Saturday, January 02, 2016

பின் நவீனத்துவ கவிதை


தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார்.
நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ”மணிக்கொடி”, ”எழுத்து”, ”நடை” போன்ற பத்திரிகைகள் தமிழில் கவிதை வடிவம் பெறுவதற்கான சூழலை விமர்சனங்கள் எழுந்தபோதும் உருவாக்கித்தந்தன.
வசனம் நடந்தால் உரைநடை, நடனமாடினால் கவிதை என்றும், அழகிய சொற்கள் அழகிய வரிசையில் நிற்றல் என்றும், உணர்ச்சிகளின் பிரவாகம் என்று கவிதை பல்வேறு நிலைகளில் விளக்கப்பட்டது என்றாலும் கவிதை எழுதப்பட்ட போது அதற்கான காரணம் பின்வருமாறு கூறுப்பட்டது.
வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சோர்ந்தவைதான். வசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. தம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப்போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது. என்ற ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. மனதுடன் தொடர்புடைய அகவய அனுபவமாக வெளிப்பட்ட கவிதை மரபில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட அவநம்பிக்கை, மனமுறிவு, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் புறநிகழ்வால் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட ஆற்றாமை, இதுவரை கட்டிக்காத்த மதிப்பீடுகளின் சரிவு, மேற்கத்திய இலக்கியம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்க்கவிஞர்களையும் எழுதத் தூண்டியது.
வாழ்வின் வினையேதும்
அறியாத இருள் ஊடே
உலகத்தின் சாலையில்
ஊடாகும் சாலையில்
ஊடாகும் நிழல்கள்” – ந. பிச்சமூர்த்தி
திருமனிதா
தெருவில் சாவோலம்
மிக நெருங்கி வருகிறது.
ஓடு இருட்டுக்கு காட்டுக்கு
எங்காகிலும் ஓடு
உலகத்தைவிட்டு – எஸ். வைத்தீஸ்வரன்
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் போகவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம் – ச. மணி
வாழ்க்கையின் மீது கொண்ட இத்தகைய நம்பிக்கையின்மை, எங்கிருந்து பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் வெல்லேன் கூறுகிறார்.
நம்பிக்கை
அது
இருண்டவானத்திற்குள்
ஓடி ஒளிந்துகொண்டது”
உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியே இதற்குப் பதிலாகும்.
அதன்பிறகு வானம்பாடி இயக்கம் முதல் கவிதை வெகுஜன மக்களுக்கும் புரியும் வடிவமானது. வானம்பாடி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு கவிதை எழுதுவதாக அறைகூவியது.
இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்” எனத் தன் சமகால விடுதலை விரும்பிகளுக்கு வருங்காலப் பொதுமை விரும்பிகளுக்கும் வெடிப்புறப் பேசியும், நயம்படச் சொல்லியும், அறைகூவல் விடுத்த தமிழ்ச்சாதியின் நிர்மாணச் சிற்பியும், ஆசியாவின் ஒப்பற்ற மனிதாபிமானிகளுள் ஒருவனும் இருபதாம் நூற்றாண்டின் உலகமாக கவிஞர்களுள் ஒருவருமான பாரதிக்கு, அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள்” என்று வானம்பாடிக் கவிதை இயக்கம் தொடங்கியது.
நம்
கரங்களின் உழைப்பைக்
காலம் அலட்சியப் படுத்தும் போது
நிறங்களின் சிவப்பையே
நாம்
நிச்சியக்கமுடியும்”
என்ற சிலப்புச்சிந்தனை, பொதுவுடமை கொள்கை முழக்கமாக வெளிப்பட்டது கவிதை. அதன் பிறகு படிமக் கவிதை, உருவக் கவிதை, எள்ளல் கவிதை என்று கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்பாடாக கவிதை உருவெடுத்தது.
எண்பதுகளில் நடுவில் கவிதை என்பது பாரதி எழுத்து ரீதியான ஒரு பொருள் என்று சொல்கிற நிலையில் புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் கவிஞன் என்ற மனிதன் ஆளுமை கொண்டவனாக தரிசனம் மற்றும் உள்ளொளி கொண்டவனாக சித்தரிக்கப்படவில்லை. படைப்பாளியை விட படைப்பே முக்கியத்துவம் பெற்றது. எனவே, படைப்பு மொழி பற்றிய சிந்தனையும் மாறியது. தினசரி மொழியின் பெரும்பாலான கூறுகள் பத்திரிக்கைச் செய்தி, விளம்பர மொழி, சின்னத்திரை, பெரியதிரை, நாடகம், நகைச்சுவைமொழி, வெகுஜன வார மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் என்ற பல்வேறு தளங்களில் மொழி தன் கூர்மை மழுங்கிய நிலையில், இந்த மொழி எனக்குத் தேவையில்லை என்றனர் சில படைப்பாளிகள், தன் சுயம் இழந்த மொழித்தளத்தை மீறிய மொழித்தளத்தில் கவிதை எழுத நினைத்த இவர்கள் சாதாரண வாசகரின் பங்கு பற்றி சிந்தனை மறந்துபோய் கவிதையை சிக்கலான மொழியில் எழுதினர். அமைப்பியல் ஆய்வாளர் கூறுவதன்படி கவிதைமொழி சொல்லாடல்களாக உருவாகிறது. கவிதை மொழியைப் புதைநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக எதிர்கவிதை, காண்கவிதை தொடர்பற்ற வார்த்தை வடிவம் சொல்லாக்க கவிதை வடிவம் போன்ற மாற்றங்கள் கவிதை வடிவத்தில் ஏற்பட்டன.
இதற்கடுத்த காலகட்டத்தில்தான் பின்நவீனத்துவ மரபு எழுகின்றது.
கவிதையில் மையமிழந்த தன்மையும் (ஆசிரியன் இறந்துவிட்டான்) பல குரல்களும், வாசிப்பு அனுபவத்தை பல்வேறு அனுபவங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கவிதை என்பது ஒரு கட்டமைப்பு என்றே பார்க்கப்படும். ஒரே கவிதையில் ஒன்றுக்கொண்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைப்பிக்கப்பட வேண்டிய அவசியமிராது.
கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு அவ்வளவுதான் என்று நவீன கவிதை இயல்பு குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.
கவிதை வேறெதையும் குறிக்கவில்லை
தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம்
சொற்களால் உருவாகவில்லை. சொற்களின்
இடைவெளியில் – மௌனங்களில் தோன்றியது
என்று விளக்கம் தரப்பட்டது.
புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது
நிஷ்சிந்தையில் மலரும் ராட்சதக் காளான்
மௌனநிறம் போல
என் மூளையின் பின்னாலே நினைவூட்டாது
ஏதுமின்றி
என் மேலதீத நானிடமே
துமில்லாமல்…” ஞாபகச்சிற்பம்
என்ற கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதிய பிரம்மராஜன் கதைத்தளத்தை திறந்த வெளிக்கு எடுத்துச் செல்கிறார். அதாவது கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து இவைபேசும் பொருட்கள், நிலைகள், மௌனங்கள் ஆகியவை சிதையாமல் அமைவதற்கு இவற்றின் திறந்தவெளி அமைப்பே காரணமாகும். இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள பிறதுறை அறிவும், பயிற்சியனுபவமும் தேவையாகவுள்ளது. இத்தகைய முயற்சிகளை புரியாத கவிதையென்று ஒதுக்க முடியாது.

நவீன தமிழ்க் கவிதைப் பரப்பின் சிந்தனை முகம்

இன்றைய சூழலில், தமிழ்க் கவிதைகளை முன்வைத்துப் பேசுகையில் ஒரு விஷயத்தைப் பரிசிலிக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறை சார் அறிதல்கள், சமயம், தத்துவம் சார்ந்த எண்ணவோட்டங்கள் ஆகியவற்றிற்கு அழுத்தம் தந்து எழுதப்படும் கவிதைகளை மூளை உழைப்பினால் உருவாக்கப்பட்டது ஆகவே செயற்கையானது எனப் புறக்கணிக்கின்ற ஒரு கோணலான பார்வையும் சிலரிடத்தே உள்ளது. சிந்தனைப் போக்குகள் மற்றும் அறிவுத் தளங்களை கவிதைக்கு எதிரான ஒன்றாகக் கருதும் இப்பார்வை காலரீதியிலான வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு மொழி தன்னை புதுப்பித்துக் கொள்வதைத் தடுத்து அது தேங்கிப் போய்விடவே வழிவகுக்கும்.
மனித மனதின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இரு வேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது. இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும் அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு, ஒருமுகப்படுத்தப்படும் எண்ணங்கள், அதன்வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் குறியீடாக "மூளை" உருவகப்படுத்தப்படுகிறது. மாறாக உணர்வுகள் என்பது நினைவுகள், மொழி, இனம், கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகள் அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன் மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி "இதயம்" என்பதுடன் அடையாளப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
இதில் புறவயமாக ஒரு குறைந்தபட்ச தர்க்க ஒழுங்கைப் பொதுவில் உருவாக்கிக்கொண்டு, அதன் வழி விரிந்து செல்லும் அறிவுத் துறைகளான தத்துவம், விஞ்ஞானம், மருத்துவம், வரலாறு போன்றவை சிந்தனைகளின் தளத்தில் செயல்படுபவை என்றும், எவ்விதமான புற நிர்ணயங்களுமின்றி தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்படும் கலை, இலக்கியங்கள், வழிபாட்டு சடங்குகள் முதலியன உணர்வுகளின் தளத்தில் இயங்குபவை என்றும் எளிமையாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இத்தகைய கறாறான இருமைநிலை உண்மையில் சாத்தியமற்றதே. ஒரு வசதிக்காக இரண்டையும் வேறுபடுத்தி நாம் பேசிவந்தாலும் அவை இரண்டும் இயல்பாகவே வெவ்வேறு வீதங்களில் கலந்தும், ஒன்றையொன்று பூர்த்தி செய்துகொண்டும்தான் எந்தவொறு மனித செயல்பாட்டிலும் காணப்படுகின்றன. மார்க்ஸின் திட்டவட்டமான பொருளாதாரச் சிந்தனைகளுக்குப் பின்னிருந்து அவரை உந்தியது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்ற அவரது மாபெரும் உட்டோபியக் கனவும், அதன் உணர்ச்சித் தீவிரமும்தான். அதேபோல் மானுட உணர்ச்சிகளின் மோதல்களை அதன் அதிஉக்கிரத் தருணங்களில் நிகழ்த்திக் காட்டும் தாஸ்தாவெஸ்கிதான் நீட்சே, ஃப்ராய்டு, ஐன்ஸ்டைன் போன்ற பல சிந்தனையாளர்களுக்கு அகத் தூண்டுதலாக இருந்திருக்கிறார். விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், சமய ஞானிகள் போன்றோர் எளிய மனித நிலைகளுக்கு அப்பாற்பட்டதொரு அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களாகவே கருதப்படுகின்றனர். ஆயினும், அவர்களுமேகூட தங்களது இலட்சியத்தின் ஈடேற்ற நிலையில் அடைவது புறநிர்ணயங்களுக்கு மேலான பரவசத் தருணங்களையே என்றால் அது மிகையாகாது. லாவோட்சேயின் தத்துவங்கள், ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச ரகசியம் பற்றிய குறிப்புகள், ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், புத்தரின் போதனைகள் போன்ற புனைவல்லாத ஆக்கங்களிலுமேகூட முதிர்ந்த ஞானத்தின் கவித்துவ கணங்களை நாம் தரிசிக்க முடிகிறது.
நம் கவிதை மரபிலும் இவ்விரு வகைகளுக்கும் அழுத்தமான உதாரணங்கள் உண்டு. சங்கக் கவிதைகள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புலனனுபவங்களின் தளத்தில் வைத்து வாழ்வை நமக்குக் காட்டுகின்றன என்றால், சிந்தனைகளின் வீர்யத்தால் திரண்டெழும் கவித்துவப் பெரும்பரப்பை சித்தர் பாடல்களில் காணலாம். இவ்வுலக வாழ்விற்கான அறமதிப்பீடுகளை லௌகீக மட்டத்தில் வைத்து அறுதியிட்டுக் கூறும் குறள் எழுதப்பட்ட அதே மொழியில்தான் பிறகு உணர்வுகளின் கட்டின்மையால் மொழியைத் தளும்பச் செய்கின்ற பக்தி இலக்கியங்களும் தோன்றியுள்ளன.
இன்றைய சூழலில் தமிழ்க் கவிதைகளை முன்வைத்துப் பேசுகையில் ஒரு விஷயத்தைப் பரிசிலிக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறை சார் அறிதல்கள், சமயம், தத்துவம் சார்ந்த எண்ணவோட்டங்கள் ஆகியவற்றிற்கு அழுத்தம் தந்து எழுதப்படும் கவிதைகளை மூளை உழைப்பினால் உருவாக்கப்பட்டது. ஆகவே செயற்கையானது எனப் புறக்கணிக்கின்ற ஒரு கோணலான பார்வையும் சிலரிடத்தே உள்ளது. சிந்தனைப் போக்குகள் மற்றும் அறிவுத் தளங்களை கவிதைக்கு எதிரான ஒன்றாகக் கருதும் இப்பார்வை காலரீதியிலான வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு மொழி தன்னை புதுப்பித்துக் கொள்வதைத் தடுத்து அது தேங்கிப் போய்விடவே வழிவகுக்கும். மேலும் தூய உணர்வுநிலை என்பது மிருகங்களுக்கு மாத்திரமே சாத்தியமாகக்கூடிய ஒன்றாக இருக்கும். மனிதனுக்கு நினைவு என்ற ஒன்று இருக்கும் வரையிலும் அவனுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளுவதிலேயே கூட எண்ணங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும். தவிரவும் மனிதனின் முன்னிற்கும் நித்திய ஜீவிதப் புதிர்களான மரணம், கடவுள் இவைகள் குறித்த பேச்சு இருக்கும் வரையிலும் கவிதைகளிலிருந்தோ கலைகளிலிருந்தோ தத்துவ சிந்தனைகளைத் தனியே பிரிக்கவியலாது.
ஒரு கவிதை முற்றிலும் உணர்வுகளின் மட்டத்திலேயே வினையாற்றுவதாக இருந்தாலும்கூட அவ்வுணர்வுகள் செறிவூட்டப்பட்டு, திசைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தால் மட்டுமே அவை வாசகனிடத்தே குறித்த விளைவை ஏற்படுத்த இயலும். அங்ஙனம் உணர்வுகளை மொழிக்குள் சிதையாது மாற்றும் தொழில்நுட்பத்தில் கவிஞனின் பிரக்ஞை முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நாம் நன்கறிவோம். அத்துடன் மாத்திரமல்லாது ஒருவன் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ள நேரிடுகிற அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை வரிசைப்படுத்தி தொகுத்துக் கொள்ளவும் அவற்றிற்குத் தகுந்த எதிர் வினையாற்றவுமே கூட அவனளவில் குறைந்தபட்ச வாழ்க்கை நோக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆதலினால் கவிதையினூடாகத் தனித்துப் பிரிக்க முடியாததொரு அம்சமாகவே சிந்தனை உள்ளிழைந்தோடுகிறது எனலாம். அவ்வகையில் கடந்த அரை நூற்றாண்டு கால தமிழ் நவீன கவிதைகளில் சிந்தனையின் விறுவிறுப்பை அறிவார்ந்தவொரு பரவசத்தைக் கையகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ள கவிதைகள் சிலவற்றைப் பற்றியும் அவை அடையாளப்படுத்தும் போக்குகள் குறித்தும் இக்கட்டுரை சுருக்கமாகத் தொட்டுப்பேச முற்படுகிறது.
பாரதியின் வசன கவிதைகளிலிருந்தே யாப்பின் உடைவு தமிழில் துவங்கிவிடுகிறது என்றாலும். "எழுத்து"க் கட்டத்திலிருந்துதான் புதுக்கவிதை என்பது உத்தேசமான குறிக்கோள்களுடன் கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக உருவெடுத்தது. தமிழ் நவீன இலக்கியத்தின் துவக்கக் கட்டமான ஐம்பதுகளில் அவற்றுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் கல்லூரிக் கல்வி பெற்ற மத்தியதர வர்க்கத்தவரே. அவர்கள் இயல்பாகவே தங்கள் படைப்புகள், விமர்சன அடிப்படைகள் ஆகியவற்றிற்கான முன்மாதிரிகளை ஆங்கிலம் வழியாக மேலை இலக்கியங்களிலிருந்தே பெற்றனர். இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகான கலாச்சார வெறுமையின் காரணமாக ஐரோப்பாவில் உருவெடுத்த நவீனத்துவம் துவக்கத்திலிருந்தே நம் புதுக்கவிதைகள் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. மாறுபட்ட கலாச்சார பின்னணியும் வளமான ஆன்மீக மரபும் கொண்ட நாம் வாழ்க்கை முறைக்கு அத்தகைய மனமுறிவுகளும் நம்பிக்கையிழப்பும், அடையாளச் சிக்கல்களும் பற்றி பேசும் நவீனத்துவ இலக்கியங்கள் ஒத்து வருபவை அல்ல. அவை சிரழிவு நச்சு இலக்கியங்கள் என்று முற்போக்கு குழுவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. என்றாலும் கைவிடப்பட்ட தனிமனிதனின் கையறு நிலையிலிருந்து உலகை நோக்கும் நவீனத்துவ இலக்கியம் இங்கே வேர் ஊன்றி வளர்வதற்கான சமூக அரசியல் தேவைகள் இருந்தன. நாற்பதுகள் வரையிலும் தேசியம், விடுதலை போன்ற இலட்சியங்களால் கட்டி எழுப்பப்பட்ட லட்சியவாதத்தின் வன்முரண்களும் போதாமைகளும் ஐம்பதுகளிலேயே வெளிப்படத் துவங்கிவிட்டன. தார்மீக நெறிகளின் வீழ்ச்சிகள், அதிகாரப் போட்டிகள், நெருக்கடிக்குள்ளகும் உறவுகள் இவையெல்லாமுமே அன்றைய படித்த இளந்தலைமுறையைக் கடுமையான நிதர்சனவாதிகளாக்கிவிட்டிருந்தன. ஆகவே அரசியல், சமூக ஈடுபாடுகளிலிருந்து இயல்பாகவே அந்நியப்பட்டு நின்றவர்களுக்கு மிக உவப்பானதாகவே நவீனத்துவத்தின் கருத்தியல் இருந்தது. அதுவே அவர்களின் உத்வேக செயல்பாட்டிற்கான அடிப்படையாகவும் அமைந்தது. சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன், பசுவையா, நகுலன் முதலியோரை அவ்வகையில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் புதுக்கவிதையின் முதல்வராகக் கருதப்படும் ந. பிச்சமூர்த்தியிடம் நவீனத்துவத்தின் பாதிப்பு எதையும் காண முடிவதில்லை. அவர் புதுக்கவிதையின் வடிவம் உத்தி முதலியவற்றை மாத்திரமே மேலைக் கவிதைகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறாரே தவிர அவரிடமிருந்து வெளிப்பாடு கொண்டவையெல்லாம் மரபிலிருந்து அவர் அடைந்தவையே அவருடைய ஆன்மீக ஈடுபாடு, வேதாந்த விசாரங்கள், அழகியல் தேடல்கள் முதலியவையே அவரது படைப்புகளுக்கான உந்துதல்களாக இருந்தன. உலகின் பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்வதற்குக் காட்டிய ஆர்வமளவிற்கு நாம் நமது மரபிலக்கியத்தைப் பற்றி தெரிந்த கொள்வதற்குப் போதுமான அக்கறை காட்டவில்லை. ஆகவே, புதுக்கவிதை இயக்கம் என்பது தொடக்கத்தில் தனது தத்துவம், பார்வை சார்ந்த அடிப்படைகளை முழுவதுமாக மேற்கிலிருந்தே பெற்று வளர்ந்தது. இன்றளவும் அப்போக்கே கணிசமான பாதிப்பைத் தொடர்ந்து செலுத்துகிறது. காலனியாதிக்கத்திற்குப் பின் நிகழ்ந்த மறுமலர்ச்சி காலக் கல்விப் பரவல் மத்தியதர, ஓரளவு கீழ்த்தட்டு மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும், தாக்கமும் அளவிட முடியாதது. புதுப்புது அறிவியல் கோட்பாடுகள் தொழில் நுட்ப மாறுதல்கள் ஆகியவற்றை ஆங்கிலம் மூலம் அரவணைத்துக் கொண்ட ஒரு தலைமுறைக்கு மரபான ஞானமும், இலக்கிய ஆக்கங்களும் காலத்திற்குதவாத பழம் பேச்சாகப் பட்டதில் வியப்பு ஏதுமில்லை. அவ்வகையில் நம் மரபின் வளம் குறித்த புரிதலைத் தம் படைப்புகளில் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியவர் என பிரமிளையே நாம் குறிப்பிடவேண்டும். நு=அஉ2 எனும் தனது பிரபலக் கவிதையின் மூலம் அறிவியல் சமன்பாட்டைக்கூட ஓர் கவிதையாக மாற்ற இயலும் என நிரூபித்த அவர் விஞ்ஞானத்தை வெறும் தொழில்நுட்பமாக மட்டுமே பார்த்தார். அதன் எல்லைகளுக்கப்பால் இயங்கக்கூடிய மனிதனின் ஆன்மீக சாரம் என்ன என்பது குறித்த விசாரணைகளே பலவாறாகவும் அவருடைய கவிதைகளில் எதிரொலிக்கிறது. தேவதேவன். ஜெயபாஸ்கரன் போன்றோரை அத்திசை வழியின் இன்றைய பயணிகளாகப் பார்க்க முடிகிறது.
மரபிலக்கியத்தில் பயிற்சி உடைய பிற முக்கிய கவிஞர்களாக சி. மணி. ஞானகூத்தன் இருவரையும் குறிப்பிடலம். இவர்கள் பழந்தமிழ் வரிகளை, அதன் வடிவத்தை அல்லது ஓசையைத் தங்களது ஆக்கங்களினூடாக இடைவெட்டாகச் சேர்த்துக் கொள்ளும்போது உருவாகும் உருவித காலமுரண் இவர்களுடைய கவிதைகளில் அலாதியானதொரு விளைவை உண்டாக்குகிறது. அதன்மூலம் உருவாகும் அபத்தமும், எள்ளலும் அவர்களுடைய படைப்புகளுக்கு மிகுந்தவொரு உலகியல் பிணைப்பை நல்குகிறது. ஞானகூத்தனின் தோழர் மோசிகீரனார். சி. மணியின் நரகம் போன்றவை உடனடியாக நினைவில் எழும் உதாரணங்கள்.
மனதின் பல்வேறு அடுக்குகள். அவற்றிற்கிடையேயான ஊடாட்டங்கள், விபரீதமான கனவுகளின் உட்பொருள் இவை பற்றி ஃப்ராய்டு, யுங் முதலியோரின் ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவத் துறையில் ஏற்படுத்தியதை விடவும் அதிக பாதிப்புகளை நிகழ்த்தியது கலை இலக்கியத் துறைகளிலேயே என்றால் அது மிகையாகாது. இந்த எல்லையற்ற பிரபஞ்சம் அளவிற்கே மனித மனமும் அச்சமூட்டக்கூடிய அதே சமயத்தில் விளக்க முடியாத கவர்ச்சியுடைய ஒரு பெரும் புதிராக மனிதனின் முன் எழுந்து நிற்கிறது. கூட்டாகச் சேர்ந்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தைக் கோரும் நிகழ்காலத்திய சமூக அரசியல் பிரச்சனைகளிலிருந்து வெகுவாக விலகி தனது தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக உள்நோக்கித் திரும்பிய இந்த அகவயக் கவிஞர்கள் நித்தியமான அழகுகளையும், வாழ்வின் சாரமான உண்மைகளையும் தேடி மொழியில் பயணிக்கிறவர்கள் ஆனார்கள். இப்போக்கின் உச்சத்தில் அதன் எதிர்விளைவான சமூகத் தேவையினால் உருவானதே வானம்பாடிகளின் இயக்கம். குறிப்பிட்ட எண்ணிக்கையாலானவர்களுக்கு இடையில் மாத்திரம் ரசனைக்கும், ஆராய்ச்சிக்கும், துய்ப்பிற்கும் உரிய வஸ்துவாக இருந்த கவிதையை வெகுமக்கள் ரசிப்பிற்கும் உவப்பானதொரு நுகர்வுப் பொருளாகப் பரவலாக்கியது இவ்வியக்கம். அடிப்படை நோக்கினை மார்க்சியத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக இவர்கள் கூறிக்கொண்டாலும், இவர்களின் உடனடி கவன ஈர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்த ஆரவாரமான மொழி ஜாலத்தை, மிகைக் கற்பனையை திராவிட இயக்க மேடை பாணி பேச்சுகளிலிருந்தே சுவீகரித்துக் கொண்டார்கள் என்பதே நிஜம். திராவிட இயக்கத்தினர். நமது கடந்தகாலம் பற்றிய ஒரு அதீதமான கனவை உருவாக்கிக் கொடுப்பதன் வழியே நிகழ்காலச் சிக்கல்களிலிருந்து விடுபடுவது போலும் பிரமையை தற்காலிகமாக எழுப்புவது, அதற்காக மொழியை, வலிந்து பெறப்பட்ட நெகிழ்ச்சியை ஒரு சாதனமாக உபயோகிப்பது ஆகிய உத்திகளைக் கடைப்பிடித்ததன் வாயிலாகக் குறுகிய காலத்திலேயே மக்கள் செல்வாக்கினைக் கணிசமாகப் பெற்றனர். அதுபோலவே வானம்பாடிகளும் எல்லா சமூகப் பிரச்சனைகளுக்குமான தீர்வை, கற்பனை நவிற்சியான வார்த்தைகளின் வழியாக அடைந்துவிடலாம் என நம்புகிறவர்களாக இருந்தார்கள். இவ்வியக்கத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு என்று பார்த்தால், தமக்குள்ளாகவே உற்று நோக்கிக்கொண்டிருந்த தமிழ்க் கவிஞர்களைப் புறத்தேயும் முகம் திருப்பிப் பார்க்கும்படியான நிர்பந்தத்தை ஏற்படுத்தியதைக் கூறவேண்டும். அவ்விதத்தில் புவியரசு, சிற்பி, ஞானி ஆகியோரின் சில படைப்புகளை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.
தனிமனிதன், சமூகஜீவி என இருவகை உள்ளளுத்தங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக எழுதியவர்கள் என்று நோக்கினால் ஆத்மாநாம், கலாப்பிரியா, ஞானக்கூத்தன் ஆகியோரைக் கூறவேண்டும். ஆத்மாநாமிடம் சமநிலைப்படுத்தப்பட்ட உணர்வுகளின் சமரசமற்றத் தீவிரமும், கலாப்ரியாவிடம் பிரத்யேகமான பார்வை வழி தொகுப்பு பெறும் வாழ்வியல் சித்திரங்களும், ஞானக்கூத்தனிடம் எதையும் சற்று கோணலாக்கிப் பார்க்கும் வக்ரோக்தியும் அவை வெளிப்படும் விதத்தினால் சமூகத்தின் மீதான அவர்களுடைய ஆழ்ந்த தரிசனமாக மாறிவிடுகின்றன.
கடந்த அரை நூறு வருடங்களில் தமிழ் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளான 1) நக்சல்வாத அமைப்பினால் காவுகொள்ளப்பட்ட இளைஞர்கள். 2) அவசர நிலைக் காலத்தில் நேர்ந்த நெருக்கடிகள். 3) இந்தி எதிர்ப்பு போராட்டம் இவை குறித்தெல்லாம் காலத்தின் மனசாட்சியாகக் கருதப்படும் கவிதைகளில் பதிவுகள் அதிகமில்லை என்பது தமிழின் துரதிர்ஷ்டவசமான நிலையையே குறிக்கிறது. பிரம்மராஜனின் "விசாரம் வேண்டும் இறப்புகள்". சத்யனின் "இளம் இரவில் இறந்தவர்கள்" போன்ற கவிதைகளையும் ஆத்மாநாமின் சில கவிதைகளிலும் இப்பிரச்சனைகளின் எதிரொலிகளைக் கேட்க முடிகிறது. அரசியல் கவிதைகளுக்கான ஆகச் சிறந்த தமிழ் உதாரணமாக இன்றளவுமிருப்பது ஆத்மாநாமின் கவிதைகள் சிலவே மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய "அரசி" கவிதையையும் அவ்வரிசையில் சேர்க்கலாம். அதுபோலவே கல்வி, சமூக அந்தஸ்து எனப் பல விஷயங்களில் தமிழ்க் கலாச்சாரத்தின் கீழ் அடுக்களில் இருந்த பெருவாரியான மக்களை அரசியல் அதிகாரப் போட்டியின் மையத்திற்கு குறுகியதொரு காலத்தில் இழுத்து வந்து சேர்த்தது. தமிழ்த் தேசிய உணர்வைப் பேசிவந்த திராவிட இயக்கம். அதன் கலாச்சார, அரசியல் பங்களிப்பு விரிவான ஆராய்ச்சிக்குரிய ஒன்று. அதைப்பற்றி விமர்சனப் பூர்வமான குரலை ஞானகூத்தனின் சில கவிதைகளில் காணலாம், அவ்வளவே.
எண்பதுகளின் மத்தியில் நவீனத்திற்குப் பிறகான அலையாக தமிழில் வீசியது அமைப்பியல் பற்றிய அறிமுகம். நவீனத்துவத்தின் இடையில் சர்ரியலிசம், சிம்பலிசம், இமேஜிசம் முதலியவை குறித்துப் பேசப்பட்டாலும் அவை வடிவம் சார்ந்த பரிசோதனை முயற்சிகள் என்பதற்குமேல் அதிகம் பேசப்படவில்லை. தமிழவன் நாகார்ஜூனன், அ. மார்க்ஸ் போன்ற விமர்சகர்களால் முன்வைக்கப்பட்ட அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் கொள்கைகள் விமர்சன ரீதியாக சில முக்கியத்துவமுடைய கருத்துக்களை இன்று நிலைப்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. படைப்பியல் ஆசிரியனுக்கான ஏகபோக உரிமையைக் குறைத்து, வாசகனுக்கான சுதந்திரத்தை அதிகப்படுத்தியது, படைப்புக்கும் அதைப் படைத்தவனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என நிறுவியது. படைப்பில் எழுதுபவன் நிர்பந்திக்கும் ஒற்றை மையத்திற்கு பதிலாக கலாச்சாரத்தின் ஊடுபாவுகளைப் பிரதிபலிக்கும் பல குரல்களை வலியுறுத்தியமை ஆகியவற்றை அவற்றுள் முக்கியமான சிலவாகக் கூறலாம். இவையெல்லாம் பிறிதொரு வகையில் எழுத்தாளனுக்கு தேவைப்படுகிற மேலதிகமான சுதந்திரத்தையும், படைப்பு வெளியையும் நல்கியது எனலாம். தவிரவும் கவிதை தனித்த இலக்கிய வடிவம் என்பதினின்றும் மெல்ல விலகி இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம், திரைப்படம் போன்ற பிற கலை வகைமைகள் மானுடவியல், வானியல், உளவியல் போன்ற அறிவுத் துறைகள் ஆகியவற்றின் பாதிப்புகளையும் தன்னில் பிரதிபலிக்கும் ஊடுபிரதித் தன்மையுடைய ஒரு வார்த்தைப் பரப்பாக இன்று மாறிவிட்டது. இதன் ஆக்கபூர்வமான இயல்புகளை பிரம்மராஜன், ஆத்மாநாம், சுகுமாரன், எம்.யுவன் ஆகியோரின் கவிதைகளிடையே நாம் இனம் காண முடியும்.
இதன் நடுவே காலம் மற்றும் வெளி குறித்த நிர்ணயங்கள் ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கொள்கையிலிருந்து, குவாண்டம் இயற்பியல், ஸ்டியரிங்ஸ் தியரி வரை பலவாறாக அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை இறுகிக் கெட்டிதட்டிப்போன நம் நடைமுறை யதார்த்தத்தின் அனுபவ மெய்மைகளை அசைத்துப் பார்க்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதை ஆழமானத—‘ரு தியானமாக பரீட்சித்துப் பார்க்கும் போக்கை ஆனந்த், தேவதச்சன், ஷா அ முதலியோரின் கவிதைகளில் காண்கிறோம். ஆனந்த்தின் "சற்றைக்கு முன்" தேவதச்சனின் ஒரு டினோசரை நெருங்குவது எப்படி" ஆகியன நினைவிற்கு எட்டும் தூரத்திலுள்ள உதாரணங்கள்.
எண்பதுகளில் எழுதப்பட்ட சில கவிதைகள் புதுக்கவிதை கோரும் குறைந்த பட்ச அழகுகளான படிமம், குறியீடு, உள்ளார்ந்த ஓசை அமைதி ஆகியவற்றைக்கூட புறக்கணித்துவிட்டு நேர்கவிதை எதிர் கவிதை என்ற வகைப்பாடுகளுக்குள் அமையும் விதமாக எழுதப்பட்டன. கலாப்ரியாவின் "நவீன ஆண்டாள்கள்", விக்ரமாதித்யனின் "ரத்தத்தில் கை நனைத்ததில்லை நான்". நகுலனின் "கோட்-ஸ்டாண்ட் கவிதைகள்". ஆத்மாநாமின் சில கவிதைகள் இப்பிரிவிற்குள் அடங்கும். இதைப் போலவே சர்ரியலிசப் படிமங்களை உபயோகித்து எழுதப்பட்ட முக்கியமான சில கவிதைகளையும் (எ.கா பசுவய்யாவின் "ஆந்தைகள்" ஞானக்கூத்தனின் "தவளைகள்" ) அபத்தக் கவிதைகள் என்பதற்கான உதாரணங்களையும் (சி. மணி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன்) எண்பதுகளுக்கு முன்பிருந்தே காணமுடிகிறது. அதுபோலவே முற்றிலுமான பரிசோதனை முயற்சிகள் என்ற அளவில் பிரேதா-பிரேதன் ஆகியோரின் "கிரணம்" கவிதைகளைக் குறிப்பிட வேண்டும். மூச்சு திணறுமளவிற்கான பாலியல் உறவுப் படிமங்களும், வன்முறையின் வாதையும் ஒரு கொடுங் கனவு போல் கட்டின்றி விரியும் அக்கவிதைகள் வாசகப் பங்கேற்பிற்கான வாயில்களை அதிகமின்றி மூடுண்டு போனவாயிற்று. அவர்களுடைய பிந்தையக் கவிதைகளில் அடிப்படை அம்சமான அதீத புனைவு. புராதன தொன்மங்கள் ஆகியவை இடம்பெறுவதைக் காண முடிகிறது.
தமிழ் நவீன கவிதைகளின் அசாதாரணமான வடிவ இறுக்கம், மொழிச் சிக்கனம், படிம அடர்த்தி, உள்நோக்கிய பார்வை ஆகியவற்றிற்கு நேரெதிரான முனையில் இருந்து இயங்குபவையாக ஈழத் தமிழ்க் கவிதைகளைச் சொல்லத் தோன்றுகிறது. உள்நாட்டு யுத்தம், புலம் பெயர்ந்த அயலக வாழ்வு எனும் அதீதமான வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து உருவாகும் இக்கவிதைகள் இருண்மை, சிக்கல், நம்பிக்கையிழப்பு ஆகியவற்றிற்கு பதிலாக பெரிதும் நேரடியான வெளிப்பாட்டு முறையையும், நம்பிக்கையின் பிரகாசத்தையும் கொண்டவையாக உள்ளன. காட்சி விவரணை, தேவைக்கேற்ப இயற்கையை படிமமாகவோ குறியீடாகவோ பயன்படுத்துதல், தீவிரமான சூயளவயடபயைவின் தொனி ஆகியவற்றால் எழுதப்பட்டது இக்கவிதைகளின் கவித்துவம் வெளிப்பாட்டின் தன்னிச்சையான மொழிப் பிரயோகத்தினால் இயல்பாகக் கூடி வருவதே. வில்வரத்தினம், ஜெயபாலன், சேரன், சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் கவிதைகள் இலக்கியத்தின் ஒருவகை என்பதற்கும் மேலாக, ஒரு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தின் கீழ் வாழ நிர்பந்திக்கப்படும் ஒரு இனத்தின் நினைவுகள் பதியப்பட்டிருக்கும் சமூக - உளவியல் ஆவணங்களாகவும் இவை பரிசிலிக்கப்பட வேண்டும்.
இரா. மீனாட்சி, திரிசடை, கி. விஜயலட்சுமி, சுகந்தி சுப்ரமணியன், ரிஷி போன்றோர் ஒரு தொடர்ச்சியாக தமிழ்க் கவிதையில் செயல்பட்டு வந்தாலுமே கூட தொன்னூறுகளிலிருந்துதான் பெண்களின் குரல் அவர்களுக்கேயான பிரத்யேக அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் விதமான வீர்யத்துடன் ஒலிக்கத் துவங்கியுள்ளது. இதுகாறும் ஆண்களின் பார்வை வழியாகவே வனையப்பட்டு நிலைத்துவிட்ட பெண் பற்றிய பிம்பங்கள், புனைவுகளைக் கலைத்து புதியதாக ஒரு பிரக்ஞையை உருவாக்க முயலுபவையாக சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, கனிமொழி, வெண்ணிலா முதலியோரின் முனைப்பு உள்ளது. செய்தி ஊடகங்களின் மிகையான கவனம், தீவிரமான கருத்தியல் மனச்சாய்வு ஆகியவற்றினின்றும் விலகி தங்கள் கவித்துவம் குறித்த பிரக்ஞையுடன் செயல்படும் பட்சத்தில் இவர்கள், தமிழ்க் கவிதைகளின் போக்கில் வலிமையானத—‘ரு பாதிப்பை செலுத்துவார்கள் என நம்பலாம்.
புலன் அனுபவங்களின் உள்மடிப்புகளை அதன் மொழிக்கு முந்தைய நிலைகளை கவனப்படுத்தும் யுவன், படிமத்தைத் துறந்த எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் அபூர்வ கணங்களைத் தொட முயலும். மனுஷ்யபுத்திரன், புனைவுச் சித்தரிப்புகளின் ஊடாக புதிய எதார்த்தங்களை எழுதிப் பார்க்கும் சங்கரராமசுப்ரமணியன், லட்சுமி மணிவண்ணன், ஒரு சொல்லுக்கும் அதிகமான கருணையையும், உயிர் பொறுக்கவொண்ணாத தாபத்தையும் நுரைத்துத் ததும்பும் மொழியின் கட்டின்மை வழியே வடிக்க முயலும் யூமா வாசுகி. தனிமையை, வாதையை, சுயசிதைவாக்கம் செய்யப்பட்ட கலைந்த மனப்பிம்பங்கள் வழியே சித்தரிக்கும் பாலை நிலவன், தேர்ந்த விஞ்ஞானியின் கச்சிதத்துடன் தன் நினைவுச் சேர்மங்களை வினைபடுதலுக்கு உள்ளாக்கும் அமலன் ஸ்டேன்லி, பிரத்யேகமான இனக்குழு அடையாளங்களை வார்த்தைகளின் மேலேற்றி உச்சாடனம் செய்ய எத்தனிக்கும் என்.டி. ராஜ்குமார் என உத்வேகத்துடன் இயங்கும் இளைஞர்களின் கூட்டமொன்று தமிழ்க் கவிதையின் புதிய திசைகளுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவே இப்போதுமிருக்கிறது.
முன்னெப்போதைவிடவும் பிரசுர வெளியீட்டு வாய்ப்புகளும், விற்பனை முயற்சிகளும் பெருகியுள்ள இன்றைய சூழல், இலக்கிய ஆக்கங்களுக்கான எல்லா சாத்தியங்களின் கதவுகளையுமே விரியத் திறந்து வைத்துள்ளது, என்றாலும் உரைநடைப் படைப்புகளின் அளவிற்கு கவிதைகள் குறித்த பேச்சு இங்கு அதிகமில்லை. வெளியிடப்பட்டுள்ள தொகுப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், விமர்சன நோக்கில் கவிதையியல் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள் மிகக் குறைவே. இதை நிவர்த்திக்கும் வகையில் முன்னோடி படைப்பாளிகளும், மொழிபெயர்ப்பாளர்களும், திறனாய்வாளர்களும் செயல்பட முன்வருவார்களேயானால் தமிழ்க் கவிதைப் பரப்பு அதன் விஸ்தீரணத்துக்கு சற்றும் குறையாத அளவு ஆழமும் கொண்டதாக மிளிரும்.

ஆ.மாதவனின் இலக்கியச் சுவடுகள்

இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் "கலைமாமணி' ஆ. மாதவன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக எழுதி வருகின்ற இவர், இன்றும் தம் எண்பதாம் வயதிலும் ஆர்வமுடன் தமிழ், மலையாள உலகில் சமகால இலக்கியங்களைப் படிக்கிறார், விமரிசிக்கிறார். வாழ்வியல் எதார்த்தங்களை அறிந்து உணர்ந்து மென்மையுடன் எழுதுகிறவர்.
 
ஆ. மாதவனின் "இலக்கியச் சுவடுகள்' என்ற அரிய நூலுக்கு இந்த ஆண்டு மத்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பாகி உள்ளது.
 1934-
ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பூர்வீகம் திருநெல்வேலி. வணிகம் காரணமாக அன்றைய கேரளாவைச் சேர்ந்த திருவிதாங்கூர் மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில்) குடியேறிய குடும்பம். பின்னர், அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்த ஆவுடை நாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் புதல்வர்.
 
தாய்மொழி தமிழ் என்றபடியால் சிறுவயது முதற்கொண்டே தேவாரம், திருவாசகம் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் பல கற்றவர். 1948-ஆம் ஆண்டு தமது பள்ளி இறுதி ஆண்டு வரை மலையாளத்தில் மட்டுமே பயின்றவர்.
 
ஆ. மாதவனுக்கு "செண்பம்' எனும் இலக்கிய அமைப்பின் "சிறுகதைச் செல்வர்' (1977), கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் "தமிழ் மாமணி' (2003) ஆகிய சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இவரது படைப்புகளுக்கு "திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1994', திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் "மகாகவி உள்ளூர் நினைவு விருது - 2002', "விஷ்ணுபுரம் விருது' போன்ற பாராட்டுகளும் வழங்கப் பெற்றன.
 
புது தில்லி, "சாகித்ய அகாதெமி'யின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவரது படைப்புகளில் பல, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இடம்பெற்றுள்ளன. 1966-ஆம் ஆண்டு திருமணமானவர். இவரது மனைவி 2002-ஆம் ஆண்டு காலமானார். வளைகுடா நாட்டில் பணியாற்றிவந்த ஒரே மகன் 2004-ஆம் ஆண்டு இளமையில் மரணம் அடைந்தார்.
 
மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துப் பேரக் குழந்தைகளுடன் தனது சொந்த வணிகத்தில் இருந்து ஓய்வு பெற்று, தமிழ் இலக்கியங்கள், இதழ்கள், மலையாளப் படைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய இலக்கியப் போக்கையும் திருவனந்தபுரத்தில் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருக்கிறார்.
 "...
ஒரு படைப்பாளி முற்றும் அறிந்த பேரறிஞன் அல்ல. அவன் தன் படைப்புகளில் சுத்த நேர்த்தியும், யதார்த்தத் தலையாக்கமும் பரிமளிக்கச் செய்திட வேண்டும். அதில் வாசகனுக்கு ஏதேனும் உய்யும் வழி தெரிந்தால் சிறந்த வாசகன் அவனாகவே எடுத்துக் கொள்வான்,' என்று கூறுபவர் மாதவன்.
 
ஏறக்குறைய, 1953-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் அழுத்தமான இலக்கிய முத்திரைகள் பதித்தவர். இவர் எழுதிய முதல் நாவல் "புனலும் மணலும்' (1974) ஆற்று மணல்வாரி ஜனங்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்திரிக்கும் அற்புதமான படைப்பு.
 
இரண்டாவது நாவலான "கிருஷ்ணப் பருந்து' (கலைஞன் பதிப்பகம், சென்னை, கலைஞன் வெள்ளி விழா வெளியீடு, டிசம்பர் 1980) நூலின் உள்ளடக்கத்தை இங்கு விவரிப்பதைக் காட்டிலும் அது குறித்த நகுலனின் முன்னுரையை இங்கு குறிப்பிடுவதே சிறப்பு.
 "
இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷைகளைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்' என்று உரைக்கிறார். மாதவனின் மூன்றாவது நாவல் "தூவானம்' (அன்னம் வெளியீடு, சிவகங்கை, முதற்பதிப்பு, டிசம்பர் 1987). இந்நூல் கல்லூரிப் பாடநூலாகவும் இடம்பெற்றது.
 
எழுத்துலகில் "சின்ன ஜானகி ராமன்' என்கிற செல்லப் பெயருடன் அறியப்படுபவர். இவர் எழுதிய "கடைத்தெருக் கதைகள்' (1975), "மோக பல்லவி' (1975), "காமினி மூலம்' (1975), "ஆனைச் சந்தம்' (1981), "மாதவன் கதைகள்' (1985), "அரேபியக் குதிரை' (1995), "ஆ. மாதவன் கதைகள்' (2002), "ஆ. மாதவன் - முத்துக்கள் பத்து' (2007) என ஏழு தொகுப்புகளின் சொந்தக்காரர்.
 "
மாதவன் கதைகள்' (1985) இவரது ஐந்தாவது தொகுப்பு. காரூர் நீலகண்ட பிள்ளை எழுதிய மலையாள நாவலினைத் தமிழில் "சம்மானம்' (1974) என்றும், பி.கே. பாலகிருஷ்ணனின் நாவல் ஒன்றினை "இனி நான் உறங்கட்டும்' (2002) என்றும் ஆ. மாதவன் சில நாவல்களைத் தமிழாக்கம் செய்தார்.
 
திருவனந்தபுரத்தில் தமிழ் இலக்கியப் படைப்புகள் மட்டுமன்றி, தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருபவர். 2013-ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவை ஒட்டி, தமிழில் இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கும் நோக்கில் ரூ.25,000 வைப்பு நிதி வழங்கி "ஆ. மாதவன் இலக்கிய அறக்கட்டளை' நிறுவி இருக்கிறார் என்பது ஓர் இனிப்புச் செய்தி.
 
மாதவன் சிறந்த பத்திரிகையாளரும் ஆவார். "கேரளத் தமிழ்' இதழ் அன்றியும் "தீபம்' நா. பார்த்தசாரதியுடன் இணைந்து "தினமணி கதிர்', "தீபம்' ஆகிய இதழ்களின் இணையாசிரியராகவும் இயங்கியவர்.
 
பன்முகப் படைப்பாற்றலும், பன்மொழி அறிவும், தன்னலம் அற்ற தமிழ்த்தொண்டும் ஆற்றிய ஆ. மாதவனின் "இலக்கியச் சுவடுகள்' (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை, 2013) அவரது படைப்புத் திறனுக்கு நிகரான திறனாய்வு இலக்கியப் பார்வையும் உள்வாங்கிப் பதிவான நூல்.
 
தகுதியான அந்த நூலுக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற ஆ. மாதவனை தமிழ் இலக்கிய உலகம் போற்றிப் பாதுகாக்கும் என்பதில் இருவேறு கருத்து இல்லை.

பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!

-கவிஞர் அன்புசிவா

மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார்.

பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர். தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர்.

பிறப்பு

தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். இங்கு, தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றியவர். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்தவர். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டவர். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார்.
அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன.

வாழ்த்துரை கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி நிலையத் தலைவர் பொதிகை தொலைக்காட்சி நிலையம் கோயம்புத்தூர்.


தேவதைக்கான காத்திருப்பு
அது ஒரு தனித்த உலகம்
அங்கே கவிதைகள் கூத்தாடும்
சிரிப்பும் கும்மாளமும் தேர்ந்தாடும்
கவலைக்கு அங்கே தடை உத்தரவு
சந்தோசம் மட்டுமே நிரந்தரம்
எல்லோருக்கும் எல்லோருக்கும்
அன்பு மட்டுமே பகிர்ந்தளிக்கப்படும்
கண்ணீருக்குக் கதவடைப்பு
புன்னகை மட்டுமே கையிருப்பு
இப்படியான உலகத்தில்
ஒற்றை அரசன் கவிஞர் அன்புசிவா...
தன் தேவதைக்கான காத்திருப்பு
இந்த நிலாவும் பட்டாம்பூச்சியும் கவிதைத் தொகுப்பு....
கவிஞர் அன்புசிவாவின் மனசின்
ஆழத்திலிருந்து ஊற்றாகக்
கசியும் கவித்துவம்-அவரைக்
காலமெல்லாம் கைப்பிடித்து
வழி நடத்தும்... இன்னும்
கொஞ்ச காலத்தில் ஒரு
தேவதை வருவாள். அவளுக்கு இப்போதே
எழுதிமுடித்திருக்கும் அன்புசிவா கவிதைகள்
சொல்லும்-அவரின் மனசுக்குள்
பொதிந்து வைத்திருக்கும்
பாசத்தையும் நேசத்தையும்...
இது தேவதைக்கான வாசல் வீசும் தொகுப்பு.
“இந்த நினைவின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை
கதவு திறந்துதானிருக்கிறது”
என்று பிரகடனம் செய்யும் கவிஞர் அன்புசிவாவுக்கு
முதல் மழை வாசம் போல் நெகிழும் குணம்
நெகிழ்த்தும் குணம் இரண்டும் உண்டு.
கிராமத்து வெக்கைக்காற்றும்,
புழுதி மண்ணும்,குளத்தின்
நீர்த்திவலையும்,மாடுகளின் மேய்ச்சலும்,
கோழிகளின் பாய்ச்சலுமாக
கருப்பட்டிச் சிறுவனாக வளர்ந்த அன்புசிவா
இன்றைக்குக் கவிஞர், முனைவர், பேராசிரியர்...!
நகரும் ஒவ்வொரு வினாடியுமே
ஆச்சரியங்களின் இருப்பிடம் தான்
அதிசங்களின் பிறப்பிடம் தான்
ஒடி நொடி துவங்கி அடுத்த நொடி
ஆவதற்குள் எந்தவொரு
மனிதரையும் அன்பினால்
வசீகரிக்கம் மாயம் அன்புசிவாவுக்கு உண்டு.
இப்போதும் வசீகரிக்கிறார் கவிதைகளோடு...
“நாளைய ஏக்கம்
நேற்றைய கவலை பலருக்கு
இன்று இந்த நிமிசம்
நாமிருப்பதே நிஜம்”
    என்கிற கவிதை சொல்லும் வாழ்வியல் தத்துவம்
எளிய வார்த்தையில் வலிய சிந்தனை.
“அடங்காப் பசியென
வார்த்தைகளை
விழுங்கிக் கொண்டேயிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
பரவாயில்லை அன்புசிவா
விழுங்கிய வார்த்தைகள்
கவிதைகளாகக் கனிவதால்
நீங்கள் - கோடி கோடி
வார்த்தைகளையும் விழுங்களாம்.
உற்சாக அன்புசிவாவுக்கு ஒரு சின்ன நெருடல்
“ஒரு மரணத்தை ஒத்த நிகழ்வு
என்னைச் கூழ்ந்நு கொள்கிறது”
என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
உங்களின் மனஇருக்கம் கரையட்டும்
வெளிச்சங்கள் நிறையட்டும்.
“ஏனோ தானோ வென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகி விடும் என்ற நம்பிக்கையில்”
இப்படியாக அன்புசிவா அந்தத் தேவதைக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறார். நானும்
காத்துக் கொண்டிக்கிறேன்
கை நிறைய அட்சதையோடு
என்றும் அன்புடன்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி
01.01.2013

முனைவர் அன்புசிவா "அபியும் நானும்" சிறுகதைகள்

 

 - பொன்.குமார் 


அன்பு சிவா கவிதை, கட்டுரை என்னும் இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர். ஆய்வுப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். முனைவர் பட்டம் பெற்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர். சிறுகதை முயற்சியிலும் இறங்கி 'அபியும் நானும்' என்னும் முதல் தொகுப்பைத் தந்துள்ளார்.
'சொல்ல மறந்த கவிதை' என்னும் முதல் கதை, சாதி இன்னும் மனிதர்களிடம் எந்த அளவிற்கு வெறியாக உள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது. சாதி என்பது மனிதர்களிடையே ஓர் அங்கமாக உள்ளது. சாதியைத் துறந்து எவரும் வாழ்வதில்லை; வாழ விரும்புவதுமில்லை. சாதிக்கு எப்போதுமே முதல் பலி ஆவது காதலர்களே. இக் கதையிலும் காதலர்களே பாதிக்கப்படுகின்றனர். பலியாக்கப்படுகின்றனர். வேறு சாதிக்காரன் தன் சாதி பெண்ணைக் காதலிக்கிறான் என்பதற்காக அவளைக் கொல்ல முயல அவள் தடுத்து தான் பலியாகிறாள். அவனும் தன்னை மாய்த்துக் கொள்கிறான். காதலர்களைப் போற்றுகிறது. சாதி வெறியர்களைச் சாடுகிறது. சொல்ல மறந்த கவிதை சோகம் நிறைந்த கதை.
திருநங்கைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கேலி செய்யப்பட்டும் வந்தனர். தற்போது சூழல் சற்று மாறி வருகிறது. பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இலக்கியத்திலும் இடம் பெற்று வருகின்றனர். படைப்புகள் மூலமும் பேசப்பட்டு வருகின்றனர். அன்பு சிவாவும் 'பூமாலை அம்மா' என பெருமைப்படுத்தியுள்ளார். ஓர் அரவாணியால் ஒரு நல்ல அம்மாவாக இருக்க முடியும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார். அவர்களிடமும் பாசம் உண்டு என்கிறார்.
குழந்தைப் பிறப்பு என்பது ஆண் பெண் சேர்க்கையில் உள்ளது. இருவரும் அவசியம். தம்பதியருக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் பெண்ணை மட்டும் குறை கூறுவது மக்களின் இயல்பு. அவ்வாறான மக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது 'ஒரே ஒரு கேள்வி'. மருமகளுக்குக் குறையென்று மகனுக்கு மறுமணம் செய்து வைக்க முயல்கிறாள் மாமியார். ஆனால் மகனுக்கே குறை. அறிந்த மாமியார் வருந்துகிறாள். ஆசிரியரிடம் ஒரே ஒரு கேள்வி. மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க  முயலாதது ஏன்?
இது பெண்ணியம் தொடர்பான கதை எனில் பெண்ணியத்திற்கு மாறான ஒரு கதையாக 'ரூபா என்கிற ரூபாவதி' கதை இடம் பெற்றுள்ளது. வரதட்சணையால் நின்று போன கதைகள் எராளம் வாசிக்கப்பட்டுள்ளது. ஆண்களை பண வெறியர்களாக காட்டப்பட்ட கதைகளே பிரபலமாகியுள்ளன. இக் கதையில் மாப்பிள்ளையாக வந்தவர் முற்போக்குவாதியாக உள்ளார். லஞ்சம் வாங்காதவராக உள்ளார். நேர்மையாக வாழ விரும்புகிறார். விவரம் அறிந்த பெண் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று முடிவு செய்து  மாப்பிள்ளையை மறுத்து விடுகிறாள். எதிர் மறையான இக் கதையை எழுத துணிச்சல் வேண்டும். துணிச்சல் மிக்கவராக ஆசிரியர் உள்ளார்.    
'எட்டாம் வகுப்பு 'அ' பிரிவு' பள்ளியைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கௌரவப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தவறு செய்தால் திருத்த முயல்வதே பள்ளியின் பணி, ஆசிரியரின் கடமை என்கிறார். ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். தண்டனையை விட மன்னிப்பே சிறந்தது என்கிறார். மன்னிப்பே அதிக பட்ச தண்டனை என்பது சுட்டத்தக்கது. ஓர் ஆசிரியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது 'கால மாற்றம்'. இதுவும் ஆசிரியர் குறித்தானதே. கல்வியின் அவசியத்தை விளக்குகிறது, படிக்க விரும்பாத மாணவர்களையும் படிக்க வைக்க விரும்பாத பெற்றோர்களையும் மன மாற்றம் செய்கிறது, ஒரு வருடத்திற்குள் மாற்றிக் கொண்டு செல்ல நினைக்கும் ஆசிரியரே மனமாறி அங்கேயே தொடர நினைக்கிறார். ஆசிரியராக அல்லாமல் மாணவர்களின் குடும்பத்தில் ஒருவராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்கிறது.
மனிதர்கள் இறந்தால் புதைப்பது மண் சார்ந்த ஒரு வழக்கமாக இருந்தது. இந்தியாவிற்கு வந்து நிலமற்று வாழ்ந்தவர்கள் இறந்தால் எரிப்பது மற்றொரு வழக்கமாக இருந்தது. இட நெருக்கடியாலும் அவசர வாழ்க்கையாலும் புதைக்கும் வழக்கம் புதைக்கப்பட்டது. எரிக்கும் வழக்கத்தைத் தொடர நவீனமாக 'மின்சாரத் தகனம்' முறை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம் முறையை வைத்து எழுதப் பட்ட கதையாக உள்ளது. மின்சாரத் தகனம் முறை வந்தால் வேலை போய்விடும் என்று தயங்கிய 'கருப்பு' முடிவில் வரவேற்கிறான். காரணம் வெட்டியான் என்று கேவலமாக அழைக்கப்படுவது தவிர்க்கப்படும் என்கிறார். சாதியம் ஒழியும் என்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
மரம் என்பது மனிதர்களுடன் தொடர்புடையது. மனிதர்களுக்கு உறவானது. உறவாகக் கொண்டாடுவதும் உண்டு. சங்கப் பாடலிலும் மரத்தை சகோதரியாக பாவித்து எழுதப்பட்டுள்ளது. கவி்ஞர் வைரமுத்துவும் 'மூன்றாம் உலகப் போர்' தொகுப்பில் மரங்களை நட்டு வைத்து உறவாகக் கொண்டாடுவதாக அமைத்துள்ளார். அன்பு சிவாவின் 'தேவரின் மாமரம்' கதையில் தேவரின் காதலியாக மாமரம் சித்திரக்கப்பட்டுள்ளது. மரம் வெட்ட திட்டமிட்டதை அறிந்து தன் உயிரை மாய்த்து மரம் வெட்டுவதைத் தடுக்கிறார்.
தொகுப்பில் மிகச் சாதாரணமான கதையாக உள்ளது 'கோழை'. பேராசிரியர் பதவியில் இருப்பவர் மாணவியைக் காதலிக்கிறார். அவளிடம் சொல்ல முடியாமல் பதவி தடுக்கிறது. சொல்ல முயலும் போது அவள் தன் திருமண அழைப்பிதழைத் தந்து அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். கோழைத்தனத்திற்குக் கிடைத்தத் தண்டனை என்று கதையை முடிக்கிறார். உலகப் பேரறிஞர்கள் பலருக்கு ஒரு வகையில் பார்த்தால் மாணவிகளே மனைவிகளான வரலாறு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. என்.டி.ஆர். வாழ்வை ஆய்வு செய்து எழுத வந்த மாணவி சிவபார்வதியே இரண்டாம் மனைவியானார் என்றும் ஒரு பதிவு உள்ளது.
'மஜனுக்கள்' கதையும் சாதாரணமாகவே உள்ளது. ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கி ஏமாற்றம் அடையச் செய்யும் பாணியிலான கதையாகும். இலக்கிய தகுதி அடைவது சிரமமாகும்.
'அபிக்குப் பிறந்த நாள்' கதை குறிப்பிடத் தக்கதாகும். ஆறாம் வகுப்பு படிக்கும் அபிக்கு பிறந்த நாள் கொண்டாட ஆசை. தான் சேமித்து வைத்த பணத்தில் சாக்லேட் வாங்கி விநியோகிக்க வைத்திருக்கிறாள். கணக்கு நோட்டு இல்லாமல் பள்ளி செல்ல மறுக்கும் கோபுவிற்காக சாக்லேட்டை கொடுத்து கணக்கு நோட்டு வாங்கித் தருகிறாள். நல்ல செய்தி. மாணவர்களுக்கு அறிவுரை. பிறந்த நாளை பிறருக்கு உதவி செய்தும் கொண்டாடலாம் என்று உணர்த்தியுள்ளார்.
விதிப்படியே வாழ்க்கை நடக்கும். விதியை வெல்ல முடியாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். சில நேரம் விதி சதி செய்து விடுகிறது. இரக்கமற்று நடந்து கொள்கிறது. 'இரக்கமற்ற விதி'யைக் குற்றம் சாட்டியுள்ளார். கண்டித்துள்ளார். குடிகார மகன் திருந்தி பணம் சம்பாதித்து அம்மாவை வாழ வைக்க பிரியப்படும் போது அம்மா இறந்து விடுகிறாள். வெளியூரில் இருக்கும் மகன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கும் வர முடியாத நிலை. இதனால் ஆசிரியர் 'இரக்கமற்ற விதி' என்கிறார். எல்லாம் விதி என்பது மக்கள் வழக்கம். விதியை நொந்து பயனில்லை என்பர். விதியை விமரிசித்துள்ளது கவனிப்பிற்குரியது.
தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அன்பாலானது. பாசத்தாலானது. தாயைப் பிரிந்த குழந்தையின் சோகம் சொல்லால் சொல்ல முடியாதது. எழுத்தால் எழுத முடியாதது. உணரவே முடியும். 'அலாவதீனும் குட்டி நாயும்' கதை  அற்புதமானது. அடர்த்தியானது. தாயைப் பிரிந்து அத்தை வீட்டில் வாழும் அலாவுதீன் ஒரு குட்டி நாயை எடுத்து வளர்க்கிறான். அம்மா நாய் வெளியில் குரைக்க குட்டி நாய் உள்ளிருந்து குரைக்கிறது. அலாவுதீன் தன் நிலையை உணர்ந்து குட்டி நாயை விட்டு விடுகிறான். அம்மா நாயுடன் குட்டி நாய் சேர்ந்து விடுகிறது. அலாவுதீன் அம்மாவை நினைத்து ஏங்குவதாக கதையை முடித்து வாசகர்களைக் கலங்கச் செய்த விடுகிறார் அன்பு சிவா.
'அபியும் நானும்' என்று தொகுப்பின் தலைப்பிலான கதை இயல்பான ஒரு கதை. தாய் வீடு என்றால் பெண்களுக்கு எப்போதுமே ஒரு பிரியம்தான். விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மாமியார் வீடு என்றால் மனம் விரும்பாது. இந் நிலையை விளக்கும் கதையாக அமைந்துள்ளது. அபியும் நானும் தலைப்பில் காணும் இணைப்பு, பிணைப்பு கதையில் இல்லை.
அன்பு சிவாவின் கதை முயற்சி வரவேற்பிற்குரியதாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு தளத்தில் அமைத்துள்ளார். வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்வுகளையே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  கதைகளை எச் சிரமமும் இன்றி நேர்க் கோட்டிலேயே அமைத்துள்ளார். ஓர் எதார்த்தமான சிறுகதை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே  எழுதப்பட்டுள்ளன கதைகள். மனித உணர்வுகளை முன் வைத்துள்ளது. மனித நேய அடிப்படையே கதைகளில் முக்கியமாக காணப்படுகின்றது. இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனுப்பப்பட்டும் ஒன்று கூட பிரசுரமாகவில்லை என்று ஆசிரியர்  ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதழில் பிரசுமானாலே நல்ல கவிதை என்பது தவறான எண்ணம். கவிஞர் பாரதி வசந்தன் இதழுக்கு அனுப்பப்பட்டு மறுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து 'தலை நிமிர்வு' என்னும் தொகுப்பை வெளியிட்டுள்ளது இங்கு நினனவிற்கு வருகிறது.
ஒரு தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே நல்லதாக அமைந்து விடாது. இத் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் "இந்த கதைகளை எழுதியவன் என்ற நிலையில் இருந்து அல்லாமல் விலகி  நின்று வாசித்தால் தனது கதைகள் தொடக்கக் கட்டத்தில் இருப்பதை அவர் உணர்ந்து கொள்ளலாம்" என்று சுட்டிக் காட்டியுள்ளார். 'அபியும் நானும்' ஒரு நல்ல தொடக்கமாகவே அன்பு சிவாவிற்கு அமைந்துள்ளது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...