தமிழகத்தின் நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல்,
சமூகவியல், மானுடவியல், சூழலியல், ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும் உள்ளடக்கினவாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர்
வாழ்வியலையும், விலங்குகள் அவர்தம் மனவெளியிலும்,
புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக்
கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின்
அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக
மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல் விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு
ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான்.
அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச்
செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன், உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்தில்
முயல் பற்றிய பதிவுகள்
சங்க இலக்கியத்தில் முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பற்றிய
பதிவுகள் காணப்படுகின்றன. அதில் முயல் பற்றிய பதிவு சங்க இலக்கியத்தில் பதினெழு பாடல்களில்
காணப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் ஐந்நிலப்பாகுபாடுகளில் ஒன்றான முல்லை
நிலத்தில் காடும் காடு சார்ந்த சூழலில் இயற்கையான தாவர உணவுப்பொருட்களை உண்டு வாழ்ந்த
முயலினை மனிதன் தன் உணவுத் தேவைக்காக வேட்டையாடி உண்டு மகிழ்ந்து வந்தான் என்ற செய்தி
பல்வேறு பாடல்களில் புலப்படுகிறது.
முயல்
வளர்ப்பு நவீனவாக்கச் சூழல்
இன்றைய நவீனக்காலச் சூழலில் இறைச்சிக்காகவும்,
தோல் மற்றும் உரோமத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும், அழகுக்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று
வருகின்றது. நம் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில்
முயல் வளர்ப்பு பல்கிப் பெருகி வருகின்றது. அதில் குறிப்பாக தருமபுரி மாவட்டம் முயல்
வளர்ப்பில் முதலிடம் வகிக்கிறது. இம்முயல் வளர்ப்பில் பல்வேறு வகையான இனங்கள் காணப்படுகின்றன.
அவை சிறியவை, நடுத்தரமானவை, பெரியவை. உலகெங்கும்
உலவித் திரிகிற முயல்களில் இதுவரை 38 தனி இனங்களும், 87 வகைகளும் காணப்படுகின்றன.
மக்கள் தொகைப்பெருக்கம், வியாபார நோக்கம்,
மருத்துவத் தேவைகள் போன்றவைகளுக்காக முயல்களை விரைவில் சினையுறச் செய்து அதிகமான குட்டிகளை
ஈட்டி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் முயல்கள் பல்வேறு விதமான நோய்க்கு ஆளாகின்றன.
தமிழரின்
விலங்கியல் அறிவு
பண்டைத் தமிழன் விலங்கியல் அறிவுடையவனாகக் காணப்படுகின்றான். எந்தச் சூழ்நிலையில்
எந்த விலங்கு வாழும் என்பதை நன்கு ஆராய்ந்து ஐவ்வகை நிலப்பாகுபாடுகளை வகைப்படுத்தி அதற்கு ஏற்ப கருப்பொருட்களை
வடிவமைந்துள்ள பாங்கு போற்றுதலுக்குரியதாகும். அவன் உயிரினங்களின் வகைப்பாடுகளை ஆண்மரபு பெண்மரபு என்று பிரித்து அவற்றின் அறிவியல் உண்மைகளையும், செயல்பாடுகளையும், தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்து
நம் சங்க இலக்கியங்களில் பதிவுசெய்துள்ளான். இதே போன்று தொல்காப்பியர் முயலிற்கு குட்டி,
குருளை, பறழ் என்ற பெயர்கள் சுட்டியுள்ளார்.
“நாயே
பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை என்ப”1
“குட்டியும்
பறழுங் கூற்றவண் வரையார்”2
மேலே கூறப்பட்ட நூற்பாக்களில் நான்கு வகை உயிரினங்களுக்கு குட்டி, குருளை, பறழ்
என்ற இளமைப்பெயர்களைத் தொல்காப்பியர் சுட்டியுள்ள பாங்கால் அவரின் விலங்கியல் அறிவு
தெளிவுபடுவதை அறியமுடிகிறது.
சங்க
இலக்கியத்தில் முயலின் வாழ்விடம்
சங்க இலக்கியம் முதல், கரு, உரி என்ற முப்பொருளின்
பின்புலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவ்வகை நில அமைப்பு அமைந்துள்ளன.
ஒவ்வொரு நிலத்திற்கும் முதற்பொருளைத் தீர்மானித்த பின்பு அந்நிலச் சூழலிற்கு ஏற்ப மக்கள்,
பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை,
யாழ், பண் போன்ற கருப்பொருட்களை வகுத்துக்
கொண்டான். அந்த வகையில் முல்லைநிலக் காட்டுப் பகுதியில் வாழும் முயலின் வாழ்விடங்கள்
பற்றி செய்திகள் சங்கக் கவிதைகளில் இடம் பெற்றுள்ளன. முல்லைநிலக் காட்டுப்பகுதிகளில்
ஓடித்திரிந்த முயல் மனிதனின் வருகையை அரிந்து அங்கும் இங்குமாக ஓடித்திரிந்ததாக அகநானூறு
பதிவு செய்துள்ளது.
“காடுஉறை
இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை கவரீஇ குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும்”3
இப்பாடல் காட்டில் வசிக்கும் இடையன், தன்
ஆடுகளை ஒரே இடத்தில் கூட்டுவதற்காக நாக்கை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியைக் கேட்டு
அஞ்சி, குறுமுயலானது மரத்தடிப் பொதுவிடத்தில் உள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும்
செய்தியை அறியமுடிகிறது. மேலும், புறத்தைக் காக்கும் காவலர்களின் குறுந்தடியின் ஓசையைக்
கேட்டு பூக்கள் நிறைந்த முல்லைக் காட்டில் ஒடுங்கி இருந்த முயல்கள் அஞ்சி அகன்றோடின.
“மாலை
வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்”4
இப்பாடல்
வரிகளின் மூலம் முயலின் வாழ்விடம் முல்லை நிலம் என்பதை அறியமுடிகிறது. அழகிய முல்லைக்
காட்டில் தாவிக் குதித்து ஓடி விளையாடும் காட்சி அகநானூறு 384 ஆம் பாடலில், இயற்கை
எழில்மிகுந்த முல்லைக் காட்டில் முயல் வாழ்த்தை அறியமுடிகிறது.
மருத
நில வயல்வெளியில் எலிவேட்டைக்குச் சென்ற சிறுவர்கள் வில்லை எடுத்து ஆரவாரிக்கும் போது
பெரிய கண்ணையுடைய சிறுமுயல் அங்குயுள்ள கரிப்பிடித்த பாத்திரங்கள் உடையுமாறு தாவிச்
சென்றது.
“பெருங்கண்
குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றிப் பாயும், வன்புலத்துவே”5
முல்லை நில வயலில் விளைந்த வரகினை உண்ண,
முயல் தன் பெண் முயலோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்து அங்குயுள்ள கொடிகளின் மறைவில் உறங்குவதை
அகநானூறு 284 ஆம் பாடல் புலப்படுத்துகிறது. முல்லை நிலத்தில் வரகு அறுவடை முடிந்த வயல்வெளியில்
எலிதிரியும், அதனைப் பற்றிக்கொள்ள குறும்பூழ்ப் பறவையின் ஆராவாரத்தைக் கண்ட குறுமுயல்
அஞ்சி ஓடும் போது கரிய கிளையையுடைய இருப்பைப் பூ உதிர்வதை புறநானூறு 384 ஆம் பாடலின்
மூலம் முயலின் வாழ்விடம் வயல்வெளியிலும் இருப்பதை அறியமுடிகிறது.
சங்க
இலக்கியத்தில் முயலின் வாழ்விடமானது இயற்கை எழில்மிகுந்த அழகிய முல்லைக்காட்டையும்,
உற்பத்தி பொருள் வளம் நிறைந்த அழகிய மருத வயல்வெளியையும் வாழ்விடமாகக் கொணடுள்ளதை மேற்கண்ட
சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. இன்றைய நவீனவுலகக் காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கம்,
தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி தேவை, உலகமயமாக்கல் போன்றவைகளின் காரணத்தால்
காட்டு வாழ்யிரினங்களின் வாழிடத்தை
மக்கள் தன்வயப்படுத்திக் கொண்டு அதன் இயற்கைச் சூழலை மாற்றி அமைத்து விடுகின்றனர்.
சங்கப்
புலவரின் கற்பனைத்திறன் (உவமையாக்கல்)
சங்கப்
புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியவர்கள். அவர்கள் விலங்கு, பறவை, தாவரங்கள்
இவைகளின் உடலுறுப்புகள் பற்றி இயல்புகளை நுனித்தாய்ந்த ஆழ்ந்த
அறிவுடையவர்களாகத் திகழ்கினறனர். தம் பட்டறிவிற் கண்டுணர்ந்தவற்றை வேறொரு பொருளுக்கு உவமையாகத் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்குச் சான்றாக தொல்காப்பியர்,“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”6 என்ற நூற்பாவில் உவமையும்
பொருளும் ஒத்தன என்று உலகத்தரை மகிழ்ச்சி செய்தல் வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.
பண்டைத் தமிழன் நுண்கலைகள் பற்றிய நுண்ணிய அறிவுயுடையவனாக திகழ்கின்றான்.“நுண்கலை என்பது
கலைஞன் நிறையுற அனுபவித்த, அல்லது கண்ட, அல்லது கற்பனை செய்த அல்லது எண்ணிய ஒன்றைத்
தனது சொந்த உணர்ச்சிகளையும் தோற்றப்பாடுகளையும் கலந்து மற்றவர்க்கு உணர்த்தும் வாயிலாகும்
என்று டி. ஜி. டக்கர் என்பார் கூறியுள்ளார்”7 என்பதை மு. வ.
கூறுகிறார்.
சங்க
இலக்கியத்தில் புலவர்கள் தங்கள் கண்ட இயற்கைப்பொருட்களைப் பற்றி நுண்ணறிவுக் கொண்டு,
வேறொரு இயற்கைப்பொருட்களுக்கு உவமையாகக் கூறி தன் கற்பனைத் திறன் வெளிப்படுத்தியுள்ளனர்.
நம் ஊரில் மழைக்காலம் முடிந்துவிட்டது. உழவுத்தொழிலும் நின்றுவிட்டது. கலப்பைகள் சும்மா
கிடக்கின்றன. வானத்தில் வெண்மையான மேகங்கள் சூழ்ந்துகொண்டு காணப்படுவதை, குறுமுயலின்
நிறத்தை ஒப்புமைப்படுத்தி கூறியுள்ளதை,
“மழைகால்
நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து”8
எனும் அகநானூறு பாடல் வழி வானத்தில் நிலவும்
வெண்மேகங்களை குறுமுயலின் நிறத்தோடு உவமையாக்கியுள்ள கூறுபாடு தெளிவாகிறது. மேலும் குறவர்கள்
தினைப்புனைத்தை முற்றாக அழித்து விட்டு, புதியகொல்லை உருவாக்க தினைகளை எரிக்கும்
போது உருவாகும் புகைநிழலின் நிறத்தை முயலின் நிறத்தோடு உவமையாக்கியுள்ளதை, “இதைமுயல்
புனவன் புகைநிழல் கடுக்கும்”9 என்னும் பாடலடி மூலம் அறியமுடிகிறது. முயலின் கண்ணை கூர்மையான ஆறலைக் கள்வர்களின் கண்ணோடும்,
நீருக்குள் விழும் மழைத்துளியின் குமிழியோடும் உவமைப்படுத்தியுள்ளதை,
“கடுங்கண்
ஆடவர் ஏமுயல் கிடக்கை”10
“நீருள்
பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொருட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்”11
காட்டு வழியில் வலிமை பொருத்தி வழிப்பறி
கள்வர்கள் அம்பு எய்யும் முயற்சியோடு கூர்மையான கண்களை வைத்து விலங்குகளை வேட்டையாட
தயாராக இருப்பார்கள் அதைப் போன்று கூர்மையான
கண்ணையுடைய முயல் என்றும், நீருக்குள் விழுந்த மழையின் பெரிய துளியால் ஏற்பட்ட குமிழிபோன்ற
உருண்ட விழியமைந்த கண்ணையும், கரும்நிறப்பிடரி அமைந்த தலையையும், பெரிய செவியையும்
உடைய சிறுமுயல் என்று உவமையாக கூறுகின்றனார் சங்கப் புலவர்கள். இம்முயல்களுக்கு இப்பெயர் வந்தமைக்கான காரணத்தை பி. எல். சாமி அவர்கள்
“தமிழ்நாட்டில் காணப்படும் காட்டு முயலுக்கு விலங்கு நூலார் Blacknaped Hare என்று பெயரிட்டுள்ளனர். இப்பெயர்
இம்முயலிற்குள் கழுத்தில் உள்ள கருப்பு நிறப்பகுதியின் காரணமாக வந்தாகும்”12 என்பதை கூறுகிறார்.
சங்கப் புலவர்கள்
தான் கண்ட ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து
கவனித்து அதனை பிரிதொருப் பொருளோடு உவமையாக்கும் திறன் போற்றுதலுக்கூரியது. அவன் அவனோடு
இயைத்து வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இயற்கைப்பொருட்கள், பிற உயிரினங்கள் போன்றவற்றின் உடலுறுப்புகளின் வடிவங்களை நன்கு கூர்ந்துநோக்கும் திறமை கொண்டவனாகப்
புலப்படுகிறான். முயலினை வானத்தில் தெரியும் வெண்மேகங்களோடும். ஆறலைக் கள்வர்களின் கண்ணையை முயலின் கண்ணோடும் உவமையாக்கியுள்ளதை அறியமுடிகிறது.
பண்டைத்
தமிழரின் விருந்தோம்பல் பண்பும் வேட்டையாடுதலும்
சங்கத் தமிழர்கள்
விருந்தினரைப் போற்றுவதைத் தலையாய கடமையாக ஏற்றுச் செயல்பட்டனர். பண்டைத் தமிழரின் விருந்தோம்பல் பண்பு தலைசிறந்த நாகரிகப்பண்பாகும். அவர்கள் உறவினர்கள், நண்பர்கள், புலவர்கள், எதிர்ப்பட்டவர்களை விருந்தோம்பி மகிழ்ந்த
செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்துள் விருந்து என்னும்
இலக்கிய வகைமைக்கு தொல்காப்பியர் விளக்கம்
தருகையில் “விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே”13
என உரைக்கின்றார். ஆதனடிப்படையில் விருந்து
என்பதற்குப் புதுமை என்று பொருள் கொள்வோமானல் புதிதாக வருபவர்களை விருந்தினர்களாக ஏற்று
விருந்தோம்பல் செய்வது என்பது விளங்கும்.
சங்க கால மக்கள் தங்களின் உறவினர்கள் அல்லாது
மற்ற புலவர், பாணர்களுக்கு புலால் உணவிட்டு விருந்து உபசரித்ததை சங்கப்பாடல்கள் தெளிவுப்படுத்துகின்றன.
கிள்ளிவளவன் தன் சுற்றத்தரோடு இளமையான கொழுத்த முயலின் இறைச்சியை உண்டு மகிழ்ந்து வந்தான்.
“பால்
பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயல் கொழுஞ்சூடு கிழ்ந்த ஒக்கலொடு”14
இப்பாடல் வரிகளின் மூலம் குறுமுயலின் இறைச்சியை
தன் சுற்றத்தரோடு அரசன் உண்டு மகிழ்ந்த செய்தியைக் காணமுடிகிறது. மேலும் சுட்ட முயல்கறியின்
உணவை பாணர்களுக்கு விருந்தாளித்த செய்தி புறநானூற்றில் 319 ஆம் பாடல் வழி அறியமுடிகிறது.
பொருள் இல்லாத சுற்றத்தினர்க்கு வேண்டிய பொருளினை அரசன் கொடுத்தாகக் கூறப்படும் செய்தி,
வளமான மலரினின்று இறக்கிய மதுவும், குறிய முயலின் தசையோடு கலந்து தந்த நெய்ச்சோற்றையும்,
நெற்கூட்டில் இருந்து வேண்டுமளவு எடுத்துக் கொண்ட உணவுப்பொருட்கள் போன்றவைகளை அரசன்
சுற்றத்தினர்க்கு கொடுத்தாக புறநானூறு 396 ஆம் பாடல் புலப்படுத்துகிறது.
சங்ககால மனிதன் தன் உணவுத்தேவைக்காக ஒரு
நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குச் சென்று உணவுத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான்.
அவன் முயல் போன்ற விலங்கின் மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்துள்ளான்.
“மென்புலத்து
வயல் உழவர்
வன்புலத்துப் பகடு விட்டுக்
குறுமுயலின் குழைச் சூட்டோடு
நெடுவாளை அவியல்”15
இப்பாடல் வரிகளின் மூலம் முல்லை நிலத்தில்
தம் எருதுகளை மேயவிட்டுச் சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடு
பழையச்சோற்றை உண்ட மருத நில உழவன் பற்றி செய்தி அறியமுடிகிறது
சங்ககால
மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக விலங்குகள்,
பறவைகளை தந்திரமாக வேட்டையாடியுள்ளான். “முயலின் இறைச்சி மிக்க மெதுவானது என்பர்.
அதனால் விரும்பி உண்பர். முயலின் இறைச்சியின் சுவையை நோக்கியே ‘முயல் விட்டுக் காக்கைதிலை’ என்ற பழமொழியும் தோன்றின. நூயை நட்புக் கொண்டால் நல்ல முயல் இறைச்சியைத்
தரும் என்பது நாயைக் கொண்டு முயல் வேட்டையாடும் வழக்கிலிருந்து தோன்றிது.” 16 என்பதை
பி.எல். சாமி அவர்கள் ஒரு விலங்கினை இன்னோரு விலங்கைக் கொண்டு வேட்டையாடும் பழக்கம்
இருந்துள்ளதை கூறுகிறார். அதில் சிறு விலங்கான முயலினை வேட்டையாடியுள்ளதைக் கீழேயுள்ள
சான்று மூலம் அறியமுடிகிறது.
“நெடுஞ்செவிக்
குறுமுயல் போக்க அறவளை
கருங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த எம்பர்”17
பிளந்த வாயையுடைய நாய்களோடு பசுமையான புதர்களை
அசைத்து, வேலி ஓரத்தில் தப்பி ஓடும் முயல்கள் செல்ல முடியாதபடி தொடர்ந்து வலைகளை மாட்டி முள்ளுடைய
தாமரை மலர்களின் பின்பகுதி போன்ற நிறமுடைய நீண்ட செவிகளையுடைய சின்ன முயல்களை அவை போவதற்கு இடமின்றி மறித்துப்
பிடிப்பர். மேலும் முயலை எறிந்து கொண்டு வந்த
வேட்டுவன் பற்றிச் செய்தி நற்றிணை 59 ஆம் பாடலில் காணப்படுகிறது.
பண்டைத் தமிழன் விருந்திருக்கு மாமிச உணவு விருந்தாக அழித்துள்ளதை
சங்கப்பாக்களின் வழி அறியமுடிகிறது. மேலும் தன் உணவுத்தேவைக்கு விலங்குகளை வேட்டையாடுதல்
தமிழனின் மரபாக இருந்துள்ளதை தெளிவுப்படுத்துகிறது.
சங்கப் புலவர்கள் வகுத்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐவகை நிலப்பரப்பில் முல்லை நிலத்தை வாழ்விடமாகக்
கொண்டுள்ள முயலைப் பற்றிய பதிவுகள் பதினேழு
பாடல்களில் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடலிலும் முயலைப் பற்றி வௌவேறான கருத்தாக்கங்கள்
காணப்படுகின்றன. சங்கப்புலவன் ஊர்வன, பறப்பன,
அஃறிணை, உயர்திணை போன்ற ஒவ்வொரு உயிரினங்களின் உடலுறுப்புகள் அதன் வடிவமைப்புகளை கூர்ந்து
நோக்கும் திறன் போற்றுதலுக்குரியது. சங்க இலக்கியத்தில் முயல் முல்லை, மருத நிலத்தினை
வாழ்விடமாகக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. சங்கப் புலவர்கள் முயலினை வானத்தில் நிலவும்
வெண்மேகங்களின் நிறத்தோடும், வயலில் தினையை
எரிக்கும் போது உண்டாகும் புகைநிழலின் நிறத்தோடும் உவமையாகக் கூறியுள்ளனர். பண்டைத் தமிழன் தன் உணவுத்தேவையைப்
பூர்த்தி செய்ய தன்னோடு ஊடாடிய வாழ்ந்த முயலை வேட்டையாடி தானும் உண்டு உறவினர்கள், புலவர்கள், பாணர்களுக்கு விருந்தாக படைந்துள்ளான் என்பதை சங்கக்
கவிதை வழி அறியமுடிகிறது. இன்றைய நவீனயுக காலத்தில் மக்களின் உணவுத் தேவைக்காக விலங்குகளை
இயற்கையாக வளர்க்காமல் ஒரு குறிப்பிட்ட வரைமுறையோடு அடைத்து வைத்து அதற்கு இயற்கைச்
சூழலோ இல்லாமல், விரைவாக சினையுறச் செய்து வளர்த்து விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டிக்
கொள்கின்ற போக்கினை காணமுடிகிறது.
சான்றாதாரங்கள்
1.
தொல். மரபியல், இளம். நூற்பா.552.
2.
தொல். மரபியல், இளம். நூற்பா.554.
3.
அகநானூறு, பா.எ.394.
4.
ஐங்குறுநூறு, பா.எ.421.
5.
புறநானூறு, பா.எ.322.
6.
தொல். உவமையியல், இளம். நூற்பா.279.
7.
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, மு. வ., ப. 335.
8.
அகநானூறு, பா.எ.141.
9.
அகநானூறு, பா.எ.140.
10.
அகநானூறு,பா.எ.365.
11.
புறநானூறு, பா.எ.333
12.
சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி. எல். சாமி, ப.396.
13.
தொல். செய்யுளியல், நூற்பா.540.
14.
புறநானூறு, பா.எ.34.
15.
புறநானூறு, பா.எ.395.
16.
சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி. எல். சாமி, ப.399.
17.
பெரும்பாணாற்றுப்படை, அடி. 115.
No comments:
Post a Comment