சிறுவர் கதை
அமுதா
நான்காம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர்
அகிலன். அவன் ஒரு வால்பையன். எப்போதும் ஏதாவது அட்டகாசம் செய்வான். அதனால் அவனை
அமுதாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. சாப்பிடும்போது அவளுடைய தட்டிலிருந்து எடுத்து
சாப்பிட்டு விடுவான். அவளுடைய புத்தகத்தில் கிறுக்கிவிடுவான். அவளுடைய பென்சிலை எடுத்துக்
கொள்வான். இப்படி நிறைய வால்தனம் செய்வான்.
ஒருநாள்
அவர்களின் தெருவில் “பொதுச்சந்தை” நடக்கப் போவதாக அறிவிப்பு
வருகிறது. “பொதுச்சந்தை என்றால் என்னப்பா?” என்று அப்பாவிடம் கேட்டாள் அமுதா.
“நமக்கு தேவையில்லாத பழைய பொருட்களை நம்ம வீட்டு வாசலில் வைத்து
விற்கலாம். வேறு யாருக்காவது அந்த பொருள் தேவைப்பட்டால், காசு
கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இதனால் நமக்கும் காசு கிடைக்கும். அவர்களுக்கும்
குறைந்த விலையில் பொருள் கிடைக்கும்.” என்றார் அப்பா.
“ஹையா ஜாலி! நான்
என்கிட்ட இருக்கிற குதிரை பொம்மைய விற்கப்போறேன்” என்று
துள்ளிகுதித்து வெளியே போனான் அகிலன்.
அமுதாவுக்கோ
குழப்பமாக இருந்தது.
“நம்மகிட்ட தேவையே இல்லாத பழைய பொருள் என்ன இருக்கு?” என்று யோசித்துப் பார்த்தாள். திடீரென ஒரு யோசனை வந்தது. “நம்ம அண்ணன் தான் நமக்கு தேவையே இல்லாத பொருள். அதனால் அவனையே
வித்துடலாம்” என்று முடிவுக்கு வந்தாள்.
ஒரு பெரிய
அட்டையில் “அண்ணன்
விற்பனைக்கு” என்று எழுதினாள். அவன் செய்யும்
அட்டகாசங்களை அதில் வரைந்தாள். வீட்டுக்கு வெளியே அந்த அட்டையை வைத்தாள். அதன்
பக்கத்தில் அவளும் நின்றாள்.
சந்தைக்கு
வந்தவர்கள் அமுதாவின் விளம்பரத்தைப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் யாரும் அவளது
அண்ணனை வாங்கவே இல்லை. அவள் சோகமாக இருந்தாள். அப்போது ஒரு பாட்டி அமுதாவின்
அருகில் வந்தார்.
“உன் அண்ணனையா விற்கப்போற?”
“ஆமாம் பாட்டி” என்றாள் அமுதா
“எதுக்காக விற்கப்போற?” என்று கேட்டார் பாட்டி
“அவன் பெரிய வாலு. ரொம்ப அட்டகாசம் செய்றான். எனக்கு ரொம்ப தொல்லை
கொடுக்குறான்…” என்று அமுதா சொன்னாள்.
“ஐயயோ! இவ்ளோ மோசமான பையன் எனக்கு வேண்டாம். ஆளைவிடு…” என்று பாட்டி ஓடிவிட்டார்கள்.
அவளது
அண்ணனை எதற்காக யாருமே வாங்கவில்லை என்பது அமுதாவுக்கு இப்போது புரிந்தது.
அண்ணனைப் பற்றி மோசமாக அவள் எழுதியதை அழித்தாள். அண்ணனிடம் இருக்கும் நல்ல
குணங்களை யோசித்து எழுதினாள்.
“என் அண்ணன்
எனக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்வான்”
“என்னோடு
விளையாடுவான்”
“என்னை பள்ளிக்கு
கூட்டிப் போவான்”
“என்னுடைய
மீனுக்கு உணவு போடுவான்”
அகிலனின்
நல்ல குணங்களைக் காட்டியது அந்த விளம்பர அட்டை.
அதைப்
பார்த்ததும் அமுதாவுக்கு பக்கத்தில் வந்தாள் ஒரு சிறுமி.
“உன் அண்ணன் ரொம்ப
நல்லவனா இருக்கானே. என்ன விலை?” என்று கேட்டாள் அந்த
சிறுமி.
“வெறும் 5 ரூபாய்தான்” என்றாள் அமுதா.
அந்த
சிறுமி 5
ரூபாயை எடுத்து அமுதாவிடம் கொடுத்தாள். அதை கையில்
வாங்குவதற்குள், “அமுதா… அமுதா…”
என்று தூரத்தில் அவளது அண்ணன் அகிலனின் குரல் கேட்டது. இரண்டு
கைகளிலும் இரண்டு ஐஸ்கிரீம்களை எடுத்துக்கொண்டு அமுதாவிடம் ஓடிவந்தான் அகிலன்.
“அமுதா! நான்
என்னோட குதிரை பொம்மையை விற்று இந்த ஐஸ்கிரீம்களை வாங்கினேன். இந்தா ஒன்னு உனக்கு.
இன்னொன்னு எனக்கு. வா சாப்பிடலாம்.” என்றான் அகிலன்.
“இவன்தான் உன்
அண்ணனா? நான் எடுத்துக்கலாமா?” என்று
அந்த சிறுமி கேட்டாள். ஆனால் அதனைக் கவனிக்காமல் அமுதாவும் அகிலனும் ஐஸ்கிரீம்
சாப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் மகிழ்ச்சியாக சென்றனர். அமுதாவுக்கு அவளோட அண்ணனை
விற்கவேண்டாம் போல.
No comments:
Post a Comment