“எள்ளல், இளமை,
பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு
தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர். பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள்
வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.
கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து
நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக
கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள்
நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ
என்று அஞ்சிவருந்தியது.
“அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய
கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும்.
மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,
பரத்தையரிடமிருந்து
மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான்.
பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே
எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.
(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள்
ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை
தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)
குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
5 உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.
(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)
தோழி கூற்று (மருதம் - ஊடல்)
குருகிற்கு
அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய
தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த
மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம்
தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும்
சுட்டிச் செல்கிறது. பாடல்வழி அறியலாகும் கருத்து,
Ø
கொக்கிடமிருந்து
தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.
Ø
கொக்கிடம்
மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக்
கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.
Ø
மனித
உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு
சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது.
No comments:
Post a Comment