உலகில்
ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ்
எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும்
கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள்.
சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக்
கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும்.
சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின்
நீதியின் குரல். புதுமையை ஒளியேற்றிய சிந்தனைச் சுடர் திருக்குறள்தான்.
அகமும்
புறமும் தமிழர்களின் ஒப்பில்லா கலைச்செல்வம். நிலவகைக் கோட்பாட்டில் ஐவகை நிலத்தை உணர்த்திய
வாழ்வுமுறைமை. இது இயற்கையுகம் எனலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பொதுமை நோக்கினை நல்கிய புறநானூறு தமிழர்களின் வரலாற்று சித்திரமாயிற்று. இந்நூல்
சமயச்சார்பு, மதச்சார்பு, இனச்சார்பு அற்ற பொதுவுடைமை எனில் மிகையன்று.
மொழி வளர்ச்சி
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளந்து காட்டும் அளவுகோலாகும். ஒரு மொழியில் தோன்றுகின்ற
இலக்கிய இலக்கணங்களே அம்மொழியின் வளர்ச்சியினை மதிப்பிட்டுக் காட்டும். தமிழ்மொழி எப்போது
தோன்றியது என்று யாராலும் வரையறுத்துக் சொல்ல முடியாது. தமிழின் இலக்கண இலக்கியங்களே
உயரிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்க கால, இடைக்கால, நவீன
கால இலக்கியங்கள் என்னும் முப்பெரும் நிலைகளாகப் பகுக்கலாம். அவற்றில் முதன்மையாக நிற்பவை
சங்க இலக்கியங்கள். சங்க கால இலக்கியங்கள் தமிழர் வாழ்வின் பொற்கால இலக்கியங்களாகப்
போற்றுகின்றனர்.
மனித
மனத்தில் தோன்றிய விழுமிய எண்ணங்கள் எல்லாம் சங்க காலத்திலேயே தோன்றியுள்ளன. இது மிகையாகாது.
சங்க இலக்கிய இலக்கணத்தின் வளமையினையும் பெருமையினையும் அஃது உணர்த்தும் என்பது உண்மையாகும்.
காலமாகவும், நிலமாகவும், காலமும் நிலமும் கருக்கொண்டு, கருத்துப் பெட்டகமாக வாழ்பவை
சங்க இலக்கியங்கள். அகப்பாட்டையும், புறப்பாட்டையும் தமிழர்கள் இரு கண்களாகப் போற்றுகின்றனர்.
அக இலக்கியத்தில் ஒருவனும், ஒருத்தியும் உளமொத்து வாழ்கின்ற காதல் வாழ்வினைக் காணலாம்.
சங்க காலத்தில் சமுதாய மக்களிடையே இருந்த காதல் சமயக் காலத்தில் இறைவன்மீது சென்றது.
அது நாளடைவில் மூட நம்பிக்கையின் இருப்பாக மாறிற்று.
புறநானூறு இந்நூல் புறப்பாடல்களைக் கொண்ட நானூறு பாடல்களின்
தொகுப்பாகும். பண்டைத் தமிழர்களின் வரலாற்றை காண்பதற்கு மிக்கத் துணை புரிகின்றது.
சேர, சோழ, பாண்டியர் எனும் பேரரசர்களையும், கடையேழு வள்ளல்கள், புலவர்கள் தம் வரலாறுகளையும்
நாகரிகப் பண்புகளையும் நன்கு விளக்கவல்ல நூலாகும். பண்டைத் தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி
மக்கள் நாகரிகச் சிறப்பிலும், பண்பாட்டு மேன்மையிலும் மிகச் சிறந்து விளங்கினார்கள்
என்பதை புறநானூற்றில் அறிய முடிகிறது.
வரலாற்றுச்
சான்று
பாரத
வரலாறு கிமு 1000ல் நடைபெற்றதாக கொள்ளலாம். இப்புறப்பாட்டில் கண்ட தருமபுத்திரன், அவனைப்
பாடிய கோதமனார் இவர்கள் காலம் கிமு 1000 ஆகும்.
‘அலங்குளைப் புரவி
ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட
பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும்
பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம்
வரையாது கொடுத்தாய்’ (புறநானூறு.3)
என்று பாராட்டப்பெறும் சேரர் பெருந்தகை
பாரத காலத்தவன் என்பது மேற்கூறிய வரிகளால் புலனாகிறது.
‘எங்கோ வாழிய குடுமி,
தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன்
வயிரியக் கீத்த
முந்நீர் விழவின்
நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி
மணலினும் பலவே’ (புறநானூறு.
2)
எனப் புறநானூறு வடிவலம்ப நின்ற பாண்டியனைக்
குறிப்பிடுகிறது.
‘உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது
கற்றல் நன்றே’ (புறநானூறு. 183)
எனக் கல்வியின்
மேன்மை குறிப்பிடப்பெறுகின்றது. கீழ்க்குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவன் கல்வி
கற்றால் உயர்ந்தவனாகின்றான். இச்செய்தியினை,
‘வேற்றுமை தெரிந்த
நாற்பாலுள்ள
கீழ்ப்பால் ஒருவன்
கற்பின்
மேற்பால் ஒருவனும்
அவன்கட்படுமே’ (புறநானூறு 183)
எனக் குறிக்கின்றது. புறநானூறு சிறந்த
வரலாற்றுச் செய்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிலங்குகின்றது.
பண்டைத் தமிழகத்தில் மூன்று பேரரசுகளும்,
அவற்றின் அகத்தும், புறத்தும் பல சிற்றரசுகளும் விளங்கின. மண்ணாசை, பொன்னாசை, புகழாசை
முதலியவற்றால் இவர்கள் ஒருவரோடு ஒருவர் ஓயாது போர் புரிந்து வந்தனர்.
போர்முறை
‘போர்’ என்னும்
சொல்லுக்குத் தமிழர் கொண்டிருந்த பொருளே அவர்கள் போர்முறைல் கொண்டிருந்த அறத்திணைப்
புலப்படுத்துகின்றது. ‘போர்’ என்னும் சொல் காரண இடுகுறிப்
பெயராக வழங்கப்பெறுகிறது. போர் என்னும் சொல் ‘பொரு’ என்னும்
வேர்ச்சொல் அடியாகப் பிறந்த பெயர்ச் சொல்லாகும். ‘பொரு’ அல்லது
‘பொருதல்’ என்பதற்கு ஒப்புதல், ஒத்திருத்தல் என்று பொருளாகும்.
‘பொருநன்’ என்பது ‘தனக்குப் பிறர் உவமமாவதன்றித் தான் பிறர்க்கு
உவமிக்கப்படுவான்’ என்றும் பொருள் கொள்ளலாம். தமிழ் மக்கள்
ஒத்த திறலுடையாரையும், ஒத்த படையுடையாரையுமே எதிர்த்துப் பொருவதே போராகும் என்ற கொள்கையுடையவர்
என்பது புலனாகும்.
அறப்போர்கள்
மெலியாரை வலியார் தாக்கி வெற்றி கொள்வது இழிவாகக்
கருதப்பட்டது. ஒரு வீரன் போர்க்களத்தில் படை தாங்கிப் போர்த்தினவெடுத்து நின்றான்.
ஒரு யானை தன்னைச் செலுத்துவோன் இன்றித் தனியே நின்றது. அந்த யானை பகைவனுடையே யானை ஆகும்.
பகைவனுடைய யானையாக இருந்தாலும் அதனிடத்துப் போர் புரிவது தனக்கு இழுக்கென்று கருதுகின்றான்.
இதைத் தவிர இன்னும் ஒரு காரணத்தை அவன் கற்பித்து கூறுகின்றான்.
‘................................ யானை
ஒருகை யுடைய தெறிவலோ
யானும்
ஒருகை சுமந்து வாழ்வேன்’
என்று அவன் தனக்கு இரண்டு கைகள் இருப்பதையும்
யானைக்கு ஒரே கை இருப்பதையும் சுட்டிக்காட்டி அதனோடு போரிடுவது தவறு என்று உணரும் வீரனின்
செவ்வி அவன் போர் முறையில் கொண்டிருந்த அறத்தினைத் தெளிவாக்குகின்றது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர்
முறையில் கொண்டிருந்த அறத்திணை நெட்டிமையார் என்னும் சான்றோர்.
‘ஆவும் ஆனியற் பார்ப்பன
மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும்
பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங் கடனிறுக்கும்
பொன்போற் புதல்வர்
பெறாஅ தீரும்
எம்மம்பு கடுவிடுதும்
நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும்
பூட்கை மறத்தின்’ (புறநானூறு 9)
மேற்கண்ட பாடல் போரின் கொடுமையிலிருந்து
பாதுகாக்கப்பட வேண்டியவர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. தாமமாக உணர்ந்து அரண் தேடிக்
கொள்ளவியலாத பசுக்களைத் தாமே கவர்ந்து வந்து ஓம்பினார்.
ஆநிரைப்போர்
பகைவர் நாட்டு ஆநிரைகளைக்
கவர்ந்து வருதலே போரின் முதற்கட்டமாகத்
தொல்காப்பியர் கூறியிருப்பதும் எண்ணத்தக்கது.
‘வேந்துவிடு முளைஞர்
வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற்
றாகும்’ (தொல் -
5)
எனத் தொல்காப்பியர் வகுத்திருக்கும்
நூற்பாவிலும் அறமணம் கமழ்கின்றது. கண்ணகி சிலப்பதிகாரத்தில் சீற்றமுற்று மதுரை மாநகரை
எரிக்க முற்பட்ட பொழுதும்
‘பார்ப்பார், பசு,
பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி’
என்னும் இவர்களை எரிக்காது. ‘தீத்திறத்தோர்
பக்கமே சேர்க’ என ஏவிய அறப்பண்பும் நினைக்கத்தகும்.
செங்குட்டுவன்
போர்
சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் படையெடுத்துக்
கனகவிசயரை வென்று அவர்கள் தலையிலே கல்லேற்றிய வரலாறும் உண்டு. போர் கடுமையாக நடந்து
கொண்டிருந்தபோது உயிருக்கு அஞ்சிய வடநாட்டு வீரர்கள் மாறுவேடம் அணிந்து கொண்டு ஓடி
ஒளிந்த கதையும் சிலம்பில் காணலாம்.
‘சடையினர் உடையினர்
சாம்பற் பூசினர்
பீடிகைப் பீலிப்பெரு
நோன் பாளர்
பாடு பாணியர் பல்லிய தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்து வாளொழியத்
தாம்துறை போகிய
விச்சைக் கோலத்து
வேண்டுவயின் திரிதர’
என விளங்குகின்றது. தமிழ் வீரர் சடைமுடி
தரித்தாரையும் நீறு பூசினாரையும், புத்த சமணத் துறவியர்களையும், இசைக் கலைஞர்களையும்,
கூத்தர்களையும் கொல்லமாட்டார்கள் என்பதனை மேற்கண்ட சிலம்புப் பகுதி உணர்த்துகின்றது.
வீரப்புண்
பண்டைத் தமிழர்கள் தம் வீரத்தை அவர்கள்
தம் போரிலும், போர் முறையில் கொண்டிருந்த அறச் செயல்களிலும் காணலாம். போர்க்களத்தில்
முகம் அல்லது மார்பில் ஏற்படும் காயங்களையே விழுப்புண்ணாகக் கொண்டனர். மற்ற இடங்களில்
ஏற்படும் புண் புறப்புண்ணாகக் கருதப்பட்டது. புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்
நீத்தனர். கரிகால் பெருவளத்தானுக்கும், பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிறப் பறந்தலை என்ற
இடத்தில் நடந்த கடும்போரில் பெருஞ்சேரலாதன் புறப்புண் பட்டுவிட்டான். இதனைப் பொறாது
அவன் வடக்கிருந்து உயிர்விட்ட நிலையினையும் கரிகால் பெருவளத்தான் வீரத்தையும்
‘நளியிரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வவிதொழி லாண்ட உரவோன்
மருக
களியியல் யானைக்
கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின்
ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு
நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப்
பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திடப்
புறப்புண் ணாணி வடக்கிருந்
தோனோ’ (புறநானூறு
- 7)
என வரும் புறப்பாடல் புலப்படுத்துகிறது.
அரசன் தன் படைவீரர்களுக்குப் பகைவர்களைக் குறித்துக் காட்டிப் போருக்கு ஏவாமல், வீணே
காலத்தைப் போக்குவான். ஆனால், வீரர்கள் தம்மில் பொருதாயினும் சாகலாமென்று ஆர்ப்பரித்துத்
தம்முடைய பூரித்த தோள்களைத் தட்டி உடற்கரிப்பர். இந்த நிகழ்வை
‘உட்பகை யொருதிறம்
பட்டெனப் புட்பகை
கேவா னாகலிற் சாவாம்
யாமென
நீங்கா மறவர் வீங்குதோள்
புடைப்ப’ (புற நானூறு - 8)
எனப் புறநானூற்று வரிகள்
தெரிவிக்கின்றன. உலகின் எப்பகுதியில் போரிட வாய்ப்புக் கிடைத்தாலும் சென்று
போரிட்டனர். தூரம் தொலைவு என்றெல்லாம் புறநானூற்று hல வீரர்கள் பயந்ததில்லை. இதனை நம்பும்படி
சான்று பகிர்கிறது.
‘போரெனிற் புகழும்
புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வே மல்லே மென்னர்’
(புறநானூறு - 9)
நம்புலன் உறுப்புகளுள் மிகவும் நுண்ணியதாய்
விளங்கும் கண்ணை நோக்கி ஒரு வேல் பாய்ந்து வந்தாலும் கண்தன் இமைகளைச் சற்றே அசைப்பதும்,
ஒரு வீரனுக்கு இழுக்கு என்று கருதினர் பண்டைய வீர மறவர்கள்.
‘குழவி யிறப்பினும்
ஊன்தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற்
றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் தீரிஇய
கேளான் கேளிர் வேளாண்
சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீ
தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈனம் ரோவிவ் வுலகத்
தானோ’ (புறநானூறு - 11)
என்னும் சேரமான் கணைக்காலிரும்பொறை பாடிய
புறப்பாடல் தமிழர் தம் வீரத்திற்குச் சிறந்த உரைகல்லாகும். அக்காலத்தில் திருமணங்கள்
தமிழர்தம் வீரத்திற்கு சவாலாக அமைந்திருந்தது. ஏறு தழுவுக நிகழ்வு வீரத்தின் சின்னமாயிற்று.
கொடையே
பிறவிக் குணம்
அரசமரபில் பிறவிக் குணமாகவே கொடைப்
பண்பினைக் காணலாம். சேர சோழ பாண்டியரும், கடையேழு வள்ளல்களும் கொடை வண்மையில் சிறந்து
விளங்கினர். பொன்னும் பொருளும் நிறையவே வறியவர்களுக்கு வாரி வழங்கி உள்ளனர். தம்மைச்
சார்ந்தோர் விரும்புவனவடற்றை அவர்கூறும் முன்னர்த் தாமே ஈந்தனர். பகைப்புலத்தோர் தந்த
திறைப்பொருளை இரவலர், பாணர், விறலியர்ப முதலியோர்க்குத் தந்துள்ளனர்.
‘நெய்யுறப் பொறித்த
குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலன் நிறைந்த
மணநாறு கேறல்
பாம்புரித் தன்ன
வான்பூங் கலிங்கமொடு
மாரிஅன்ன வண்மையிற்
சொரிந்து’
என்னும் வரிகள்,
நெய்யில் பொரித்த உணவு, தேறல், கலிங்கம் ஆகியவற்றைக் கைமாறு கருதா மாரியை ஒத்து வாரித்
தந்தனர் என்பதை அறிவிக்கும்.
‘தன்பெருமையின் தகவு
நோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்றுநிறையும் நிரையென்
கோ
மனைக்களமரொடு களமென்
கோ
ஆங்கவை, கனவென மருளவல்லே
நனவின்
நல்கி யோனே நகைசால்
தோன்றல்’ (புறநானூறு - 12)
எனும் குண்டுகட்பலியாதனார்
கூற்றால் மாநிரை, களமரொடு களம் ஆகியவற்றைத் தன்பெருமையின் தகுதிநோக்கிக் கனவோ நனவோ
என மருட்சி எய்த மன்னர் ஈந்தனர் என்பதை அறியலாம். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கொடையுணர்வு
நம் உள்ளத்தெல்லையும் இறந்து நிற்கின்றது. அவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து கிடக்கின்றான். அவனைக் காணுதற்குக் கழாத்தலையார் என்னும்
சான்றோர் அங்கு வருகின்றார். அவனைப் போர்க்களத்தில் காணுதல் அவர் நோக்கமே அன்றிப் பரிசு
பெறுதல் அன்று, எனினும், எந்நாளும் புலவர்க்குப் பொருள்தந்து போற்றிய அப்புகழோன் உயிர்நீங்கும்
நிலையில் போர்க்களத்துக் கிடந்த அக்காலத்தும் தன் கழுத்திலிருந்த முத்தாரத்தை ஈந்தனன்
என்றால் உயிர்நீங்கும் அளவும் அரசர் இப்பண்பினின்றும் மாறியோரல்லர் என்பது புலனாகின்றது.
வள்ளன்மை
முதிர மலைத் தலைவன் குமண வள்ளல்.
தனது தம்பியால் நாட்டினைத் துறந்து காட்டில் வாழ்ந்தான். அவனைக் கண்டு பெருந்தலைச்
சாத்தனார் பாடினார். தன்னைப் பாடிய புலவர் வெறுங்கையோடு திரும்பிச் செல்லும் நிலைக்கு
வருந்தினான். தன்னிடம் சிறந்த பொருள் அப்போது இல்லாமையின்,
‘பாடுபெறு பரிசிலன்
வாடினன் பெயர்தல்என்
நாடுழந் ததனினும்
நனியின் னாது’
என்று கூறி
தன் உடைவாளை உருவிப் புலவரிடம் கொடுத்துத் தன் தலையைக் கொய்து தம்பியிடம் கொடுத்துப்
பொருள் கொள்ளச் சொல்கின்றான். வையாவிக் கோப்பெரும் பேகனின் கொடை வன்மையைப் பரணர்,
‘வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற்
பேகன்
கொடை மடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர்
படைமயக் குறினே’
(புறநானூறு - 142)
என எடுத்துரைக்கின்றார்.
வரையாது வழங்கு முகத்தால் பேகன் மாரி போலக் கொடை மடம் படுவதன்றி வேந்தர் படைமடம் படுதல்
இலன் என்கின்றான். கபிலர் வேள்பாரியின் கொடை வன்மையைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.
‘சேயிழை பெறுகுலை
வாணுதல் விறலி’
(புறநானூறு - 105)
என வேள்பாரியிடம் விறலியை ஆற்றுப்படுத்துகின்றார்.
‘மடவர் மெல்லியர்
செல்லினும்
கடவன் பாரி கைவண்
மையே’ (புறநானூறு - 106)
எனக் கபிலர்
வேண்டுவன நல்கும் பாரியின் கைவண்மையை எடுத்துரைக்கிறார்.
கொடைக் குறித்த சான்றுகள் புறநானூற்றுப்
பாடல்கள் ஏராளம்.
இல்லறம்
போற்றல்
சமூக வளர்ச்சிக்கு இல்லற வாழ்க்கையில்
நாட்டமும் நன்மக்கள் பெற்றெடுத்தலில் தேட்டமும் இன்றியமையாகும். துறவறத்தைவிட இல்லறம்
இனிதெனக் கண்டான் தமிழன். அவன் குழந்தைகளை ஆண்/பெண் பேதம் பார்த்து அன்பு செலுத்தியதில்லை.
பால்மணம் மாறா பச்சிளங் குழந்தையை அருகில் வைத்தால் இன்பம் வேறு எவ்வுலகிலேதான் கிட்டும்?
ஒருவனுக்கு எத்தகைய செல்வம் இருந்தாலும் மக்கட் செல்வம் இல்லாது போனால், இவ்வுலகில்
இன்பமும் இல்லை வாழ்க்கையும் இல்லை என எடுத்துரைக்கிறது புறநானூற்று பாடல் ஒன்று.
‘படைப்புபல படைத்துப்
பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ
ராயினும் கிடைப்படக்
குறுகுறு நடந்து
சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங்
கல்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில்
மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை
யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைதாம்
வாழு நாளே’ (புறநானூறு - 178)
காதல் பாலம்
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே காதலையும்
குடும்ப பிணைப்பை ஏற்படுத்த வல்லவை குழந்தை. குழந்தையின் பேச்சு மதியை மயக்கச் செய்யும்
ஆற்றலுள்ளவை. குழந்தையின் பேச்சு கோடியின்பம் காண்பர் பெற்றோர். மழலை மொழியிலே மனம்
திளைத்தவர் யாழையும் விரும்பமாட்டார்.
‘யாழொடு கொள்ளா பொழுதொடும்
புணரா
பொருளறி வாரா வாயினுந்
தந்தையர்க்
கள்வந் தனவாற் புதல்வர்தம்
மழலை’ (புறநானூறு - 92)
என்கிறது ஔவையாரின் பாடல் ஒன்று. இத்தகைய
உள்ளமே தமிழ்ச் சமுதாய நிலையுயர்த்த பாடுபடுவார்கள். நல்ல குழந்தைகளைப் பெற வேண்டியது ஒவ்வொருவர் கடமையாகும்.
சமூகக்
கடமை
ஒரு சல்ல சமூகம் நல்ல நிலையை அடைவதற்கு
ஒவ்வொருவர் ஆற்ற வேண்டிய கடமையை பொன்முடியார் என்னும் பெண்புலவர் வரையறைத்துள்ளார்.
பிள்ளையைப் பெறுவது தாயின் கடமை, நல்லோனாக்கி அறிவைப் புகட்டுவது சான்றோனாக்குவது தந்தையின்
கடமை. அரசாங்க மேன்மைக்கும் நாட்டின் நன்மைக்கும் உழைக்கத் தூண்டுவது அரசின் கடமை.
வீரனாய் ஆண்மகனாய் நாட்டின் புறப்பகை, உட்பகை களைந்து நாட்டுக்கு புகழைச் சேர்க்க வேண்டியது
ஒவ்வொரு ஆண்மகனின் கடமை என்பதை கருதிற்று புறப்பாடல்.
`ஈன்று புறந்தருதல்
என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல்
தந்தைக்கு கடனே
. . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
ஒளிறுவா ளருஞ்சமம்
முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே’
(புறநானூறு - 312)
`வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக்
கடனே’ என்பதை சிந்திப்போமாயின் சில உண்மைகள் புலப்படும். தொழிலாளரும்
பாட்டாளிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைத்தல் வேண்டும். அப்போது தான் அரசாங்கம்
நல்லபடி செயல்படும்.
கடமை
செய்தல்
இக்காலத்தில் நடப்பதுபோல் வேலை நிறுத்தங்கள்
நடக்குமானால் நாடு எப்படி உருப்படும்? மக்கள் சான்றோர் ஆகுவது எப்படி? எல்லாம் நிலை
கவிழ்ந்துவிடும். இதன் பொருள் கொண்டே `வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே’ என்று பாடி வைத்தாள் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னே அந்த ஞானி. வேல்
என்பது பலவகைக் கருவிகள் எந்திரங்கள், தொழிற்சாலை, பண்டங்களைக் குறிப்பிடுவதாகும்.
எல்லா வகையான தொழிலாளர்களையும் பொறியியல் வல்லுநர்களையும் குறிக்கும். நாட்டில் அவரவரும்
தத்தமது கடமையை செய்தல் வேண்டும் என்பது பாடல்வழியில் நன்கு விளங்கும்.
உழைப்பே
உன்னதம்
தமிழ்நாட்டில் ஆண் / பெண் பேதமின்றி
வாழ்ந்துள்ளனர். அழுத்தமான நாட்டுப்பற்றும், அசைவிலாத ஆண்மையும், சமூகப் பொறுப்புணர்வும்,
உலக நன்மைக்குப் பாடுபட வேண்டும் எனும் எண்ணமும், உடல் வலிமையும் உடையவர்களாக அன்றைய
இளைஞர்கள் இருந்துள்ளனர். சுறுசுறுப்பான வாழ்க்கையை மேற்கொண்டனர். தமிழன் உடல் வளத்தினை
உரம்பெறச் செய்தான். அதன் நலத்தினைப் பேணினான. இளமையின் எழிலையும், முகப்பொலிவினையும்,
உடற்கட்டினையும் பாதுகாத்தான். இளமையின் காலத்தையும் அழகையும் நீட்டிக்கப் பாடுபட்டான்.
அதற்காக உழைத்தான்.
கல்வியின்
உயர்வு
உண்டு தொழுத்தால் போதாது நல்லறிவும் வேண்டும். மக்களை நல்ல
அறிவுடையவனாய் செய்தல் தந்தையின் கடமையாயிற்று.
தமிழன் அறிவைப் போற்றினான். அறிவாளியைப் பாராட்டினான். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான
கல்வியை போற்றினான். கல்வி இழிநிலை உள்ள ஒருவனை மேனிலைக்கு உயர்த்திவிடும். வயதில்
மூத்திருக்கின்ற ஒருவனுக்கு மரியாதை கிடையாது, கல்வி உள்ளவன் இளையோன் ஆயினும் அவனுக்கு
பட்டம் பதவி தேடிப்பிடித்து கொடுத்தனர். பெற்ற பிள்ளைகளை ஒற்போற் பேணும் தாய்கூட கல்விக்
கற்றவனிடத்தே தனி அன்பு செலுத்துவாள். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகவேயிருக்கும்.
அக்காலத்தில் ஆசிரியர்களை குரு என்றே அழைத்தனர். அவர்களிடம் பாடம் / வித்தை கற்க பொருள்
கொடுத்தும், வழிபாடு செய்தும், அவர்களது துன்பம் துடைத்து உதவி செய்தும் எந்த விதத்திலும்
கல்வியைக் கற்றல் வேண்டும் என்று கருதினர் தமிழர்கள்.
நல்லோரால்
நாடு
உடல்வலிமை, அறிவாற்றல் இருந்தால்
போதாது. நல்ல பண்பும் ஒழுக்கமும்
அவர்களோடு பொருந்தி அமைய வேண்டும். மழை
பெய்து நிலம் செழித்தால் மட்டும் ஒரு நாடு நல்ல நாடாகாது. அந்நாட்டு மக்களின் குடிநலனைப்
பொருத்தே நல்ல நாடு அமையும். காடு திருத்தி, நாடு திருத்தி, நல்ல நிலம் கெட்ட நிலம்
என மதிப்பிட்டு அழைத்தாலும் தீயோர் வாழ்ந்தால் நல்ல நிலம் ஆகாது. நல்லோர் வாழ்ந்தால்
அதனை நல்ல நிலம் என்பர். ஒரு நாட்டின் ஏற்றத்தாழ்வு அங்குவாழும் மக்களைப் பொருத்தே
அமையும். நாடு மேன்மையுறுவது அந்நாட்டு மக்களைப் பொறுத்தேயிருக்கிறது. இயற்கையை நன்கு
அறிந்து அதற்கேற்ற வினைகளை உழைப்பெடுத்து மக்கள் செய்வாராயின் அது நல்ல நிலமாக விளங்கும்.
சோம்பேறிகள் வாழும் நிலம் பயனின்றிப் பாழாய்க் கிடக்கும். அந்நிலத்தைக் குறைகூறிப்
பயனில்லை. அங்கு வாழும் மக்களின் குறையே குறையாகும். இவ்வுலக இயற்கையை ஔவையார் எடுத்து
விளக்குகிறார்.
`நாடா கொன்றோ கடா
கொன்றோ
அவலா கொன்றோ மிசையா
கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே’ (புறநானூறு -
187)
பிறர்வாழ
எண்ணுதல்
மனிதன் ஒரு
சமூகப் பிராணி என்பர். எந்த மனிதனும்
இவ்வுலகில் தனித்து
இயங்கவல்ல ஆற்றல் கிடையாது. கூட்டுறவோடு
வாழ்வதே மனித சமூகம். நல்லோர்க்குப் பெய்த மழை எல்லோர்க்கும் பயன்படுவதுபோல், சமூகம்
முழுமைக்கும் இன்பமும் செழிப்பும் உண்டு. தான் மட்டும் வாழ வேண்டும், பிறர் எப்படியாவது
ஒழிந்து போகட்டும் என்ற தன்னலக் கொள்கை சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய
மனப்பான்மையை வெறுத்தது தமிழ் உள்ளம். அன்றைய தமிழன் பொதுநலப் பணியே தன் பணியாகக் கொண்டு
அதற்காகவே பாடுபட்டான். அவனிடத்தில் ஊக்கமும் உழைப்பும் உயர்ந்த நோக்கமும் இருக்கும்.
இருட்டு வாணிபமும், திருட்டுக் கொள்ளையும் சுருட்டிப் பதுக்குதலும், பிரட்டு பித்தலாட்டமும்
தமிழனுக்கு பிடிக்காதனவாகும்.
ஈதல்
வாழ்வு
இல்லையே என்று பிறரிடம் கட்டு அலைந்தவனில்லை
தமிழன். இரத்தலை இழிநிலையாகக் கருதினான். செல்வவாழ்வு வாழும் மனிதன் செய்ய வேண்டியது
பிறர்க்குக் கொடுத்தல், இதுவே வாழ்க்கையின் உயர்ந்த நிலையும் குறிக்கோளும் ஆகும்.
‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதியமில்லை உயிர்க்கு’ என்பது
வள்ளுவ வேதம். அவ்வாறு கொடுத்த இடத்தும், அதனைக் கொள்ள மறுப்பது மிகமிக உயர்ந்த நிலையாகும்.
அதுபெருமிதமும் ஆண்மையும் நிறைந்த சீரிய நிலை ஆகும். இன்னுயிராயினும் கொள்ளுதல் தீது,
கொடுப்பது நன்று என்பதே தமிழின் கோட்பாடு.
‘ஈயென விரத்த லிழிந்தன்
றதனெதிர்
ஈயே னென்ற லதனினு
மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த
லுயர்ந்தன் றதனெதிர்
கொள்ளே னென்ற லதனினு
முயர்ந்தன்று’ (புறநானூறு - 104)
பொதுநல
உலகம்
தமிழன் தேவாமிர்தம் என்றாலும்கூட
தனியே உண்ணும் பழக்கம் பண்டைய
நாட்களில் இருந்ததில்லை. அவன் பிறர்
கையை எதிர்ப்பார்த்து வாழவும் மாட்டான். பழியுடைச் செயல்கண்டு பதறுவான். இவ்வுலகமே
கிடைப்பதாயினும் தீமை புரிய அவன் மனம் இடம் கொடுக்காது. பொது நலப்பணிக்கு தன் வாழ்க்கையை
உரித்தாக்கினான். தன்னலம் பேணுதலை இழிதொழிலாகக் கருதினான். அத்தகைய கொள்கையாளரைக் கொண்ட
சமூகமே உருப்படும், முன்னேறும், முதன்மை அடையும். பொதுநல பணிபுரியும் மக்கள் பெருகி
இருப்பதாலே இவ்வுலகம் அழியாது வாழ்கின்றது. பிறர் இன்பம் காண்பது தனக்கின்பம் என்றே
எண்ணினர். பிறர் நல்லமுறையில் வாழத்தான் உழைத்தான் தமிழன். இதனை கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி
என்னும் பாண்டிய மன்னன் தமிழனுடைய உள்ளச் சிறப்பினையும், பண்பாட்டினையும், குற்றமில்லாக்
குறிக்கோளினையும் புறநானூற்றில் போற்றியுள்ளதைக் காணலாம்.
`உண்டால் அம்மஇவ்
வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதெனத்
தமியர் உண்டலு மிலரே
முனிவிலர்
துஞ்சலு மிலிர்புறர்
அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங்
கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங்
கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர்
உண்மை யானே’ (புறநானூறு - 182)
எதிர்வினைகள்
நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை
செய்தால் தீமை விளையும். இதனை சந்தேகமின்றி திரிபற ஆய்ந்து கண்டவன் தமிழன். அவற்றை
இல்லையென்று மறுப்பவர் என்றும் தீமையே புரிந்தொழுகும் தீத்தொழிலாளராய்த் திரிதருவர்
என்பதனையும் உணர்ந்தான். அவர்கள் சமூகத்தையே கெடுப்பவர்கள் ஆதலால் அவர்களுடன் கூடுதல்
ஆகாது என்றும் எச்சரித்தான்.
`நல்லதன் நலனுந்தீய
தன் தீமையும்
இல்லை யென்போர்க்கு
இன்னா கிலியர்` (புறநானூறு - 29)
கைம்மாறு வேண்டாக்
கடப்பாடு உடையவர் தமிழர். இப்பிறப்பில் செய்வது மறுபிறப்பிற்கு உதவும் எனக் கருதிப்
பொருளை விலையாகக் கொடுத்து, அதற்கு அறங்கொள்ளுதல் இழிவான செயலாம். தமிழனுக்கு ஈகையும்
நற்செயல்களில் நாட்டமும் இயல்பான வாழ்க்கையாயிற்று.
நல்லன
செய்தல்
மேலுலக வாழ்க்கையின் பயன்களைக்
கருதாது இவ்வுலகத்திலே இன்பம்
எய்தும் விதமாய்த் தன் பெயர் என்றும்
நிலைத்திருக்கும் முறையில் ஒருவன் நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். இவ்வுலகம் மிகப்
பொல்லாததுதான். இன்பமும் துன்பமும் நிறைந்தது. ஒருபக்கம் அழுகையும் இழவு, ஒருபக்கம்
மணமும் விழவும், ஒருபக்கம் காதல், ஒருபக்கம் சாதல், ஒருபக்கம் விருந்தும் எக்களிப்பும்,
ஒருபக்கம் பசியும் பட்டினியும். உலகைப் படைத்தவன் சீராகப் படைக்கவில்லை என்பதை நேராகக்
கூறச் சிலர் அஞ்சுவர். அது உண்மை என்பதை மனத்தினில் உணர்வர். சிலர், உலகைப் படைத்தவன்
பண்பில்லாதவன். இந்த உலகம் கொடிதுதான் என்போரும் உண்டு.
துன்ப உலகிலே இன்பம் காண்பதுதான்
அறிவாளியின் செயல். உலகியலை நன்குணர்ந்தோர் அதன் இன்னாமையை இனிதாகக் கொள்ளுதல் வேண்டும்.
தீயனவற்றைக் களைந்து நல்லனவற்றையே செய்தல் வேண்டும். வீணாக உலகியற்றியவனைக் குறைகூறிப்
பயனில்லை. அவன் படைத்த இன்னா உலகையும் இனிதாகச் செய்வோம். இன்பத்தையே காண்போம் என்பதே
அன்றைய தமிழரின் நெஞ்சம்.
`படைத்தோன் மன்றஅப்
பண்பிலான்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந்
தோரே’ (புறநானூறு - 194)
ஊழ்?
மனித ஆற்றலை கடந்த ஒரு சக்தி உலகினை
ஆட்டிப் படைப்பதாக தமிழன் உணர்ந்தான். அது ஓர் ஒழுங்கியல் நெறியில் ஒழுகிவருவதால்
`ஊழ்’ என்று பெயரிட்டான். அது மலைச் சரிவில் ஓடும் ஆற்றைப்
போன்றதாம். அவ்வெள்ளத்தில் அகப்பட்டது போன்றே உயிர்கள். அந்த ஊழை பழகிக் கொண்டு நட்பாக்கிக்
கொள்ள வேண்டுமாம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில்லை பயனில்லை. எந்த ஊரும் தமது
ஊர்தான். எந்த நாடும் நமது நாடுதான். நாம் ஒருவரிடமும் பகை கொள்வது ஆகாது. எல்லோரையும்
தமது உறவினர்களாகவே மதிக்க வேண்டும். பெரியன் என்று புகழ்வது, சிறியவன் என்று இகழ்வதும்
கூடாது. ஒருவனை ஒருவன் ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. இன்பமும், துன்பமும்
ஒருவர் கொடுத்து பெறுவனவல்ல. அது, நமது செயலிலே வருவன.
தெளிந்த
வாழ்வு
இறப்பைப் பற்றி
அஞ்சவேண்டியதில்லை என்று பிறந்தோமோ
அன்றே
இறப்போம் என்பது நிச்சியமாகிவிட்டது.
இறப்பு என்பது புதிதன்று. அது ஒரு சிலருக்கே உரியதுமன்று. ஆறிலும் சாவுதான், நூறிலும்
சாவுதான். நமக்கு இடுக்கண் வரும்போது மனதைத் தளரவிடுதல் கூடாது. வாழ்விலும், தாழ்விலும்
ஒத்த மனத்தாராய் ஒழுகப் பயலுதல் வேண்டும். கடமையை சரிவரச் செய்து நல்லனவற்றிலே நாட்டம்
செலுத்தினால் வந்த துன்பம் தானாக மறைந்துவிடும். தடுக்க முடியாத ஊழையும் ஏவலின் வரையிலே
நிறுத்திவிடலாம். இவ்விதம் வாழ்க்கையை அறிந்து தெளிந்து வாழ்ந்தவன் தான் புறநானூற்று
தமிழர்கள்.
`யாதும் ஊரே யாவருங்
கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர
வாரா
. . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . .
. . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . .
பெரியோரை வியத்தலு
மிலமே
சிறியாரை யிகழ்ந்த
லதனினு மிலமே’ (புறநானூறு -182)
உழவு
மக்கள் உயிர் வாழ்வதற்குரிய இன்றியமையாதவை
உணவு. தொழில்களுக்கெல்லாம் உயிர்நாடியானது உழவுத் தொழில். உழுவார் மற்றத் தொழிலாளர்க்களுக்கெல்லாம்
அச்சாணி. உலகத்திற்கே உழவன் தான் ஆணி ஆகிறான். பசிவந்திடப் பத்தும் பறந்து போய்விடும். இந்தக் கொடுமையிலிருந்து
– உறுபசியிலிருந்து – மக்களைக் காப்பாற்றுவது உழவுத் தொழிலே ஆகும். `பொருபடை தரூஉம்
கொற்றமும் உழவர் ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே’ எனப் புறநானூறு
கூறுவதால் மன்னனது வெற்றிக்கும் புகழுக்கும் உழவர்கள் காரணமாவர். மன்னர்கள் ஏரி, குளம்,
வாய்க்கால்களை வெட்டி உழவுத் தொழிலை வளப்படுத்தினர். கரிகாலன் காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கினான். குடபுலவியனார் என்னும் சான்றோர்,
`நீரின்ற மையா யாக்கை
யெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே
உணவெனப் படுவது நிலத்தொடு
நீரே
நீரும் நிலனும் புணரியோ
ரீண்டு
உடம்பும் உயிரும்
படைத்தி சினோரோ
வித்தி வானோர்க்கும் புன்புலங்
கண்ணகன்
. . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
தள்ளா தோரி வண்தள்ளா
தோரே’ (புறநானூறு - 77)
என உழவுத் தொழிலின் மேன்மையினையும்,
அதனைப் பெருக்கும் வழியினையும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துரைக்கிறார்.
ஆடை
தமிழன் உணவுக்கு அடுத்தபடியாக மனிதனது
இன்றியமையாதது உடை என வைத்துள்ளான். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் ஆவான். வரலாற்றுக்
காலத்திற்கு முன்பிருந்தே தமிழர் ஆடை நெய்தலில் புகழ்ப்பெற்றனர். பாபிலோன் கல்வெட்டு
ஒன்றில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான பொருள்களின் பெயர்கள் உள்ளன. அது தமிழ்நாட்டில்
நெய்யப்பட்ட ஆடையைக் குறிக்கும் சொல்லாகும். பன்னெடுங்காலமாக ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட
வரலாறு உண்டு.
வகைகள்
பருத்தி ஆடை தோன்றுவதற்கு முன்பு
இயற்கையாலான தோலாடை, மரப்பட்டையாடை, இலையாடை முதலிய ஆடைகளைப் பயன்படுத்தினர். பிற்காலத்தில்,
பருத்தியினால் நூல் நூற்று ஆடை நெய்யத் தொடங்கினர். அறுவகை வாணிகன் இளவேட்டனார் சிறந்த
புலவராகவும் திகழ்ந்தார். பெரிய நகரங்களில் நெசவாளர் தெருவுகள் இன்றும் காணலாம். ஆடை
நெய்வதற்குப் பட்டும், மயிரும் பயன்பட்டன.
பெண்பாலார் நீண்ட ஒற்றைஆடை உடுத்தி வந்தனர். இவ்ஆடைகள் மக்களது செல்வ
நிலைக்கும், தகுதிக்கும் தக்கபடித் தரந்தரமாய் இருந்தன. கூறை, நல்லாடை, பட்டாடை என
மூன்று தரங்கள் திவாகர நிகண்டில் குறிக்கிறது. வறுமையினால் வருந்தி ஒருவனது ஆடையினைப்
புறநானூறு,
`வேற்றுஇழை நுழைந்த
வேர்நனை சிதாஅர்’
(புறநானூறு - 69)
என்று குறிப்பிடுகிறது. இதற்கு மாறாகச்
செல்வத்தில் மகிழும் மன்னர் முதலியோருடைய ஆடை,
`போதுவிரி பகன்றைப்
புதுமலர் அன்ன
அகன்ற கலிங்கம் உடீஇச்
செல்வமும்’ (புறநானூறு
- 393)
என்று நல்லிறையனார் பாடியுள்ளார். தற்காலத்தார் வழங்கும்
உடுப்பு பண்டைக்
காலத்தார் அறியாத உடைகள். தமிழகத்திற்கு
வந்த யவனர்கள் சட்டை அணிந்திருந்தனர். அவரது சட்டையை `மெய்ப்பை’ என்றழைத்தனர்.
ஆடைகள் மென்மையும், நேர்த்தியும் கொண்டு விளங்கின. பாம்பின் மேல் தோல் போன்றும், மூங்கிலின்
உட்புற வெண்தோல் போன்றும் ஆடைகள் இருந்தன. அவற்றின் இழைகள் கண்ணுக்குத் தெரியாதவனாய்
விளங்கின.
`புகைவிரிந் தன்ன
பொங்குதுகில் உட்கி’
`ஆவி யன்ன அவிர்நூற்
கலிங்கம்’
என்று புறநானூறும் பல சான்று பகர்கின்றன.
தச்சுவேலை
தச்சர் `மரங்கொல் தச்சர்’ என்றழைக்கப்பெற்றனர்.
இவர்கள் கலை நுணுக்கமும் பயின்றவராய் விளங்கினர். வீடுகளின் நிலைகள் கலை நுணுக்கங்களோடு
செய்யப்பெற்றன. நிலையின் மேற்பகுதியில் இருபுறமும் செங்கழுநீர்ப் பூவைத் தாங்கிய பிடிகளைக்
கொண்ட திருமகள் உருவத்தை அமைத்தனர் என்று நெடுநல்வாடை கூறுவதோடு அரசமாதேவியின் கட்டிலின்
வனப்பை நாற்பது ஆண்டுகள் நிறைந்ததும் போரில் இறந்ததுமான களிற்றின் கொம்புகளைச் சீவி,
கூரிய சிற்றுளியால் பெரிய இலைத் தொழிலை இடையிடையே அமைத்து நிறை சூலியின் பால்கட்டிய
மார்பு போலத் திரண்ட குடத்தையும், உள்ளிப் பூண்டு போன்ற கடைசலையும் கொண்ட கால்களைப்
பொருத்தி மூட்டுவாய்த் தகடுகளை அணியால் தைத்து அழகாகத் தொடுத்த முத்துக் குஞ்சங்களைச்
சுற்றிவரத் தொங்கவிட்டு, புலியின் வரியைக் கொண்ட பொலிவு பெற்ற கச்சினாலே தகடு மறையும்படி
நடுவிடம் முழுவதும் பின்னி அமைக்கப்பட்ட கட்டில் என்றும் கூறுகின்றது.
தேர்
வேலை
மன்னர்களுக்குத் தேவையான தேர்களையும்
தச்சர்கள் செய்து கொடுத்தனர். ஒருநாளில் எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தச்சர்கள் முற்காலத்திருந்தனர்
என்பதை,
`எம்முளும் உளனொரு
பொருநன் வைகல்
எண்மடர்
செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன்
னோனே’
என்னும் வரிகளைக் கொண்டு அறியலாம். படகுகளையும்,
கலையழகோடு செய்தனர். கரி முகமும், அரிமுகமும் கொண்ட அம்பிகள் சிலம்பிலும் பேசப் பெறுகின்றன.
நாவாய், வங்கம் போன்ற பெருங்கலங்களை செய்துள்ளனர். `நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டிவளி
தொழிலாண்ட உரவோன்மருக’ என்ற வரிகள் கருதத்தக்கன. இன்னும்,
பண்டைத் தமிழர்கள் மட்கலத் தொழில், பாய்முடைதல், ஆடை வெளுத்தல், வலியல் அறுத்தல் எனப்
பல தொழில்கள் புறநானூற்று காலத்தில் தமிழர்கள் கற்றுணர்ந்து தொழில்புரிந்துள்ளனர்.
சாதியின்மை
பிறப்பில் சாதிவேறுபாடு கிடையாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்னும் வரி உணர்த்துகின்றன. ஐந்திணை
நில மக்கள் தொழிலாலேயே பிரிக்கப்பட்டனர். குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் இவர்களைத்
தவிர பாணர், கூத்தர் பொருநர் ஆகிய கலைஞர்களும் வாழ்ந்தனர். பாணன், பறையன், துடியன்,
கடம்பன் என்போர் ஒரே இனத்தவராவர். இவர்கள் நன்மை, தீமைகட்குப் பறையும் துடியும் முழக்கினர்.
மன்னரின் செய்திகளை அறிவித்தனர். புலையர், இழிசினர், இழிபிறப்பாளர் என்றெல்லாம் புறநானூறு
குறிப்பிடுகின்றது.
தொழில்கள்
புறநானூற்றில் மக்கள் வாழ்க்கைக்குத்
தேவையான பல தொழில்களையும், தச்சர், கொல்லர், கம்மியர், வண்ணார், குயவர் எனக் குறிக்கப்படுகிறது.
இவர்களெல்லாம் தனித்தனிச் சாதியினர் என்று கூற முடியாது. அன்று ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாகக்
கருதப்பட்டான். ஒழுக்கம், கல்வி அறிவினால் சாதிவேறுபாட்டைக் களைந்தனர் எனலாம். குறவர்
குடியினர் முதல் மன்னர் குடியினர் ஈறாகப் பலரும் கல்வியில் சிறந்திருந்தனர். வெண்ணிக்குயத்தியார்,
குறமகள் இளவெயினி போன்றோர் கல்வி அறிவால் பெருஞ்சிறப்புற்று இருந்தனர். பாணர் குலத்து
அவ்வையாரின் பெருமையை உலகே அறியும்.
விஞ்ஞானம்
பண்டைத் தமிழர் பண்பட்ட வளமார்ந்த
வாழ்வை பெற்றிருந்தனர். வாழ்வில் கொழித்த சிறந்த எண்ணக்குவியல்களின் செம்மைத் தொகுப்பே
அகப்புற இலக்கியங்கள். `எல்லாத் துறையும் இதன்பால் உள’ என்று
சொல்லுமளவிற்கு அனைத்துத் துறைகளும் தன்னகத்தே கொண்டு தனிப்பெருமையுடன் திகழ்கின்றன.
மனிதன் உணர்வுகளால் ஆக்கப்பட்டாலும் உணர்வை அடிப்படையாகக் கொண்டு அறிவுபூர்வமாக இயங்குவது
அறிவியலாகும். மனித மனம் பண்பட்ட அன்றே அறிவியல் தோன்றிற்று. அறிவியல் சங்க காலத்தில்
வளராவிட்டாலும்கூட அதன் கூறுகள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன.
`மாட்சியிற், பெரியோரை
வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே’ (புறம்நானூறு - 192)
`குணம் நாடிக் குறறமும் நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்’
என
வரும் சங்க இலக்கிய வரிகள்
அறிவியல் மாட்சியின் சாட்சியாகும். நிலம், நீர், தீ,வளி, வான் என்னும் பஞ்ச
பூதத்தால் ஆனக் கலவையே உலகமாகும். அவற்றின் பண்புகளையும் அவற்றால் ஏற்படும் நலந்தீங்குகளையும்,
அவற்றை வாழ்க்கைக்குப் பயன்படுத்துமாறு செய்யும் உபாயங்களையும் ஆய்ந்தறியும் அறிவே
அறிவியல் ஆராய்ச்சியின் தொடக்கம் அல்லது கரு எனக் கருதலாம்.
அணு
உலகில் உள்ள
பொருள் அனைத்தும் அணுவால் ஆனவை என்பதும், அணு என்பது ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறு
என்பதும், அந்நுண்ணிய கூற்றையும் பல நுண்கூறுகளாகப் பகுக்கலாம் என்பதும் தமிழ் நூலார்
அறிந்து அணு உண்மையாகும்.
மருத்துவம்
தமிழர் தம் பண்பட்ட வாழ்வில் மருத்துவத்
துறையும், துறையில் பெயர் போன
சான்றோர்கள் பலர் இருந்தனர் என்பதற்கு
`மருத்துவன் தாமோதரனார்’ என்ற பெயரே சான்றாகத் திகழ்கின்றது.
துன்பம் தரத்தக்கவை யாவும் நோய் என்றே குறிப்பிட்டனர்.
நோயினைப் பிணி என்ற பெயராலும் வழங்கினர்.
`பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்’ என்பது பழமொழி. நோய்களில்
எல்லாம் கொடி நோயாகப் பசியே முதன்மையாக விளங்குகிறது. பசிப்பிணி மருத்துவன் என்ற பட்டத்தை
ஒரு வள்ளல் பெற்றுள்ளான். இவ்வுண்மையைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
`பசிப்பிண மருத்துவ
னில்லம்
அணித்தோ சேய்த்தோ
கூறுமின் எமக்கே’ (புறநானூறு - 173)
எனப் பாணர் கூற்றில் வைத்துச் சிறுகுடி
கிழான் பண்ணனைப் பாராட்டியதினின்றும் அறியலாம்.
`உறுபசியும் ஓவாப்
பிணியும் செறுபகையும்
சேராதி யல்வது நாடு’ (குறள் –
374)
என்பது வள்ளுவர் வகுத்த இலக்கணமாகும்.
மருந்து
போர்களத்தில் வீரன்
ஒருவனது புண்ணை ஆற்றுவதற்கு அத்திப்பால்
சிறந்த மருந்தாகப் பயன்பட்டது தெரிய வருகின்றது.
`இறையுறு விழுமந்
தாங்கி யமரகத்து
இரும்புசுவைக் கொண்ட
விழுப்பு ணோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தில்
வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த
யாக்கையன்’ (புறநானூறு - 180)
இப்புறநானூற்றுப்
பாடல் வழியில் அறிவியல் புலப்படுகிறது. அறுவை மருத்துவப் பண்பும் இருந்திருக்கின்றது.
அடிக்கடிப் போர் நடந்தால் புண்பட்டோருக்கு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது.
`மிடற்றில் ஈரம் புலராத பசும்புண்’ என்ற தொடர் குறிப்பிடுகிறது.
`அழுந்துபடு விழும்புண் வழுப்புவாய் புலரா’ என்று நீண்ட நாட்களாக
ஆறாத ஆழமான புண்ணைப் பற்றிக் குறிப்பு உள்ளது. புண்ணில் வைத்த பஞ்சியையும் களையாத துணியுடையவர்
என்பதை,
`. . . . . . .
. . . . . . . . . . குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப்
புண்ணர்’
என்ற நற்றிணை
வரிகள் விளக்குகின்றது. இவ்வரியால் அடிப்பட்ட புண்ணுக்கு மருந்திட்டுப் பஞ்சு வைத்துக்
கட்டும் வழக்கம் இருந்துள்ளமை தெரிகின்றது. பதினெண்கீழ்க்கணக்கில் சிறுபஞ்சமூலம், திகரிகடுகம்,
ஏலாதி என்னும் மூன்று நூல்கள் மருத்துவப் பெயர் கொண்டுள்ளமை நோக்கத்தக்கது.
வான்இயல்
ஆய்வு
பண்டைத்தமிழர் வான இயல் அறிவிலும் சிறந்து விளங்கினர். இக்கருத்தை
சிலேட்டர் முதலான அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.
தமிழர்தம் வானநூலறிவு பண்டைய இலக்கண இலக்கியங்களால் புலனாகிறது. ஆறு பெறும்பொழுதும்,
சிறுபொழுதும் பிரித்துள்ள பான்மையைக் காணலாம். பருவ காலச் சிறப்பினையும், ஏற்படும்
இயற்கை மாற்றங்களையும் தமிழர் நன்குணர்ந்திருந்தனர். வெறுங்கண்ணாலே வானத்தை நோக்கி
மழைபெய்யும் காலம் கண்டறிவோர் கணியர், அறிவர் என்று பெயர் பெற்றனர். நாள், கோள் பற்றிப்
புறத்திணை இயல் பேசுகின்றது. ஒருவர் பிறந்த நாளில் திங்களை அடுத்து எந்த மீன் நிற்கிறதோ
அதுவே அவரது நாண்மீன் எனப்படும். அதற்கு ஏற்ப அவர்களது வாழ்வில் நல்லவை கெட்டவை நிகழும்
என்பதே சோதிட நூல் கொள்கை. தமிழர்கள் விண்ணில் மதி செல்லும் வட்டத்தை இருபத்தியேழு
கூறுகளாய் பகுத்துள்ளனர். அந்த விண்மீன்களின் தொகுதியை `மதிசேர் நாண் மீன்போல’ என்றும், திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை ஒப்ப என்றும் பொருள்
கூறுவர்.
முழுமதிநாளை உவாநாள் என்று அழைத்தனர்.
உவா நாளன்று ஞாயிறும், திங்களும் எதிரா நிற்கும். திங்கள் தோன்றும் பொழுதில் ஞாயிறு
மறையும். இதனை,
`உவவுத்தலை வந்த
பெருநாள் மையத்து
இருசுடர் தம்முன்
நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு’
என்கிறது புறநானூற்றுப்
பாடலின் உவமை ஒன்று. வெள்ளி எனும் விண்மீன் தென்புலத்திற் செல்லுமாயின் மழை வராது என்பது
தமிழர் கண்டறிந்த உண்மையாகும்.
`வெள்ளி தென்புலத்
துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை’ (புறநானூறு
- 339)
என்பதை காணலாம்.
தூமம் என்னும் வால் நட்சத்திரம் தோன்றுவதும் சனி மீன் புகைவதும் தீக்குறிகளாக் கொள்ளப்பட்டன.
பாரியின் பறம்பு நாட்டு வளத்தைக் கூற வந்த கபிலர்,
`மைம்மீன் புகையினுந் தூமந்தோன்றினும்
தென்றிசை மருங்கினும்
வெள்ளி யோடினும்
வயலக நிறையப் புதற்பூ
மலர்’ (புறநானூறு
- 117)
என்பதை கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு பல்வேறு சான்றுகளோடு வானவியல் கருத்தினைப் புறநானூற்றுப் பாடல்களில் அறியலாம்.
அரசியல்
மனிதனுடைய அகப்புற வாழ்வை செம்மைப்படுத்திச்
செல்வது அரசியலாகும். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியே செல்வர். மன்னன் நல்வழியில் சென்று
நாட்டு மக்களையும் நல்லாற்றுப்படுத்த வேண்டும். ஆள்வது அரசு, ஆளப்படுவது குடி. இந்த
இரண்டும் அரசியல் ஆகும்.
இந்தியாவில் திருவள்ளுவர், சாணக்கியர்
என்போர் அரசியல் நுணுக்கங்களை வெளியிட்டுள்ளனர். இன்றும் அவர்தம் நுணுக்கங்கள் போற்றத்தக்கனவாகும்.
புறநானூற்று பாடலில் அரசியல் அமைப்பு, அமைச்சகச் செயல், அரசுரிமை, ஐம்பெருங்குழு, எண்பேராயம்,
அரசனுக்குரிய வரிகள் முதலிய செய்திகளை காணலாம். தமிழர்கள் தம் வாழ்வொழுக்கங்கள் ஐந்து
நில அடிப்படையில் வகுக்கப்பட்டது. அரசர்களை கோ, வேள், கோன் என்றழைத்தனர். அரசன் எல்லா
மக்களுக்கும் தலைவனாக விளங்கினான். பண்டைய குறுநில மன்னர்களில் மூன்றாவதாகத் தோன்றிய
முடிதலைக் கோ என்பவனே முடிசூடி அரசாண்டான் என உணரலாம்.
அரசன்
அரசனே மக்களுக்கு இறைவனாக
விளங்கினான். அரசை ஆள்கின்ற
காரணத்தினால் அரசன் எனப் பெயர் பெற்றான்.
கல்வி, அஞ்சாமை, நுண்ணறிவு, சோம்பலின்மை, சொல்வன்மை ஆகிய பண்புகளை அவன் பெற்றிருக்க
வேண்டும். அவ்வாறு, பெற்றிருப்பவனே, முடிவேந்தனாகவும், செங்கோலரசனாகவும் மதிக்கப் பெற்றான்.
அரசனை ஓர் ஏரியின் மதகுக்கு ஒப்பிடுவார் சான்றோர். அரசு என்பது ஏரி. அரசன் அதன் மதகு.
அரசாங்கம் ஏரியின் வாய்க்கால், குடிமக்கள் விளைநிலம். ஏரி நீரை நேரே நிலத்திற்கு உடைத்துவிட்டுப்
பாய்ச்ச முடியாது. அதுபோல மக்கள் வாழ்க்கை செம்மையடைய அரசனும், அரசாங்கமும் தேவையாகும்.
சங்க கால மக்களுக்கு மன்னனே உயிராக விளங்கினான்.
`நெல்லும் உயிரன்றே,
நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகம்’
எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.
சங்ககால
அரசர்
சங்ககால அரசர்
கல்வி அறிவு படைத்தவராக விளங்கினர். மூவேந்தருள்
பலர் பாடிய பாக்கள் புறநானூற்றில் உள்ளன.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,
`உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முடியாது
கற்றல் நன்றே` (புறநானூறு
- 183)
எனப் பாடுகின்றான். கல்வியின் இன்றியமையாமை
அரசனால் எவ்வாறு உணரப்பட்டது என்பது தெளிவாகிறது.
அரசர்க்குத்
துணை
அரசன் நாட்டில் அமைதியும் அறமும்
நிலவுவதற்குச் செய்ய வேண்டியவை எவையெவை என வரையறுக்கப்பட்டுள்ளது.
`பாஅல் புளிப்பினும்
பகலிருளினும்
நாஅல் வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு’
என உணர்த்தப்பெறும் சுற்றத்தோ கலந்தாலோசித்த
பின்பே செய்வான்.
அரசாட்சி
முறை
அரச உரிமை வழிவழியாக வந்தது. அன்று
தேர்தல் களம் இல்லை. அக்கருத்தினை,
`மூத்தோர் மூத்தோர்க்
கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற்
றாயம்
எனப் புறநானூறு கூறுவதிலிருந்து தந்தைக்குப்
பின்னர் மகன் பட்டத்துக்கு வருவதே முறைமை என அறியலாம். அரசருக்கு ஆண் குழந்தை இல்லாத
காலத்தில்தான் இவ்வழக்கம் தவறியது. எடுத்துக்காட்டாகச் சோழர் பரம்பரையில் வேல்பல் தடக்கைப்
பெருவிறல் கிள்ளியின் ஆட்சி வரை கிள்ளி பரம்பரையினரே உறந்தையிலிருந்து ஆண்டு வந்தனர்.
அவனுக்குப்பின் சென்னிப் பரம்பரையைச் சேர்ந்த உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னி அரசனானான்.
இம்மாற்றம் வேல்பல் தடக்கைப் பெருவிறலில் கிள்ளிக்கு ஆண்மகவு இன்மையால் ஏற்பட்டிருத்தல்
வேண்டும். ஒருவன் அரசாட்சிக்கு வருவது எப்பொழுதும் அமைதியாக நிகழ்ந்தது என்று கூறுவதற்கில்லை.
நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைமை
கொண்டு பலகாலம் போர் புரிந்தனர். அப்போது `கோவூர் கிழார்’ உண்ணுடைய பகைவன் பனை மாலை சூடிய
சேரனுமல்லன்.
வேம்பினை அணிந்த பாண்டியனுமல்லன், உன்னைப் போல் ஆத்தி மாலை சூடியவனே ஆவான் எனக்கு.
`இரும்பனை வெண்டோடு
மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ
னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே
நின்னோடு
பொருவோன் கண்ணியு
மார்மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினுந்
தோற்பதுங் குடியே
இருவீர் வேறலியற்கையு
மன்றே, அதனாற்
குடிப் பொருளன்று
நுஞ்செய்தி’ (புறநானூறு - 45)
இவ்வாறு புறநானூற்றுப் பாடல் அறிவுறுத்துகிறது.
சில நேரம் அரசாட்சிக்கு வரும்பொழுது சிக்கலும் தோன்றுகிறது.
வரி
விதிப்பு
அரசனின் கடமை குடிமக்களைப் பேணலாகும்.
மக்களைப் பேணுதற்கு மன்னனுக்கு பொருள் தேவைப்படுகிறது. இத்தகைய தேவைக்கென வாங்குவதே
வரியாகும். குடிமக்களின் நிலையறிந்து, இயல்பறிந்து வரிவசூல் செய்தனர். இறுக்கும் இறையன்றி
மிக்க இறை பெறுவதை அக்கால ஆட்சியர் வெறுத்தனர். `நான் பகைவரை வெல்லேனாகில் எம்அரசன்
கொடிய வரிபெறும் அரசனென்று குடிமக்கள் கருதிக் கண்ணீர் பரப்பிப் பழி தூற்றம் கொடுங்கோல்
உடையேனாகுக’ என்று பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறுவது
குறிக்கத்தக்கது.
`யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலக
முங்கெடுமே’ (புறநானூறு - 183)
எனக் கூறுவது புறநானூற்று வரலாற்றில்
வரியின் வரலாறாகும்.
பட்டம்
அரசியலிலும், படையிலும் நாட்டின்
நலனுக்காக உழைத்தோனுக்கு பட்டம், பரிசு வழங்கும் முறைமை சங்க காலத்தில் இருந்தது. அரசாங்கச்
செயலுக்கு வழங்கப்பெறும் `காவிதி’ `ஏனாதி’ பட்டம் அளிக்கப்பட்டது. இது போருக்குரிய பட்டமாகும். இச்சொல் சேனாபதி
என்னும் சொல்லினின்று முகிழ்த்தவை.
ஊராட்சி
ஊர் மன்றங்கள் ஊராட்சி முறையினை மேற்கொண்டிருந்தன.
மன்ற உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தம் பகுதிக்குரிய ஒருவரை ஓலை
மூலம் தேர்ந்தெடுத்தனர். வாக்காளரின் ஓலைகள் குடத்தினுள் இடம்பெறும். அக்குடத்தின் மேல் அரசாங்க முத்திரை
வைக்கப்படும். ஆவண மாக்கள்
அம்முத்திரையை
நீக்கி, ஒவ்வோர் ஓலையாகப் படிப்பர். இச்செய்தியை,
`கயிறு பிணிக்குமிழி
ஓலை கொண்மார்
PLN GHUY-LPNO
GHUY-LPIO பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள்’
எனும் பகுதியினால்
அறியலாம். ஊரில் நிகழும் எந்தக் குற்றமாயினும் இம்மன்றத்தினர் தண்டித்தனர். இவ்வாறாக
புறநானூற்று காலத்தில் ஊர்மன்றங்கள் ஆட்சி செய்தன என்பதை மேற்காணும் பாடலால் அறியலாம்.
அறியும்
செய்திகள்
தமிழர்களின் இதயமாகச் சங்க இலக்கியம்,
தொலைநோக்கும் விரிவான உலகப் பார்வையும், எல்லையும் உடையன. தமிழர்களின் வாழ்க்கை முறைமைதான்
உலக அரங்கத்தில் அனைத்து இனத்திற்கும் முன்னோடியாகத் திகழ்கிறது. அதில் திருக்குறள்,
புறநானூறும் பறை சாற்றியுள்ள கருத்துகள் உலகப் பொதுவுடமையைக் காட்டும். மனிதன் வாழ
வேண்டிய வாழ்விக்க வேண்டிய வாழ்க்கைக் கூறுகள், வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள், சட்டத்திட்டங்கள்
அறச்செய்திகள் புறநானூற்றில் வேதம் போலும் உண்டு.
முடியரசைக் கொண்ட பண்டைத் தமிழ் செல்வ
வளனும் படைத்துச் செழித்தோங்கி வளர்ந்து உயர்ந்த உன்னத அடைந்திருந்தது. தமிழ்மக்கள்
பலவித உரிமைகளையும் பெற்று உளங்குளிர்ந்தனர். அக்காலத்தில் மழை வளங்குன்றினும், வெள்ளி
நலை பிறழினும் அரசன் கோல் கோடாது செம்மையுற்றிருந்ததால் நாடு செழித்து, மாந்தர் இன்ப
வாழ்க்கை எய்தினர். குடிகள் அரசனது செங்கோலையே வாழ்த்திப் போற்றினர்.
ஒருவரின் மதிநலம் அவனது உடல்நலம்
பொறுத்தே அமையும். நலிந்து மெலிந்த உடலின் உள்ளே அறிவு சிறந்து பொலிவெய்துதல் முடியாததாகும்.
எனவே, உடற்பயிற்சி அவசியமாகும். புறநானூற்று காலத்தில் அனைத்து அறிவுசார் துறைகளிலும்
தமிழர்கள் சிறந்துள்ளனர். கவி, கலை, உளவளம் ஓங்கி வளர்ந்துள்ளன. பண்டைத் தமிழர்கள்
கலையுள்ளத்தை தாயகமாகப் பெற்றிருக்கும் தமிழ்மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்குத் தடை
என்ன? புறநானூற்று தமிழர்களின் வாழ்வியல் முறை உலகத்திற்கு முன்னோடி நாகரிகமாக அமைந்திருக்கிறது
என்பது திண்ணம்.
பயன்பட்ட
நூல்கள்
1.அரவிந்தன், மு.வை., உரையாசிரியர்கள்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108,
மூன்றாம் பதிப்பு 1995.
2.புலியூர் கேசிகன், சங்கத் தமிழ் இலக்கியம்
- 3, அகநானூறு, புறநானூறு, சாரதா பதிப்பகம், சென்னை-14, ஆகஸ்டு 2012.
3.கணேசன். கு. முனைவர், சங்கத்தமிழ்
செம்மொழி இலக்கியம், மணிமொழிப் பதிப்பகம், சேலம், 2009.
4.சிதம்பரனார்.சாமி, தொல்காப்பியத் தமிழர்,
ஸ்டார் பிரசுரம், சென்னை, 1963.
5.சுப்பிரமணியபிள்ளை .ஜி, தமிழ் உள்ளம்,
மணிவாகர் நூலகம், சிதம்பரம், 1976.
6.துரை அரங்கசமி .மொ.அ., பண்டைத் தமிழ்நெறி,
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1956.
No comments:
Post a Comment