Thursday, December 29, 2016

நினைவால் ஒரு பயணம்

சில கவிதைகளை
எழுதுவதில் தோற்றுப்போய்
இன்னோரிடத்தில் பிரமிக்கின்றேன்
ஒரு வாசகனாய்,
சல்மாவின் கவிதைகளில்
....

நினைவால் ஒரு பயணம்


குழம்பிய என்னுள்
நீ விட்டுச் சென்ற
நினைவுகள்
அடர்ந்து படரும்
நானில்லாத பொழுதுகள்
என் அறையில் படரும் தூசிபோல

அன்றாடப் பொழுதின்
முதல் கசப்பை
நான் விழுங்கிச் செரிக்கவும்

எங்கோ நிகழும் மரணம்
ஏற்படுத்தும் இன்மையின் பீதியை
இல்லாமல் செய்வதும்
உன் நினைவுதான்

இன்று மாலை வந்துசென்ற
வானவில்லைப் பார்க்காமல் போனதில்
எனக்கு வருத்தங்களில்லை

நேற்றைய எனது பயணம்
வழமையான
அசௌகர்யங்களோடிருந்தாலும்
எளிதாய் மாறியது உன் நினைவுகளால்தான்

உனது பிரியங்களின்
அருகாமையில் அமைதியிறும்
எனது பெரும் துயரங்கள்

நிலவூ இரக்கமற்று பிரகாசிக்கும்
இந்த இரவு
இன்று உருவாக்கும் தனிமை
எப்போதை விடவும் கடுமையானது

இலக்கை நோக்கிப் பாயும் நதியாய்ப்
பெருகும் எனது தவிப்புகள்
போய்ச் சேரும் உன் நினைவுகளுக்கு

இருந்தும்
உன் அருகாமை வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை

No comments:

Post a Comment