Friday, October 27, 2023

இறையன்புவின் இலக்கியத்தில் மேலாண்மை

இந்நூல்  இலக்கியத்தில் மேலாண்மை என்ற கட்டுரையை முதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பதினைந்து தலைப்புகளில் ஆசிரியர் கட்டுரைகளை எழுதியுள்ளார். முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளது. இந்நூலில் இலக்கியத்தில் மேலாண்மை, நீரின்றி அமையாது உலகு, உண்மை நம்பிக்கை பொய்ப்பதில்லை, எல்லோருக்கும் நல்லவராக இருந்தால், போருக்குச் சமமான போட்டி உலகம், சிறந்த நிர்வாக இரகசியங்கள், திட்டமிடு! வெற்றியடை!, பேசும் கலை வளர்ப்போம், அமைதியாய் ஆளுக, முடிவில் வேண்டும் முனைப்பு, முயற்சிசெய் முடிச்சு அவிழும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மனத்தில் உள்ளது கைகளின் திறன், வர்த்தகமும் போரே,  தலையே அடையாளம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் மேலாண்மைச் சிந்தனைகளை அடியொற்றியவை என்பதால் இந்நூலின் தலைப்பு பொருத்தமுடையதாக வைக்கப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.


இலக்கியத்தில் மேலாண்மை என்ற முதல் கட்டுரை தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மேலாண்மைச் சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பெற்றுள்ளது. மேலாண்மை எப்போது தொடங்கியது என்று ஒரு கேள்வி கேட்டார் அதற்கு இந்நூலாசிரியர் மனித இனம் தொடங்கியபோதே மேலாண்மையும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது என்று பதில் தருகிறார்.


மேலாண்மை என்பது நிறுவனங்களுக்கு மாத்திரம் தேவைப்படும் பண்பல்ல. மனித வாழ்க்கையின்  வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அது கலந்திருக்கிறது என்று உரைக்கிறார் ஆசிரியர்.  வீடு தொடங்கி நாட்டை நிர்வகிப்பது வரை மேலாண்மைப் பண்பு  அமைந்துள்ளது என்பது அவரின் உறுதியான கருத்தாக உள்ளது.


கம்பராமயணத்தில் தசரதன் தன் நாட்டை மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதை விளக்க முற்படும்போது கம்பர், வறியவன் ஒருவன் பாதுகாக்கும் ஒரு வயலைப்போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச் சிறந்த முறையில் தசரதன் ஆட்சி செய்தான் என்று குறிப்பிடுகிறார் இந்நூலாசிரியர்.


‘‘வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்


செய் எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”


என்ற கம்பராமாயணப் பாடலடி ஏழை காத்த வயல் போல அயோத்தி நாடு தசரத மன்னனால் காக்கப்பெற்றது என்பதைக் காட்டுவதாக உள்ளது, சின்ன வயல் மட்டுமே சொத்தாகக் கொண்டவன் தன் கவனம் முழுவதையும் அதன்மீதே திரட்டி, ஒரு பூச்சி விழுந்தாலும் உடன் அகற்றி, கதிர்விட்டதும் இராப்பகலாகக் காவல் காத்து அறுவடை செய்து கதிர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வரை அக்கறை காட்டி, உள்ளத்தை வயலிலேயே நட்டு வைத்திருப்பான். உயிரைப் பயிரின் மீதே வைத்திருப்பான். தன் பரந்த நாட்டை அந்த அளவிற்கு அக்கறையுடன் எந்தப் பகுதியும் தகுதி குறையாமல் சிறக்கும்படி தசரதன் நிர்வகித்தான்.அவன் தன் நாட்டிலே உள்ள உயிர் எல்லாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் என்று கம்பர் மேலும் அவனின் நாடு காவலைச் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.


மனமே ஒரு வேளாண்மை சார்ந்த மேலாண்மைப் பண்பினைப் பெற்றது என்பதை ஒரு பழம்பாடல் கொண்டுத் தெளிவிக்கிறார் நூலாசிரியர்  இறையன்பு அவர்கள்.


இன்சொல் விளைநிலமாய் ஈதலே வித்தாக


வன்சொற்களைக் கொட்டு வாய்மை எருவூட்டி


அன்புநீர்ப் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்


பைங்கூழ்சிறு காலைச்செய்”


என்கிற நெறியில் செல்பவர்களே சிறந்த மேலாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருப்பார்கள்  என்கிறது இப்பாடல். மனிதனின் இனிய சொற்கள் என்பன விளை நிலமாக அமைகின்றன. அதில் ஈதல் என்னும் கொடைப்பண்பே விதையாக விதைக்கப்படுகின்றது. வாய்மை என்னும் எருவினை இட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்ய அறம் என்னும் கதிர் விளையும். என்று மனத்தின் வேளாண்மையே மேலாண்மை என்கிறார் ஆசிரியர்.


இவ்வாறு அன்பு, இனிய சொற்கள், கொடை, வாய்மை போன்ற பண்புடையவர்களே சிறந்த நிர்வாகிகள் ஆவர். அவர்களிடம் பணிபுரிபவர்கள் பணியைப் பாரமாக்காமல் சாரமாக்குவார்கள் என்பது உண்மையாகும். இவ்வாறு இல்லாமல் வலிய சொற்கள் , வன்மைக் குணம் போன்றன கொண்டு நிர்வாகம் செய்தால்  சத்துள்ள மனிதர்கள் வெளியேற, தக்கையானவர்களே தலைதூக்கி நின்று சக்கைகளை உற்பத்தி செய்வார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியர்  அடிப்படையில் வேளாண்மைப் படிப்பினைப் படித்தவர் என்பதால் அ்வரிடம் வேளாண்மைக் கருத்தும் மேலாண்மைக் கருத்தும் ஒருசேர அமைந்து சிறக்கின்றன.


உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துகள் மென்மையாகப் பரவிக்கிடக்கின்றன. அவை பன்னீர் புஷ்பங்கள் காற்றில் பரவவிடும் மணத்தைப் போல வசீகரமானவை. அவற்றை அப்படியே சிதைத்துக் குப்பிகளில் அடைக்க அவர்கள் முனையவில்லை. மகத்தான மனிதர்களின் வீழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அவர்கள், பலவீனங்களைக் கோடிட்டு எச்சரித்தும் நன்னெறிகளை நம் மனதில் எழுத உச்சரித்தும், உள்மனதில் இவை எதிரொலித்து அறிவறுத்த – காவியங்கள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும் கவிதைகள் வாயிலாகவும், உருவக்கதைககள் ஊடாகவும் நம்முன்னோர்கள் முயன்றனர். இவ்வாறு மேலாண்மைக் கருத்துகள் உலக அளவில் பரவியுள்ள தன்மையை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.


நீரின்றி அமையாது உலகு என்பது இந்நூலில் உள்ள இரண்டாவது கட்டுரையாகும். நீர் மேலாண்மை என்று சொல்லுகிறபோது நீர்நீலைகளை அமைத்தல், மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீரை அதிகரித்தல் தடுப்பு அணைகள் அமைத்தல் ஒவ்வொரு சொட்டு நீரையும் முறையாக பயன்படுத்துதல் நீர்த்தேக்கங்களைச் சரியான அளவில் அமைத்தல், தண்ணீர் தேக்கத்தைக் குறைத்தல், வெள்ளச் சேதங்களை முறியடித்தல் போன்ற பலகூறுகள் உண்டு என்று நூலாசிரியர் நீர் மேலாண்மை பற்றிய பல கருத்துகளை இக்கட்டுரையில் தொகுத்து உரைக்கின்றார்.


பயிர்களை நேசிக்கவும், இயற்கையை உணரவும் அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவதும் படிப்பின் ஒருபகுதியே என நாம் உணர வேண்டும். மனித நாகரிகம் வேளாண்மையிலிருந்தே தொடங்கியது என்பதை நாம் ஒரு போதும் மறக்ககூடாது.


ஒரு நாட்டின் வளம் என்பது அதன் நீர் மேலண்மையைப் பொருத்தே அமைகிறது. இதை உணர்த்தும் பொருட்டுக் குடபுலவியனார் என்கின்ற சங்க காலப் புலவர் மன்னனுடைய கடமை, நீர் மேலாண்மையைப் பேணிக் காப்பது என்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் புலப்படுத்துகிறார் .


“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே


நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு


உடம்பும் உயிரும் படைத்திசினோரே


வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்


வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்.”


உணவு எனப்படுவது நிலத்தோடு சேர்ந்த நீரும் ஆகும். நீரும், நிலமும், திருத்தி விளைச்சலுக்கு உதவியவர்கள் உடலும் உயிரும் அளித்துக் காக்கிறவர்கள் ஆவார். அகண்ட நிலப்பரப்பில் விதையை விதைத்துவிட்டு வான்மழையை எதிர்நோக்கும் நிலத்தால் மன்னவனுக்குப் பயன் விளையாது. இன்றும் தரிசுநிலங்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதைப் பார்க்கிறோம்.


பழந்தமிழர்கள் நீரை மிகவும் நேர்த்தியாக பராமரித்தார்கள் என்பதற்கு நீர்நிலைகளுக்கு அவர்கள் வைத்த பெயர்களே சிறந்த சான்றாகும். ஐம்பதுக்கு  மேற்பட்ட பெயர்களை நீர் நிலைகளுக்குத் தமிழர்கள் சூட்டியிருந்தார்கள். இது அக்காலத்தில் மழைநீரை எவ்வளவு நுட்பமாகச் சேமித்து வறண்ட காலங்களுக்கும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் உணர வழிவகுக்கிறது என்ற ஆசிரியர் கருத்து நீர் மேலாண்மை என்பது பல்வகை வளர்ச்சிகளுக்கு நாட்டை உட்படுத்துகிறது  என்பதை உணர வைக்கின்றது.


அகநானூற்றில் பெரிய நீர்நிலைகளைக் காப்பதற்கு காவற் பணியாளர்கள் இருந்தார்கள் என்கிற விவரமும், இவர்கள் மழைக்காலங்களில் இரவில் துயிலாமல் பணிபுரிந்தார்கள் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது.


தொழில் மழைபொழிந்த பானாட்கங்குல


எறி திரைத்தி விலைதூஉம் சிறுகோட்டுப்


பெருங்குளம் காவலன்போல


அருங்கடி அன்னையும் துயில் மறந்தனனோ?


என்ற பாடலடிகளை இதற்குச் சான்று காட்டலாம். அன்னையானவள் பெருங்குளம் காக்கும் காவலன் போல தூங்காமல் இருந்து தன் மகள் தலைவனைச் சந்திக்கவிடாமல் காத்துநின்றாள் என்று சங்க அகப்பாடல் நீர் காப்பவனை உவமையாக வைத்துப் பாடியுள்ளது. தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு கரிகாலன் கட்டி வைத்த கல்லணையே சான்று என்று நீரின்றி அமையாது உலகு நீர் மேலாண்மை பற்றிக் காட்டி  நிற்கிறது.


எல்லோருக்கும் நல்லவராக இருந்தால் என்ற கட்டுரை இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பிலான நூலில் மூன்றாவதாக அமைக்கப்பெற்றுள்ள கட்டுரையாகும். உண்மையான தலைமைப் பண்பு என்பது ஒரு செயலை எல்லோரும் அதிசயப்படும்படி அழகாகவும், நிறைவாகவும், விரைவாகவும் செய்து முடிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதிகத் தொழில் நுட்பம் இல்லாத பெரிய இயந்திரம் இல்லாத அந்தக்காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான கோயில்கள் நான்கு முக்கியமான அம்சங்களை உணர்த்துகின்றன..முறையான திட்டமிடுதல் சரியான நிர்வாகம் சீரிய தலைமை செம்மையான கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமே தஞ்சைப் பெரியகோவில் போன்ற அதிசயங்கள்சாத்தியமாயின.


ஒரு சின்ன விழாவைக் கூடச் சிறப்பாக நடத்த திட்டமிட வேண்டியது அவசியம். ”டாவோடீச்சிங்” என்பது தாவோ அறிஞர் லாவோட்சு என்பவரால் எழுதப்பட்டு அறிஞர் அண்ணாவால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட புகழ் பெற்றவாசகம் உள்ள நூல். ”மக்களிடம் செல் -அவர்களோடு வாழ் –     அவர்களைநேசி – அவர்களிடமிருந்துகற்றுக்கொள் – அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து – தொடங்கு அவர்களிடம் இருப்பதை வைத்துக் கட்டுமானம்செய் – பணிமுடியும்போது அவர்களாகவே செய்து முடித்த உணர்வை ஏற்படுத்து” என்பது அவ்வாறு அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் வாசகம் ஆகும். இது மக்களின் மக்களாகவே ஆட்சியாளர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றது.


திட்டமிடுவதற்குக் கீழிருந்து தொடங்க வேண்டும் என்று இன்று சொல்வதை அன்றே லாவோட்சு கூறிவிட்டார். இருப்பதை வைத்துக் கொண்டு அதிகப் பயன்பாட்டை அடைவதே நல்ல திட்டமிடுதலாகும்.


எந்தத் திட்டமும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அது சாத்தியமும் இல்லை எவ்வளவு சிறந்த திட்டத்தையும் குறை சொல்ல வேண்டுமென்று ஒரு கூட்டம் கட்டாயமிருக்கும். இன்று அரசு எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு எதிராகப் புரட்சி செய்பவர்களும் போராட்டம் செய்பவர்களும் உண்டு.


கன்பூசியஸ் சீனச் சிந்தனையை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகித்தார். அவர் கூறிய பல கருத்துகள் அனலெக்ட்ஸ் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய ஆளுமையை நிர்வாகம், மேலாண்மை போன்ற நடைமுறைக் கருத்தாங்களில் நம்மால் உணரமுடியும்  என்று இக்கட்டுரை அனைவருக்கும் நல்லவராக அமையத் தக்க நல்ல கருத்துகளை உலக அளவில் செயல்படுத்திய அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும்.கெட்டவர்கள் வெறுக்க வேண்டும். அதுவே சரியான வாழ்க்கை முறை என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதன் வழி நல்லவர்களாக நாமும் இருக்க வேண்டும். நல்லவர்கள் நம்மை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து தெரியவருகிறது.


இந்நூலின் அடுத்து கட்டுரையாக அமைவது சிறந்த நிர்வாக இரகசியங்கள் என்ற கட்டுரை ஆகும். இக்கட்டுரை ரகசியங்களை வெளிப்படுத்தும் கடடுரையாக விளங்குகின்றது. தலைமைப்பண்பு உள்ளவர்கள் தன் முனைப்பு அற்றவர்களாகக் காட்சிக்கு எளியவராக யாரும் தங்கள் கருத்தை எளிதில் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுபவர்களாக இருக்கவேண்டும். இராமர் மக்களைப் பார்த்துத் தானாகவே முன் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் நல்ல நாயகனாக இருந்தார் என்பதைக் குறிப்பிடும்போது வால்மீகி அவரை பூர்வபாஷி என்று விளிக்கிறார். கம்பரும் இராமருடைய இந்தப் பண்பைச் சிலாகித்துப் பேசுகிறார்.


நிறுவனத்தை வழிநடத்துபவர்கள் தன்முனைப்பற்று இருக்கும்போது மிகப் பெரியசாதனைகளை ஆற்றமுடியும். திருவள்ளுவர் துணிவு, ஈகை, அறிவுடைமை, ஊக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பவனே தலைமைப் பண்பு உடையவராக இருக்க முடியம் என்று குறிப்பிடுகிறார்.


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்


எஞசாமை வேந்தற்கு இயல்பு (382)


என்று மன்னனுக்கான தலைமைப் பண்புகளைக் காட்டுகின்றது திருக்குறள்.  தலைமைப் பண்பு உடையவர்கள் கற்றுக் கொள்ளவும், தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையவும் தயாராக இருப்பவர்கள் ஆவார்கள். அவர்கள்  விரைவான முடிவுகளை அயராமல் எடுப்பவர்கள். அவர்கள் அறிவில் சிறந்து விளங்குபவர்கள் ஆவார்கள் என்று பல அடையாளங்கள் தலைமைப் பண்புடையவர்களுக்கு நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்களால் காட்டப்பெறுகின்றது.


தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்


நீங்கா நிலன் ஆள்பவர்க்கு


என்று திருவள்ளுவர் மேலாண்மைக்கான முக்கியமான பண்புகளாக தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகியவற்றை முக்கியமான பண்புகள் என்று குறிப்பிடுகிறார்.


சேரன்செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் கண்ணகி மதுரையை எரித்த சம்பவத்தைக் கேட்டு


”மன்பதை காக்கும் நன்குடிபிறத்தல்


துன்பமல்லது தொழு தகவு இல்”


என்று குறிப்பிட்டுத் தலைமைப் பண்பின் தகுதியை வரையறுக்கிறார். டாவோடீச்சிங் நூலில் லாவோட்சு நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்துவது பற்றிக் குறிப்பிடும்போது பெரியநாட்டை ஆளுவது சின்ன மீனைச் சமைப்பது போல என்கிறார். அதிகம் கிளறினால் உறுப்புகள் தனித்தனியாக உதிர்ந்துவிடும் என்பது சின்ன மீன்களைச் சமைக்கும்போது எதிர்படும் சிக்கலாகும். எனவே நாட்டை ஆளும் ஆளுமை வாய்ந்தவர்கள் எப்போதும் விழிப்புடனும், சோர்வின்றியும் கடமையாற்ற வேண்டும் என்று இந்நூலாசிரியர் இறையன்பு குறிப்பிடுகிறார்.


திட்டமிடு வெற்றியடை  என்பது இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் அமைந்துள்ள மற்றொரு கட்டுரையாகும்.


சூழல் பாதுகாப்பாக இருக்கும் போது பராமரிப்பது எளிது


அறிகுறிகள் தொடங்குவதற்குமுன்பே நிலமையைச் சமாளிப்பது எளிது.


பொருள் காய்ந்திருக்கும்போது ஒடிப்பது எளிது


நுண்ணியதாக இருக்கும்போதே ஒரு பொருளைக் கரைப்பது சுலபம்


ஒரு செயல் ஒன்றுமில்லாமல் இருக்கும்போதே அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்


ஒழுங்கீனம் வருவதற்கு முன்பே சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திரு


மனிதனின் கைகளால் அளக்க முடியாத மரம் சின்ன துளிராகவே உதயமாகிறது


ஆயிரம் மைல் கொண்ட பயணம் ஓர் அடி முன்வைப்பதில் தொடங்குகிறது.


நிலமையைப் பரிசோதிப்பதற்கு அறிவும் ஆற்றலும் தேவை.


என்று பல மேலாண்மைக் கட்டளைகளைக் கொண்டு இக்கட்டுரை தொடங்குகிறது. இவை மந்திர வாசகங்கள் ஆகும். இவற்றை ஒருவர் தினமும் பார்ப்பதாலும் படிப்பதாலும் அவரின் மேலாண்மை குறித்தான அறிவு மேலும் மேலும் வலுப்பெறும்.


ஜாதகக்கதை ஒன்று உண்டு. செடிகளுக்கு நீர் வார்க்கும் பொறுப்பை ஒருவன் குரங்கிடம் ஒப்படைத்தானாம். அவை நீர் ஊற்றிய பிறகு ஒவ்வொரு செடியின் வேரும் ஒழுங்காக நனைந்திருக்கிறதா? என்று பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தனவாம். அப்படிபட்டவர்களிடம் ஆய்வுப பணியை ஒப்படைக்கமுடியாது. வரப்போகும் பாதிப்புகளையும், நன்மைகளையும் அறியக்கூடியவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதைச் சொல்லி அவர்களையே இது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டுமென்று கம்பர் இராமயணத்தில்


உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்


மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல்ஆற்றும்


பெற்றியார் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரியநூலும்


கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்


என்று குறிப்பிடுகிறார் . இதன்வழி கம்பர் ஆளுமைப் பண்புகளை யாரிடம் தரவேண்டும் என்தை வரையறுத்துக் காட்டியுள்ளார்.


திருக்குறளைப் பொறுத்தவரை கட்டுப்படுத்துவதை வள்ளுவர் எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். பிரச்சினை துளிர்விடும்போதே அதைத் துணிந்துக் கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டால் வெட்டுகிறவர்கள் கைகளுக்கே அது வேட்டு வைத்துவிடும் என்பதை


இளையதாக முள்மரம் கொல்க களையுநர்


கைகொல்லும் காழ்த்த இடத்து (879)


என்று  சிறியதாக உள்ளபோதே முட்செடியை வேரோடுக் கிள்ளிவிட வேண்டும் என்று காட்டுகிறார் வள்ளுவர்.             வழிநடத்தும் யாரேனும் பாதை தவறினால் அவர்களை மேலாளர் கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்டிக்கவும் வேண்டும். அது அவர்களை வருத்துவதற்கு அல்ல.. மற்றவர்களைத் திருத்துவதற்காக.


வினைத்திட்பம் என்பது  ஒருவன் மனத்திட்பம்


மற்றைய எல்லாம் பிற   (612)


என்று வினைத்திட்பத்தின் செறிவுத்தன்மையை வள்ளுவர் காட்டியுள்ளார். தலைமையேற்று நடத்திச் செல்லும்போது எந்த இடத்திலும் நாம் மேற்கொள்ளும் பணியை விட்டு விடலாம் என்று நினைக்கக்கூடாது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றைப் புறந்தள்ளி முன்னே செல்வதே உண்மையான தலைமைப் பண்பு உள்ளவர்களின் உயரிய பணி.


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை


தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.  (612)


என்று வள்ளுவர் ஒரு வினை செய்யும்போது வினைகெடல் செய்யும் எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்.


இலக்கை நிர்ணயிக்கும்போது நம்மால் முடியாது என்று நினைத்தால் காரணங்களைச் சொல்லிக் கொண்டடிருப்போமே தவிர, காரியத்தைச் செய்து முடிக்க மாட்டோம். இதைத்தான் திருவள்ளுவர்.


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்


பெருமை முயற்சி தரும்.( 611 )


என்று குறிப்பிடுகிறார் என்று திட்டமிடு வெற்றியடை என்ற கட்டுரை மேலாண்மைச் செய்திகளை வழங்குகின்றது.

இலக்கியத்தில் மேலாண்மை என்ற  இறையன்பு அவர்களின் நூலில் அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை  பேசும் கலை வளர்ப்போம் என்பதாகும். இயற்கையில் உள்ள அனைத்துமே தகவல் பரிமாற்றம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. நதியும், மலரும், மரங்களும், காற்றும், மண்ணும் ஏதேனும் ஒரு செய்தியை நம் காதுகளில் கிசுகிசுத்த வண்ணம் இருக்கின்றன.


மனிதன் இடத்திற்கு இடம் மாறுபடுகின்ற மொழியாலும் அதைத் தொடர்ந்து கூர்மைப் படுத்துகிற தன்மையினாலும் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறான். சாதாரண வாழ்க்கையை நடத்தத் தேவையான மொழியை எல்லோரும் கையாண்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் சாதுர்யமாக அதைக் கையாளுவதற்கு ஒரு சிலராலேயே முடிகிறது.


ஔவையார் தனிப்பாடல் ஒன்றில் பத்தாயிரத்திற்கு ஒருவர் தான் சொல்லவேண்டியதைச் சொல்லும் ஆற்றலுடையவர் என்று சொல்கிறார்.


ஆர்த்த சபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்


வார்த்தை பதினாயிரத் தொருவர்


என்பது அவரின் கருத்து ஆகும். அதே ஔவையார்தான் இன்னொரு பாடலில் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்கிறார். எனவே பேச்சைக் கைக்கொள்ள பயிற்சி மிகவும் அவசியம். எந்தக் கட்டத்திலும் அதைக் கைவிடாமல் பாதுகாக்க ஒரு சிலரால்தான் முடிகிறது.


ஃப்ராங் அவுட்லா என்பவர் அழகான சூத்திரம் ஒன்றை அளித்திருக்கிறார். எண்ணங்களைக் கவனி… அவை சொற்களாகின்றன…. சொற்களைக் கவனி….. அவை செயல்களாகின்றன……செயல்களைக் கவனி அவை பழக்கங்களாகின்றன…….பழக்கங்களைக் கவனி அவை குணாதிசயமாகின்றன…….குணாதசியத்தைக் கவனி அது உன் விதியாகிறது என்பது அந்தச் சூத்திரம் ஆகும். இந்தக் கருத்தை பிருகத்ரன்யகா உபநிடதமும் வலியுறத்துகிறது.


இன்றிருக்கும் சூழலில் தகவல் என்பது அதிகாரமாகவும் சக்தியாகவும் கருதப்படுகிறது. யாருக்கு விரைவாகத் தகவல் கிடைக்கிறதோ அவர்கள் வெற்றிபெற்றவர்களாகிறார்கள். போட்டியாளர்களை எளிதில் அவர்கள் விஞ்சிவிட முடிகிறது. கிடைக்கும் நேரம் குறைவாகிக் கொண்டே போவதால் சுருக்கமாகவும், தெளிவாகவும் தகவல்களை அனுப்ப வேண்டியிருக்கிறது.  இவ்வாறு இக்கட்டுரை பேச்சுக்கலை வளர்க்க பல வழிகளில் ஆலோசனை அளிக்கின்றது.


வெ. இறையன்பு அவர்கள் எழுதிய இலக்கியத்தில் மேலாண்மை என்ற கட்டுரைத் தொகுப்பில் ”அமைதியாய்ஆளுக” என்ற கட்டுரை அடுத்து அமைகின்றது. புறநானூற்றில் போரைப் பற்றி வீரத்தைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அவை நம் மனதை ஈர்ப்பதைவிட இவற்றைத்தாண்டிய தமிழர் வாழ்க்கை முறையைக் காட்டும் பாடல்கள் மனதில் பதிவனவாக உள்ளன.


பாண்டியன் அறிவுடைநம்பி எவ்வளவு பெருஞ்செல்வம் இருந்தாலும் குழந்தையில்லாதவர்கள் வாழ்நாளை வீணடித்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். மன்னனாக இருந்தாலும் பிள்ளைப்பேறு முக்கியம் என்று கருதிய உலகம் தமிழ் உலகமாகும். மக்கட் செல்வமே மக்காத செல்வம் ஆகும்.


                        படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்


                        உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்


                        குறுகுறு நடந்து சிறு கைநீட்டி


                        இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்


                        நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்


                        மயக்குறு மக்களை இல்லோர்க்குப்


                        பயக்குறை இல்லைத் தாம் வாழுநாளே


என்பது பாண்டியன் அறிவுடை நம்பி குழந்தைச் செல்வத்தின் பெருமையை எடுத்துரைக்கும் போக்கில் பாடிய பாடலாகும்.


தமிழக மன்னர்கள் கடுமையான போர்களில் நேரடியாக ஈடுபடுபவர்களாக இருந்தாலும் கல்வி, கலை போன்றவற்றில் ஆர்வம் செலுத்துபவர்களாக இருந்தார்கள். இலக்கிய மனம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்கு  குழந்தை பற்றிய அறிவு நம்பியின் பாடல் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.


நம் ஊரிலும் நாற்றுப் பாட்டும், ஏற்றப் பாட்டும் உண்டு. மாலையில் நடை பயின்ற கம்பரின் காதுகளில் ஏற்றம் இறைப்பவன் பாடிய ”மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே!” என்கின்ற வரிகள் விழுந்தன. அதை அவன் எப்படி முடிப்பான் என்று யோசித்து இரவு முழுவதும் கம்பர் விழித்திருந்தாராம். மறுநாள் அங்கு சென்றபோது ”தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே” என்று முடித்ததாக கூறப்படுகிறது. நம் நாட்டுப்புறப்பாடல்களிலும் இலக்கியம் இருக்கிறது. ஒருகாலத்தில் தமிழகக் காற்றே இசையாகவும், கலைமயமாகவும் இருந்தது என்பது வரலாற்றால் தெரிகிறது.


இலக்கியம் மட்டுமல்ல, இலக்கியவாதிகளின் வாழ்க்கையும் நமக்குப் பதற்றமின்றி வாழவும், ஒவ்வொரு நொடியையும் உருப்படியாய் வாழவும் கற்றுத்தருகிறது. உச்சகட்ட பதற்றம் அதிலிருந்து நாம் மீளும்போது நமக்கு வாழ்வின் பிரமாண்டத்தையும், உயிரின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அமைதியால் ஆளும் முறைமையை எடுத்துரைக்கிறார்  நூலாசிரியர் இறையன்பு.


இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் முடிவில் வேண்டும் முனைப்பு என்ற தலைப்பிலான கட்டுரை தொடர்ந்து அமைகின்றது. இக்கட்டுரையில்  முயற்சி வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.


திருக்குறளில் சமரச பேச்சுவார்த்தை பற்றி ஓர் அதிகாரமே வகுக்கப்பட்டிருக்கிறது. சமரச பேச்சுவார்த்தைக்கு எல்லோரும் தகுதியுடையவர்களாக ஆகிவிடமுடியாது. அதற்கு அனுமனைப் போலவும் கிருஷ்ணரைப் போலவும் தகுதியான பின்னணி அன்பு, பண்பு ஆகியவை அவசியம் என்று திருவள்ளுவர் தெரிவிக்கிறார்.


            அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்


            பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  (681)


என்று தூது உரைப்பானுக்கான இலக்கணத்தை வகுக்கிறது திருக்குறள். சமரசத் திறனுக்கு ஆராய்கின்ற திறமை கனிவு, திட்டமிடுதல், பழகும் திறமை,  தகவல் பரிமாற்றத்திறன் ஆகியவை அவசியம். என்று மேலாண்மை கூறுவதைத் திருவள்ளுவர் அப்போதே தெளிவு படுத்தியிருக்கிறார்.


            அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு


            இன்றியமையாத மூன்று(682)


என்ற குறளில் தூதுவர்க்கான மேலாண்மைப் பண்புகளைக் காட்டுகிறார் வள்ளுவர்.


தன்னுடைய கடமை நேரத்தின் அருமை, தூது செல்கிற இடம் ஆகியவையும் கவனிக்கப்படவேண்டிய செய்திகள் என்று தூதுவர்க்கு அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.


தன்னுடைய கருத்துக்களை ஆழமாக எடுத்துரைக்கும் வன்மையும் இருக்கவேண்டும் என்பதைத் திருக்குறள் விளக்குகிறது. இலக்கியமானது, சம்பவங்கள் மூலமாகவும்,  சமரசத்தின் சாதுர்யத்தைக் கற்றுத்தருகிறது. முடிவெடுப்பது மேலாண்மையில் முக்கியப்பணி. நாம் ஒவ்வொரு நாளுமே ஏதேனும் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். சிற்றுண்டிச்சாலைக்கு செல்கிறபோதுகூட என்ன இருக்கிறது என்று அங்கே இருப்பவர்கள் கூறினால் அவற்றில் எதைச் சாப்பிடுவது என்று நாம் முடிவெடுக்கிறோம்.


முடிவெடுப்பதற்கு ஆராய்ந்து பார்க்கின்ற மனம்வேண்டும். அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகின்றது.


            எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்


            மெய்ப்பொருள் காண்பது அறிவு  (355)


            எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்


            மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (423)


என்ற நிலையில் வள்ளுவர், ஒரு பொருளின் உண்மையான இயல்பைப் பாரபட்சமின்றி அறிவது மட்டுமே மெய்யுணர்வு என்கிறார். அடுத்ததாக யார் சொன்னாலும் அது உண்மையானதா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் சொல்கிறார் வள்ளுவர்.


இவ்வாறு ஒருசெயலுக்கான முடிவு எடுக்கும்போது எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை தெளிவுபடக் காட்டுகின்றது.


இலக்கியத்தில் மேலாண்மை நூலில் அடுத்து அமைகின்ற கட்டுரையின் தலைப்பு முயற்சி செய் முடிச்சு அவிழும் என்பதாகும்.


சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் சரியாக ஆராயாமல் பாண்டிய மன்னன் கோவலனைக் கொல்ல ஆணை பிறப்பிக்கின்றான்.


சூர்ப்பனகையின் சொற்களை உண்மை என்று நம்பி, சீதையைக் கடத்தி வந்த தவறான முடிவால் கலைகளில் வல்லவனாகவும், ஆன்மீகத்தில் தலைசிறந்தவனாகவும் இருந்த இராவணன் வீழ்ந்தான். கிருஷ்ணர் தூது சென்றபோது ஐந்து ஊர்களையாவது கொடு, ஐந்து வீடுகளையாவது கொடு என்று இறங்கி வந்தும் ஒப்புக்கொள்ளாத துரியோதனன் இராஜ்ஜியத்தை மட்டுமல்ல உயிரையும் இழந்துவிடுகிறான்.


இலக்கியங்களும், இதிகாசங்களும் தொடர்ந்து தவறான முடிவெடுப்பவர்களைப்  பற்றி அறிவுறுத்தி நம்மை எச்சரிக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் அவருடைய வாழ்வில் தேர்ந்து அறிந்து அமைதியாக நல்ல முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுத்து தம் வெற்றி இலக்கை அடையவேண்டும் என்று இக்கட்டுரை வழிகாட்டுகிறது.


உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலுள் அமைந்துள்ள மற்றொரு கட்டுரையாகும். வாழ்க்கையை எப்போதும் ஆக்கப்பூர்வமான எண்ணத்துடன் அணுக வேண்டும். இவ்வுலகம் துயரம் நிறைந்ததுதான். வாழ்க்கை என்பதே பல கசப்பான நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பதுதான். ஒரு வீட்டில் கெட்டிமேளம். அடுத்த வீட்டிலோ அழுகை ஓலம். ஒருபுறம் இன்பம், ஒருபுறம் துன்பம், இருந்தாலும் இந்தத் துயரங்களுக்கு நடுவே இன்பத்தைக் காண மனித மனம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை அந்தக் காலத்திலேயே புறநானூற்றுப் பாடல்வழியாகப் பக்குடுக்கை நன்கணியனார் என்கிற புலவர் பாடியிருக்கிறார்.


            இன்னாது அம்ம இவ்உலகம்


            இனியகாண்க இதன் இயல்புணர்ந்தோரே.


என்று இனியன காணச் சொல்கிறது இவ்விலக்கிய அடிகள்.


சிலப்பதிகாரத்தில் கனக விசயரோடு போர் புரிந்த பிறகு சேரன் செங்குட்டுவன் போரில் உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய அனைவரையும் வரவேற்றுப் பாராட்டிப் பேசி அவர்களுக்கு வரிசையாகப் பொருட்களைக் கொடுத்துப் பாராட்டினான். இறந்தவர்களுக்கும், வாழ்ந்தவர்களுக்கும் வாகைப் பொற்பூ அளித்தான். அது அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவமாக இருந்தது. இன்று இந்திய அரசால் வழங்கப்படும்  பரம்வீரசக்ரா, வீர்சக்ரா போன்றவற்றிற்கு இணையாக அன்றே வீரர்களுக்குச் செங்குட்டுவன் மரியாதை செய்திருக்கிறான் என்பதிலிருந்து ஊக்கப்படுத்துதல் தமிழ்மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்தது என்பது தெரிகிறது.


நம்பிக்கையும், உற்சாகமும் எப்படி அடுத்தவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறதோ அதைப் போல அவநம்பிக்கையும் அடுத்தவர்களை வீழ்ச்சியுறச் செய்துவிடும். திடகாத்திரமான மனிதனும் திசைாமாறிப் போவதற்கு மற்றவர்கள் அவனைப் பார்த்துக் கூறுகிற சொற்களும் ஒரு காரணம்.


மனத்தில் உள்ளது கைகளின் திறன் என்பது அறியப்பட வேண்டிய கருத்தாகும். பலம் என்று எண்ணுகிற நேர்வுகளிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. தன்னை யாரும் வெல்ல முடியாது என்று நினைத்த வாலி மறைந்திருந்து வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று எண்ணவில்லை. அதுவே அவன் உயிருக்கு உலை வைத்தது.


மரம் ஏறுவதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான் ஒருவன். கற்க வந்த ஒருவன் பயிற்சியை முடித்து மரம் ஏறிக் காட்டினான். அவன் கடினமான பகுதிகளில் ஏறும்போது அமைதியாக இருந்த அந்தப் பயிற்சி கொடுப்பவர் எளிமையான இடத்திற்கு வரும்பொழுது ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று குரல் கொடுத்தார்..அந்த இடத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து கீழே இறங்கி வந்த அந்த இளைஞன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான். நான் கடினமான பகுதிகளுக்குச் செல்லும்போது அமைதியாக இருந்துவிட்டு எளியபகுதிக்கு வரும்போது என்னை உஷார் படுத்துவதற்கான காரணம் யாது எனக் கேட்டான். அதற்கு அந்தப் பயிற்சியளிப்பவர் கடினமான இடம் வரும்போது நீயே கவனமாக இருப்பாய்! எளிமையான இடம் வருகிறபோதுதான் நாம் அதீத நம்பிக்கையால் தவறிழைப்போம் என்று அறிவுறித்தினார்.


பலவீனம் உன்னிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மறைபொருள். அவமானப் பட்டதையோ ,அசிங்கப்பட்டதையோ வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பது ஒரு சாமர்த்தியம்.அவ்வழி நடப்போம்.


இலக்கியத்தில் மேலானண்மை என்ற நூலின் நிறைவுத் தலைப்பாக அமைவது தலையே அடையாளம் என்பதாகும். தலைமைப் பண்புகள் நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன. தலைமை என்பது ஒருமித்த வழிகாட்டுதலையும் ,நோக்கத்தையும் உருவாக்கும் பணி, மேலாண்மை என்பது அந்த நோக்கத்தைத் திறமையாகவும், படைப்புத் திறனோடும் அடைகிற நடைமுறை.


ஒரு நல்ல தலைமை அந்தக் குழுவில் எல்லா உறுப்பினர்களையும் ஒரே திசையை நோக்கிப் பார்க்க வைக்கும் ஆற்றல் ஆற்றல் உள்ளது. ஆண்டனியோ எக்ஸிப்பரே என்பவர் காதலைப்  பற்றிக் கூறும்போது “ அது இருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதல்ல. ஒரே திசையில் பார்பபது “என்று குறிப்பிடுவார் . அதைப்போல குழுவில் இருப்பவர்களை ஒரே நோக்கத்தை எண்ணிச் செயல்பட வைப்பது தலைமைப்பண்பின் குறிக்கோளாக அமைகின்றது.


நெருக்கடிகள் வரும்போது தான் எது சிறந்த தலைமை என்பதை உணரமுடியும். சமயோசித புத்தி, சாதுர்யம், துணிவு, தன்னம்பிக்கை ஆகியவை இருக்கிறபோதுதான் அந்தச் சூழலை அவர்கள் அடையமுடியும்.


ஜான் அடைர் என்பவர் ஏழு முக்கியப் பண்புகள் தலைவருக்கு இருக்க வேண்டும் என்கிறார். ஊக்கம் ,நேர்மை, உறுதி, நியாயம், கனிவு, பணிவு, தன்னம்பிக்கை.


துணிவும், வைராக்கியமும் இருந்தால் ஆளில்லாத தீவிலும் ஜீவித்திருக்க முடியும் என்பதற்கு டேனியல் டிஃபோ எழுதிய ‘ராபின்சன் குருசோ’ நாவல் ஓர் உதாரணம்.


ரிச்சர்ட்  ஹாட்கெட்ஸ் என்பவர் பத்து அடிப்படைக் குணங்கள் தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என்கிறார். அசாத்திய ஈடுபாடு, நுண்ணறிவு, தெளிவான சிந்தனை, அற்புதமான தகவல்தொடர்புத் திறன், உயர்ந்த ஆற்றல், தன்முனைப்பின்மை, உள்ளமைதி,அனுபவம், ஆக்கப்பூர்வமான மனநிலை, நல்ல செயல்களைச் சரியாகச் செய்கிற கவனம் ஆகியவை அவசியம் என்கிறார்.


இவ்வாறு  உடலுக்குத் தலை முக்கியம் என்பதுபோல மேலாண்மைக்கும் தலைமையே முக்கியம் என்பதை இக்கட்டுரை காட்டுகின்றது.


இலக்கியத்தில் மேலாண்மை என்ற இந்நூல் தமிழ் இலக்கியங்கள், உலக இலக்கியங்கள் ஆகியவற்றை முன்வைத்து மேலாண்மைச் சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்நூலை முழுவதுமாக படிக்கும்போது இதனைப் படித்தவர்கள் மேலாண்மைப் பண்பில் தன்னை நிலைநிறுத்திடுவர். அது மட்டுமில்லாமல் ஒருபடி மேலாண்மைச் சிந்தைனைகளில் உயர்ந்திருப்பர் என்பது உண்மையாகும்.

ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி

தமிழன்னைக்குத் தொண்டாற்றிய சான்றோரில் தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத சான்றோர்களும் குறிக்கத்தக்க இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டுத் தமிழாய் மலர்ந்து, மணம் பரப்பி என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றுள்ள தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான டாக்டர். ஜி.யு.போப் பற்றி நான் அறிந்தவற்றை உங்களிடம் சில நிமிடங்கள் பகிர்ந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


கனடா நாட்டுக்கு அருகில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 –ம் ஆண்டு ஏப்ரல் 24 –ம் தேதி பிறந்தவர். இங்கிலாந்தில் இவரது குடும்பம் இருந்தது. தொழில் செய்வதற்காக பயனப்பட்டு கனடா சென்றனர். தன்னுடைய 6 வது வயதில் பெற்றோருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார் .


சிறு வயதிலேயே கிறித்துவ சமயப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. போப்பின் தமையனார் ஹென்றி தமிழகத்தில் கிறித்தவச் சமயத்தைப் பரப்பும் சமய குருவாக பணியாற்றினார். அவரைப் போன்று போப் அவர்களும் சமயப்பணி ஆற்றவே விரும்பினார்.


தம்முடைய பத்தொன்பதாம் அகவையில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போப் அவர்கள் பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர எட்டு மாதங்கள் ஆயின. அந்த எட்டு மாதங்களையும் வீணே கழிக்காமல் தமிழ் நூல்களையும், வடமொழி நூல்களையும் படித்தார்.


தமிழகம் வந்தடைந்ததும் தமிழர் முன்னிலையில் தமிழில் சொற்பொழிவு ஆற்றும் அளவுக்குத் தம் திறமையை மேம்படுத்திக்கொண்டார்.


இவர் முதன் முதலில் தூத்துக்குடி அருகே சிறு கிராமமாக இருந்த சாயர்புரத்தில் குடியேறினார். கிறித்துவ சமயப் பணியாற்றியதுடன் கல்வி சாலை அமையவும் நூல் நிலையம் உருவாகவும் பாடுபட்டார்.


ஆரியங்காவுப் பிள்ளை, ராமனுஜக் கவிராயரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். தமிழ் கற்றதுடன் மட்டுமல்லாமல் தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றார். தான் போற்றிக் கொண்டாடும் மேலை நாட்டு வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹிப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.


19 வயதில் தமிழகத்திற்கு வந்தவர் 7 ஆண்டுகள் சமயப்பணி, கல்விப்பணி ஆற்றினார். 1849 -ல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார்.


தமிழ் மொழி மீது உள்ள காதலால் ஜி.யு.போப் அவர்கள் தனது மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்தடைந்தார்.  தஞ்சை, உதகமண்டலம், பெங்களுரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.


தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்கள் மாணவர்கள் கற்பதற்கு கடினமாக இருந்ததால் வினா- விடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதினார்.


தமிழ் – ஆங்கில அகராதி

ஆங்கில – தமிழ் அகராதி என்று சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்பெறும் வகையில் எழுதி வெளியிட்டார்.


புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிபித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary tamil grammar என்ற மூன்று பாகமாக எழுதினார்.


தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் செய்யுள்களை தொகுத்து செய்யுள் கலம்பகம் என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது.


கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற பாடலையும்

இளம் பெருவழுதி எழுதிய

“உண்டாலம்மா இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.


தமிழ் புலவர்கள் தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.


இது தமிழர் மீதுள்ள அவரின் தணியாத காதலை எடுத்து காட்டுகிறது. சமயத்தை பரப்புவதற்காக தமிழை கையில் எடுத்தவர். தமிழ் மொழியின் மீதுள்ள ஆழமான காதலால் தமிழ்ப் பணி ஆற்றித் தமிழ் தொண்டராகவே மாறிவிட்டார்.


போப் அவர்கள் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது.


சிறு வயது முதலே கிறித்துவ சமயத்தை பரப்புவதையே நோக்கமாகக் கொண்ட போப் . ஏசுபிதாவை தவிர வேறு எவரையும் தொழமாட்டேன் என்று சத்தியபிராமாணம் செய்து ஞானசானம் எடுத்த பாதிரியார்.


’’இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’’ என்ற திருவாசக வரிகளை எழுதிய பிறகுதான் கடிதம் எழுத தொடங்குவாராம். இது அவரின் மதப்பற்றை தாண்டி அவருடைய தமிழ்பற்றை உணா்த்துகின்றது.


திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அவர்கள் உலக வரலாற்றிலேயே, மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி, ஆகிய பாண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


திருவாசகத்தை மொழிபெயர்த்த போது ஒரு அபூர்வமான சம்பவம் நிகழ்ந்தது. போப் அவர்கள் உ.வே. சாமிநாதர் தமிழ்த்தாத்தா அவர்களுக்கு திருவாசகத்தை படித்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதினாராம். திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற சொல்லை மெய்பிப்பது போல் அவரது கண்கள் கலங்கி கண்ணீர் அவர் எழுதிய கடிதத்தில் விழுந்து மை பேனாவில் எழுதியதால் சில வரிகள் அழிந்து போனது. வேறு கடிதம் எழுதலாம் என நினைத்தவர் அப்படியே விட்டார். கடிதத்தின் கீழே பின் குறிப்பில் நான் திருவாசகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது உள்ளம் உருகி கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மாற்று கடிதம் எழுதலாம் என்று நினைத்தேன் இருந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு அனுப்புகிறேன். மன்னித்து விடவும் என்று எழுதியிருந்தாராம். அதற்கு உ.வே.சா அவர்கள் சொன்னாராம் தமிழனாக பிறந்த எங்களுக்கு எல்லாம். இல்லாத ஒரு பெருமை உங்களிடம் உள்ளது என்று கூறி இது மிகப் பெரிய பொக்கிஷம் என்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டாராம்.


போப் அவர்கள் இங்கிலாந்திற்கு சென்ற பிறகு தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதும் போது தன் கடிதத்தின் தலைப்பில்


ஈசனடி போற்றி

எந்தையடி போற்றி

தேசனடி போற்றி

சிவன் சேவடி போற்றி

மாய பிறப்பருக்கும் மன்னனடி போற்றி


என்று அச்சிடப்பட்ட கடிதத்திலேயே எழுதி அனுப்புவாராம். இது அவரின் தமிழ்ப்பற்றையும் திருவாசகத்தின் மீதுள்ள அவரின் தீராக் காதலையும் வெளிப்படுத்துகிறது.


ஜி.யு போப் அவர்களின் மொழி பெயர்ப்பு திறனுக்கும், தமிழ் மொழி மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவிற்கும் ஒரு சான்று


’’கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை“


என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் 67 முறை தன்னை நாய் என்று கூறியிருப்பார். ஆனால் ஜி.யு. போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது ஒரு இடத்தில் கூட (dog) டாக் என்ற சொல்லை உபயோகப்படுத்த வில்லை. அதற்கு பதிலாக (cur) கர் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பார். கர் என்றால் the lowest verity of dog என்பதாகும்.


போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசக நூல் அவருடைய 80 –வது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.


40 – ஆண்டுகாலம் திருக்குறளை படித்து சுவைத்து அதில் திழைத்து ஜி.யு.போப் அவர்கள் 1886 –ல் “sacred kural’’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.


அதன் முன்னுரையில் தமிழ்மொழி பண்பட்டமொழி, சொற்செல்வம் படைத்த தனிமொழி, தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் அது தாய்மொழி.


தமிழ் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும் அறநிலையையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை. அதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு ”திருக்குறள்”


உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் காணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில் தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாக இயலும்.


அழுக்கு இல்லாத தூய நீருற்றுப் போல திருக்குறள் தோற்றம் தருகிறது. ஆம் உலகின் அழுக்கினைப் போக்க வந்த உயர்தனிச் ”திருநூல்” திருக்குறள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவிற்கு மதம் பரப்ப வந்தவரை நம் தமிழ் மொழி ஈர்த்து தமிழுக்கு தொண்டு செய்பவர்களுள் ஒருவராக மாற்றியது.


காந்தியடிகள் ஒருமுறை ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதி மனம் குழப்பம் இருக்கும் போது நான் என்ன செய்ய என்று கேட்டதற்கு அதற்கு லியோடால்ஸ்டாய் சொன்னாராம் தமிழ் நாட்டில் ஒரு நூல் திருக்குறள் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை நான் படித்திருக்கிறேன் என்று சொன்ன போது காந்தியடிகளுக்கு வெட்கமாக போனதாம் நம் நாட்டில் உள்ள நூலை நாம் படிக்கவில்லையே என்று.


ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலமாக உலகில் வாழும் மக்கள் அனைவரும் திருக்குறளின் மேன்மையை போற்றி புகழ காரணமாக அமைந்தது.


போப் அவர்கள் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து ”தமிழ்ச் செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்து விளக்கமும் தந்துள்ளார்.


இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.


போப் அவர்களின் இறுதி விருப்பம். அவருடைய எல்லையில்லாத தமிழ் பற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. நான் இறந்த பின் என் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும் ”என் கல்லறையை அமைப்பதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையாக அமையவேண்டும். தன்னுடைய சிமிட்ரியில் திருக்குறளின் ஒரு ஏடும், தாமிரபரணி ஆற்று தண்ணீர் ஒரு குவளையும் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.


பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து தமிழ்த்தாயின் தவப்புதல்வரான ஜி.யு.போப் 1908 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11- ம் தேதி இம்மண்ணுலகை விட்டுச் சென்றார்.


போப் அவர்களின் விருப்பப்படியே அவருடைய கல்லறையை அமைக்க பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வ கேசவ ராய முதலியார், தமிழர்களிடம் நன்கொடை வசூலித்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.


ஆங்கில மொழியினை அன்னை மொழியாகக் கொண்ட போப் . தமிழ் மாணவன் என்று தம்மை அறிவித்துக் கொண்டமை, தமிழ் மாட்சியே!


தமிழின் மாண்பைத் தமிழரும் உணரச் செய்த போப் அல்லரோ! இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர். தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் ஒருபோதும் சாவதில்லை என்று பாரதிதாசன் சொல்வதைப்போல் போப் அவர்கள் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

"தமிழாய்ந்த தமிழ் மகனின் புகழ் தமிழ் உள்ளளவும் வாழ்க”

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...