Tuesday, December 26, 2023

காமராஜர் அரசியல் பயணமும் சமுதாய வாழ்க்கையும்

முனைவர் பூ.மு. அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்,

ஜேப்பியார் பல்கலைக்கழகம்,

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.

பேச:98424 95241.

முன்னுரை

                செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவரின் வாய்மொழிக் கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல் வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்.பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பாரதப்  பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராசர். தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர்.

தோற்றமும் இளமையும்

                காமராசர் 1903, சூலை 15-ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மையார். தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார். தம் மாமாவின் கடையில் வேலை செய்தார். செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின.

விடுதலைப் போரில் காமராசர்

                விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராசர். அண்ணல் காந்தி படிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்துகொண்டார். அண்ணலின் ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், 1942-இல் நடந்த ஆகஸ்டுப் புரட்சி முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார். தமது பன்னிரண்டாம் அகவையில் அடிமட்டத் தொண்டராய் அரசியலில் நுழைந்த காமராசர் 8 ஆண்டுகள் சிறையில் அல்லற்பட்டார்.

 

 

முதலமைச்சர் பதவி

            1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

                மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு

கல்விப் பணிகள்

            செயல்வீரராய் விளங்கிய காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராய் விளங்கினார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்ற புகழ் பெற்றதாக இருந்தாலும் தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராசர் வேதனைப்பட்டார். அதனால், ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராசர் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களை உருவாக்கித் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு

கல்விக்கு அளித்த முக்கியத்துவம்

            அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.

                ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

வேளாண்மையும் தொழிற்துறையும்

            காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை  அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

காமராஜர் திட்டம்

            இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

                இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.

எளிமையான வாழ்வு

            அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரியபாரத ரத்னாவிருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

                தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால்துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!

 

 

நாட்டுப்பணி

                தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்; நிலவளத்தை உயர்த்தினார்; நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்; மின் உற்பத்தியைப் பெருக்கித் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடையச் செய்தார்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்பு நிதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

படிக்காத மேதை

                ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர் காமராசர். எந்தச் சிக்கலையும் எளிதில் தீர்க்கும் அறிவுக் கூர்மை படைத்தவர். நான் பாடப் புத்தகத்தில் புவியியலைப் படிக்கவில்லை. ஆனால், நாட்டில் எத்தனை ஏரி குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும்என்று கூறுவார். இதனால், காமராசர்படிக்காத மேதைஎனப் போற்றப்படுகிறார்.

காமராசரின் பண்புநலன்கள்

                காமராசர் உயர்பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர். காட்சிக்கு எளியவர்; சுருக்கமாய்ப் பேசுபவர்; செயலில் வீரர்; தமக்கென வாழாது நாட்டுக்காக வாழ்ந்த தியாகி; வாழ்நாள் முழுவதும் செல்வ வாழ்க்கையில் நாட்டமின்றி வாடகை வீட்டிலே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மலாவார்.

முடிவுரை

                எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப் பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்குகின்றார். அவரது வாழ்க்கைநெறி இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றத் தக்கதாகும்.

Friday, December 15, 2023

பாவேந்தர் கவிதைகளில் இயற்கையும் வாழ்க்கையும்

 

முனைவர் பூ.மு. அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்,

ஜேப்பியார் பல்கலைக்கழகம்,

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.

பேச:98424 95241.

 

இந்த நூற்றாண்டில் தலை சிறந்த கவிஞராய்,  புரட்சி கவிஞராய் பாவேந்தராய் பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும் சிறப்பு மிக்கவராய் விளங்குபவர். புதுவை புரட்சிக்குயில் பாரதிதாசன் ஆவார்.  "நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா" என்று பாரதியாரை,  பாரதிதாசன் குறிப்பிட்டிருப்பது அவருக்கும் பொருந்தும். தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்கள் எனக்கு குயிலின் பாடலும்,  மயிலின் ஆடலும், வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும்,  பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்,  என்று குறிப்பிட்டுள்ளார் நாடற்ற வெள்ளத்தின் வேகம் கொண்ட கவிதைகளால் பாவேந்தர் புரட்சி செய்தார்.  கீழே அடித்தவுடன் மேல் எழும்பும் பந்தின் வேகம் போல அது புரட்சி கவிஞருக்கு பொருந்தும் என்று உவமைக் கவிஞர்  சுரதா புகழ்ந்துள்ளார்.

மொழியை வைத்துதான் ஒரு சமுதாயத்தின் வரலாறு, மாண்புகளை அறிய முடியும். மொழியைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமுதாயமும் வளரமுடியாது. நம்முடையை சங்க இலக்கியங்கள் ஆட்சி, அரசியல், வாழ்க்கை, சமுதாயம்இ பண்பாடு, நாகரீகம், பழக்கவழக்கம் பற்றிப் பேசியிருக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வுரைகளுக்கு வெளியே அது வெகுமக்களால் அரிதிலும் அரிதாகவே கொண்டாடப்பட்டு வருகின்றன. பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இங்கு காண்போம்.

மயில்

                மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார். மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.

சிரித்தமுல்லை

                மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணில்

                கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

                இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும்இ மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார். மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.

இயற்கைச் செல்வம்

                விரிந்த வான் வெளி எங்கும் விளைந்த பொருட்களின் ஆதியாகவும், காற்றுஇ நீர்இ மண், தீ யெனும் நான்கு பூதந்தகளை உன்னின் திரிபுகளாகவும் கொண்ட புதுமை வடிவமே நீதான். கதிரவனும் நிலவும் உனது வித்துகளேயாகும். இவ்வுலகில் அசைவைக் கொடுப்பதும் நீ, அந்த ஒலி அலையை செய்ததும் நீ விருப்பத்தைக் காணும் வண்ணம், அந்த வண்ணம் மூலம் நிலத்தை நான்காய் விரியவும் செய்தாய். அதன் மூலம் பசுந்தமிழை பேசச் செய்தாய், இசைக்கும் தமிழையும் தந்தாய். பறவையின் ஏந்திழையான இனிய குரலால் மனதை அசைக்கவும் செய்தாய். நமது தொல்லைகள் எல்லாம் விலக்கும் ஆடற்கலை அமையச் செய்ததும் நீ என்று பாவேந்தர் இயற்கைச் செல்வம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை

                அமைதியான வெளிச்சம் பரவும் அதிகாலை இருட்சோலையில் அழகான தன் குறை வெளிச்சத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பரவுகிறது. தலைவி கேட்டால் சேவல் எழுந்திருயுங்கள் என்று தன் பேச்சால். தமிழின் தேன் பாடு வீடெல்லாம் தனது ஒலிக் கீற்றுகளைப் பரவ விட்டது. பெற்றவர்கள் நீராடி தன் குழந்தைகளும் நீராடி வந்தவுடன் கூடத்தில் கூடி உணவருந்தினர்.

வானம் பாடி

வானம் பாடியதா? ஓலி வெள்ளம் வானிலிருந்து கேட்கிறது. இல்லை வான் நிலவு பாடியதா? தேனை அருந்திய சிறு வண்டுகளின் மேலேறி ரீங்காரம் மறந்து நல்ல இசை பழகியதா? இல்லை நடுங்கும் இடியோ? அல்லது மெல்லிசை பயின்று இனிமை தந்ததோ. வானவூர்தி வானிலிருந்து நல்ல தமிழ் இசையை அசைவின் ஊடே தந்ததோ? இல்லை மூங்கில் குழலோ? யாழோ தனியாக இருக்கும் பெண்ணொருத்தி மக்கள் மகிழ இசைத்தாளோ? இப்படியாக கேட்கும் என் கண் எதிரில் வானம் பாடிக் குருவி வானிலிருந்து இன்ப வெள்ளம் கொடுத்து இசை மழையில் இன்புறுவோம் பச்சை பசுந்தமிழா என்றும் பாவேந்தர் பாடியுள்ளார்.

தென்றல்

                தென் தமிழகத்தின் பொதிகை மலையிலிருந்து விழுந்த சந்தனம் புதுமணத்தில் கலந்து, பூவின் தாதுக்கள் கொடுத்த தேன் தழுவி, அருவியின் தோள் உந்தித் தூத்துக்குடியின் நல்ல முத்துக்களை கடல் அலையிலிருந்து எடுத்துஇ மூங்கிலில் பாடலிசை எழுப்பியதாகக் கூறியுள்ளார்;

                மாலையிலே சிறு முல்லைப் பூ சிலிர்க்கவும் நெற்கற்கள் முதிர்ந்து அடிதோறும் மடைப் புனலில் நனைந்து சிலிர்க்கவும், தென்றல் காற்று வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி விட்டதென தன் மனைவி அடுக்களைக்குச் சென்றாள் எனவும், வீட்டின் பின்புறப் பகுதியில் அமர்ந்திருந்த என்னைத் தாலாட்டியதால் அங்கிருந்த விசுப்பலகையில் படுத்து விட்டேன் எனவும் தெரிவிக்கிறார்.

                தென்றலாகிய பெண் அருகில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசி பழந்தமிழின் இனிய சாறெடுத்து அதனுடன் காதல் கலந்து மிக்க அவசரமாகச் செல்கிறாள் என்றும்இ மீண்டும் மிக விரைவாக என்னிடம் வரவேண்டும் என்றும் நீ வரும் வேளையில் பூனைகள் செய்யும் நாசத்தால் கோபமுற்றேன். அதில் என் கவலை போகும் எனவும் தென்றலின் வழி உரைத்துள்ளார்.

                தனிமை, மாலைநேலம் இவைகளால் துயரப்படும் நம்மை, குளிர்ந்த, மெல்லிய மனங் கொண்டு வரும் தென்றலாய் துயரம் தூளாகும். எனக்கு அறியாமல் வந்த பெண்ணாய் பின்புறத்தில் தொட்டு சிலிர்க்க விட்டாள். மேலும் எனை நெருங்கி சரியாத குழல் தடவி சரிய விட்டாள். அவள் கரத்தால் புரியாத இன்பத்தைப் புரிய விட்டாள். தான் பிரிவுக்கு வருந்துகிறேன் என்றாள் பேசுபவள் மனைவியாகவும், மற்றொருத்தி தென்றலாகவும் இருப்பதாக உவமைப்படுத்தியுள்ளார்.

தமிழின் இனிமை

                பலாக் கனியினுள்ளே உள்ள சுளையும், முற்றிய கரும்புச் சாறும், பனி மலருள்ளே உள்ளத் தேனும், காய்ச்சியப் பாகிடையுள்ள இனிப்பும், நல்ல பசு பொழியும் பாலும், தென்னையின் இளநீரும் இனியவை. அவை போல்வன தமிழ் என்று கூறியுள்ளார்.

                பூங்காவில் வண்டின் ரீங்காரமும், ஓடும் ஓடைத் தண்ணீரும் தரும் இன்பம் குழலில் பிறக்கும் இசையும், வீணைதரும் நல்ல அமுதப் பாடலும், குழந்தைகளின் மழலைப் பேச்சும், பெண்கள் இனிய கொஞ்சல் தரும் வாயும் தரும் இன்பம் போன்று தருவது தமிழேயாம் என்று தன் எண்ணத்தை வெளியுட்டுள்ளார்.

                நீல வானத்தில் நிறைய குளிர்ந்த வெண்ணிலவாம், காலைச் சூரியனின் உதயம் அங்கே கடல் மேல் பொன்னொளியாய் மின்னும், மாலைச் சுடரில் செவ்வானம் நல்ல மலைகளின் இன்பக் காட்சி தரும் என்றும் கூறியுள்ளார்.

தென்றல் செய்த குறும்பு

                என் உடலை துணியால் இழுத்து இழுத்து மூடுகின்றேன். மீண்டும் எடுத்து எடுத்துப் போடுகின்றேன். தென்றலே என் மேலாடையை ஏன் இப்படிச் செய்கிறாய் என பாவேந்தர் பகர்கின்றார். செந்தாழம்பூ வாசம் கொண்டு குலுக்கி நடக்கும் பெண்களின் பாவாடையை குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்கிறாய். கன்னத்தைத் தொட்டு காதில் முத்தமிட்டு செந்தாமரை முகத்தினை ஏன் கருங்குழலால் மூடுகிறாய் என்றும்இ தன் உடலை குளிரச் செய்து மிக மிக இன்பத்தை ஊட்டுகிறாய் என்றும் தென்றலைக் குறித்து விளித்துள்ளார்.

 தொகுப்புரை

v  பச்சைப் பட்டு விரித்தது போன்று பசும்புற்கள். விசும்பி தரையை நிறைத்துள்ளன. முல்லைப்பூ படர்ந்து விளாவை அளாவச் செல்வச் செழுமலர் கொன்றையைத் திரட்டி, ஆயிரம் கிளைகள் கொண்ட கைகளால் அளித்து நிற்கிறது. இதைப் பார்த்து வாய் அடங்காத மணிப்புறா புன்னை மரக்கிளையில் தென்றலின் இன்பத்தோடு பாடுகிறது.

v  மின்னலைப் போன்ற ஒளி அன்ன நடையோடு அணுகினாள் என்றும் கூறப்பட்டுள்ளது.

v  வளர்க்கப்படும் மயில் மரத்தடியில் ஓடி ஆனந்தப்பட்டு, கிளிப்பேடு கெஞ்சிய சேவற்கிளியை வஞ்சித்து மகிழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

v  இயற்கைக் கவிஞராகத் தன்னை இனம் காட்டிய பாவேந்தரின் பாடல் வரிகளில் இயற்கையின் அழகு மிளிர்வதைக் காணலாம்.

பயன்பட்ட நூல்கள்

1.       பாரதிதாசன் கவிதைகள் சென்னை:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட்.

2.       சங்க இலக்கியத் தொகுப்பு- பாகம்1&2- வையாபுரிப் பிள்ளை(..)- 2ம் பதிப்பு-1967

3.       செல்லம்மாபாரதி. பாரதியார் சரித்திரம், சென்னை: சக்தி

காரியாலயம், மூன்றாம் பதிப்பு,1946.

4.       காவ்யா- தமிழிதழ்- ஏப்ரல்- ஜூன் 2018- சு.சண்முகசுந்தரம், சென்னை.

5.       ஜீவானந்தம், . பாரதியைப் பற்றி ஜீவா,

சென்னை:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், நான்காம் பதிப்பு,1989.

6.       .ரா.மகாகவி பாரதியார், சென்னை: பழனியப்பா

பிரதர்ஸ், ஒன்பதாம் பதிப்பு, 1978.

 

 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...