Tuesday, March 14, 2017

தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவுதல்

    பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளம் ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் எனப்படும் இடையர் மரபு வழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும் என்பதே உண்மை.   
    ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
    பண்டையத் தமிழ் நூல்கள் ஏறு தழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன. பெயர்க் காரணம் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட, ஆயர் குல ஆடவர்கள் பெண்ணிற்க்காக காளையை அடக்க ஆரம்பித்தனர்.
    முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும் போது திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம்.
    வட தமிழகத்தில் வடம் மஞ்சு விரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இரு புறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
    சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் பழக்கம் இருந்தது.
    மாட்டை அணையும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக் கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது எனக் கூறப்படுகிறது.
    பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
    புது டில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
    கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி திருமணத்துக்கான முன் முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.
    அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து ஆநிரை எனப்படும் மாட்டு மந்தையை கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும் அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.
    ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. ஜல்லிகட்டு மாடு வளர்க்கப்படுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணக் கொடுக்கிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.
    முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந்த நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும் காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேரே நின்று தாக்கும். வலிய கொம்புகளால் அதன் உடலைக் கிழித்துக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும் மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.
    மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக் கூடியவை. ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும்.
    நெருங்கி வந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடி போட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊரின் தன்மையும் சேர்ந்தேயிருக்கிறது.
    ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியேதான் இருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக் கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
    மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்து விடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப் பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள். ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித் தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. காலத்தின் போக்கில் மனதில் உறங்கிக் கிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் மீட்கப்படுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவுகளில் கேட்கத் துவங்கியுள்ளது.   
    “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என்று கூறுகிறது கலித்தொகை. அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான்.   
தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணை அடைதற்கு வழி முறையாகவும் ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவு செய்து போய் இருக்கின்றன. இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம் மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப் போன பலவற்றையும் கலை என்ற பெயரில், கூத்து என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன.   
    அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதி காரணம் இன்னதென அப்பழந் தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கு இருக்கும் இன்றைய அறிவு இப்பழந் தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களையும் ஆதி மனித எச்சங்களையும் பண்பாட்டில் துடித்த சமூகத்தின் வேர்களையும் வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.
    நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர் நீத்த வீரர்களைக் காட்டுகின்றன. பழங்காலத்தில் காடு கரை, வீடு என்பன எல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான். அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்து வர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது.
    “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை” என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான். முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது.
தமிழ் இலக்கியங்கள் ஏத்திப் போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு. தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப் பின் புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழு விருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்கள்.
    காயங்களும் வலியும் உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட வேண்டும் என்று முனைபவனும் என்றாலும் ஆழமான பள்ளத்தாக்கின் மேல் ஒற்றைச் சிறு கயிற்றைக் கட்டிக் கடப்பவனும் என்றாலும் உயிர் அபாயத்திற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான். மெய் சிலிர்க்க உள் நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும். வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான்.
    ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணி வருகின்ற, காக்கத் துடிக்கின்ற ஒரு மரபு சரியா தவறா என்கிற சர்ச்சை அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது அவற்றின் சாதக பாதகங்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீயதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்க வேண்டும். ஒற்றுமைக் குரல் என்பது நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
பழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு பரிசுகள் குவியும். இவ்வாறு காளையை அடக்கும் விழா பொங்கல் நாளன்று மதுரைப்பக்கம் துவங்கும்.
தைத்திங்கள் முதல் நாளில் மதுரை அவனியாபுரம் பகுதியிலும், அடுத்த நாள் பாலமேடு பகுதியிலும், அடுத்து அலங்காநல்லூர் பகுதியிலும் நடைபெறும். அதையடுத்து தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நடைபெறும். பழங்காலம் முதலே பாரம்பரியமாக நடைபெற்று வாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும்.
    ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக காளைகளை தயார் செய்வது எளிதான காரியமல்ல. ஜல்லிக்கட்டுக்கான காளைகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து மூச்சுப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணல் மேட்டை முட்டும் பயிற்சி, என காளைகளை ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காகவே தயார் செய்கிறார்கள். உடல் வலுப்பெற சத்தான உணவுகள் கொடுகிறார்கள். தங்கள் காளைகளை யாரும் அடக்கி வென்றுவிடக் கூடாது என்பதே காளைகளை தயார் செய்பவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். தங்கள் காளைகளின் மேலிருக்கும் நம்பிக்கையில் "அடக்கிப்பாருங்கடா?" என சொல்லி, காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகளையும் அறிவிப்பார்கள்.
    இப்படி ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதைக் காண பல ஊர் மக்களும் கூடுவார்கள். வெளிநாட்டினரும் விளையாட்டை ஆர்வத்துடன் கண்டு மகிழ்வார்கள். காலை முதல் மாலை வரை நடக்கும் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாக கடும் விதிமுறைகளுடன் காவல்துறையினர் கட்டுப்பாடு, கலெக்டர் கட்டுப்பாடு என விளையாடும் நேரமும் குறைக்கப்பட்டது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

ஜல்லிக்கட்டு காளைகளின் வயது, காயம் இருக்கிறதா, ஆரோக்கியாக உள்ளதா என கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்பே களத்தில் அனுமதிக்கப்பட்டது. அதே போல வீரர்களுக்கும் சீருடை, மருத்துவ பரிசோதனை, மது அருந்தியுள்ளாரா என பல சோதனைகளை கடந்த பின்பே களத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.
    இவ்வாறான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் ஆபத்து வந்தது. காளைகள் துன்புறுத்தப்படுகிறது, உறுப்புகள் ஊனமாகிறது, உயிரிழக்க நேரிடுகிறது என பல காரணங்கள் சொல்லி நீதிமன்றம் மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை வாங்கப்பட்டது. காளைகளை தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு(2014) வரை நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
    இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் மத்திய அரசின் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை. தமிழக அரசும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்து நடத்திட வேண்டும் என ஆர்வமின்றி பொங்கலுக்கு(2015) முதல் நாளன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதம் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு சாதகமான தீர்ப்பை தரவில்லை. இதனால் தமிழகத்தின் பழங்கால பாரம்பரியத்தில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் முடிவுக்கு வந்தது.
    ஜல்லிக்கட்டு நடத்த இருந்த பகுதிகள் சோகமயமானது. தயார் செய்யப்பட்ட காளைகளும், வீரர்களும் தங்களின் வீரத்தை காட்ட களம் கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் போராட்டங்களும், கருப்புக்கொடி ஏற்றி வைத்தும் ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களால் எதிர்ப்பை பதிவு செய்ய முடிந்ததே அன்றி ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. ஆனாலும் சில பகுதிகளில் நீதிமன்ற தீர்ப்பை மீறி வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் வீரர்கள் குவிந்தார்கள். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...