“பொங்கல்“ ரொம்ப நல்லா வந்திருக்கு, இது சவூதிப் பொங்கல். தனியா
சாப்பிடணும், யாராவது சாப்பிட வருகிறீர்களா? என்று முகநூலில் ஒரு பதிவு, நண்பர்
அ.வெற்றிவேல் எழுதியிருந்தார். வேறு ஒரு நண்பர், இனிமேல்தான் பொங்கல் செய்யணும்,
புழுங்கல் அரிசியில் பொங்கல் நல்லா இருக்குமா எனக் கேட்டுப் பதிந்திருந்தார்.
பொங்கல் தினத்தன்று பெரும்பாலான பெண்கள், “எங்க வீட்டுப் பொங்கல்” எனப்
புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்கள். பெண்கள் பகிர்ந்திருந்த புகைப்படங்களை
விடவும் குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அயல்தேசங்களுக்கு பொருள்தேடிப் பிரிந்து
சென்றிருந்த ஆண்களின் பொங்கல் பற்றிய பகிர்தல்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
“ஈர்ப்பதாக” என்று சொல்வதைவிடவும் மனதை அசைப்பதாக இருந்தது. மகிழ்வும்
கொண்டாட்டமுமான மற்ற எந்தத் திருவிழாக்கள் போலவோ அல்லது குடும்பவிழாக்கள் போலவோ
அல்ல இந்தப் பொங்கல் விழா.
“பொங்கல்”
என்பது திருவிழா அல்ல, இந்த தினம் நன்றியறிவிப்புக்கான உணர்வைத் தூண்டுகிற தினம். இந்த
நாளில் நாம் யாரையெல்லாம் நினைத்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது இந்த விழாவின்
நிறைவு. நேரில் சென்று ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாவிட்டாலும், காணும் பொங்கல்
தினத்தில் மனத்தால் கண்டு நன்றி சொல்ல நம் ஒவ்வொருவருக்குமே பலர் உண்டு. யாரேனும்
ஒருவர் அந்த நாளில் ஒருகணப்பொழுது நம்மையும் அவ்விதமாக நினைத்துக்கொள்வதை
விரும்புகிறோம்.
உண்ணுகிற
உணவை விளைவிக்கிற சூரியனில் தொடங்கி ஆடு, மாடு வரையில் நன்றி சொல்கிற இந்த நாளில் மறைமுகமாகவும்
நேரடியாகவும் இந்த நன்றி செலுத்தப்படுவது மனித உழைப்புக்குத் தானே. சூரியனின்
ஒளிர்வைப் போலவும் கால்நடைகளின் உழைப்பைப் போலவும் மனிதனின் செயல்பாடு இருக்கிறது
என்பதை நினைவு கொள்கிற தினம் எனவும் பொங்கல் தினத்தைக் கொண்டாடலாம். உழைப்பும்
பொருள் தேடலுமே ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ இயக்கிக்கொண்டே இருக்கிறது என்றால் அதன்
அடிப்படையில் மிக நிச்சயமாக ஒரு குடும்பம் இருக்கும். பொதுவாக நமக்காக மட்டுமே
நாம் இயங்குவதில்லை என்பதுதான் இதிலிருக்கும் உண்மை.
எல்லை,
மொழி, கலாச்சாரம் எல்லாமும் கடந்து, எங்கோ ஒரு அயல் தேசத்தில் தனித்திருக்கும் ஒரு
ஆணின் பொங்கல் தினம் என்பது முக்கியமானது. அங்கிருக்கும் ஒரு ஆண் பொங்கல் வைத்து, அந்த தேசத்தின் நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்த
பொங்கலில் கலந்திருப்பது சர்க்கரையாக மட்டும் இருக்கமுடியாது. தனித்துத்
தயாரித்துக் கொண்டாலும் புழுங்கல் அரிசியில் பொங்கல் செய்தாலும் அந்தப் பொங்கலின்
சுவை என்பது இனிப்பாக மட்டும் இருந்துவிட முடியாது. ஆனால் இதே தினத்தில் அந்த
வீட்டின் பெண் இங்கே தனித்து பொங்கல் வைத்துக் கொண்டிருக்க மாட்டாள். அவன் சார்பான
அத்தனை மனிதருக்குமான பொங்கலை இவள்
இங்கே
சமைத்துக் கொண்டிருப்பாள். ஒரே பொங்கல் தான், இங்கேயும் அங்கேயும்; அங்கே அரிசியும் சர்க்கரையும் இன்னபிறவும்
இவளின் சிறு நெருப்பில் பொங்கிச் சுவைதர, இங்கே அவன் நினைவில் பொங்கலிடுகிறாள்
அவனுடைய பெண்.
அவளுக்குத்
தெரியும் அவனுடைய தனிமை; அவனுக்கும் தெரியும் அவளுடைய தேடல். அவனுடைய தனிமைக்கும்
அவளுடைய தேடலுக்கும் இடையே இழையாடிக் கொண்டிருப்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம்.
பிரிந்துவிடாமல்
ஆணும் பெண்ணும் இணைந்தே இருப்பதற்குத்தான் மணவாழ்க்கை என இருவருக்கும் சொல்லப்படுகிறது.
ஆனால் எல்லோருக்குமாக பொருள் தேடுவது ஆணுக்கு அறமாக இருக்க, அவனுடைய சுற்றத்தைக்
காப்பதும் அவன் சார்பான கடமைகளைச் செய்வதும் பெண்ணுக்கு அறமாக இருக்கிறது.
பெண்
என்பவள் இப்படித் தான் இருக்கவேண்டும் என்பது போலவே ஆணுக்கும் அவனுடைய
பால்யத்திலிருந்து பல்வேறு கடமைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. அவனை வளர்த்து ஒரு
நிலைக்குக் கொண்டுவந்திருக்கும் அவனுடைய பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும்
நண்பர்களுக்கும் நன்றியுடன் சில கடமைகளை நிறைவேற்றவேண்டியுள்ளது. அந்த
நிலையிலிருக்கும் ஆணின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவனுடைய பெண்ணே அவனுக்குத்
துணை நிற்கிறாள். உடலாக இருவரும் பிரிந்து செல்வதற்கான சூழலை காலம்
நிகழ்த்துகிறது. அப்பொழுதெல்லாம் மனத்தளவில் இருவருக்கும் மேலும் நெருக்கம் ஏற்படும்படியாக
பெண்ணே செயல்படுகிறாள். வாழ்வின் போராட்டமான சூழலில் துணையிருக்கும் பெண்ணின் சுடரில்தான்
அவனுடைய அகல் அணைந்துவிடாமல் நிலைக்கிறது.
பொருள்தேடி
ஆண் செல்வதும், பெண் காத்திருப்பதும் காலங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் செயல்
என்பதைக் காட்சிப்படுத்தும் ஒரு சங்கப்பாடல். பெண்களைக் காப்பது என்பது ஆண்களின்
அறம் எனவும் அதற்காகப் பொருள்தேடிப் பிரிந்து செல்வது ஆண்களுக்கு இயல்பு எனத் தோழி
கூறுகிறாள். தலைவி, தோழிக்கு பதில் சொல்வதுபோல அமைந்திருக்கும் காமக்கணி
பசலையாரின் பாடல்,
“தேம்படு சிலம்பில் தெள்ளறல் தழீஇய
துறுகல் அயல தூமணல்
அடைகரை
அலங்குசினை பொதுளிய
நறுவடி மாஅத்துப்
பொதும்புதோ றல்கும்
பூங்கண் இருங்குயில்
கவறுபெயர்த் தன்ன
நில்லா வாழக்கையிட்டு
அகறல் ஓம்புமின்
அறிவுடை யீரெனக்
கையறத் துறப்போர்க்
கழறுவ போல
மெய்யுற இருந்து
மேவர நுவல
இன்னா தாகிய காலைப்
பொருள்வயின்
பிரிதல் ஆடவர்க்கு
இயல்பெனின்
அரிதுமன்
றம்ம அறத்தினும் பொருளே. “
பாடலின் பொருள் ,”தேன் உண்டாக்குகிற பக்கமலை; அதனருகே தெளிந்த நீர்
சூழ்ந்திருக்கும் வட்டக்கற்பாறை; அந்தப் பாறைக்குப் பக்கத்திலே தூயமணல் பரந்து
கிடக்கும் அடைகரை; அங்கே அசைந்தாடும் கிளைகள் தளிர்த்துள்ள நல்ல மாமரங்கள் நிறைந்த
சோலை; மாமரங்களில் செழித்த மாவடுக்கள் உள்ளன; இந்த மாஞ்சோலையில் செறிந்த இலைகளின்
இடையே அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை , “சூதாட்டக்
காய்களைப் போல நிலையில்லாமல் உருண்டு போவதுதான் இந்த வாழ்க்கை ; இந்த நிலையில்லாத
வாழ்வை முன்னிட்டு பொருளாசையினால் உங்கள் துணையைப் பிரியாதிருங்கள்; அப்படி
துணையைப் பிரியாமல் இருப்பவரே அறிவுடையவர் “ எனக் கூவுகின்றன. உடலோடு உடல்
சேர்ந்து ஆணும் பெண்ணுமாக அந்தக் குயில்கள் கூவுகின்ற இந்த இளவேனிற்காலம்
பிரிதலுக்கு உகந்த காலம் அல்ல. இவ்விதமாக இணைந்திருக்கும் குயில்கள் கூவுவதைக்
கேட்டபடியே நம்மைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். இந்தக் காலத்தில் இவ்விதமாக
நம்மைப் பிரிந்து செல்வதுதான் ஆண்களுக்கு
இயல்பென்று சொன்னால், “உன்னை விட்டு நீங்கமாட்டேன்” என்று சொன்ன அறத்தை விடவும் பொருள் ஈட்டுதல்
என்பது பெரிதும் அரியதுபோல.”
இந்தப்பாடலில் தலைவன் பொருள் ஈட்டுவதற்காகப்
பிரிந்து சென்றிருக்கிறான். இருவரும் பிரிந்து இருக்கக்கூடாத இளவேனிற்காலம்
தொடங்கியும் அவன் திரும்பியிருக்கவில்லை. அவன் சென்றிருக்கும் வழியில் எவ்விதமான
காட்சிகளைக் காண்பான் எனத் தலைவிக்குத் தெரிந்திருக்கிறது. தேன் உண்டாக்குகிற
பக்கமலை, தெளிந்த நீர் சூழ்ந்த கற்பாறை, சுனையைச் சார்ந்த அடைகரை, மழைநீர் ஓடிவருவதால் பரந்திருக்கும்
தூய மணற்பரப்பு, செழித்த மாவடுக்கள் நிறைந்த மாஞ்சோலை” இவை எல்லாமும் தன்னை நினைவூட்டும்
எனத் தலைவி, தோழியிடம் சொல்கிறாள். இந்தப்பருவம் இருவரும் இணைந்திருக்க வேண்டிய
காலம் என்பதைக் குறிப்புணர்த்த இணைக்குயில்கள் உடலோடு உடல் சேர்ந்து இலைகளின்
செறிவுகளுக்குள் மறைந்து அழகிய கண்களை மட்டும் காட்டியபடி இருக்கும் என்கிறாள். வசந்தகாலத்தின்
தொடக்கமாக குயில்கள் கூவத்
தொடங்கியிருக்கும். இவை எல்லாமுமே இந்தப் பெண்ணின் நினைவை அவனிடம் கிளர்த்தும் என
நினைக்கிறாள்.
பெண் உணர்ந்திருக்கும்
வாழ்விலிருந்து அவளது சிந்தனை பிறக்கிறது. அவளது சிந்தனை விரிக்கிற காட்சி என்பது அவளுடைய கண்களால்
மட்டுமே பார்த்தது அல்ல. இந்த உலகத்தைக் காண்கிற அவளின் கண்களை வழிநடத்துவது ஆணாக
இருக்கிறான். பெண்ணின் புழங்குவெளி என்பது வீடும் அது சார்ந்த இடமுமாக இருக்க
ஆணின் புழங்குவெளி விரிந்ததாக இருக்கிறது. அவன் பயணிக்கிற பாதையின் காட்சிகளை
அவளிடம் பகிர்ந்துகொள்கிறான். அவன் பார்க்கிற காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக
அவளை நினைவூட்டியதாகச் சொல்கிறான். இப்போது அவனின் பாதையை அவளும் பார்கிறவள்
ஆகிறாள். அதன்பின்பு ஒவ்வொரு பருவத்தின் பிரிதலின் பொழுதும் அவனுடைய பாதையை இவள்
தன்னுடைய கற்பனையில் வரைந்துகொள்கிறாள். அவனுடைய பாதை எவ்விதமாக இருப்பினும் இவள்
தனக்குத் தெரிந்த வகையில் அவள் உணர்ந்த வகையில் மட்டுமே அவனைப் பற்றிய
சித்திரத்தைத் தீட்டிக்கொள்கிறாள்.
பல
சங்கப்பாடல்களில் “துறுகல்” என்கிற காட்சிப்படிமம் வருகிறது. மதுரை மருதன்
இளநாகனாரின் குறுந்தொகைப் பாடலில், மழை கழுவ மறந்த பெரிய கற்பாறை ஒன்று புழுதிபடிந்த யானையின் தோற்றத்தில் இருப்பதாகக்
கூறுகிறார். இது, பெண் உடலானது ஆணின் அரவணைப்பிற்குள் இருந்துகொண்டே இருக்க
வேண்டும் என்று சொல்வதாக இருக்கிறது. அப்போதுதான் பெண்ணுடல் ஆற்றின் ஈரத்தை
அணிந்துகொண்டிருக்கும் என குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால் குறிப்பிட்ட பருவத்தில்
மட்டுமே வானம் திறந்து பொழியும் மழையில் நனைந்திருப்பதை விடவும் எப்பொழுதும்
நனைந்துகொண்டு ஆற்றின் அருகே ஈரமணல் சூழக்கிடக்கும் கற்பாறை பற்றி காமக்கணி
பசலையார் சொல்கிறார். எப்பொழுதும் பெண் விரும்புகிற ஈரம், உடலின் செயல் என்பதை
விடவும் மனத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
சங்கத்தில் ஆண்பாற்புலவர்கள் பாடிய பாடலில் பெண் உடல், உடலாகவும்
பெண்பாற்புலவர்களின் பாடலில் பெண் உடல், மனமாகவும் தொடர்ந்து வெளிப்படுகிறது. சங்ககாலம்
மட்டுமல்ல இந்த நவீன உலகத்திலும் பெண் மனமாகவே தொடர்ந்திருக்கிறாள். பெண்ணின்
அடிப்படை இயல்பே இவ்விதமாக இருக்கிறது.
லாவண்யா
சுந்தரராஜனின் ஒரு கவிதை,
“நதியோர
மணல்
மழை
நனைக்கவியலாதபடி
நனைந்தே
இருக்கிறது எப்போதுமே”
பெண்ணுக்கு
ஆணின் அரவணைப்பு என்பது எப்பொழுதும் இயங்கும் மனமாகவே வேண்டியிருக்கிறது. எப்பொழுதாவது வானிலிருந்து பொழியும் மழையைவிட கரையோரம்
சின்னஞ்சிறு அலையசைத்து கணந்தோறும் நனைத்துக்கொண்டே இருக்கும் ஆற்றின் ஈரம்போல
எப்பொழுதும் உலராமல் இருப்பதற்கு பெண் விரும்புகிறாள். இந்த ஈரம் உடல்
நிகழ்த்துவது அல்ல.
காமக்கணி
பசலையாரின் சங்கப்பாடலின் காட்சியில் தலைவியின் கைகளைப் பற்றும் பொழுது “உன்னைவிட்டு
பிரியவே மாட்டேன்” என்று சொன்னது தலைவனின் அறம். அந்த அறத்தைக் கைவிட்டு, பிரியக்கூடாத
இளவேனிற்காலத்தில் பொருள் தேடிச் சென்றது என்பது அந்தப் பெண்ணிற்குத் துயர்
தருகிறது. அவளின் துயரினை இணையோடு சேர்ந்து கூவுகிற குயிலின் குரல் வழியே பதிவு
செய்கிறாள். குயிலின் இயல்பான கூவுதலுக்கு, “பொருளுக்காக பிரிந்து செல்லாதீர்கள்;
நிலையில்லாத வாழ்வில் பொருள் என்பது அற்பமானது” என அர்த்தப்படுத்துகிறாள்.
என்றாலும் தன்னுடைய தலைவனைக் குறை சொல்வதற்கு இணங்காத பெண்ணின் மனம் அங்கே
செயல்படுகிறது. பொருள் தேடித் பிரிந்து
செல்வது என்பது ஆணின் இயல்பு என ஆண்களின் பொதுவான குணமாக ஏற்றுக்கொள்கிறது. ஆக,
அவளுக்குத் துயர் தருகிற பிரிவென்றாலும் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்வதும்
அவன் சார்பாக அவனுடைய காரியங்கள் யாவற்றிலும் துணை நிற்பதும் ஒரு பெண்ணின் செயல்
ஆகிறது.
காலங்காலமாக
ஆணுடைய வாழ்வில் சுகதுக்கங்களில் பங்கெடுத்து அவனுக்குத் துணையாக இருக்கிற பெண்
ஒருத்தி அவனைப் பிரிந்திருக்க ஒருபோதும் விரும்புவதேயில்லை. என்றபோதிலும் பிரிவுத்துயர்
என்பதை அவனுக்கான கடமைகளைச் செய்வதில் சமன் செய்துகொள்கிறாள். சமகாலத்தின்
சாட்சியாக அ.ரோஸ்லின் கவிதை,
“மூங்கில்களுக்கிடையே
வெளிச்சப்புள்ளியென
நீ கடந்து சென்றதை
கண்களில்
நிறைத்து
முகிழ்த்துத்
திரும்புகிறது என் திசைவழி
வயல்வெளியின்
பசுமையொத்து
நிர்பந்தித்தலுடன்
கிடக்கிறது என் மௌனம்
பிரிவின்
ரேகை படிந்த வார்த்தைகளை
நம்
சேய்களோடு முணுமுணுத்தபடி
கடந்துசெல்கிறது
களிப்பற்ற பொழுது
நீயற்ற
நம் நிலத்தினை
நீயற்ற
நம் நதியினை
நீயற்ற
நம் இரவினை
அழித்தொழிக்காமல்
பிணைத்திருக்கிறது
எமக்கு
உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி
நீ
கடந்து சென்ற ஸ்தலமெங்கும்
முளைத்தெழும்பி
படர்கிறது
உன்
விளைவித்தல்
ஒரு
நீரோட்டத்தினைப்போல
நிகழ்ந்திருக்கும்
உன் நகருதலில்
கானல்வரிப்பாடலொன்றை
இசைக்கும்
தன் மீட்பின்
அனுமானங்களுடன்
இடும்பை
விழையாப் பறவை. “
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காமக்கணி பசலையார்:
இவர் மதுரை காமக்கணி பசலையார் எனவும் காமக்கணிப் நப்பசலையார் எனவும்
குறிப்பிடப்படுகிறார். காமக்காணி என்பது காமக்கணி என மருவியது. அரசர்களால் காமக்கிழத்தியருக்கு
அளிக்கப்பட்ட கொடைநிலம் காமக்காணி எனப்பட்டது. அரசர்களிடம் கொடைநிலம் பெற்றப்
பெண்ணாக இருக்கலாம்.
வசீகரமான கண்களையுடைய என்கிற பொருள் உள்ள காமக்கண்ணி என்கிற தமிழ்ப்
பெயர் பிற்காலத்தில் காமாட்சி எனப் பெயர் பெற்றது. வசீகரமான கண்களையுடைய பிரிவில்
துயருறுகிற பெண் என்றும் இவர் பெயருக்குப் பொருள் கொள்ளலாம்.
பழந்தமிழ் மரபிற்கு உரிய பசலை படர்தலுக்குக் காரணமான பிரிதல்
நிமித்தமாக இவரது ஒரு பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலில் உள்ள தலைவியின்
கையறுநிலை காரணமாகவும் பாடலின் இனிமை காரணமாகவும் இவர் நப்பசலையார் எனப்பெயர்
பெற்றிருக்கக்கூடும்.
இவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் மட்டும்
கிடைத்துள்ளது .நற்றிணை :243
No comments:
Post a Comment