Wednesday, December 28, 2016

சபாஷ் 'சுபாஷினி' - தமிழ் போற்றும் ஜெர்மன் விருந்தாளி




தமிழின் தொன்மைகள் தலைமுறை தாண்டி, சேதாரமின்றி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முனைப்போடும், அகிலமெல்லாம் புகழப்பட வேண்டுமென்ற வேகத்தோடு களப்பணியாற்றி வருபவர் ஜெர்மனியை சேர்ந்த சுபாஷினி.
கணினி நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் கிடைக்கின்ற ஓய்வுகளில் பழந்தமிழ் அடையாளங்களை ஆவணப்படுத்தி, அது தொடர்பான பெருமைகளை காலவெள்ளத்தால் அழிக்கமுடியாத பெட்டகமாக உருமாற்றம் செய்து உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றுவருகிறார்.
இவரது தாய்நாடு மலேசியா. பூர்வீகம் தமிழகம். தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் தமிழ் மொழி, மரபு, பண்பாடு, கலாசாரம் என பல தளங்களில் இயங்குகிறார்.
தென் மாவட்டங்களில் உள்ள பழமையான கிராமங்கள், கோயில்கள், வரலாற்று நினைவிடங்களில், அழிந்து வரும் புராதன சின்னங்களையும், சுவடுகளையும் ஆவணப்படுத்துவதற்காக வந்த அவரிடம் ஓர் நேர்காணல்...
ஜெர்மனியில் இருந்து தமிழகம் நோக்கிய பார்வை ஏன்?
கிரேக்கம், ரோம், சீனா, துருக்கி போன்ற நாடுகளில் பழமைகள் போற்றப்படுவது வியப்பை தருவதாக இருக்கும். அதைவிட பழமையான வரலாறுகள் கொண்டது தமிழகம். ஆனால் அந்த வரலாற்று சிந்தனைகள் இங்கு இல்லை. சீதோஷ்ணநிலை, சுயநலம், நகர்மயமாக்குதல் போன்றவற்றால் வரலாற்று தலங்கள் அழிக்கப்படுகிறது.
பெருமிதப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் அரசும், பொதுமக்களும் தவறிவிடுகின்றனர்.
இந்த அறியாமைகளை அகற்றும் முயற்சியாக தான், என்பார்வை தமிழகத்தில் திரும்பியுள்ளது. இவற்றை பாதுகாக்கும் முயற்சிகள், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடரப்படுகிறது.
இளைய சமுதாயத்திடம் மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறீர்கள்?
வரலாற்றின் சிறப்புகளை இளைய தலைமுறையினர் முழுமையாக புரிந்து கொள்ளாததால் தான் அவை பல விதங்களில் சிதைக்கப்படுகிறது. விளையாட்டாக உடைப்பது, எழுதுவது, கிறுக்குவது போன்ற செயல்களால், ஒரு பெரும் வரலாறு மறக்கடிக்கப்பட்டு விடும் என்பதை அவர்களுக்கு பள்ளிப்படிப்பின் போதே உணர்த்த வேண்டும். இதை தான் அழுத்தமாக பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து பேசுகிறேன்.
வியப்பாக பார்த்து வருத்தப்பட்ட தமிழக வரலாற்றுத் தலங்கள்?
ஈரோடு மாவட்டத்தில் அரச்சநல்லூரில் உள்ள இசைக்கல்வெட்டு உள்ள பகுதி, பிராமி கல்வெட்டாக உள்ளது. இங்கு செல்வதற்கு வழிகூட இல்லை. பாட்டில்கள் நிறைந்து சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் கீழவளவு. இங்கு சமணர்களின் சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் ஒரு பகுதி தான் மிச்சமாக உள்ளது. இப்படி பல இடங்களை பட்டியலிடலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பை எப்படி உணர்கிறீர்கள்?
இது துவங்கப்பட்டு 16 ஆண்டுகளை கடந்து விட்டது. இதன் மூலம் பழமையான புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், அழியும் நிலையில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் பலவிதங்களில் அடுத்த தலைமுறையினருக்கு தெரிவிக்கும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடக்கிறது. ஜெர்மனியில் இருந்து தொடர்ச்சியாக 8 வது ஆண்டாக தமிழகத்திற்கு வருகிறேன். ஒரு மாதத்தில், 50 ஆயிரம் மாணவர்களை சந்தித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். இது மனநிறைவைத் தருவதாகவே உள்ளது.

புராதன சின்னங்களின் பாதுகாப்பில் மற்ற நாடுகள் எப்படி?
ஐரோப்பிய நாடுகள் இதில் முதன்மையானவை. பழமையான இடங்கள், தடயங்கள் நிறைந்த பகுதிகளை அரசு பொக்கிஷமாக பாதுகாக்கிறது. அதனால் தான் அந்த நாட்டில் இருந்து இங்கு வருவோர், இங்குள்ள இடங்களை பார்த்து வியக்கின்றனர்.
தமிழகத்தில் பிடித்த கலை?
ஒவ்வொரு கலையையும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்தாலும் அது பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனாலும் சிற்பக்கலை தான் என் மனதிற்கு நெருக்கம்.
தமிழ் சரளமாக பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள். ஏன் புத்தகங்கள் எழுதவில்லை
வெளிநாட்டில் வசித்தாலும் வீட்டில் தமிழ் தான். தமிழிசை, நடனம் என பல கலைகளையும் சிறுவயதில் கற்றுள்ளேன். தமிழர்களை எங்கு பார்த்தாலும் எப்போதும் தமிழ் தான். பிறமொழி கலப்பில்லாமல் சிறுவயதிலே பேசுவேன்.
புத்தகங்கள் எழுதாததற்கு காரணம் நேரப்பற்றாக்குறை தான். நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி, தொடர்ந்தும் எழுதுகிறேன். இவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவற்றை தொகுத்து, புத்தகமாக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...