி உடன்போக்கு மேற்கொண்டதற்குச் செவிலி வருந்தி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது குறிப்பிடப்படுகிறது.
“ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!”
(நற்றிணை – 148)

என்ற பாடலில், “நான் பல பெண்களைப் பெற்றவளும் அல்ல. ஒரே ஒரு மகளைப் பெற்றவள். அவளோ வலிமை கொண்ட, கூர்மையான வேலைக் கொண்டு போர் செய்யும் இளைஞனோடு காதல் கொண்டு என்னைப் பிரிந்து உடன்போக்காய்ச் சென்றுவிட்டாள். அவளுக்காக வருந்தும் என்னிடத்தே அவள் உடன்போக்குச் சென்றது சரியானது, ஆகவே உன் துயரத்தைத் தாங்கிக்கொள் என்கிறீர்களே? அது என்னால் தாங்குவதற்கு இயலுமா? அழகுப் பாவையான என் மகள் விளையாடி மகிழ்ந்த திண்ணையையும் நொச்சி வேலி சூழ்ந்த இடத்தையும் நினைப்பேன். நினைத்தால் என் உள்ளம் கொதிக்குமே! நான் என்ன செய்வேன்!” என்று பிரிந்து போன மகளின் அருமை பெருமையை நினைத்துப் புலம்பும் தாயையும் அதனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறவர்களையும் காணலாம். இவற்றின் மூலம் சங்க இலக்கியங்கள் உடன்போக்கை அங்கீகரிப்பதை அறிய முடிகிறது.
அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு என்ற நிகழ்வு இன்றளவும் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. காதலனோடு போக விரும்பியவள் தன் தாய், தந்தை, தோழிகளை விட்டு, வீட்டை விட்டு வெளியேறுவதும் அவர்களைப் பெற்றோர் தேடுதலும் போன்ற முறைகள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உடன்போக்கு மேற்கொண்ட தலைவியை எண்ணி அவள் குடும்பத்தினர் வருந்தும் நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தலைவியின் நிலைகண்டு செவிலித்தாய்க்கு ஏற்படும் உணர்வு நிலை, உள்ள நிலைப்பாடுகள், கண்டோர் அவளுக்கு எடுத்துக் கூறும் கருத்துகள் எல்லாம் தாய் அன்பின் மகத்துவத்தைத் தெளிவாக்குகின்றன.

குறுந்தொகை காட்டும் மனித உறவுகள்



சங்க இலக்கியம் செந்தமிழின் செவ்வியல் இலக்கியம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் பண்பாட்டுக் களஞ்சியங்களைத் தன்னகத்தே சங்க இலக்கியம் செந்தமிழின் செவ்வியல் இலக்கியம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் பண்பாட்டுக் களஞ்சியங்களைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இலக்கியம் சங்க இலக்கியம் அழகு நற்றிணையும், நல்ல குறுந்தொகையும், ஐவகை நிலம்காட்டிட்ட ஐங்குறுநூறும், பண்பாடு காட்டிடும் பதிற்றுப் பத்தும்,“ ஓங்கு பரிபாடலும், கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையும், உறவுகளின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய உன்னத இலக்கியங்கள்.
சங்க இலக்கியத்தின் சிறிய சிட்டுத்தொகையாகத் திகழும் எட்டுத்தொகை நூலில் நான்கடிச்சிற்றெல்லையையும், எட்டிப் பேரெல்லையையும் உடைய நூல் குறுந்தொகை அகவற்பாக்களால் எழுதப்பட்ட அழகான இலக்கியம். அக்குறுந்தொகை எவ்வாறு உறவுகளைப் போற்றிப் பாதுகாத்தது என்பதை நாம் அறிதல் அவசியமாகிறது.
உறவுகள் உன்னதமானவை, அன்பைப்போற்றுபவை, மனதை மாற்றுபவை, விரைவு கடாதலால் ஏற்படும் கணவன் மனைவி உறவு, இயற்கைப் புணர்ச்சியால் ஏற்படும் தலைவன் தலைவி காதல் உறவு, நட்பு கொள்வதால் ஏற்படும் தலைவி தோழி, தலைவன் பாங்கன் உறவுயாவுமே இனிமையானவை.
யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற எல்லா ஊரையும் தன் ஊராகவும், எல்லா மக்களையும் தன் உறவினராகவும் சங்கஇலக்கியம் பேணியது.
அறிவை விரிவு செய்அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானிட சமுத்திரம் நானெனக்கூவு"
என்று பாவேந்தர் பாடியதைப்போல அறிவை விரிவு செய்து அகண்டமாக்கு விசாலப்பார்வையால் மக்களை விழுங்கி மானுட சமுத்திரம் நானெனக் கூவும் வலிமை உறவுநிலைக்கே உண்டு.
தலைவன் தலைவி மீது வைக்கக் கூடிய காதல் உறவைச் சங்க இலக்கியம் முழுக்கக் காணமுடிகிறது. தலைவன் திருமணம் புரியாமல் காலம் கடத்துகிறான். தோழிக்குச் சினம் வருகிறது. தலைவன் செவியில் படுமாறு அவனது நட்பைத் தோழி பழித்துரைக்கத் தலைவி அதை ஏற்க மறுக்கிறாள். “தலைவன் நட்பு உலகில் உள்ள அனைத்தையும் விட மிகச் சிறந்ததுஎன்று எண்ணும்படியாக
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே"
எனும் தேவகுலத்தாரின் குறுந்தொகைப் பாடல் தலைவன் தன் மீது கொண்டிருக்கும் காதல், பூமியை விட அகலமானது, வானை விட உயர்ந்தது, கடலைக் காட்டிலும் ஆழமுடையது என உவமிக்கிறது.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அன்பால் கருத்தொருமித்த தலைவன் தன்னைப் பிரிவானோ என்று தலைவி வருந்தும்போது, தலைவன் உறவு நிலைகளைச் சொல்லி அவனை ஆற்றுப்படுத்துகிறான்.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் உறவினரா? என் தந்தையும் நின் தந்தையும் உறவினரா? இப்போது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? என்று உறவுகளை அடுக்கி வினவிய தலைவன், செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர், மண்ணின் நிறத்தை ஏற்று, அம்மண் தண்ணீரின் தண்மையை ஏற்று ஒன்றியபின் யாரால் பிரிக்க முடியும்? இதையே கவியரசு கண்ணதாசன்
நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?"
என வினவுகிறார்.
காலத்தைவீணாக்குகிறான் தலைவன், தலைவியின் மனம் வருந்துகிறது.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்."
இயல்புடைய தலைவி, “எதுவும் பயன்படாமல் போய்விடக்கூடாதுஎன்ற கருத்திலே தலைவனோடு கொண்ட உறவு நிலையை அருமையான உவமைகளைச் சொல்லி வலியுறுத்துகிறான்.
"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உண்இயர் வேண்டும்
திதிலை அல்குல் என் மாமைக் கவினே"
என்று கன்றும் உண்ணாமல், கலத்தையும் நிறைக்காமல் வீணே தரையில் வழியும் பாலைப்போலே எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் உதவாமல் இளமை வீணாகிறது என்று தலைவி வருந்துவதைக் காண முடிகிறது.
பதின்பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு உளவியல் நோக்கில் தோழனால் பாங்கனால் அழகான, சரியான வழிகாட்டுதலைத் தர முடியும். வள்ளுவர் நெறியில் சொல்ல வேண்டுமானால்
உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" என்று கூறலாம்.
நட்பு என்பது நடிப்பல்ல, அது நாடித்துடிப்புஎன்று தெளிவுபடுத்த முடிகிறது.
தன்னை இடித்துக்கூறக்கூடிய பாங்கனின் அன்பு தலைவனை நெகிழ வைக்கிறது.
நான் தவறு செய்வதாக இடித்துரைக்கும் நண்பனே! நமது அருஞ்செயலாக என் காமநோயைத் தடுத்து நிறுத்தலைச் செய்வீராயின் மிக்க நன்று.
இடிக்கும் கேளிர் நும் குறைஆக
நிறுக்கலாற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வரை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே"
ஆம்! சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெம்மையான பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகியோடுகிறது. பாதுகாப்புக்கு நின்றிருந்த அவனுக்கோ கையில்லை. வாயோ பேச இயலாது. என்ன செய்ய முடியும்? அந்நிலையில் நான் இப்போது உள்ளேன் என்ன செய்ய முடியும்? என்று பாங்கனுக்குத் தலைவன் பதில் சொல்வதலிருந்து நண்பனிடம் கொண்ட பாசத்தை அறியமுடிகிறது.
கம்பராமாயணத்தில் இதுபோன்ற உவமையைக் கம்பர் அற்புதமாகப் பயன்படுத்தி உள்ளார். மிதிலையிலே இராமனைக் கண்ட சீதை, அவர் தன் நாடு விட்டுச் சென்றதும் பிரிவுத்துயிர் ஆற்றமுடியாமல் விம்முகிறாள். தோழியரிடம் கூடச் சொல்ல முடியாத வாய்பேச இயலாதவள் போல் சீதை மாறினாள் என்று மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பநாடர் காட்டுகிறார்.
நோமுறு நோய்நிலை நுவலகிற்றிலன்
ஊமரின் மனத்திடை யுன்னி விம்மினாள்"
மனப்போராட்டத்தை நீக்கும் உளவியல் மருத்துவராக நண்பரையும் தோழியையும் குறுந்தொகை காட்டுகிறது.
தாய் முதலியவர்களால் காக்கப்படுகிறாள் தலைவி, தலைவனைப் பிரிந்த சோகம் தாங்க முடியாமல் தோழியிடம் மனம் வெதும்புகிறாள்.
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுகதில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே"
எனும் சிறைக்குடி ஆந்தையாரின் தோழிதலைவியின் நெருக்கமான நட்பை வெளிப்படுத்துகிறது.
நீரிலே சோடியாக மகன்றில் பறவை பயணிக்கிறது. இடையில் சிறு பூ இடைப்படுகிறது. அந்த ஒரு வினாடிப் பிரிவு தாங்க முடியாமல் உடன் உயிர் போய்விட்டது என்று அஃறிணைப் பொருட்களைக் கொண்டு தோழியிடம் தலைவி ஆறுதல் அடைகிறாள்.
சங்க இலக்கியத்தில் தோழியின் பாத்திரம் இன்றியமையாத இடம் பிடிக்கிறது. தலைவியின் உளவியலை நன்கறிந்த உளவியல் அறிஞராக, அவளது உளநோய் நீக்கும் மருத்துவராக, காதல் வயப்பட்ட நிலையில் அதை அறத்தொடு நின்று உரியவர்களுக்கு உரிய முறையில் தெரிவித்த! ஊரார் அலர் தூற்றும்போது அதைத் தலைவனிடம் தெரிவித்துத் திருமணத்திற்கு வழிப்படுத்துபவளாகப் பல்வேறு பரிமாணங்களில் தோழியைப் பார்க்க முடிகிறது.
கடுந்தோட் கர வீரனாரின் குறுந்தொகைப் பாடலிலே, இரவிலே தலைவியைச் சந்திக்க வந்த தலைவனிடம் துணிச்சலாகத் தோழி மறுத்துப் பேசுகிறாள். கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து போக, அதன் பிரிவால் ஏற்படும் கைம்மைத் துன்பத்தை ஆற்றாத பெண் குரங்கு தன் குட்டியைத் தன் சுற்றத்தாரிடம் விட்டு விட்டு ஓங்கிய மலை மீதேறி உச்சியில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும். அத்தகைய சாரலையுடைய தலைவனே! நீ தலைவியைச் சந்திக்க நள்ளிரவில் வராதே! அப்படி வந்தால்உனக்கு என்ன நடக்குமோஎன்று எங்கள் நெஞ்சம் பதைபதைக்கும் என்று தோழி குறிப்பால் உரைக்கிறார்.
கருங்கண் தாக்கலைப் பெரும் பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள் வாரல் வாழியோ
வருந்துதும் யாமே"
என்று வீரனார் அப்பாடலை அமைக்கிறார். தோழி தலைவியோடு மட்டும் அன்பு பாராட்டாமல், தலைவன் தவறு செய்யும்போது நயமாக இடித்துரைத்து அன்பு பாராட்டித் திகழ்ந்தான் என்று பார்க்க பவளாகவும் முடிகிறது.
தலைவன் பொருள்வயிற் பிரிவை
மேற்கொள்ளப் போகிறான்
என்ற செய்தி தலைவிக்கு இடியாய் இறங்குகிறது. தோழியிடம் வருந்தி அழுகிறாள். “உலகை இயல்பைக் கூறி தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
தலைவியே! தொழில்தான் ஆண்மக்களுக்கு உயிராகும். மனையில் உறையும் மகளிருக்குக் கணவன் மாரே உயிர், இதை நமக்குக் கூறியவரே தலைவன்தான் என்று ஆறுதல் கூறுகிறான்.
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
அழா அல் தோழி! அழுங்குவர் செலவே"
ஆம்! பாரதியின் வரிகளில் கூறவேண்டுமெனில்
உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ"
என்று கூறலாம். கண்ணீரைத் துடைக்கக் கைகளிலிருந்தால் சோகம் கூடச் சுகமானது ஆறுதல் புலப்படுத்துகிறது.
தலைவன் தலைவியோடு கொண்ட காதல் உறவினைப்பயிலியது கெழீஇய நட்புஎன்று குறுந்தொகை போற்றுகிறது. வன்மையைப் பண்படுத்துகிறது.
வெந்நீராயினும் செந்தீயை
அணைக்கும் தப்பம் உடையது"
என்கிறார் கபிலர்
அன்பு, அறிவு, ஆற்றல், திரு, உரு முதலிய பண்புகளில் ஒன்றிய தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் இல்லறத்தின் மாட்சியைக் குறுந்தொகைப் போற்றிப் புகழ்கிறது.
ஒரு பசுவினை மட்டுமே வளர்த்து அதனால் வரும் செல்வத்தைக் கொண்டு எளியவாழ்வு நடத்திய ஒருவன், தலைவியை மணந்தநாள் முதலாகப் பெருவாழ்வு பெற்று ஒவ்வொரு நாளும் விழாக்கோலம் பூண்ட வீட்டை உடையவனாகத் திகழ்ந்தான்என்று பெண்ணின் பெருமையைக் குறுந்தொகை பாடுகிறது.
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனவிழ வாயிற்றென்னும் இவ்வூரே"
என்று குறுந்தொகை தெளிவுபடுத்துகிறது.
காதல் வாழ்வில் மட்டுமல்லாமல் விருந்தினரைப் பேணுதலிலும் தம்பதியினர் சிறந்து விளங்கினர். நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் உபசரிப்பர் என்பதை
நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே"
என்று காட்டுகிறது.
விருந்தினர் உண்டு எஞ்சிய உணவை இல்லறத்தார் உண்பதே சிறப்பாகும் என்று குறுந்தொகை விளக்குவதைக் காணமுடிகிறது.
பண்புடையார்ப் பட்டுண்டுலகு அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்"
கிடைத்தற்கரிய அமுதமே கிடைத்தாலும் தாமே உண்ணாமல் பிறர்க்குக் கொடுத்து உண்ணும் பண்புடையவர்களை இம்மண்ணில் இருப்பதால்தான் இப்பூமி நிலைத்து நிற்கிறது என்கிறது வள்ளுவம்.
தலைவனோடு தலைவியும், தலைவியோடு தோழியும் மட்டும் உறவு கொள்ளாமல் சமுதாயத்தோடும் உறவு கொண்டதையும் விருந்தினரைப் பேனுவதையும் காண முடிகிறது.
செவிலித்தாயும் நற்றாயும் ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்குப் பேருதவி செய்தனர். தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றுவந்த செவிலித்தாய் நற்றாயிடம் தலைவியின் இல்லற மாண்பு குறித்துக் கூறினாள்.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"
எனும் கூடலூர்கிழார் பாடலில் தலைவியின் பொறுப்புணர்ச்சியைச் செவிலி கூற்றாகக் கூறுகிறார். முற்றிய கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்டு ஆடையில் துடைத்துக் கொண்டு குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப, தானே சமைத்த இனிய புளிப்பை உடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதால் தலைவியின் முகம் நுண்ணியதாய் மலர்ந்தது என்கிறார் புலவர். செவிலித்தாய் நற்றாயிடம் கொண்டிருந்த உறவு இப்பாடலில் விளக்கப்படுகிறது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...