முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நேரு நகர், காளப்பட்டி
சாலை,
கோயம்புத்தூர்-641014.
பேச: 98424 95241.
முன்னுரை
காலந்தோறும் மொழி வளர்ச்சியுற்று வருவது என்பது
இயற்கையாகும். அண்மைக் காலத்தில் மனித
சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை காரணமாக உலக மொழிகள்
பலவற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும்
புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம். ஒவ்வொரு
இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது.
அறிஞர்களும்,
இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி
என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும்
நாகரிகத்தையும்,
பொருளாதாரத்தையும் அக்கால மக்களின் அறிவையும்,
பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய்
விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும்
விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கின்றன. அவைகளில்
முதன்மையாக எழுத்தாக்கம், தகுமொழியாக்கம், சொல்லாக்கம்,
நடையாக்கம், சமூகம்
மற்றும் பண்பாடு போன்றவைகளில் மிகப்பெரிய வளர்ச்சி
நடைபெற்றது எனலாம்.
அறிவியல் தமிழ்
இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் என்பது புறநிலை வளர்ச்சியால் புதிய
துறையாக வளர்ந்து வருகிறது. அறிவியல் தமிழ்க் கட்டடங்களுக்கு செங்கல் போன்றவை கலைச்
சொற்கள். அறிவியல் கருத்துகளைத் தமிழில் தருவதில் கலைச்சொற்கள் உயிர் நாடியாக
விளக்குகின்றன,
அறிவியல் கலைச் சொற்கள் மட்டுமே அறிவியல் மொழி ஆகிவிடும்
என்பது தவறான கருத்தாகும. மொழிநடை,
உரைப்பாங்கு ஆகியவை பற்றியும் அறிவியல் தமிழில் ஆராய
வேண்டும். ஆங்கிலத்தில் wisdom,
knowledge என்ற இருசொற்கள் நாம் அறிந்தவை. இவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களை பரிமேலழகர்
மெய்யறிவு,
கல்வியறிவு என்று இரு சொற்களை பயன்படுத்துகிறார். இலங்கையில் வாழ்ந்த அமெரிக்கரான டாக்டர்
சாமுவேல் கிரீன் என்பவர் வேதியியல், ஆங்கில மருத்துவம் முதலிய பாடங்களைத் தமிழில் கற்பித்தார். இதற்காக 1850-1880 காலப் பகுதியில் பல மருத்துவ நூல்களைத் தமிழாக்கம்
செய்தார்.
இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
'' எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப அறிவு ''
-குறள். 355
'' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ''
-குறள். 423
-என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற
தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார். இயற்பியல் ஒரு
பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி
பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை
தோன்றியது.பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை
வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில்
நாம் காணலாம்.
சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்கியது
என்று குறித்துள்;ளனர். அக்காலத்தில் ராகு கேது என்றும் பாம்புகள்
சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்கு
காரணமாகும். பழங்காலத்தில் மேகம் கடலுக்கு
சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை
கொண்டிருந்தனர். இதற்க்கு சான்றாக
“முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை
ஒதுங்கல் செல்லாப்
பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல
நீர்கொண்டு
விசும்புஇவர் கல்லாது
தாங்குபு புணரி
செழும்பல் குன்றம்
நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும்
பொழுதே” (குறுந்தொகை: 287)
கார்காலத்தில் பெருமழை பெய்வதற்க்காக மேகம் தன்னிடம் எஞ்சியிருந்த பழைய நீரை
மழையாக பெய்துவிட்டு கடலை நோக்கி செல்வதாக கூறும் பாட்டு
“கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
புதுநீர் கொளிஇய
உகுத்தரும்
நொதுமல் வானத்து
முழுங்குகுரல் கேட்டே” (குறுந்தொகை: 251)
நீரில் அறிவியல்
தமிழர் மரபுபடி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத்தன்மை
சேர்ந்த தண்ணீரில் குளி என்பது பொருள்படும்.
இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்), கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பலகோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. இதனை
பார்த்த தமிழன் எண்ண ஓட்டம் 27 விண்மீன்களை மட்டும் எடுத்து ஒரு மாதத்தின் 27 நாட்களின் பார்வையில் சேர்த்து பார்க்கிறான். அந்த 27 நாட்களில் உதயாதி நாழிகை வேறுபாட்டை அறிகிறான். இந்த 27 விண்னமீன்களையும் 12 ஆக பிரித்து பார்க்கிறான். இந்த விண்மீன் சுற்று பாதையில்
வழியாக சூரியன் செல்லும் பாதை அமைகிறது. இதையே பிற்காலத்தில் 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தார்கள்.
“விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம்
தலையெனச் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று
ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்த
தேற்றியல் சேர” (பரிபாடல் 11,1-4)
அறிவியல் மருத்துவத்தின் மகத்துவம்
தற்காலத்தில் மருத்துவமும் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளது. நவீன
காலத்தில் செய்யும் மருத்துவ முறைகளில் சங்க இலக்கியத்தில் இதற்க்கான செய்திகள்
காணப்படுகின்றன எனலாம்.
“மீன்தேர் சொட்டின் பனிக்கயம் மூழ்கிச்
சிலர் பெயர்த் தன்ன
நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ்
மார்பின்” (பதிற்று: 5:42)
என்கிறது பாடல். நீரில் உள்ள மீன்களை
கொத்தி நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் பறவையைபோலவும் நீண்ட ஊசி புண்ணில்
நுழைந்து வருவது போலவும் பாடல் கூறுகிறது. அக்காலத்தில் ஊசியைக் கொண்டு தைக்கும்
முறையினை பாடல் குறிக்கின்றது.
தற்காலத்தில் மருத்துவமுறையில் வெட்டு, அடிபடும் புண்களுக்கு ஊசியைக் கொண்டு தைக்கும் முறையினை
மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சங்க இலக்கியங்களில் கருவியல் கோட்பாடுகள்
தமிழிலக்கிய வரலாற்றில் பல அறிவியல் கோட்பாடுகள் பொதிந்துள்ளன. அவற்றில் சங்க
கால இலக்கியங்களின் பல சான்றுகள் உள்ளன.
கி.மு.3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை தோன்றிய இலக்கியங்கள்;
சங்க இலக்கியமாகும். இவ்விலக்கியங்களில் பல அறிவியல்
கோட்பாடுகள் உள்ளன. அவைகள்
முதல் மாதத்தில் கரு 4.மி.மீ உள்ளதாக இருக்கும். இது இருபது
நாட்களில் வளர்ச்சியுற்று இருதயம் துடிக்கச் செய்யும். இரண்டாவது மாதத்தில்
கருவானது கருமுட்டையை விட 40,000 மடங்கு அதிகரிக்கும், என்கிறது கருவியல் நூல்.
“வயவுறு
மகளிர் வேட்டுணி னல்லது
பகைவருண்ணா வருமண்ணினையே”
(புற:20 14.15)
மூன்று மாதத்தில் கரு அசைவு, நான்காம் மாதத்தில் பார்வைப்புலன் வளர்ச்சி அடையும் என்பதை மணிவாசகர்
“பேரிருள்
பிழைத்தும்”
என்று பத்து மாதத்தின் குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகளை கருவியல்
விளக்குகிறது. இந்த படிநிலைகள் பல விஞ்ஞான வளர்ச்சியடைந்த போதிலும் கருவியல்
கூறும் படிநிலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பது கருவியலில்
உள்ள ஆச்சரியமாகும்.
வள்ளுவரின் மருந்து
தமிழ் இலக்கியத்தில் மருத்துவ செய்திகளையும், சிகிச்சை முறைகளையும் காணலாம். திருக்குறளில் “மருந்து” என்ற அதிகாரத்தில் நோய் வருவதையும், அதற்க்கான காரணங்களையும் அவை வராமல்
தடுக்கும் முறைகளையும் பற்றி பல செய்திகள் தரப்பெற்றுள்ளன.
“நோய்நாடி
நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள்: 948)
மருத்துவர் நோய் எதனால் வந்தது என்ற காரணத்தை முதலில் ஆராயவேண்டும். அதன்பின் அந்த நோயை தடுக்கும் முறைகளையும்
பற்றி கூறுதல் மருத்துவரின் கடமை என்று வள்ளுவம் கூறுகிறது.
இலக்கியத்தில் இயற்பியல்
ஒளிக் கதிர்கள் எந்த அளவிற்க்கு பிரகாசம் என்பதையும் சங்க காலத்தில் வாழ்ந்த
மக்கள் அறிந்து வைத்திருந்தனர்.
ஓளி பற்றிய ஆற்றலை பரிபாடல் கூறும் செய்தி, ஒளியை முருகனுடைய ஒளி பொருந்திய சாயலுக்கும் அவன் வேலுக்கும்
ஒப்பிட்டுள்ளன.
“வெண்சுடர்
செவ்வேல் விரைமயில் மேல் ஞாயிறு”
என்கிறது பரிபாடல். இந்த உலகம் நீரால்
சூழப்பட்டது. உலகத்தில் ஒரு பகுதி நிலமும், மூன்று பகுதி நீராலும் சூழப்பட்டு உள்ளது என்பதை
“மாநிலம்
தோன்றாமை மலிபெயல் தலை
ஏமநீர் எழில்வானம்
இறுதிதரும் பொழுதினான்”
என்கிறது பரிபாடல்.
அறிவியலில் மின்னனுக்களுடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு
என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களைப் பொருத்து அமைந்துள்ளது இதனை
“தீயினுள்
தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ (பரி: 3,63-64)
என்கிறது இந்தப் பாடல்.
அறிவியல் தமிழில் ஆழிப்பேரலைகள்
உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும்,
வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. கிருத்துவ புனித நூலான விவிலியத்தில் உலகம்
பல்வேறு மாற்றங்களால் அழிவு நேரிடும் என்று கூறுகின்றது. இயற்கையின் பேரழிவால்
உலகம் அழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும்
முறையை பரிபாடல் கூறுகிறது. நிலம், நீரிலும், நீர் தீயிலும்
(சுனாமி) அதாவது நீருக்குள் நெருப்பு ஏற்பட்டு வெடித்தால் சுனாமி கடலில்
ஏற்படுகிறது. காற்று வானத்திலும்,
வானம் மூலப்பொருளிலும் ஒன்றனுள் ஒன்றாக ஒடுங்கும் முறையில்
கோள்கள் அழிந்து சிதறுகிறது இதனை,
“தொல்முறை இயற்கையின் மதியொ
………..மரபிற்று ஆக
பசும்பொன் னுலகமும்
மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ்
செல்ல”
(பரி:2, 1-4)
“மீண்டும் பீடு உயர்வு ஈண்டு அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து
ஊழியும்” (பரி:2, 11-12)
என்கிறது பரிபாடல்.
எண்கணிதத்தில் தமிழ் அறிவியல்
கணக்கு மக்களின் வாழ்வோடு ஒட்டியது. கணிதம் இல்லாமல் வாழ்வியல் முறை இல்லை
என்றே கூறலாம்.
“நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும்
நுதலிய”
(பரி:2,13-14)
என்கிறது பரிபாடல் மேற்கண்ட பாடலில் எண் கணிதம் அமைந்துள்ளளது. கணக்கற்ற பல ஊழிகள் பலகோடி ஆயிரம் காலத்தை
குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது
ஆயிரம் கோடி என்ற பேரியல் எண்ணைக் குறிக்கின்றது. வெள்ளம் என்பது கோடி கோடியையும்,
கமலம் என்பது நூறு ஆயிரம் கோடியையும்,
பத்மம் என்பது சங்கம் பத்து நூறாயிரம் கோடி,
நெய்தல் அல்லது குவளை நூறுகோடி எனவும்,
பாழ் என்பது பூஜ்யம் என்பது முதல் பல் அடுக்கு ஆம்பலான
ஆயிரம் கோடி வரையிலும். ஆதற்கு மேலும் கணிதமுறையில் பின்னல்கள் முறையிலும் தனித்
தனி பெயர்களைத் தமிழர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நாம்
அறியமுடிகிறது.
முடிவுரை
பண்டைய தமிழ் இலக்கியத்தில் தமிழர்களிடம் அறிவியலறிவு நிறைந்திருந்தது
என்பதற்க்கும்,
அதனை அவர்கள் நன்கு வளர்ந்தனர் என்பதற்க்கும் தனி நூல்களின்
சான்றுகள் இல்லாமல் போயினும்,
அவர்களின் அறிவியல் முறைகளை இலக்கிய சான்றுகள் மூலம் தமிழ்
இலக்கியங்கள் கூறுகின்றது எனலாம். தமிழிலக்கியங்களில்
பரவலாக அறிவியல் கோட்பாடுகள் அமைந்துள்ளதை நாம் காணலாம். இன்றைய அறிவியலுக்குச்
சிந்தனை வித்தாக அமைந்து முறையான வளர்ச்சி நிலையினை உடையனவாய் இருக்கிறது. இந்த
வளர்ச்சி எதிர்காலத்தில் ஆல்போல் பரந்து, விரிந்து, ஊன்றி நமது தமிழ் இலக்கியங்கள் உலத்தோடு ஒத்துள்ளதை உலகு
அறிய அதிக தூரமில்லை.