வேட்டையாடும்
பின்பனி இரவு அகல
புலரும் காலையில்
உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன்.
அன்பே
மஞ்சத்தில் தனித்த என்மீதுன்
பஞ்சு விரல்களாய்
சன்னல் வேம்பின்
பொற் சருகுகள் புரள்கிறது.
இனி வசந்தம் உன்போல
பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும்.
கண்னே நீ பறை ஒலித்து
ஆட்டம் பயிலும் முன்றிலிலும்
வேம்பு உதிருதா?
உன் மனசிலும் நானா?
இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை
இனி இளவேனில் முதற் குயிலையும்
துயில் எழுப்புமடி.
நாழை விழா மேடையில்
இடியாய்ப் பறை அதிர
கொடி மின்னலாய் படருவாய் என்
முகில் வண்ணத் தேவதை.
உன் பறையின் சொற்படிக்கு
பிரபஞ்சத் தட்டாமாலையாய்
சிவ நடனம் தொடரும்.
காத்தவராயன் ஆரியமாலா
மதுரை வீரன் பொம்மியென்று
பிறபொக்கும் மானுடம் பாடி
காதலிலும் இருளிலும்
ஆண் பெண்ணன்றி
சாதி ஏதென மேடையை உதைத்து
அதிரும் பறையுடன்
ஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.
என் காதல் பாடினி
திராவிட அழகின் விஸ்வரூபியாய்
நீ ஆட்டம் பயிலுதல் காண
உன் உறவினர் வீடுகள்
சிறுத்தைக் குகைகளாய் நெரியும் தெருவில்
எப்படி வருவேன்?
வேம்பு உதிரட்டும் நீ உதிராதே
ஏனெனில் உதிராத மனிதர்களுக்கும்
உதிந்த வேம்புகளுக்குமே
தளிர்த்தலும் பூத்தலும்.
.
நாளை நான் கிளை பற்றி வளைக்க
உன்னோடு சேர்ந்து ஊரும் கொய்து
கூந்தல்களில் சூடும் அளவுக்கு
பூப்பூவாய் குலுக்குமடி அந்த மொட்டை வேம்பு.
தே ன் சிந்துமே வாழ்வு.
௦௦௦
நெய்தல் பாடல்
வாழிய தோழி கடலின்மேல் அடிவானில்
கரும்புள்ளியாய் எழுதப்படும்
புயற் சின்னம்போல
உன் முகத்தில் பொற்கோலமாய்
தாய்மை எழுதப்பட்டு விட்டது.
உனக்கு நான் இருக்கிறேனடி.
இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை
உப்புக் கடலாக்காதே.
புராதன பட்டினங்களையே மூடிய
மணல் மேடுதான் ஆனாலும்
தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட
இங்கு தன் முட்டைகள
நெடுநாள் மறைக்க முடியாதடி.
விரைவில் எல்லாம்
அறியபடா திருந்த திமிங்கிலம்
கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்
அதனால் என்னடி
இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.
அஞ்சாதே தோழி
முன்பு நாம் நொந்தழ
மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான்.
ஆனாலும் காதல் அவனை
உன் காலில் விழ வைத்ததல்லவா.
ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்
முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்
குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்
கரிசனை இருந்ததல்லவா.
ஆறலைக் கள்வர்போல
சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்
நீர்ப் பறவைகள் எங்கே போவது.
இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல
அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்
உண்மைதான் தோழி.
ஆனாலும் அஞ்சாதே
அவன் நீருக்குள் நெருப்பையே
எடுத்துச் செல்லவல்ல பரதவன்.
அதோ மணல் வெளியில்
முள்ளம் பன்றிகளாய் உருழும்
இராவணன்மீசையை
சிங்களக் கடற்படையென்று
மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.
இனிக் கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி.
No comments:
Post a Comment