Saturday, January 15, 2022

இரக்கமற்ற விதி

 


     மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும்  குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர் சொல்லி அழைத்தார்.
     ‘த யாருப்பா  நீ அதிகாரமா பேரச் சொல்லிகூப்புடற”  என்றபடி,  கமா போன்ற வளைந்த முதுகுடன் பேச்சி வெளியே காட்சி தந்தாள். 
     “புது டெல்லியிலிருந்து மூக்கன்ங்கிறவர் ஆறாயிரத்து ஐந்துறூறு  மணியாடர் அனுப்பி இருக்காரு.  கைரேகை வச்சட்டு வாங்கிக்கோ”.
     பேச்சிக்கு உடம்பெல்லாம்  ஒரு விநாடி  சிலுத்து அடங்கியது.  தனது வலது கையை எடுத்து புகயிலைச் சாறு ஒழுகுகின்ற, நாலைந்து பற்களே உள்ள பொக்கை வாயில் கடித்துக்கொண்டாள்.  மணியாடர்க்காரனை சில நொடிகள் உற்றுப்பார்த்தாள். கண்ணீர்  கண்களில் ஊர்வலம் வரத்தொடங்கியது.  அந்தக் கண்ணீரில் சூடு அதிகம் இல்லை.  குளிர்ச்சியாக இருந்தது.   அப்போதுதான் பேச்சி தன் வாழ்நாளில் முதலாவதாக ஆனந்தமாக அழுதாள்.  குடிசைக்குள் விர்ரெனப்புகுந்து, தனது கூன் உடம்பை சாணி மெழுகிய தரையில் புரட்டியபடியே “ஊருக்காத்த அய்யனார்ரே,  பாண்டி முனீஸ்வரா, மாரியாத்தா, எங்குடிய வெளங்க வெச்சுட்டடி.  என்னக் கரசேத்திட்டீக.  எம்புள்ளக்கி நல்ல வழிகட்டிப்புட்டீங்க” என்று விபூதியை அள்ளி நெற்றியிலும் கழுத்திலும் பூசிக் கொண்டு வெளியே வந்தாள்.  மணியாடர் காரர் பேச்சியின் விரல் ரேகையை  மைதடவி அட்டையில் பதித்தார்.  பேச்சிக்கு விரல் நடுங்கியபடி இருந்தன.  பதிமூன்று ரூபாய்  நோட்டைக் கொடுத்து, சரிபார்க்கச் சொன்னார்.  பேச்சி ரூபாய் நோட்டுகளை முகத்தில் பயபக்தியடன் ஒத்தி எடுத்து மனதுக்குள் “மூக்கனின் உழைப்பு இது!  மூக்கனின் வியர்வை இது!  என் இரத்தத்தின் சம்பாத்தியம்! என்று நினைத்துக் கொண்டாள்.
     “கீழ செய்தி எழுதியிருக்கு வாசிக்கிறேன்” என்று வாசிக்த் தொடங்கினார்.  பேச்சியும் பதிலுக்கு “ஆங்…ஆங்…வாசிப்பா…” என்று யாசித்தாள்.
    “மூக்கன் எழுதுவது.  நலம் நலமறிய ஆவல்.  இரவு பகல் பாராது லாரி ஓட்டுகிறேன்.  நன்றாகச் சம்பாதிக்கிறேன்.  அனுப்பி உள்ள 6500 ரூபாயில் வாத்தியாரிடம் வாங்கிய கடன் 1500ஐ திருப்பிக் கொடுக்கவும்.  சேட்டிடம் உள்ள தாலிக் கொடியை 1000 ரூபாய் கொடுத்து மீட்டுட்டு வா.  500 ரூபாய்க்கு கீற்று மூங்கில் வாங்கி குடிசையை சரி பண்ணு.  மீதி 3500க்கு சேல துணி மணி வாங்கிக்க.  கவுச்ச வாங்கி சாப்பிடு.  வண்டி மாத்துனா ஊருபக்கம் வருவேன்.  ஒரு வருசம் போனவுடன் ஓட்டு வீடா கட்டிப்புடலாம்.  இப்படிக்கு மூக்கன்.  அந்த மணியாடர்க் காரர் செய்தி அட்டையைக் கிழித்து கிழவியிடம் ஒப்படைத்து நகர்ந்தார்.
     வாத்திhர் வீட்டிற்குச் சென்று நன்றி சொல்லி ரூபாய் 1500ஐக் கொடுத்தாள்.  மூக்கன் அனுப்பிய  செய்தி அட்டையை வாத்தியாரிடம் கொடுத்தாள்.  வாத்தியாரும் செய்தி அட்டையை ஆர்வத்துடன் படித்துப் பார்த்து, வாய்நிறயச் சிரித்துக் கொண்டே “நல்ல காலம் பொறந்துருச்சு! கவலைய விட்டுத் தள்ளுங்கோ. புள்ளையாண்டான் திரும்பி வந்ததும் காலா காலத்துல ஒரு கால்க்கட்டுப் போட்டு வுட்டுருங்கோ. 
    பேச்சி தன்னை விட ஐந்தாறு வயது குறைந்தவர் என்றும் பாராமல் அவரை கையெடுத்துக் கும்பிட்டபடி “ அய்யா ஒங்க வாய் முகூர்த்தம் பலிக்குணும்யா! எந்தம்பி, வூட்டுக்குத் திரும்பிப் போயி இப்ப என்னடா சொல்ற நாயீன்னு நாக்கப் புடுங்கற மாதிரி கேட்டுப்புடணும்.  கேட்டானே ஒரு கேள்வி, “சொந்த பந்தமெல்லாம் அப்புறந்தான்.  பொண்ணு யார் கொடுப்பான்னு” குண்டுபய கேட்டானே?  என்று பொருமித்தள்ளினாள்.  மேலும் வாத்தியாரிடம் சொன்னாள்,
     “இப்ப எம் புள்ள டெய்வரா இருக்கான்.  மாசம் ஆயிரம் கணக்குல சம்பாதிக்குதுன்னு சொல்லி, இந்த பணத்தையும் கடுதாசியையும் அவ முகத்துல  வீசி அடிச்சிட்டு எம் மருமவள வீட்டுக்கு கூட்டியாரணும்”  என்று பதைபதைத்தாள்.  வாத்தியார் சந்தோஷமாகத் தலையாடிட்டிக் கொண்டு போய்; விட்டுப்போன கல்யாணப்பேச்சைத் தொடர்ந்து முடித்தார்கள்.  வரும் தையில் திருமணம் என்று முடிவானது.  பேச்சி அளவில்லாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.  இந்த நல்ல செய்தியை, மூக்கனிடத்து சொல்ல ஆர்வப்பட்டாள்.  ஆனால் நிறைவேறவில்லை.  மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சேட்டடிடம் சென்று தாலிக்கொடியை மீட்டுவந்தாள்.  குறைந்த விலையில் தனக்குப் புடவை ஒன்றையும், சற்று அதிக விலையில் தன் வருங்கால மருமகளுக்குப் புடவை ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.  நல்லவர்கள், பெரியவர்கள், படிக்கத் தெரிந்தவர்கள்  என்று பெருமையடித்துக் கொண்டாள். 
     மூக்கனோடு முன்பு பழகிய அந்த துஷ்ட தடிப்பயலுகளுக்கு மட்டும், கடிதத்தைக் காட்டவில்ல.  தெருவில் அவர்களைக் கண்டவுடன், மனதிற்குள்ளாக, இதுகளுக்கு சாவு வரமாட்டேங்குதே?  மூக்கனை, இதுகளுக்கிட்டடேயிருந்து அய்யனாரு தான் பிரிச்சுவிட்டுப்புட்டாரு.  மூக்கனை, துஷ்டர்களுக்கிட்ட இருந்து காப்பாற்ற வேண்டும், என்று புலம்பிக் கொண்டாள். வெயில் ஏறிடுச்சு.  கூலிக்கு நாத்து நடப் போகமுடியாது.  மருமகளுக்காக எடுத்த புடவை, இனிப்புப் பொட்டலம், மல்லிகைப் பூப்பந்து இவற்றையெல்லாம் கொடுத்து, தம்பியோடும் தம்பியின் மனைவியோடும் கல்யாணத்தை எப்படி நடத்துவதென, உரிமையோடு  விவாதம் செய்தாள்.  தன் மகன் மூக்கனுக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு, கோவம் எப்போ வரும், குணம் எப்போ வரும் என்றெல்லாம் மருமகளிடம் விரிவாக விளக்கிப் பேசி, மோர் மட்டும் குடித்துவிட்டு, வீட்ட நோக்கி விரைந்தாள்.  “கீத்து மேய்ப்பவன் ஆள் இல்லேன்னா போய்விடுவான்.  அப்புறம் அவனகையில் பிடிக்கிறது கஷ்டம், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.  பேச்சிக்கு திடீரென மயக்கமாக வந்தது.  கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.  மெலிந்த உடல் லேசாக ஒரு சுழட்டு சுழட்டி எடுத்து, கீழே விழுந்தாள்.   அவ்வாறு விழுந்ததும், பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து, பேச்சியைத் தூக்கினார்கள்.  சோடாவை வாங்கித் தெளித்தார்கள், பலனில்லை. பேச்சியின் தூய ஆத்மா வானுலகத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டு ஓரிரு நிமிடங்கள் ஆனது. 
     பேச்சியை குடிசையினுள் படுக்கவைத்தார்கள்.  பேச்சியின் தம்பி மாமன் முறை பங்களாளிகள்  ஒன்று கூடினர்.  பெண்கள் கூட்டம் மாறி மாறி அழுத வண்ணம் இருந்தனர்.  லாரி ஓட்டி வடக்குதிசை போன மூக்கனை எங்கிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொண்டுவந்து  விடவேண்டுமென முடிவெடுத்து வாத்தியாரின் உதவியை நாடினார்கள்.  வாத்தியாரும் மூக்கன், லாரி ஓட்டும் டவுனுக்குத் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் விரைந்தார். துக்கம் விசாரிக்க வந்த கிழவர்களும், கிழவிகளும், குழு குழுவாக பிரிந்து நின்று பேச்சியின் பெருமையை  பேச ஆரம்பித்தார்கள். 
     “கெய்விக்கு நல்ல சாவு.  கீழே கெடக்கல, மேலே கெடக்கல.  நீ பார்த்தேன் , நான் பார்த்தேன் என்ற சொல்லுக்கு இடமில்லாமல், பட்டுன்னு போயிடுச்சு”.
     “என்ன ஒரு கொற ஒத்த புள்ளக்கி கண்ணாலம் பண்ணி பேர புள்ளய பார்க்க கொடுத்து வக்கில.”
     “புள்ள மேல அம்புட்டு பாசம் வச்ச மவராசி, புள்ள திருந்தி ஒழுங்கா வரப்போ போயிடுச்சு”.
         “வேல வெட்டி அல்லாத மவங்காரனுக்கு வாரத்துக்கு மூணு தடவயாச்சும் மீனு கோழி காச்சி ஊத்துவா”
       “மவங்காரன் குடிக்கிறத கண்டாலும் பெரிசா ஒண்ணும் கண்டுக்கமாட்டா”.
     “வெளக்கு வெச்சுட்டா போதும், மவங்காரன் எங்க குடிச்சிட்டு உளுந்து கெடக்கறானோ, தொளாவிட்டு வந்து ஆள புடிச்சி குடிசையிலே கொண்டாந்து போடுவா”. 
     “ஒம்புள்ளக்கி நீதான் செல்லம் கொடுக்கறன்னு யாராச்சும் சொல்லிட்டா போதும், லப்புன்னு சொன்னவங்ககிட்ட சண்டைக்கி போயிடுவா”.
     “அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்த எம்புருசன் வுட்டுப்போன ஒரே சொத்து, மூக்கன்தான்.  எனக்கு மட்டும் ஆசயில்லையா?  மூக்கன ஊரப்போல, நாட்டப்போல ஆக்கணும்னு, பேர் ஆச இல்லையா என்னா?  கிரகம் சரியில்லை.  பொங்கு சனி, மங்கு சனி, ராகு கேது ஒன்னா வந்து எம்புள்ளய தாக்குது.  இன்னும் ஆறு மாசம் போவனு முன்னு குறிகாரர் சொன்னான்னு, அடிக்கடி கெய்வி சொல்லித் தீர்ப்பாளே.”
     “மூக்கன் தண்ணியப் போட்டு வந்து சில நேரத்துல கெய்விய நாராசமாகத்திட்டுவான்.  எப்போதாவது அடிக்கவும் செய்வான்.  கெய்வி, குடிசய விட்டு வராதே.  ஊரு சனம் போய் என்னான்னு கேட்டாக்கூட, இல்ல சும்மா தண்ணி போட்டு மூக்கன் கத்தறான்னு வந்தவங்கள விரட்டி அடிப்பாளே!”
     “புள்ள நல்லா இருக்கணும், புள்ள இருக்கணும்ன்னு, கெய்வி போகாத கோவில் இல்ல.  குளம் இல்ல.   பார்க்காத ஜோசியம் இல்ல.”
     “மூக்கன் வூடு தங்காம, அவன் கூப்டான், இவன் கூப்டான்னு ஊரு சுத்தரப்போ கெய்வி புள்ளவரும்னு ராத்திரி முழுக்க வெளக்க கொளுத்தி வச்சிருப்பாளே”.
     “ஒரு நாள் தீபாவளியன்னிக்கு திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு வெளக்குப் போடப் போறேன்னு சொல்லி, கெய்வி கடன வாங்கிக் கொடுத்த பணத்துல அடுத்த நிமிசமே தண்ணிபோட்டு வந்து ஊர ரெண்டு பண்ணிவிட்டான்.  வயத்தெரிச்சலோடு  கெய்வி வீதிக்கு வந்து நின்னு அவன் பண்ற எல்லாத் தப்பயும் சொல்லி சாபம் இட்டா பாரு  எப்படித் தெரியுமா?”
     “ஆமா எப்பிடி திடீர்னு மூக்கன் திருந்துனான்?  எப்பிடி ஒழுங்கா  லாரி ஓட்டி பொழக்க ஆரம்பிச்சான்  பெரிய அதிசயமா இருக்கே?”
     “ஓ அந்த கதய கேக்குறயா?  கெய்விட்ட ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து ஒம்புள்ளக்கி ஒரு கண்ணாலம் காட்சி செஞ்சா சரியாப் போவும்.  வர்றவ எல்லாத்தையும் சரி பண்ணிடுவா! அதான் சரின்னு தன் தம்பி கோமனிடம், சென்று பெண் கேட்டாள்.  அவனுக்கு வந்துச்சு பாரு கோவம்.  வேல வெட்டி இல்லாத பயலுக்கு, எப்படித் தரமுடியும்? என்று நியாயத்த சொல்லி வெரட்டிப் புட்டான்.  கெய்வி  அழுதுகிட்டே, ரெண்டு நாளா சரியா சாப்புடாம இருந்திச்சு.    மனசு ஒடிஞ்சி போயி தூக்கு மாட்டிக்கப் போனப்ப எதேச்சயா மவங்காரன் மூக்கன் உள்ளே வந்து காப்பாத்துன்னாம்.  மூக்கனுக்கு கோவம் தீருல.  அருவாள எடுத்துட்டு மாமாங்காரன வெட்டிப்புட்டு வர்றேன்னு, கௌம்புனாம் பாருங்க அவன ஊரு சனமும் வாத்தியாரும் தடுத்து நிறுத்தினாங்க. 
    இதுதான் சமயம்னு வந்த சனமெல்லாம் மூக்கன ஒரு பிடி பிடிச்சது.  பொண்ண பெத்தவன் கேட்டதுல என்ன தப்பு?  ஒனக்கு ஒரு தங்கச்சி இருந்தா வேல வெட்டி இல்லாத தடுமாடுக்கு  கட்டிக் கொடுப்பியா?  ரோசம் வருதில்ல.  சரி போனதெல்லாம் போவட்டும்.  இனிமேயாச்சும் வேல வெட்டிக்குப் போ.  ஊருக்காரங்களோட வுட்டுப்போன சம்மந்தத்த பேசி முடிக்கிறோம்னு சொல்லி ஏற்கனவே டிராக்டர் ஓட்ட அரைகுறையாத் தெரியும், லாரி ஓட்ட லைசென்சு வேணுமின்னான்.  வாத்தியாரே பணத்த கடன் கொடுக்க முன் வந்தாரு.  அவரே  ஒரு லாரி சொந்தக்காருகிட்டே மூக்கனகொண்டு போய் சேத்து நல்லது செஞ்சு வுட்டுருக்காரு.  பாவம்! வெண்ணெய் திரண்டுவரும் போது, சட்டி ஒடஞ்ச கதயா, கெய்வி போயிருச்சு”  என்று பெரு மூச்சு விட்டார். 
     வாத்தியார் மோட்டார் சைக்கிளில் வந்தார்.  பின்னால் ஒரு அட்டப்பெட்டி நிறைய ஐஸ்கட்டியை வைத்துக் கொண்டு வந்தார். உறவினர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, “மூக்கன புடுச்சாச்சா?  எப்ப வருவான்?  என்றனர். வாத்தியார் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  மூக்கன் முந்தா நேத்துதான் லாரி செட்டுக்குப் போன் பண்ணினானாம்.  குல்பாக்கம் பக்கம் தொவர மூட்டை ஏத்திட்டு இன்னிக்கு நைட்டு மதுர வந்து சேந்துருவானாம்.  அதுக்குப் பொறவு எந்த போன் தகவலும் அவங்கிட்டேயிருந்து கிடைக்கலயாம்.  லாரி சங்கத்து ஆபீஸ் மூலமா எல்லா செக் போஸ்ட்லயும் சொல்லி ஆள கண்டுபிடிச்சுடலாம்னு லாரி ஓனர் சொன்னாரு.”  என்று நிறுத்தினார்.  அனைவரின் முகமும் சுருங்கிப் போனது.  ஒருவர், “அய்யோ கொடுமதான் அந்தப் புள்ள பஞ்சமா பாதகமா பண்ணுச்சா?  பெத்தவ செத்த விசயம் கூட தெரியாம போச்சே?  என்றார் வர்த்தியார் தந்த ஐஸ்கட்டியை எதிர் வீட்டில் ஓசி வாங்கப்பட்ட மரப் பெஞ்சில் பரப்பினார்கள்.  அதன் மேல் பேச்சியை படுக்க  வைத்தார்கள்.  அர மணிக்கு ஒரு தரம் வாத்தியார் லாரி அதிபரைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டாhர். பலனில்லை.  அப்பொழுது பேச்சியப் பற்றி அதிகம் பேச்சில்லை.  மூக்கனைப் பற்றியே முணுமுணுத்தார்கள். 
     “வடக்கே லாரி ஓட்டிடடுப் போனவனாம்.  ஏங்கே இருக்கானும்னு தகவலில்லை.  தெய்வம் ரொம்பவெ சோதிக்குது.” என்ற அனுதாபம் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். 
    இரவு மெல்ல மெல்ல நகர்ந்து. அதிக வெளிச்சத்த கொண்டு வந்தது. மூக்கன் கிடைத்தபாடில்லை… கால… மதியம்… மாலை… இரவு என வரத் தொடங்கியது. 
     மூக்கனின் தாய் மாமனிடம் பெரியவர்கள் கூட்டம் முறையிடத் தொடங்கியது.  “கெய்வி ஞாயித்துக் கெழம காலைல உசுர வுட்டுருக்கு.  இன்னிக்கு செவ்வாய் பகல் பொழுதாச்சு  3வது நாள் கணக்கு வருது.  இப்பவே உடம்பு ரொம்ப ஊதிப்போச்சு.  லேசா வாடை வீசவும் ஆரம்பிச்சிருச்சு.  சாந்ய்தரத்துக்கு மேல வச்சிருக்க வேணாம்.  மாமன் மச்சான் பங்காளிக எல்லாம் கலந்து பேசி முடிவெடுத்து ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கப்பா என்றார் ஒருவர்.”
     பேச்சியின் குடிசை வீட்டைச் சுற்றி கழுகு ஒன்று மூன்று முறை வட்டமடித்து வேறு சென்று விட்டது. ஊரார் “இனியும் தாமதிக்க வேண்டாம்” என்றனர். மூக்கன் மாலப் பொழுதுக்குள் வருவானான்னு பார்ப்போம்!  பிறகு கடவுள் வுட்ட வழி” என்றும் சொன்னார்கள்.
     மாலை நேரம் வந்தது.  பேச்சிக்கு இறுதிச்சடங்குத் தொடங்கும் முன்பு தொலைபேசியில் லாரி அதிபரோடு தொடர்பு கொண்டார் வாத்தியார்,  பலனில்லை.  பேச்சிக்கு எல்லா விதமான இறுதிச் சடங்கும் செய்யப்பட்டது.  மூக்கன் அங்கு இல்லாத பெருங்குறையைத் தவிர பேச்சியின் தம்பி சோமன் சிதைக்கு கொள்ளி வைக்கத் தயார் படுத்தப்படட்டார். இறுதி ஊர்வலம் தொடங்கியது  மூக்கனைக் காணவில்லை.
     வாத்தியார் வீடு இரவு பத்து மணி. தொலைபேசி மணி அழைத்தது.  வாத்தியார் எடுத்தார்.  எதிர் முனையில் சாட்சாத் பேச்சியின் மகன் மூக்கனேதான்.
     வாத்தியார் “அட அய்யா எந்த தேசத்துலய்யா இருக்க? நீ அனுப்புன பணம் பத்ரமா வந்துச்சு.  அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.  மறுநா ஞாயித்துக் கெழம காலயில நெஞ்சு வலியிலே இறந்து போச்சு.  ஒன்னையத் தேடி தேடிப் பாத்துப்புட்டு இப்பதான் இன்னிக்கு இன்னிக்குத்தான் மயானக்கரைக்குக் கொண்டு எரி வைக்ச்சுட்டு வர்றோம்.  எங்க எல்லாத்தயும் மன்னிச்சுடுறா.  சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு. நீ உடனே உருக்கு கிளம்பி வா”  என்றார்.  மூக்கன் தொலைபேசியில் விம்மி சில நொடிகள் அழுதான் பின்.
     “ஞாயித்துக் கெழம அன்னிக்கு குல்பாக்காவைத் தாண்டி வர்றப்போ டயர் வேற பஞ்சரா போச்சு.  சரி பண்ணி எடுத்து நைட்டுதான் கிளம்புனோம்.  அடுத்த நாள் வனந்தா காட்டுல வண்டி பிரேக் டவுன் ஆச்சு.  சரி பண்ணி காலயில தான் ஓட்டிவர்றேன.;  ரெண்டு முணு நாளா சகுனமே சரியில்லிங்கய்யா.  இப்பதான் திருச்சிய தாண்டியிருக்கிறோம்.  வேற டிரைவருட்ட வண்டிய ஒப்படைச்சுட்டு மூணு மணி நேரத்துல் ஊரு வந்து சேருவேன் என்றான்.  “பொறுமையா பத்திரமா துணையோடு ஊருக்கு வா” என்று சொன்னார் வாத்தியார். 
     வாத்தியாரரும் உறவினர்களும் சூழ நள்ளிரவில் அழுதபடி வந்த மூக்கனை மயானக்கரைக்கு அழைத்துச் சென்றனர்.  மூக்கன் தேம்பி தேம்பி சொல்லி சொல்லி அழுதான்.   தான் செய்த கொடுமகளையெல்லாம் நினைவு கூர்ந்து மண்ணில் புரண்டு புரண்டு அழுது தாயின் சிதையைத் தொழுதான்.  ஒருவர் மூக்கனுக்கு மொட்டையடித்தார்.  மாதக்கணக்காக வளாந்;;திருந்த தாடி மீசையை மழித்தார்.  விடியத் தொடங்கியது.  காக்கி சட்டயை கக்கத்தில் வைத்துக் கொண்டு மொட்டைத்தலையாய் காக்கி பேண்டுடன் இருந்த மூக்கனை உற்றுப் பார்ததுவிட்டு மூக்கன் மனுசனாயிட்டான்!  அம்மா தெய்வமாயிட்டா!  பாவம்   என்றார் ஒரு வயதான பெண்.  அவனுக்கு நல்ல நேரம் வரும்பொது அம்மாவுக்கு கொடுத்து வைக்கல” என்றனர் தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
    “பேச்சி மட்டும் இப்ப உயிரோட இருந்தால், “எந்தங்கப்புள்ள மூக்கன் லரி ஓட்டிக்களைச்சுப் போய் குனிஞ்ச தலை நிமிராம வருது பார் என்பாளே” என்று நினைவு கூர்ந்தாள் இன்னொரு பெண் மீண்டும் மாமனின் சம்மதத்தோடு வாத்தியார் தலைமையில் மூக்கனுக்கு திருமணம் நடந்தேறியது.

கனிமொழி கவிதைகளில் வாழ்வியல் சிக்கல்கள்

முனைவர் பூ. மு. அன்புசிவா

ஒரு நாட்டு மொழி வரலாறு பரந்துபட்ட ஒன்று. அதில் பல்வேறு இலக்கியக் கலைக்களங்கள். சங்ககால முதலான தமிழிலக்கிய வரலாற்றில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பல புது இலக்கியங்கள் தோன்றியுள்ளதைக் காணலாம். ‘புதுக்கவிதை ஒரு வடிவம்’ எனலாம். ஏனென்றால் கவிஞர்கள் சமுதாயப் போக்கில் மக்களோடு பழகும்பொழுது அவர்களின் எண்ணங்கள் காலச் சூழலுக்கு ஏற்பப் பின்னோக்குப் பார்வையாக வீசும் என்பதில் எந்தவிதமான மாற்றமுமில்லை. கால ஓட்டத்தில் இலக்கியத்திற்காக கவிதைத்துறையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் காணலாம்.

    நாகரிகம் வளர வளர மக்கள் சிறு சிறு கூட்டமாக இருந்து பெரிய சமுதாயமாக வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். கால ஓட்டத்தில் சிறு நாடுகள் பலவும் ஒரு குடும்பத்தின் உறுப்புகள் போல் உலகம் பெருஞ்சமுதாய அமைப்பாக உருக்கொள்ளும்.

    மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும்இ சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக் களத்தில் இறங்குவர். எத்தகைய போராட்டமாயினும். புரட்சித்தன்மையில் வெடிப்பனவே சீர்திருத்தங்கள் தோன்றியதை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கவிஞர்கள் இப்போராட்ட உணர்வடைய மக்களின் எழுச்சியைப் பாடும்பொழுதுஇ தற்காலச் சமூக அறிவியல் போக்குகளிலிருந்து திரண்டெழும் அனுபவ மூலங்களைக் கவிதை ஆக்குவர் மேலும் மக்களையும்இ மக்கள் சார்ந்த நிகழ்வுகளையும் கனிமொழி கவிதைகளில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

கனிமொழி

    கவிஞர் கனிமொழி வாழ்வின் மகத்தான உணர்வினை தன் முழுமைக்கும் உணர்ந்துகொண்ட தருணத்தில் முகிழ்த்தது. மற்றவர்கள் பேசாததையும்இ காணாததையும் காட்ட விழையும் கவிஞர்களுள் கனிமொழி குறிப்பிடத்தக்கவர். தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரையில் பெண்ணியம் பேசுவதில் முதன்மைப்படுகிறார்.

    தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதிக்கும்இ பாரதிதாசனுக்கும் பிறகு சுயமான பெண் விழிப்பை உணர்த்தியக் கவிஞராக விளங்குகிறார். பழைய சமூக அமைப்பில் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டது போலவேஇ பெண்கள் பின்புத்தி உள்ளவர்கள் என ஒதுக்கிய காலம் மாறி இன்று எல்லாமே பெண்கள் என ஆனபோது போராட்டங்கள் ஏராளம். இந்த வகையில் கனிமொழி கவிதைகளில் வாழ்வியலையும்இ அதன் சிக்கலையும் காணலாம்.

        “தினமும்

         உறங்கச் செல்கிறேன்

         இந்தக் கனவிலிருந்து

         விழித்துக் கொள்ளும் பயத்தோடு”

என்ற கவிதையின்மூலம் எதார்த்தங்களைத் தாண்டி வாழ்வை இருண்மை கொள்ளச் செய்கின்றன.

    மதம் மக்களின் மனங்களைப் பண்படுத்தாமல் உணர்வுக்கு வழிவகுத்துள்ளது. பரம்பொருள் ஒன்றேஇ மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனும் உயிர்த்தத்துவம் பண்பாட்டு உணர்வை வளர்க்கும்.

        “பீடத்தின்மீது

         அமர்ந்திருந்தவனுக்கு முன்னால்

         அவர்கள்

         அழைத்து வரப்பட்டார்கள்

         . . . . . . . . . . . . . . . . . . .

         சமூகம்

         சுழன்றது”

எனத் தொடங்கி முடியும் கவிதையில் வாழ்வின் சிக்கல்களையும் எதார்த்தமாக சொல்லப்படுகின்றன.

    மக்கள் மனம் பண்பட்டால்தான் தெய்வங்கள் பிழைக்கும். மக்களின் பகுத்தறிவே அவர்கள் வாழ்வை வளமாக்கும். காரண காரிய உலகில் தெய்வச் சிந்தனையும்இ பொது நலப் பாங்கும் வளரவேண்டும்.

        “தொழுவதற்கு

         மசூதியும் வேண்டா

         சர்ச்சும் வேண்டா

         கோவிலும் வேண்டா

         மனிதனைப் போற்றுங்கள்

         நீங்கள்

         மனிதராக வேண்டும்”

இந்தக் கவிதை மக்களை மதிக்கும் உயர்ந்த பண்பாட்டு உணர்வு கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    கனிமொழியின் கவிதைகள் எதார்த்தத் தளத்தில் இருக்கிற கவிதைகள் மிகைப்பட மொழிபடக் கூடும் அளவிற்கு இருப்பவை. இயல்பாகவும் தனித்தன்மையோடும் இருக்கக் கூடியவை என்பதை அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    உணர்வுகளைச் சொல்கையில்இ மிகைபடக் கூறுவதும் சொற்களில் வண்ணம் தோய்ப்பதும் கவிதைக்கு ஆகாதவை.

    கனிமொழியின் கவிதைகள் ஒருகாலும் எதார்த்தத்தை மீறிப் போய்விடலாகாது என்பதில் கவனம் கொண்டிருந்ததைக் காணமுடிகிறது. இவரின் நுண்ணிய உணர்வுகளை சித்தரிக்கும் கவிதைகளை கூர்மை கொண்டதாக அமைந்துள்ளன.

        “குடியேறப் போகும் முன்

         சீர் செய்யப்படும் வீடு போல

         வேலைகள்

         நடந்து கொண்டிருந்தன”

என்று தொடங்கும் அற்புதமான கவிதைகளைக் கனிமொழியின் தொகுப்புகளில் காண முடிகிறது.

    சமூக அமைப்பு காலத்திற்குக் காலம் மாற கவிஞனைப் பற்றிய கருத்தும் மாறும். தொன்மை மக்களிலிருந்து இன்றைய மக்கள் வரை கவிஞனை வெவ்வேறு பாத்திரங்களாகக் கண்டனர் மக்கள். இக்கருத்துக்கு ஒப்பக் காலத்தின் நிழலாய் விளங்கிக் கவிஞர்களும் மற்றுப் பிற படைப்பாளிகளும் சிறப்பதைக் காணலாம்.

        “நிற்காது ஓடிக்கொண்டு

         அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்

         என் அம்மாவைப் பற்றி

         எந்தக் கதைகளும் சொல்வதே இல்லை”

என்பதிலான கவிதைகளைக் காணும்போது வாழ்வில் சிக்கல்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதை எதார்த்தமாக காண வேண்டும் என்பதையே கவிஞர் கூறுகிறார்.

    வாழ்க்கையில் எழும் எத்தகைய போராட்டமும் ஒரு நிலையில் தனி ஒருவனின் ஓயாத உழைப்பாலும். சீரிய முயற்சியாலும் துன்பங்கள் நீங்கி இன்பம் காண வழிபிறக்கும்.

    பாரதியைப் பொறுத்தவரையில் விடுதலை என்பது பெண் விடுதலையைத்தான் முழுமூச்சாகக் கொண்டு பெண்களுக்கென்று போராடியதைக் காணமுடிகிறது. விடுதலை உணர்வை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.

    சில புதுக்கவிதைகள் அடிநாதமாக பிராய்டிசத்தையும்இ அதன் அம்சங்களையும் கொண்ட ஸர்ரியலிசம்இ எக்°சி°டென்சியலிசம் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

    இலக்கியம் வாழ்க்கையினைக் காட்டும் காலக்கண்ணாடி. மக்கள் வாழ்க்கையின் உயரிய குறிக்கோள்களும்இ சீரிய நோக்கங்களும்இ இலட்சியப் பார்வைகளும்இ உலகில் வாழ வேண்டிய நெறிமுறைகளும் ஒருங்கே காட்டவல்ல கோட்பாடுகள் பதிவேடு கவிஞர்கள் பாடும்பொழுது மக்களின் சிந்தனைகள் உணர்ச்சித் துடிப்புகளாக கனிமொழியின் கவிதைகள் இருப்பதைக் காணமுடிகின்றன.

        “சின்ன வயதில்

         செய்த தவறுகளுக்கெல்லாம்

         பூச்சாண்டியாய் உன்

         பெயரைத்தான் சொன்னாள்

         அம்மா”

என்ற கவிதையின் மூலம் அப்பா என்றால் எல்லோருக்கும் பயம் உண்டு. ஆனால் கனிமொழி கவிதைகள் எதார்த்தமாக சொல்லிச் செல்வதைக் காணமுடிகிறது.

        “உன் கால் செருப்பு

         ஓசையில்

         வீடு அமைதியானது”

என்ற வரிகளின் மூலமாக அனைவரின் வீட்டிலும் நிகழும் ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே பதியம் போட்டிருக்கிறார் கனிமொழி.

    சமயங்கள் அனைத்தும் மக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் பல்வேறு மார்க்கங்களின் வழி வேறு வேறானாலும் குறிக்கோள் ஒன்றே. மக்கள் அனைவரும் சென்று சேருமிடம் ஒன்றே.

        “எப்போதாவது

         பிடித்திருக்கிறது

         உனக்கும் எனக்குமான

         உலகத்தில்

         மற்றவர்களை”

என்பதிலான கவிதைகளை காணும்போது மனவலிஇ எதார்த்தம் பதிகிறது.


தொகுப்புரை

    கனிமொழி கவிதைகளில் எளிய சொற்கள் புதிய சுவையோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது விந்தை. இறைவன் அன்பே வடிவமான பரம்பொருள். மக்கள் மக்களோடு வாழவே வழி மதவெறி மாய்க்கும் சக்தியாக வெளிப்பாடு. இவைகளே இவரின் கோட்பாடாகும்.

    வாழ்க்கையின் ஆரம்பத்தையும்இ முடிவையும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் இடையில் சில ஆண்டுகள் மட்டும்தான் காரணமாகக் கொள்கிறார்கள். இக்கருத்தின் மூலம் மக்கள் வாழ்க்கையில் காலம் குறுகியது என்பது தெளிவாகிறது.

    மக்கள் தங்கள் மனங்களின் சக்தியைச் சுய இலாபம் தரும் காரியங்களைச் செய்யப் பயன்படுத்துவதால் போட்டியும்இ பொறாமையும் மிகுந்த அவழியின்மையையும்இ அழிவையும் ஏற்படுத்துவர். வாழ்க்கையில் மக்களின் பங்கு மற்றவர்களுக்குப் பயனுள்ள வாழ்க்கையாய் அமைந்தால் இலட்சிய வாழ்க்கையாய் அமையும். இல்லையெனில் பிறப்புஇ இறப்பு எனும் இவை தவிரக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் மக்கள் வாழ்க்கைச் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதே சுகம்.

    கனிமொழியின் கவிதைகள் வாழ்வில் சிக்கலை சிக்கலில்லாமல் சொல்வதே சிறப்பு.

என் அம்மாவுக்காக...

நேரில் தவி‌ர்க்க முடிந்த அவளை

எவ்வளவு முயன்றும்

நினைவில் முடியவில்லை...!


காதல் தொடங்காமலே

விழியிலிருந்து விலா எலும்பு வரை

வலிக்க வைத்தவளை 

எப்படி மறந்துபோவது..!

 

எனக்குள் நானே

புரியாமல் புரிந்துக்கொள்கிறேன்

உடலில் இன்னும் உயிர் இருக்கிறதென்று...!


உயிரை மட்டும் விலக்கி வைக்க

யாராலும் முடியாதுதான்

இருந்தாலும் முயற்சிக்கிறேன் நான்..!

 

உயிருக்கும் உடலுக்கும் இடையில்

ஒவ்வொறு நொடியும் 

யாருக்கும் தெரியாமல் மரணப்படுகிறேன்...!

 

எல்லா குழப்பத்திற்கு பிறகு

மௌனமாய் 

ஒரு முடிவு செய்றேன்..!

 

களையெடுத்துப் படிக்க வைக்கும்

என் அம்மாவுக்காக

காதல் வேண்டாம் என்று...!

தமிழ் இலக்கியத்தில் பொங்கல்

பொங்கல் திருநாள், தமிழகம் போற்றும் பொன்விழா! உலகம் முழுவதும் வாழும் ஒன்பது கோடித் தமிழ் மக்கள் அனைவரும் சாதி, சமயம், கட்சி, நாடு முதலிய வேறுபாடுகளை மறந்து கொண்டாடும் தமிழ் இனத் திருவிழா! உள்ளத்தில் உவகையும், எண்ணத்தில் எழுச்சியும், இதயத்தில் மலர்ச்சியும் ஊட்டும் இன்பத் திருவிழா! இதனால்தான், இவ்விழா தமிழரின் திருநாளாகப் போற்றப்படுகிறது; தமிழருடைய தேசியத் திருவிழாவாகப் பெருஞ்சிறப்புடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது!

பொங்கல் விழாவை ஏன் கொண்டாடுகிறோம்?

“மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த

மழைகுளிர் வாடையை வீழ்த்தி

விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம்!

வெளியெலாம் விளைவினைக் கண்டோம்!

பண்ணிடைக் கலந்த தமிழ்ச்சுவை போல

மனத்திடைப் பரந்ததே இன்பம்!

கண்ணிடை மகிழ்ச்சி; கருத்திடைத்

தெளிவு கண்டனம்! வாழ்த்துவோம் பொங்கல்!''

எனக் கவிஞர் வாணிதாசன் பொங்கல் விழா வினைக் கொண்டாடுவதற்குரிய காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அறுவடைத் திருநாள்

மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது தேவைப்படுவது உணவு. நம் நாட்டின் முதன்மையான உணவுப் பொருள் அரிசி. “வயிற்றுக்குச் சோறிட வேண்டும்! இங்கு வாழும் உயிர்களுக்கு எல்லாம்! என்று இக்காலக் கவிஞர் இதையே எடுத்துரைக்கின்றார். இதையே, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!'' என்று சங்க காலச் சான்றோர்கள் அறிவித்துள்ளனர்.

உணவுப் பொருள்களைப் பயிரிடும் தொழில் உழவுத் தொழில். உழவுத் தொழிலில் ஈடுபட்ட மக்கள் அயராது உழைத்த உழைப்பின் பயனைக் காணும் நாள் அறுவடைத் திருநாள்! அந்நாள் மக்களினத்தின் மகிழ்ச்சித் திருநாள்!

காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து, மனிதனின் உணவுப் பொருள்களைத் தேடி அல்லற்பட்ட காலம் ஒன்று உண்டு! மனிதன், அக்காலத்தில் காட்டுவாழ் நாகரிகமற்ற மனிதனாக இருந்தான்.

அக்காலத்தில் தன்னைத்தான் காத்துக் கொள்ள முயலுவதே முதன்மையான நோக்கமாக இருந்தது.

ஆனால், அவன் ஆற்றங்கரை ஓரங்களில் வாழக் கற்றபொழுது, நிலத்தை உழுது, பயிரிடும் கலையினைத் தெரிந்து கொண்டான். உணவுப் பொருள்களைத் தேடி அலைவதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களைத் தாமே உற்பத்தி செய்ய அவன் முனைந்தான்! அதனால், தேவைக்கு மிகுதியான உணவுப் பொருளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையையும் அவன் அறிந்தான். இதன் பயனாக ஓரளவிற்கு ஓய்வு பெறவும் முடிந்தது. ஓய்வு நேரத்தைப் பிறவற்றைப் பற்றிய சிந்தனையிலும், செயலிலும் பயன்படுத்த அவன் முயன்றான். அதன் விளைவாக எண்ணத் தெரிந்து, கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் முன்னேற்றம் கண்டான்! தன்னைப் பேணிக் காப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த மனிதன், தன்னுடைய உள்ள உணர்ச்சிகளை ஆளுமையைத் திருவிழாக் கொண்டாட்டங்களாகவும், ஆடல், பாடல் போன்ற கலைகளாகவும் வெளிப்படுத்த தொடங்கினான். இக்கால கட்டத்தில் தோன்றியதே உழவர் பலரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் உழவர்த் திருநாளாகிய அறுவடைத் திருநாள்!

உழவுத் தொழிலிற்குப் பேருதவி புரியும் இயற்கைச் சந்திரன், சூரியன், அச்சூரியனைத் தெய்வமாக மதித்துப் போற்றி, நன்றிக்கடனைத் தெரிவிக்கும் வழிபாட்டை இயற்கைத் தெய்வ வழிபாட்டை அவன் அறுவடைத் திருநாளில் சிறப்பு மிக்க செயலாக மேற்கொண்டான். ஹசூரிய வழிபாடு' உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முறையிலேயே தோன்றி வளர்ந்து உள்ளதைக் காணுகின்றோம். உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக ஆதியாக இருக்கின்ற கண்கண்ட தெய்வமான சூரியனையே, திருவள்ளுவர் ஹஆதிபகவான்' என்று போற்றியுள்ளார்.

மருதநிலை நாகரிகத்தின் தனிப்பெரும் விழா!

உலகம் முழுவதிலும் நாகரிகம் மலர்ச்சி அடைந்தது ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்த நகரங்களிலேயாகும். இந்த நிலப்பகுதியை நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் ஹமருதநிலம்' என்று போற்றியுள்ளனர். மருத நிலத்திலேயே தமிழருடைய நாகரிகம் உச்ச கட்டத்தை அடைந்தது. வேளாண்மைப் பொருளாதார அடிப்படையில் சங்க காலத் தமிழருடைய நாகரிகம் பெருவாழ்வு பெற்றது. அக்காலத் தமிழகத்தில் கலைமகளும் திருமகளும் கலை நடம் புரிந்தனர்.

சமுதாயத்தின் அடிப்படையாக முதுகு எலும்பாக உழவர் பெருங்குடி மக்களே விளங்கினர். அரசர்களுடைய வெற்றிக்கு மூலகாரணமாக விளங்குவது உழவுத் தொழிலினால் விளையும் பயனே என்பது நம் முன்னோரின் நம்பிக்கையாகும்.

“வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப்

பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!''

என்பது வெள்ளைக்குடி நாகனாரின் கருத்தாகும்.

இதையே திருவள்ளுவர். ஹஉழவு' எனும் தலைப் பில் பலவாறாக விரிந்துரைத்துள்ளார். இதனை,

“கழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை'' (குறள் 1031)

“உழுவார் உலத்தார்க்கு ஆணி'' (குறள் 1032)

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'' (குறள் 1033)

எனும் குறட்பாக்களைப் போன்று உழவுத் தொழில் சிறப்பையும், உழவர் தம் மாட்சியையும் உலகில் வேறெந்தப் புலவரும் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கவில்லை.

“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172)

எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

ஹபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' இலட்சியத் தினை வெளிப்படுத்தும் திருவிழாவாகச் சங்க காலத்தில் பொங்கல் விழா சிறப்புற்று விளங்கியது. தங்கள் உழைப்பின் பயனை, அறுவடை செய்து உழவர்கள் வீட்டில் கொண்டு வந்து குவித்தனர்.

புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக அக்காலத்தில் ஹபொங்கல் திருநாள்' பொலிவுற்றது. இதனை முந்துவிளையனார் “நாள் புதிது உண்ணும்'' திருநாளாகவே அக்கால அறிஞர்கள் போற்றி உள்ளனர்.

கூடல் மாநகரில், புலவர் பெருமக்கள் பலர் கூடிப் புதிய இலக்கியப் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்ததைப் புலவர் ஒருவர், உழவர் பெருமக்கள் கொண்டாடும் “புதிதுண்ணும் திருவிழாவாக'' உருவகப்படுத்தியுள்ளமை இக்கருத்தைத் தெளிவுறுத்துகிறது

.“செதுமொழி சீத்த செவி செறுவாக

முதுமொழி நீராப் புலனாவுழவா

புதுமொழி கூட்டுண்ணும் புரசைசூழ் நல்லுர்''

(கலித். 68)

இவ்வாறு சங்க காலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,

“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69)

எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.

உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத தேவை மழை! இதன் சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவர், கடவுளைப் போற்றும் அதிகாரத்திற்கு அடுத்து, மழையின் சிறப்பைக் கூறும் பகுதியை அமைத்துள்ளார். “வான்மழையால் தான் வையகத்தில் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. மழை பெய்யாமல் போகுமானால், உலகைப் பசி துன்புறுத்தும்; மழை வளம் குன்றுமானால், உழவர்கள் உழவுத் தொழிலைச் செய்ய மாட்டார்கள்'' என்று பலவாறாக மழையின் சிறப்பினைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். இதனை நன்குணர்ந்த முத்தமிழ் வித்தகரான இளங் கோவடிகள்,

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்''

என்பதனோடு அமையாது.

“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''

தயடடமையவவரஎன்று மழையையும் வாழ்த்திப் போற்றியுள்ளார்.

பொங்கலிடும் முறை

“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!'' என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும். ஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை இரண்டே அடிகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

“மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' (சீவக. சிந். 1821)

இதனால், செந்தீ மூட்டிப் புதப்பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்க லாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்.

சமயங்கள் போற்றும் ஹசங்கராந்தி'

சங்க காலத்தில் சமயச் சார்பற்ற நிலையில் “பொங்கல் விழா'' வினைக் கொண்டாடும் பழக்கம் தொடங்கியது. பல்லவர் ஆட்சிக் காலத்தையொட்டி, அது இந்திய சமயங்கள் பலவற்றாலும் போற்றப்படும் திருவிழாவாக மாற்றம் அடைந்தது.

சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியினால், பக்தி இயக்கம் தமிழகத்தின் பல புதிய சாதனைகளைச் செய்யலாயிற்று. சூரியனை ஹஉலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு' என்று சைவர்கள் போற்றினர். வைணவர்கள் திருமாலிடம் கதிரவனைக் கண்டனர்.

“கடி மலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ?

கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனே? (நாலா. பிரப. 926)

இரு சமயத்தினரும் போற்றிய சூரியனை மையமாகக் கொண்டு, இரு சமயவாதியரையும் இணைக்கும் பாலமாக ஹசங்கர நாராயண' வழிபாடு ஒன்று தோன்றியது. அவ்வழிபாட்டிற்குரிய திருநாளாகத்தை மாதத்தின் முதல் நாளைத் தேர்ந்து எடுத்தனர். வராகமிகிரர் போன்ற இந்திய வானூல் அறிஞர்களின் காலத்தில், சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வடபகுதி, சூரியனுக்கு நேராகவும் நெருக்கமாகவும் இயங்கும் நிலை, தை மாதத்திலேயே தொடங்கியது. இதனைச் சூரியனு டைய ஹவடதிசைப் பயணம்' (உத்தராயணம்) எனப் புராணங்கள் கூறும் இந்நாளைப் புனிதமான திருநாளாகச் ஹசங்கராந்தி' எனும் பெயரால் வைதீக சமயத்தினர் கொண்டாடத் தொடங்கி இளந் தமிழகத்தின் சைவ, வைணவ சமயங்களும் ஹசங்க ராந்தித் திருநாளைப்' பெருவிழாவாகப் போற்றின.

கல்காட்டும் சங்கராந்தி

சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.

பேரரசன் இராச ராச சோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அவள் வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராசராசன் தந்தையான சுந்தர சோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளாள். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டு வதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டுவந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை மாநிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அவள் அளித்துள்ளாள்.

இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது. கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.

உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். ஹஉரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான்.

சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் ஹஉத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், ஹபொங்கல் சோறு' எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் ஹபொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

ஹஉத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் ஹசங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல் வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங் கல் விழா, ஹஉத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரை யில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்.

வெளிநாட்டவர் கருத்தைக் கவர்ந்த பொங்கல்விழா

(கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போர்ச்சுக் கீசியர் இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்'' (ஆயnநெசள யனெ ஊரளவழஅள ழக வாந ர்iனெழழச) எனும் நூலினை எழுதியுள்ளார்.

அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் ஹபொங்கல் விழாவினை' நன்கு சித்திரித்துள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும், சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் விழாவை, நான்கு நாள்கள் கோலாகல மாக நம் மக்கள் கொண்டாடினர். இன்று பெரிதும் ஹஇருநாள் விழா'வாக மாறிவிட்டது. ஆனால், அப்பே டூபாய் வந்த காலத்தில், நான்கு நாள்கள் பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாள்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் செய்யப்பட்ட தாம். வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுப்ட்டனராம்.

தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் பொங்கல் விழாவின் தொடக்க நாள் அன்று, விடியற்காலையில் வீட்டு முற்றத்தில் தீயிலிட்டுக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை, “சொக்கப்பனை'' கொளுத்தி விழா வினைத் தொடங்கினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியால், தமிழருடைய ஹதுப்புரவு மனப்பான்மை' வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் சுட்டத் தவறவில்லை. மறுநாள், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் ஹமஞ்சு விரட்டு' போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அவர் கண்ணோட்டப்படி ஏழை எளிய மக்களின் பெருந்திருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்கியமை இனிது புலனாகின்றது

தேசியத் திருவிழா

இந்நூற்றாண்டின் முற்பகுதியில், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கா.நமசிவாய முதலியாய் விளங்கினார். தமிழ் மக்கள் இடையே ஹபல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்' தோன்றி, அவர்களை ஒற்றுமை அற்றவர்களாகவும், பண்பாட்டு பாரம்பரியத்தைப் புறக்கணிப்பவர்களாகவும் செய்து வருவதைக் கண்டு உள்ளம் புழுங்கினார்.

சாதியாலும், சமயத்தாலும், மூட நம்பிக்கைகளாலும் பிளவு பட்டு விளங்கும் தமிழ்ச் சமுதாயத்தை ஒன்று படுத்துவதற்கு வழிவகை ஒன்றை அவர் கண்டார். அதுதான் “பொங்கல் திருவிழா'' சமயச் சார்பற்ற முறையில் தமிழரின் தேசியத் திருவிழாவாக அதை மாற்றி அமைக்க அவர் முயன்றார்.

மாமழை போற்றும் திருநாளான பொங்கல் நன்னாளை, ஞாயிறு போற்றும் பொங்கல் திருநாளை சமயவாதிகளால் ஹசங்கராந்தியாக'க் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை நாகரிகக் கோரிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக நகரத்து மக்களால் கருதப்பட்ட பொங்கல் விழாவை, உழவர் திருநாளாக, பாட்டாளி மக்கள் பழங்கணக்கைப் பார்க்கும் பொங்கல் திருநாளாக, அறிஞர்கள் போற்றும் அறிவுத் திருநாளாக, கலைஞர் போற்றும் கலைவிழாவாக, தமிழரிடையே மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் தமிழர் திருநாளாக, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக மாற்றியமைத்த பெருமை பேராசிரியர் நமசிவாயரையே சாரும்.

ஐரோப்பிய நாகரிக மோகத்தில் மூழ்கிக் கிடந்த மேட்டுக்குடி மக்களுடைய கருத்தைக் கவரும் வகையில், பொங்கல் திருவிழாவிற்கு வலிவையும் வனப்பையும், பொலிவையும் பொன்றாப் புகழையும் தேடித் தந்தவர் நமசிவாயர் என்பதை நம் நாட்டு வரலாறு பறைசாற்றும்.

சென்னை நகரில் 1934, 1935-ஆம் ஆண்டுகளில் தமிழரின் தேசியத் திருநாளைச் சீரோடும், சிறப்போடும் பேராசிரியர் ஹமுப்பெருநாள் விழாவாகக்' கொண்டாடினார். முதல் நாள் உழவர் திருநாளாகவும். இரண்டாவது நாள் புலவர் திருநாளாகவும். மூன்றாம் நாள் கலைஞர் திருநாளாகவும். அவர் 1936 இல் எதிர்பாரா வகையில் திடுமென இயற்கை எய்தினார். ஆயினும், அதற்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் புலவர் பெருமக்களால், ஹதமிழ்த் தேசியத் திருநாளாக' கொண்டாடும் வழக்கம் பரவி விட்டது.

மறுமலர்ச்சி இயக்கமும் தமிழர் திருநாளும்

தமிழகத்தின் தன்மான இயக்கமும், அதில் இருந்து கிளைத்த திராவிட இயக்கமும் தமிழரின் தேசியத் திருநாளை, இந்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் புதியதோர் ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடப்படும். தேசியத் திருவிழாவாகப் பெருவாழ்வு பெறுமாறு செய்தன. 1945 அளவில், ஒருவர் மற்றொருவருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் ஹபொங்கல் வாழ்த்து' முறையை இம்மறுமலர்ச்சி இயக்கமே வழக்கத்திற்குக் கொண்டு வந்தது.

பேரறிஞர் அண்ணா 1946-இல் “தமிழகத்தின் மே தின விழாவே பொங்கல் விழா'' என்பதை அறிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கலைஞர்களும் ஒன்றுகூடித் தமிழ்த் தாய்க்கு எடுக்கும் ஹதமிழ்த் திருவிழாவாக' ஹதமிழ்க் கலை விழா'வாகப் பொங்கல் விழாவை மாற்றிய சிறப்பும் பெருமையும் காஞ்சித் தலைவருக்கே உரியதாகும். பாவேந்தர் பொங்கல் திருநாளை,

“உழவேதலை என்றுணர்ந்த தமிழர்

விழாவே இப் பொங்கல் விழாவாகும்''

எனவும்

“பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;

பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வின்

புத்தாண்டு தைம்முதல் நாள் பொங்கல் நன்னாள்!''

எனவும் பொங்கல் நன்னாளிற்குப் பொலி வூட்டினார்.

திருவள்ளுவர் திருநாள்

தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப் பெருந்தலைவரான அறிஞர் அண்ணாவின் தம்பியர், தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலுக்குரிய விழா நாளினைத் “திருவள்ளுவர் திருநாளாக'' கொண்டாட முன்வந்தனர். இது பொங்கல் திருநாளின் வரலாற்றிலே உண்டான மாபெரும் திருப்பு மையமாகும்.

நம் நாட்டில் அறிவியல் வளர்ச்சியுற்று வருகிறது. தொழில் புரட்சி தோன்றியுள்ளது. பலதுறை அறிவு பெருகிக் கொண்டே போகிறது. இந்நிலையில், உழவுத் தொழிலுக்கு மாட்டைப் பயன்படுத்துவதும் குறைந்து கொண்டே வருகிறது. வருங்காலத்தில் மாடுகளின் உதவி இல்லாமல் உழவுத் தொழில் செய்யப்படும் ஒருநாள், நம் நாட்டிலும் தோன்றக்கூடும். இக் காலத்திலேயே நகரங்களில் வாழ்வோர் பெரும்பாலும் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவதே இல்லை!

கிராமங்களில் வாழ்பவரே, உழவுத் தொழில் செய்பவரே, அன்று பொங்கல் இட்டு மாடுகளுக்குப் படைத்து விழா எடுக்கின்றனர். காலப் போக்கில் இவ்விழா மருவிப் போவதற்குரிய அறிகுறிகள் தோன்றியுள்ளன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்ட தமிழக அரசு, தொலை நோக்குடன், மாட்டுப் பொங்கலைத் திருவள்ளுவர் திருநாள் என்று அறிவித்து, பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்று, தமிழக அரசு குறள் நெறியை நாட்டில் பரப்பும் நற்பணியை நல்ல முறையில் செய்து வருகிறது

அறிஞர்களுக்கும், முத்தமிழை வளர்த்து வரும் சான்றோர்களுக்கும் பட்டங்களுக்கும், பரிசுகளையும் அளித்துப் பாராட்டு செய்து வருகிறது. இந்தப் பணி போற்றி ஆதரிக்கத் தக்க அரும்பணியாகும்

இவ்வாறு, பொங்கல் திருவிழாவிற்கு அடுத்த நாளை, திருவள்ளுவர் திருநாளாக அமைந்தமை பலவகையில் பொருத்தமான செயலாகும். பொங்கலுக்கு மறுநாள் வருவதால், இந்நாளை எளிதில் மக்கள் நினைவில் கொண்டு போற்றிக் கொண்டாடுவதற்குப் பெருவாய்ப்பு அளிக்கப் பட்டு வருகிறது.

மனித குலத்தின் துன்பத்தைத் துடைக்க தோன்றியவர் திருவள்ளுவர். அவர் தமிழகத்தில் தோன்றியது உண்மை! ஆனால், அவர் அனைத்துலக மனிதனைப் பாடும் பாவலராகப் போற்றப் படும் உயர்நிலையை எய்தியுள்ளார். உலக சிந்தனையாளரின் முன்னணியில் அவர் அமர்ந்துள்ளார்.

எனவே, அவர் உலகின் சொத்து; செல்வம் குறுகிய பற்றுகளையும், வீணான வெறுப்புகளையும் கடந்த உலகச் சான்றோரான திருவள்ளுவரை நினைவுகூர்வதற்கும், அவருடைய ஹபொதுமறையை' உணர்ந்து போற்று வதற்கும் ஆண்டில் ஒரு நாளைத் திருநாளாகப் போற்றுவது சாலவும் பொருத்தமாகும்

தமிழுக்கும், தமிழர்களுக்கும் புகழைத் தேடித் தந்துள்ள திருவள்ளுவருக்கு விழா எடுக்கத் தயங்கும் தமிழன் யாராகிலும் இருக்க இயலுமா? இயேசு பெருமான் பிறந்து 335 ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்மஸ் பண்டிகை, கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. இப்பண்டிகையை எந்த நாளில் கொண்டாடுவது என்பதில் தொடக்கத் தில் சிக்கல் இருந்தது. இறுதியில் திசம்பர் 25 ஆம் நாளைத் திருநாளாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தனர். இத்திட்டத்தின்படியே கிறிஸ்து பெருமானின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டி வருகின்றனர்.

இதைப் போன்று, திருவள்ளுவர் திருநாளினை மாட்டுப் பொங்கல் அன்று யாவரும் கொண்டாடுவதன் மூலம், வருங்காலத் தமிழருக்கு ஒரு புது வழியைக் காட்டுபவராக அமைகிறோம். தமிழர் களுடைய ஆண்டின் தொடக்கத்தை; தை முதல் நாளாகக் கொள்ளுவதால் எத்தகைய சிக்கலும் உண்டாகாது.

கி.பி.1752க்கு முன்பு ஐரோப்பியர், மார்ச்சு மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டிருந்தனர். போப்பு கிரிகோரின் அரசு முயற்சியாலேயே, கி.பி. 1752 ஆம் ஆண்டு முதல், சனவரியைக் கிறித்துவ ஆண்டின் முதல் மாத மாகக் கொண்டு, ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

நம் தமிழ் நாட்டில், சங்க காலத்தில் ஆவணியே ஆண்டின் முதல் மாதமாகப் போற்றப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே, சித் திரையை முதல் மாதமாகக் கொள்ளும் முறை தோன்றியது.

சமய சார்பற்ற முறையில் நாம் ஈராயிரம் ஆண்டுகள் கழித்து, திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம்.

1978 முதல் திருவள்ளுவர் திருநாளுக்கு அடுத்த நாளை உழவர் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு ஹபொங்கல் விழா முப்பெரும் திருநாள் விழாக்களாக இன்றைய தமிழருடைய வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற் றுள்ளது. தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் கலை விழாவாகப் போற்றப்படும் சிறப்பை அடைந்துள்ளது.


கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...