Saturday, February 11, 2017

தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் உளவியலும்

தாய் என்ற சொல் மந்திரச்சொல் அல்ல. ஆனால், மந்திரமாய்ப் போற்றுகின்ற சொல். தாயைப் போற்றுகின்றவன் தெய்வத்தினைப் போற்றுகின்றவன் ஆவான். நேரில் வருகின்ற தெய்வம் போன்றவள்தான் தாய். தாய்க்கு நிகரான உயிர் உலகத்தில் இல்லை.
“மீண்டும் செல்ல முடியாத
கோவில் கருவறை
அம்மாவின் கர்ப்பப்பை!”

என்று புதுக்கவிஞர்கள் கருவறை குறித்துக் கவிதை இயற்றுகின்றனர்.
அறிவியல் ஆயிரம் வடிவத்தில் வந்தாலும், இயற்கையை மிஞ்சும் விதத்தில் செயற்கையில் அற்புதங்களைச் செய்தாலும், தாய்மையை அதனால் உருவாக்க முடியாது.
பெண் முழுமை அடைவதே தாய்மையில் தான். பெண்மையின் சிறப்பும், பேரழகும் தாய்மையில் தான் இருக்கின்றன. அழகும், கவர்ச்சியும் பருவம் ஆட்சி செய்யும் காலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், தாய்மை பருவங்களைக் கடந்து நிற்பது! குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற தாயாக அவள் இருக்கிறாள். சங்க இலக்கிய நூல்கள் பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என ஐவகைத் தாயார்களை அறிமுகம் செய்கிறது.
பருவம் வந்த பெண்பிள்ளைக்கு உதவுபவள் செவிலித்தாய். பருவம் எய்திய பெண்ணின் காதல் உணர்வுகளையும், மன உணர்வுகளையும் குறிப்பால் அறிந்து நற்றாய்க்கும் (பெற்ற தாய்) இல்லத்தார்க்கும் எடுத்துக் கூறி, தலைவிக்கு (அதாவது, அந்தப் பெண்பிள்ளைக்கு) நல்நெறி காட்டுபவளாக அமைபவள் செவிலித்தாய். செவிலித்தாயைக் குறித்து நாற்கவிராச நம்பி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய ஆகும் என்ப”

என்று செவிலித்தாயின் செயல்களை அறிமுகப்படுத்துகிறார்.
வீட்டை விட்டுத் தலைவனுடன் (காதலன்) போன தனது மகளை நினைத்து வளர்ப்புத் தாயான செவிலி, தன்னிடம் வளரும்போது அவளைத் தான் வளர்த்த விதத்தினையும், தன்னிடம் தன் மகள் நடந்து கொண்ட நிலையையும் எண்ணி வருந்திக் கூறியதாகச் சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, “நெருப்பு போன்ற வெய்யில் எரிக்கும் பாலை நிலத்திற்குத் தன் காதலனுடன் மகள் போனதால் செவிலித்தாய் வருந்துகிற” செய்தியை,
“கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
சென்மழை தவழுஞ் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே"
(குறுந்தொகை – 144)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இதில் “காவிய (பூங்கா) மலர்களைப் பறித்தும், கடலில் உள்ள வெள்ளியாய்த் தெரிகிற அலைகளில் விளையாடியும், பிரியாத தோழிமார் தத்தமக்குரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கு உடன்படாமல், விரைந்து செல்லும் மேகங்கள் தவழுகின்ற விண்ணளவு உயர்ந்த மலைகள் கொண்ட நாட்டுக்கு, மெல்லிய பாதங்கள் வருந்த, பருக்கைக் கற்கள் நிறைந்த பாலை வழியே போய்விட்டாளே அவள்!” எனச் செவிலித்தாய் கலங்குவது சுட்டப்படுகிறது. காதல், சுட்டெரிக்கும் வெயிலையும் சுகமாக மாற்றும் வள்ளன்மை கொண்டது என்பதை அறியாமல் வருந்துகின்றாள் செவிலித்தாய். மேலும் செவித்தாய் வருந்துவதைக் குறுந்தொகைப் பாடல்,
“செம்பொற் புனைகலத்து அம்பொரிக் கலந்த
பாலும் பலஎன உண்ணாள்
கோல்அமை குறுந்தொடித் தளிர்அன் னோளே?"
(குறுந்தொகை -356)
எனப் பதிவு செய்கிறது. இப்பாடலில், “செம்பொன்னால் ஆன பாத்திரத்தில் அழகிய பொரியோடு கலந்த பாலை வேண்டாம் என்று சொல்பவள், அழகிய ஆபரணங்கள் அணிந்தவள், மாந்தளிரை ஒத்த மென்மையானவள் என் மகள். வீரங்கொண்ட தலைவன் பாதுகாப்பான் எனக் காதலனோடு போய் நீர் வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட, மிக்க வெப்பத்தையுடைய கலங்கல் நீரைக் குடிக்க எவ்வாறு வலிமை பெற்றாளோ?” எனச் செவிலித்தாய் வருந்துகின்ற நிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
தலைவனோடு கொண்ட அன்பின் காரணமாகத் தாய் வீட்டில் இன்பமாக வாழ்ந்ததைத் துறந்து தன் தலைவனுக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளத் தன்னை மாற்றிக் கொள்வது காதல் கொண்ட பெண்களின் உண்மையான நிலைப்பாடாகும்.
உடன்போக்கில் (வீட்டை விட்டு) சென்ற மகளைத் தேடிச் செல்கின்ற செவிலித்தாய் வழியில் கண்ட செடி, கொடிகளிடமெல்லாம் புலம்பும் நிலையும் இலக்கியத்தில் காட்டப்படுகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் செவிலி வயக்கொடியிடம் தன் வருத்தத்தைச் சொல்வதாகப் பாடல் உண்டு. அதனை,
“வாடினை – வாழியோ, வயலை! – நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினைஅமை வரல்நீர் விழுந்தொடி தத்தக்
கமஞ்சூல் பெருநிறை தயங்க முகந்துகொண்டு
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை? அளியை நீயே"
(அகநானூறு – 384)
என்ற அடிகள் விளக்குகின்றன.
உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடி வழி நெடுகச் செல்கிறாள் செவிலித்தாய். அப்படிச் செல்லும்பொழுது கண்டோர் அவளை நோக்கி, தலைவன் தலைவியின் பெருமையைக் கூறி, ‘வருந்தாதே’ எனச் சொல்லும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே"
(கலித்தொகை – 8)  

என்று கலித்தொகைப் பாடல் செவிலித்தாயை வழியில் கண்டோர் கூற்றினை வெளிப்படுத்துகிறது. இதில், "நாங்கள் அவர்கள் இருவரையும் கண்டோம். ஆண்மையின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்த ஓர் இளைஞனும் சென்றதைக் கண்டோம். அணி புனைந்த மடவாளின் தாயே! நீர் இனி மன அமைதியோடு நும் வீட்டுக்குச் செல்லுக! மணப்பொருள் பலவும் கூட்டிய நறும் சந்தனம், தம் உடம்பில் பூசிக்கொள்ளுமிடத்து அல்லாது, மலையில் பிறந்தாலும் அம்மலைக்கு என்னதான் நன்மை செய்யும்? அது போலத்தான் உன் மகளும். கடலில் முத்துக் கிடைத்தாலும் கடலுக்கு என்ன பயன்? அது அணிந்து கொள்பவருக்கே பயனைத் தரும். உன் மகளும் அப்படித்தான்! யாழில் எழும் இனிய இசை அதை மீட்டுபவர்களுக்கல்லாமல், யாழுக்கு என்ன செய்யும்? உன் மகளும் அது போன்றவள்தான்! ஆகவே நீ வருந்தாமல் செல்வாயாக" என்று கூறுகின்றனர்.
இவ்வாறு உடன்போக்கிலே சென்றுவிட்ட மகளுக்காக வருந்துகிற செவிலித்தாய் குறித்துப் பல பாடல்கள் இலக்கியங்களில் அமைந்துள்ளன. ஆனால், தந்தையின் உணர்வுகள் என்ன என்பது பற்றி எங்கும் குறிப்புகள் இல்லை. பெரும்பாலான பாடல்களில் தாய் உடன்போக்காய்ச் சென்றுவிட்ட மகளின் காதலை எதிர்க்காமல், அவள் தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாளே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் நிலையே காட்டப்படுகிறது.
நற்றிணையில் தலைவி உடன்போக்கு மேற்கொண்டதற்குச் செவிலி வருந்தி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது குறிப்பிடப்படுகிறது.
“ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!”
(நற்றிணை – 148)

என்ற பாடலில், “நான் பல பெண்களைப் பெற்றவளும் அல்ல. ஒரே ஒரு மகளைப் பெற்றவள். அவளோ வலிமை கொண்ட, கூர்மையான வேலைக் கொண்டு போர் செய்யும் இளைஞனோடு காதல் கொண்டு என்னைப் பிரிந்து உடன்போக்காய்ச் சென்றுவிட்டாள். அவளுக்காக வருந்தும் என்னிடத்தே அவள் உடன்போக்குச் சென்றது சரியானது, ஆகவே உன் துயரத்தைத் தாங்கிக்கொள் என்கிறீர்களே? அது என்னால் தாங்குவதற்கு இயலுமா? அழகுப் பாவையான என் மகள் விளையாடி மகிழ்ந்த திண்ணையையும் நொச்சி வேலி சூழ்ந்த இடத்தையும் நினைப்பேன். நினைத்தால் என் உள்ளம் கொதிக்குமே! நான் என்ன செய்வேன்!” என்று பிரிந்து போன மகளின் அருமை பெருமையை நினைத்துப் புலம்பும் தாயையும் அதனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறவர்களையும் காணலாம். இவற்றின் மூலம் சங்க இலக்கியங்கள் உடன்போக்கை அங்கீகரிப்பதை அறிய முடிகிறது.
அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு என்ற நிகழ்வு இன்றளவும் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. காதலனோடு போக விரும்பியவள் தன் தாய், தந்தை, தோழிகளை விட்டு, வீட்டை விட்டு வெளியேறுவதும் அவர்களைப் பெற்றோர் தேடுதலும் போன்ற முறைகள் சங்ககாலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உடன்போக்கு மேற்கொண்ட தலைவியை எண்ணி அவள் குடும்பத்தினர் வருந்தும் நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தலைவியின் நிலைகண்டு செவிலித்தாய்க்கு ஏற்படும் உணர்வு நிலை, உள்ள நிலைப்பாடுகள், கண்டோர் அவளுக்கு எடுத்துக் கூறும் கருத்துகள் எல்லாம் தாய் அன்பின் மகத்துவத்தைத் தெளிவாக்குகின்றன.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...