Wednesday, April 23, 2025

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அமர்ந்து இதமாக அவன் நெற்றியில் தடவும்போதே தலைவலி பறத்துவிடுகிறது. அவளுடைய விரல்களின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு சுகமாக இருக்கிறது.

மனைவிக்கு ஒருநாள் முடியவில்லை. அவள் குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட்டு, அதைக் கொண்டுபோய் குளியலறையில் இறக்கி வைக்கிறான். இந்தப் பேரானந்தத்தில் மனைவிக்கு உடற்சோர்வெல்லாம் பட்டென்று நீங்கிவிடுகிறது.

ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற பரிவு; ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்ற ஆத்மார்த்தம்; இணைபிரியாமல் கைகோர்த்து நடக்கின்ற இன்பம்...கணவன் மனைவியைத் தவிர வேறு யாருக்கு இவை வாய்த்துவிட முடியும்!

வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம்தான் நமக்குக் காட்டுகிறது. இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது.

முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும். ஏனெனில், ரசனைதான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.

கணவனின் விருப்பமறிந்து ஆசை ஆசையாய் மோர்க்குழம்பு சமைக்கிறாள் மனைவி. கணவன் வீட்டிற்கு வந்ததும் ஆவலாய் உணவு பரிமாறுகிறாள். அவன் ரசித்து ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்திக்கிறாள்.

இன்று சமையல் நல்ல இருக்கு என்று கணவன் பாராட்டுகிறேன்...

மனைவி சந்தோஷப்படுகிறாள்.

குடும்ப வாழ்வில் ஒருவரை ஒருவர் பாராட்டும் போது, வாழ்க்கை தித்திப்பாகும். மனைவியின் சிக்கனம், உடை உடுத்தும் நேர்த்தி, பரிமாறும் அருமை - இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மனசார பாராட்டலாமே!

கணவனின் பொறுப்புணர்வு, உழைப்பு, அன்பளிப்பு, செய்யும் சிறு சிறு உதவிகள்...இப்படி பல. மனைவியும் அவ்வப்போது பாராட்டி மகிழ்விக்கலாமே!

குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில்தான் இருக்கிறது. இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை. அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கிவிடுவார்கள்.

அப்படியே நாளும் பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி. தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக்கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கிவிடும். அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.

கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை. அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில்தான் சமத்துவம் இருக்கும்; சந்தோஷம் பெருகும். அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள்.

எனவே கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி; இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிவிட்டு, வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள். அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம்.

குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்போது பதற்றம் அடைய வேண்டாம். இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசுங்கள். பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.

அதை விட்டு விட்டு, மூன்றாம் நபரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள். உங்கள் குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள். அப்படிதான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன.

எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்பத்தை அதிகதிகமாக நேசியுங்கள். அதுதான் மிகப்பெரிய பலம். குடும்பத்தை நேசிக்கின்றவர்களதான் உலகத்தை நேசிக்க முடியும். உலகத்தை நேசிப்பவர்களால் தான் நல்ல உறவுகளை உருவாக்க முடியும்.

இல்லறத்தை நிலைக்களனாகக் கொண்டு இயங்குவதுதான் உலக வாழ்வு. இங்கு சிறப்போடு வாழ்வதற்குதான் குடும்பம் என்னும் கூட்டுறவு. அதில் தீங்கு நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இல்லறத்தாரின் கடமை.

'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள். பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள். அப்படிப்பட்டவர்களால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு, பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.

உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள். குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள். தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள். ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள். உங்கள் இல்லறம் செழிக்கும்; வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.

வாழ்க வளத்துடன் நலமுடன்.

Tuesday, April 08, 2025

வேதாத்திரி வாழ்க்கை வரலாறு

எனது அறிவோடு அறிவாய் உயிரோடு உயிராய்க் கலந்து கொண்டு அன்பு காட்டும் என் நண்பர்கள், மாணவர்கள் பலர் விருப்பப்படி எனது வரலாற்றை யானே எழுதுகிறேன். எனது வரலாற்றை முழுமையாக அறிந்துி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையோர்கள் உள்ளம் நிறைவு பெற வேண்டுமென்று கருதி என் கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.

எந்தப் பேராற்றலுடைய சக்தியின் அகத்திலே பல கோடி அண்டங்கள் மிதந்து உருண்டு ஓடி இயங்கிப் பேரியக்க மண்டலமாக அமைந்திருக்கிறதோ, அந்த எல்லாம் வல்ல பெரு நிலையை நினைவுகொண்டு எனது வரலாற்றை யானே எழுத முற்படுகிறேன்.

எல்லா உயிர்களுக்கும் அமைத்தது போன்றே, எனக்கும் யான் பிறக்கும் போதே என் வாழ்நாட்கள் முழுமைக்கும் தேவையானவற்றை எல்லாம் அமைத்து எனது பிறப்போடு இணைத்து வைத்திருக்கும் தெய்வீக ஒழுங்கமைப்பை, அதன் பெருமையை நினைந்து, நினைந்து, கனிந்து, கனிந்து, மகிழ்ந்து, மகிழ்ந்து, என் வரலாற்றை நண்பர்களுக்குக் கூற விழைகிறேன்.

எந்த மனித சமுதாயம் என்னை உருவாக்கி, இந்த உலகில் பலவிடத்திலும் தோன்றும் பொருட்களை எனது வாழ்வின் வளத்திற்காகத் தந்து என்னை வாழ வைக்கின்றதோ, அந்த அன்புச் சமுதாயத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்தும், அதனை உளம் நிறைவோடு வாழ்த்தியும், என் வாழ்கைக் குறுப்புகளை வரையத் தொடங்குகிறேன்.

தங்கள் உயிரிலும் உடலிலும் பங்கு பிரித்து, ஒன்று கூட்டி, என் உடலாக மலர்த்தி, வளர்த்து, இவ்வுலகுக்கு எனை அளித்த என் அருமை அன்னையையும் தந்தையையும் வணங்கி, அவர்கள் எனக்காக ஏற்ற துன்பங்களை நினைந்து நினைந்து, கசிந்து உருகி, என் வாழ்க்கை வரலாற்றினை எழுதத் தொடங்குகிறேன்.

எழுத்தறிவும், தொழிலறிவும், இயற்கைத் தத்துவ அறிவும், ஒழுக்கப் பழக்கங்களும், உள்ளுிணர்வும், தவமும் அறிவித்த எனது, ஆசிரியர்கள் எல்லோருடைய தாள்களையும், உள்ளத் தமர்த்திப் பணிவோடு வணங்கி, எனது வாழ்வின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நண்பர்கள் அறிய எழுதத் தொடங்குகிறேன்.

என் வாழ்க்கைத் துணைவிகளாகி, எனது இன்ப துன்பங்களில் கூட்டு சேர்ந்து, எனக்கு ஏற்ற தொண்டாற்றி உதவி புிரிந்து வரும் என் மனைவியர் இருவரையும், உளம் நிறைவோடு வாழ்த்தி, எனது கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.


எனது வாழ்க்கை விளக்கம் - குழந்தைப் பருவம்

எனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாது. ஆகையால் என் மூத்த அக்காள் வாயிலாகக் கேட்டறிந்தபடி எழுதுகிறேன்.

இந்த வரலாற்றில் வரும் சில நிகழ்ச்சிகளை என் அன்னையே எனக்குச் சொல்லியும் உள்ளார்கள்.

இந்திய நாட்டில் சென்னை மாநிலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி என்னும் பெயருடைய சிற்றூர்தான், நான் பிறந்த ஊர். என் அருமை அன்னையின் பெயர் சின்னம்மாள். என் மதிப்பு மிக்க தந்தையின் பெயர் வரதப்ப முதலியார். செங்குந்தர் குலம். என் தந்தை கை நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். என் பெற்றோருக்கு நான் எட்டாவது குழந்தை. எனக்கு முன்னர்ப் பிறந்த ஆண் மகன், ஏழாவது வயதில் இயற்கை எய்தி விட்டான். எனக்கு முன் பிறந்த பெண்கள் ஆறுபேர். அவர்களில் இப்போது மூவர்தான் உள்ளனர். அவர்கள் பெயர்கள் முறையே கற்பகம், சின்னம்மாள், நாகம்மாள். எனக்கு இளையவன் ஒருவன். அவன் பெயர் தெய்வசிகாமணி. இப்போது சைதாப்பேட்டையில் வாழ்ந்து வருகிறான். இந்தக் குறிப்புகளை விளக்கும் கவிகள் கீழே உள்ளன. படியுங்கள்.

“கோயில்குளம் சென்று பலநோன்பு நோற்றுக்குலத்திற்கோர் மகன் வேண்டித் தவம்புரிந்ததாயின் பெயர் சின்னம்மாள்; பரம ஏழை;தந்தை பெயர் வரதப்பன்; இவர்களுக்குஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினொன் றாண்டில்,ஆகஸ்டு பதினான்கு திங்கள் காலை,போயின நூற்றிருபத்தியொரு விநாடிபிறந்தேன் யான்; கூடுவாஞ்சேரி ஊரில்”

“மீன இராசிச், சிம்ம இலக்கனத்தில்,மேடத்தில், இராகு சனி செவ்வாய் நிற்க,பானு கடகம் புதனோ இலக்கினத்தில்பலமிழந்து கன்னியிலே சுக்கிரன் நிற்க,வானகுரு கேது துலா இராசி நிற்க,வந்த உத்திரட்டாதி மீன் சனி திசையில்,போன மிச்சம் மூன்றாண்டு, ஐந்து திங்கள்,பொழுதைந்து; இதுவே என் பிறந்த காலம்.”

“எனக்கு முன்னம் பிறந்தோர்கள் பெண்கள் ஆறுஏறுஒன்று இருபெண் ஓர் ஆண் இறந்தார்மனக்கவலை வறுமை இவைக் கிடையே வாழ்ந்து,மகனாக எனைப் பெற்றோர், மறந்தார் துன்பம்;தனக்கில்லா விடினும், தன் மக்கட் கிட்டுத்தாய்க்கடமை செய்வோரில் தலை என் அன்னை;இனத் தொழிலாம் கை நெசவில் ஈடுபட்டுஇரவுபகலாய் உழைத்தார் எனது தந்தை.”

ஆறு பொண்களைப் பெற்ற பெற்றோர்கட்கு, ஏழாவது ஆண் மகவு பிறந்து, அதுவும் ஏழு வயதில் இறந்துவிட்டால், அவர்கள் மனம் எவ்வாறிருக்கும்? எப்போதும் தெய்வத்தை நினைந்து நினைந்து உருகினார்கள். பல நோன்புகளை நோற்றார்கள். தரையை மெழுகி, சாப்பாடு அதன் மேல் போட்டுக்குனிந்து வாயினால் சாப்பிடும் ஒரு நோன்பைக்கூட சிலநாள் என் அன்னை கடைப்பிடித்ததாகச் சொன்னார்கள். என் பெற்றோர் பக்தியில் ஆழ்ந்தவர்கள். அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பதாக வேண்டிக்கொண்டால், ஆண் மகவு பிறக்கும் என்று யாரோ சொன்னார்களாம். கூடுவாஞ்சேரியில் அப்போது அரசு வேம்பு இணைந்த மேடை கிடையாது. என் தந்தையார் ஒரு அரச மரச் செடியையும், வேம்பு மரச் செடியையும் தேடிக் கொண்டுவந்து, கூடுவாஞ்சேரிக் குளக்கரையில் மேற்கு பக்கத்தில் வைத்து வளர்த்தார். அதை வளர்க்க அவர் பட்ட தொல்லைகளை ஒரு நாள் விளக்கிக் கூறினார். என் கண்களில் நீர் கலகலவென்று சொரிந்தது. அந்த இரண்டு செடிளும் மரமாகும் வரைக்கும், ஒரு ஏழை நெசவாளி தனது பிழைப்பிற்குத் தொழில் செய்து கொண்டே, அவற்றை காவல் காத்துத் தண்ணீர் ஊற்றி வரவேண்டுமெனில் எவ்வளவு உழைப்பு உழைத்திருக்க வேண்டும்? அந்த மரங்கள் வளர்ந்தன. இப்போது கூட, நான் பார்க்க நேர்ந்தால், அவை ஏதோ என்னோடு பேசுவதாகவே தோன்றுகிறது. ஆலய வழிபாட்டிலும், மதச் சடங்குகளிலும் உள்ள தேவையற்ற செயல்களை விளக்கி அவற்றை ஒழித்துத் தெளிவோடு வாழவேண்டும் என்று சீர்திருத்தம் பேசும் என்னை நோக்கி, அந்த மரங்கள் உங்கள் பெற்றோர் எங்கள் வாழ்வோடு, உனது பிறப்பை இணைத்து வைத்தனர் என்று கூறுவது போல், ஒரு நினைவு எழுகின்றது. அவர்கள் உள்ளத்தின் நிலை அது. சிம்ம லக்கினத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று, அறிந்த எனது தந்தைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஊர் முழுவதும் சர்க்கரை வழங்கி அவர் உள்ளப் பூரிப்பை வெளிகாட்டினார். குழந்தைப் பருவத்தில் மிகவும் அழகாக இருந்தேனாம். நான்கு வயதிற்குமேல் நடந்த சம்பவங்கள்தான் எனக்குச் சுமாராக நினைவுக்கு வருகின்றன. என்னைக் கீழே நடக்க விடமாட்டார்கள். என் அன்னையாரும், தந்தையாரும் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நான் எந்த உவமைகொண்டு கூறுவேன். மூன்று வயதில் ஒருநாள் என்னைத் தனது வயிற்றின் மீது கிடத்திக்கொண்டு, மல்லாந்து படுத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் என் அன்னை. அப்போது நான் முன்னோக்கி விரைவாக அவர்கள் வாயில் தலையால் மோதிவிட்டேனாம். முன் பல்லில் ஒன்று பெயர்ந்து விட்டதால், இரத்தம் கொட்டிக் கொண்டிருந்ததைக் கூடப் பாராமல், தனது வாயைப் பொத்திக்கொண்டு குழந்தை தலையில் அடிபட்டிருக்குமே, எவ்வளவு வலி குழந்தைக்கு இருக்குமோ என்று கதறி அழுதார்களாம். என்னைக் கீழே கிடத்திவிட்டுத் தூங்கினால், எறும்பு கடிக்குமோ என்று வயிற்றின் மீது போட்டுக்கொண்டு தூங்கினார்கள் என்றால், ஒரு மகனுக்காக ஒரு தாய் ஆற்றும் தொண்டு எத்தகையது? தாய் அன்புக்கு இணையாகச் சொல்லக்கூடிய ஒன்று வேறு ஏதும் உண்டா?


எனது வாழ்க்கை விளக்கம் - பள்ளிப் பருவம்

எனக்கு ஐந்து வயது நிரம்பியது. என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதைப் பற்றி, நாள்தோறும் என் பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழ்மையின் அடிதளத்தில் அவர்கள் பொருளாதார நிலை எனினும், ஒரு ஆண் குழந்தை அவர்களுக்கு இருக்கிறது என்ற நினைவில், மகிழ்ச்சியின் உச்சத்தில், என் பெற்றோர் வாழ்ந்து வந்தனர். என்னிடம் அவர்கள் கொண்டிருந்த பாசத்தை நான் எவ்வாறு விளக்குவேன். அந்த வயதில் அது பாசமென்றுகூட எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்ப்பார்கள். புன்னகை பூக்கும் அவர்கள் முகத்தில், நானும் சிரிப்பேன். உடனே என்னை வாரி அணைத்துக் கொள்வார்கள்; இந்த நிகழ்ச்சிகள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன.

ஐந்து வயது வரையில் எனக்குச் சோற்றை ஊட்டியே வளர்த்தார்கள். என் அன்னைதான் என்னைத் தூக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டுவார்கள். கோழி, காக்கை, பல்லி இவற்றை நேரில் காட்டுவார்கள். குரங்கு, யானை, புலி, கரடி இவற்றையெல்லாம் கதைகள் மூலம் வரவழைத்துக் காட்டுவார்கள். அடிக்கடி அவர்கள் சொன்ன “கஜேந்திர மோஷம்” என்னும் கதை என்னைக் கூடுதலாகச் சோறு சாப்பிட வைக்கும். மற்ற கதைகளைவிட அந்தக் கதையில்தான், நான் அதிகமாக மயங்கி விடுவேன். ஒரு பெரிய குளம், அதிலே வாயைத் திறந்து கொண்டு நிற்கும் முதலை, தண்ணீர் குடிக்க வரும் பெரிய யானை, யானையின் காலை முதலை கவ்விக் கொள்வது, யானை “ஆதிமூலமே” என்று அலறுவது, ஆகாயத்திலே சங்கு சக்கர தாரியாக மகாவிஷ்ணு நின்று கொண்டு கையை ஆட்டுவது, இந்தக் கற்பனைக் காட்சிகள் எனது பிஞ்சு உள்ளத்தில் ஆழ்ந்து பதிவு கொண்டன. நான் பல கேள்விகள் எழுப்புவேன். எனக்கு யானை மீதுதான் அதிக இரக்கம்; பாசம். பாவம்! யானை ஏனம்மா முதலையிருக்கும் குளத்திற்கு வந்தது? அந்த முதலையை யாரும் அடித்துத் துரத்தவில்லையா? யானைக்கு வேறு குளம் தண்ணீர் குடிக்கக் கிடையாதா? அந்த யானைக்கு அம்மா அப்பா இல்லையா? இவ்வாறெல்லாம் வினாக்கள் எழும். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டே, ஒரு வாய் சோற்றை உள்ளே தள்ளுவார்கள். என் அன்னை ஒரு அளவு வைத்திருந்தார். அந்த அளவுப்படி நான் சாப்பிட்டு விட்டால், கதைகள் காட்சிகள் எல்லாம் முடிந்து விடும். ஆயினும் எனக்கு மட்டும் “கஜேந்திர மோஷம்” உள்ளத்தில் திரும்பத் திரும்பக் காட்சி அளித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கதையைப் பற்றி எனது ஏழு வயதில் ஒரு முடிவு கிடைத்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.


எனது வாழ்க்கை விளக்கம் - பள்ளிக்கூட நுழைவு, பிள்ளையார் பூசை


பள்ளிக்கூட நுழைவு

1916-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தை என் தந்தையார் எதிர்பார்த்திருந்தார். அவருக்கு ஒரு சோதிட நண்பர் எதிர் வீட்டில் இருந்தார். அவரிடம் சென்று நேரம் குறித்துக் கொண்டார். எனக்கு ஒரு தொப்பி, சட்டை, துணி இவையெல்லாம் புதியதாக வாங்கி வைத்திருந்தார்கள். அவர்கள் பொருளாதார நிலையில் இவற்றையெல்லாம் எவ்வாறு வாங்கினார்களோ? அதற்கு அவர்கள் எடுத்த முயற்சி அவர்களுக்குத்தான் தெரியும். எனக்கென்ன தெரியும்? ஏழ்மையோ, கடனோ முதலோ ஏதும் எனது உள்ளத்தில் அப்போது எவ்வாறு இடம்பிடிக்கும்? கடன் என்ற ஒரு மாய விலங்கில் தன்னை மனிதன் மாட்ட வைத்துக் கொள்ளாத பருவம் அதுதானே! ஏழ்மை என்ற தாழ்வு மனப்பான்மை கூட, அப்போது ஏது? அப்பா அம்மா காட்டும் பரிவே பெரும் செல்வமாகவன்றோ குழந்தை வயதில் இருக்கின்றது? மற்றெந்தச் செல்வமும் அந்த இன்ப ஊற்றுக்கு இணையேது?


பிள்ளையார் பூசை

குறித்த நேரத்தில் என்னைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். நாள்தோறும் அக்கோயிலை என் தந்தையாருடன் சுற்றி வருவது வழக்கம். என் தந்தையார் இரண்டு கைகளாலும் குட்டிக் கொண்டு, கைகளை மாற்றிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட காட்சி, இன்னும் எனது உள்ளத்தில் இனிமையான நினைவாக இருக்கின்றது. நானும் குட்டிக் கொண்டேன். எனினும், நான் முதல் முதல் பள்ளிக்கூடம் போவதற்காகத் தொப்பி, புதுத் துணி, சட்டை இவற்றோடு கோயிலுக்குப் போய், அந்தப் பிள்ளையாரைப் பார்த்தபோது அன்று ஒரு புதுமையாகவே இருந்தது. பிள்ளையார் என்னை மகிழ்ச்சியோடு பார்த்து, ஆசி கூறுவது போலவே, எனது கற்பனை இருந்தது. என் தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தேன். நான் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பிள்ளையாரை வணங்கிய போது தேங்காய், பழம், சரக்கரை எல்லாம் வைத்து என் தந்தை விநாயகரை வேண்டிக் கொண்டார். அந்தச் சிறு வயதிலேயே சில துதிப்பாடல்களை எனக்குச் சொல்லி வைத்திருந்தார். மழலை மொழியில் அடிக்கடி நான் பாடுவேன். அதைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்தார்கள் எனது சிறுவயதில். யானோ இப்போதுகூட அவர்களை நினைத்தால், என் கண்களில் நீர் ததும்புகின்றது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர்கள் கடைசி வரையில் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து விடுவிக்கும் வயதும், சூழ்நிலையும் கிட்டியபோது, அவர்கள் தெய்வங்களாகி விட்டார்கள். எனது 22 வயதில் தந்தை இயற்கை எய்தினார். அன்னை எனது 35-வது வயதில் தெய்வமாகி விட்டார். அன்னை மாத்திரம் கடைசி காலத்தில், ஒரு பத்தாண்டு காலம் ஒருவாறு பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட்டு, இருக்க முடிந்தது.

இந்த இடத்தில் என் தந்தை அன்னை இருவரைப் பற்றிச் சில குறிப்புகள் கொடுக்க விரும்புகின்றேன்.


பெற்றோர் மேன்மை - 1 (Greatness of Parents -1)

இரண்டு பேரும் ஊருக்குப் பொதுத் தொண்டர்கள். எந்த வீட்டில் எவர் நோயுற்றிருந்தாலும், அங்கு என் தந்தை அடிக்கடி போய், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். நாடி பார்ப்பதில் நிபுணர். கையில் மருந்து கிடையாது. எனினும் மூலிகை மருத்துவம் அவருக்கு நன்றாகத் தெரியும். நாட்டுச் சரக்குகளைக் கொண்டே கஷாயம், கலிகம், சூரணம் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்து வருவார். அவர் எவரிடமும் மருந்துக்காகக் காசு வாங்கியதே இல்லை. எனது அன்னை தந்தை இருவருக்குமே படிக்கத் தெரியாது. எப்படியோ என் தந்தை தமிழில் கையொப்பமிடத் தெரிந்து கொண்டார். “கூ.நா. வரதப்ப முதலியார்” என்று, அவர் கையொப்பமிடச் சுமார் ஐந்து நிமிடங்களாவது ஆகும். அவர் பெயரில் அடங்கிய பதினான்கு எழுத்துக்களும், ஒன்றைப் பார்த்து ஒன்று கூத்தாடுவது போல் இருக்கும். சிரசாசனம் தவிர மற்ற ஆசனங்களில் பல அந்த எழுத்துகளில் காட்சி அளிக்கும். அவர் கையெழுத்திடும் போது நான் இருக்க நேர்ந்தால் எனக்குச் சிரிப்பு தாங்காது. என் தந்தைக்குக் தெரியாமல் சிரிப்பேன். சில சமயம் மறைவாக ஓடிப்போய்ச் சிரிப்பைச் சமாளித்துப் பின்னர்வருவேன். அவர் கோபங்கொள்ளமாட்டாராயினும், நான் அவரிடம் வைத்திருந்த மதிப்பு அவ்வாறு.

எந் தந்தை, ஏழை என்பதுதான் ஒரு குறை. சத்தியந்தவறாதவர். பொய் பேசவே மாட்டார். ஒருவரையும் மனம் நோகப் பேசமாட்டார். பண்பாடு ஒழுக்கம் இவற்றின் உச்சத்தில், அவர் ஆயுட்காலம் வரையில் வாழ்ந்தார். தனது 63-வது வயதில் அவர் முடிவு எய்தினார்.

அவரைப் போலவேதான், என் அன்னையும் ஊர்த் தொண்டாற்றி வந்தார். ஊருக்கெல்லாம் அவர் அன்னைதான். திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் எந்த நிகழ்ச்சி ஊரில் எவர் இல்லத்தில் நடந்தாலும், என் அன்னையின் தொண்டு அங்கெல்லாம் சிறந்து விளங்கும். குழந்தை மருத்துவம், பெண்கள் மருத்துவம் இவற்றில் கைதேர்ந்தவர் எனது அன்னை. அவர் ஆயுட்காலம் வரையில் எவரிடமும் மருத்துவத்திற்குக் காசு வாங்கியதில்லை. இருவருமே சலியா உழைப்பாளிகள். இத்தகைய தியாக சீலர்களுக்கு நான் மகனாகப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன். நினைந்து நினைந்து மகிழ்சிக் கண்ணீர் பெருக்குகிறேன்.

நான் படித்த பள்ளி, கிறிஸ்துவ மிஷினைச் சேர்ந்தது. இன்னும் கூடுவாஞ்சேரிக் குளத்தின் வடகிழக்கு மூலையில், அந்தக் கட்டிடம் இருக்கிறது. எனக்கு எழுத்தறிவு தந்த அந்தத் திருக்கோயில் இன்று கிறிஸ்துவர்கள் ஆலயமாகத் திகழ்கின்றது.

நான் பள்ளிக்கூடம் செல்லும் போது என்னைக் கூடவே அழைத்துப் போய் விடுவார் என் தந்தை. வரும்போது சில நாள் அங்கு வந்து அழைத்து வருவார். எனக்குப் படிப்பில் மிகவும் விருப்பமாகவே இருந்தது. அப்போது புளியங் கொட்டைகளைக் கொடுத்து அவற்றை அடுக்கி “அ, ஆ” போடச் சொல்வார்கள். மிகவும் பொறுமையோடும் யூகத்தோடும் கொட்டைகளை அடுக்கி எழுதுவேன். என்னிடம் ஆசிரியர்களுக்கு மிகவும் பிரியம். நான் பயபக்தியோடு நடந்து கொள்வேன். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் படிப்பு உயர்வு. இவ்வாறு எட்டு வயது முடிந்தது. நான் மூன்றாவது வகுப்புப் படித்து முடித்து விட்டேன். என் தந்தைக்குப் பிறர் உதவியின்றி நெசவுத் தொழிலைச் செய்ய முடியவில்லை. எனவே, என்னை வீட்டிலேயே நிறித்திக் கொண்டார். பள்ளிப் படிப்பு மூன்றாவது வகுப்போடு முடிவு பெற்றது.

ஏழாவது வயது முதலே நான் நெசவுத் தொழிலில் சில்லரை வேலைகளில் காலை மாலை ஈடுபட்டிருந்தேன். பாவு போடுவதில் என் தந்தைக்கு உதவியாக இருந்தேன். நூல் இழைப்பதில் என் அன்னைக்கு உதவினேன். பள்ளிக்கூடம் விட்டு நின்றபின் நெசவு நெய்யக் கற்கலானேன். என் உயரம் தறி நெசவிற்குப் போதவில்லை. லுங்கி நெசவிற்குக் குழித்தறிகள் தான் பொருத்தமானது. தறிக்குழியில் இறங்கினால் தலை மாத்திரம்தான் வெளியே தெரியும். எட்டி எட்டிக் கைக்கயிறு பிடித்து இழுத்து நாடாவை ஓட்டுவேன். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் மட்டும் நெசவில் எனக்கு அனுமதி. அதுவும் நான் பழகிக் கொள்ள மிகவும் விருப்பம் காட்டியதால். மேலும் இரண்டு ஆண்டுகள் சென்றது. நன்றாக நெசவு நெய்யக் கற்றுக் கொண்டேன். அந்த வயதில்தான், நான் என் பெற்றோரின் வறுமையை உணரும் நாள் ஒன்று வந்தது. அந்த நாள், அன்று நடந்த நிகழ்ச்சி, என்னைக் கண்கலங்கி உருக வைத்தது. என் உள்ளத்தில் ஆழப் பதிந்த அந்த நிகழ்ச்சிப் பதிவுதான், என்னைப் பிற்காலத்தில் ஒரு கடமை வீரனாக மாற்றியது என்றால், அது மிகையன்று. இரவு பகலாக எனது முயற்சியை ஓங்கச் செய்து பல துறைகளில் அறிவு பெறச் செய்த உருக்கமான நிகழ்ச்சி தான் அது. அதைப் பற்றி பிற்காலத்தில் நான் எழுதிய கவியிலும் குறிப்பு இருக்கிறது.


கவி

“ஐந்து வயதில் பள்ளி சென்றேன்; எட்டுஆண்டில் மூன்றாம் வகுப்பு முடித்து விட்டேன்;நொந்து வறுமை மீறிப் பருத்திப் பஞ்சுநூல் நெசவில் எனைப் பெற்றோர் பழக்கிவைத்தார்;இந்தத் தொழிலைச் செம்மையாகக் கற்றுஏதோ ஓர் அளவுக்குக் கூலி பெற்றேன்;வெந்து உள்ளம் உருகி ஏழ்மை தோன்றும்விதம், தெய்வம், உயிர் இவற்றைப் பற்றி ஆய்ந்தேன்;

பெற்றோர் மேன்மை - 2 (Greatness of parents - 2)


எனக்கு காலையில் ஒரு தம்பிடி தோசை, சிறிது தயிர், ஒரு சிறு கட்டி வெல்லம் உணவாகக் கிடைக்கும். காலை சுமார் 9 மணிக்குக் கேழ்வரகு கூழ் கரைத்துக் கொடுப்பார்கள். அப்போது அது அமிர்தம் போல உடலுக்கும் உள்ளத்திற்கும் இனிமையாகவே இருந்தது. பகலில் சோறு சில நாட்களில் கிடைக்கும். சில நாட்களில் கூழ்தான் கிடைக்கும். மாலையில் நிச்சயமாக அரிசிச் சோறுதான்.

எனக்குப் பத்து வயதில் ஒரு நாள் பகல் 12-45 இருக்கும். நான் தறியில் நெசவு நெய்து கொண்டிருந்தேன். என் அன்னை வழக்கமாகப் பகல் 12-30-க்கு என்னைச் சாப்பிட அழைப்பார்கள். அன்று அதுவரையில் என்னைக் கூப்பிடவில்லை. நாங்கள் அப்போது ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்திருந்தோம். தறிகள் இரண்டு மேற்குப் புறம். நடுவே நாலடி உயரமுள்ள ஒரு சுவர். அதன் மறைவில் சமையல் சாப்பாடு எல்லாம்- சமையல் செய்யும் இடத்தில், என் அன்னையும் தந்தையும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என் அன்னை தனது முந்தானையை எடுத்துத் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்-நான் பார்த்து விட்டேன். என்னால் பொறுக்க முடியவில்லை. அந்த நாள் வரையில் என் அன்னை கண் கலங்கியதை யான் கண்டதே இல்லை. தறியை விட்டு எழுந்து துணியை எடுத்து உடுத்திக் கொண்டேன். நேராக என் அன்னையும் தந்தையும் இருந்த இடத்திற்கு வந்தேன். அம்மாவைப் பார்த்தேன். கண்களில் நீர் பெருக ஏனம்மா அழுகிறீர்கள். சொல்லம்மா! சொல்லம்மா! என்று, அவர்களைச் சேர்த்துக் காலைக் கட்டிக் கொண்டு வினவினேன். என் அன்னை என்னை இறுக அணைத்துக் கொண்டு “என் செல்வமே! நாங்கள் உன்னைத் தவமா தவமிருந்து பெற்றோமடா! இன்று உன் பசிக்கு ஒரு சோடுதலைக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கோவென்று கத்தி விட்டார்கள். நானும் வாய்விட்டு அழுதுவிட்டேன். என் தந்தையோ என் வலது கையைப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு அழுதுவிட்டார்.

அவர்கள் இருவரது வயிறும் ஒட்டிப் போயிருந்தது. உணவு கிட்டாமல் பட்டினி கிடந்திருந்தனர். சிறிது நேரம்தான் இவ்வாறு கழிந்தது. உடனே என்னை விடுவித்து என் தந்தையாரைப் பார்த்து “நீங்கள் சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ஒரு தகர சோடுதலையைக் கையில் எடுத்துக் கொண்டு போனார்கள். சில நிமிடங்களில் அந்த சோடுதலை நிரம்பக் கேழ்வரகு கூழோடு திரும்பி வந்தார்கள். “கண்ணா, இதைச் சாப்பிடுடா” இன்றைக்குச் சாயங்காலம் சீக்கிரமாகச் சோறாக்கி உனக்குச் சாப்பிடக் கொடுக்கிறேன்” என்றார். நான் அந்தக் கூழை உடனே குடிக்கவில்லை. நீங்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் செய்தேன். “நீங்கள் பசியோடிருக்கும் போது நான் மட்டும் எப்படியம்மா சாப்பிடுவேன்” என்றேன். எனக்கு ஆறுதல் கூறி ஒரு சிறு விழுங்கு வீதம் என் தந்தையும் அன்னையும் இருவரும் குடித்தார்கள். பின் நான் அந்தக் கூழை-என் வாழ்வில் நீங்கா நினைவாக இடம்பெற்ற அந்த ஒரு சிறிய தகர சோடுதலைக் கூழைக் குடித்தேன். பிறகு அம்மா அப்பா அருகில் உட்கார்ந்து கொண்டு, ஏன் நமக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்ற காரணத்தை வினவி, பல கேள்விகள் கேட்டேன். எனக்கு எவ்வாறு அவர்கள் வறுமையைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்? ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிச் சரிப்படுத்தினார்கள். ஆனாலும், அன்று வறுமை என்ற நிலையைப் பற்றிச் சிறிது புரிந்து கொண்டேன். இனி என் பெற்றோருக்கு வறுமை நீங்க, நான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்தேன். அதிக அளவு நெசவு நெய்தால், கூலி அதிகம் கிடைக்கும். அதைக் கொண்டு வறுமையைப் போக்கி விடலாம் என்று தெரிந்தது. அன்று முதல் இரவும் பகலாய் நெசவுத் தொழிலைச் செய்தேன். இரண்டு நாட்கள் ஒருவர் செய்யும் வேலையை ஒரே நாளில் திறமையோடு செய்து முடிக்கும் ஆற்றல் எனக்கு வந்து விட்டது. உழைத்தேன், ஓயாமல் உழைத்தேன்.

Sunday, December 08, 2024

நினைவுகள்… -அன்புசிவா

நான் உன்னை மட்டும் எவ்வளவு 

விரும்பினேன் என்பதையே 

நீ மறந்தும் விட்டாய்… 


நான் செலவிட்ட நேரம் 

நான் சொல்லிய கவிதை  

நான் முகிழ்ந்த காதல் 

நெகிழ்ந்த என் மனம் என 

கடந்த காலம் 

எதற்கும் இனிப் பொருளில்லை!

சம்பிரதாயமாக உன்னை 

சந்தித்து இனி யாரோ போல்! 

புன்னகைத்து 

கைகுலுக்கி 

கடக்க மறுக்கிறேன்.


போகிறது போகட்டும் இனி 

உன் அருகில் 

நான் இருந்தென்ன…

நான் ஒழிந்தென்ன…


என்றோ நிகழ்ந்திட்ட  

ஓர் அன்பை இன்று மீண்டும் 

விளக்கிச் சொல்ல நேரும் 

துர்பாக்கியங்கள் 

இப்பூமியில் 

எவருக்கும் 

இனி நிகழ வேண்டாம்.

Friday, September 20, 2024

பாரதியும் வாழ்வியலும்

 

முனைவர் பூ.மு. அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்,

ஜேப்பியார் பல்கலைக்கழகம்,

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.

பேச:98424 95241.

 

மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுக்கொரு தலைமகன் என பட்டம் பெற மட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையானஅடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுச்சூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓட ஓட விரட்டி, செத்த பின்னால் சிலை வைத்து வணங்கும் உயர்ந்த அறிவு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது?

6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில் தான் தமிழைக் கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், வங்கம் என பல மொழிகளை படித்ததனால் தான் திமிராகச் சொன்னார்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை எங்கும் காணோம்", உண்மைதான். பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும்,  அது அவருக்கு தெரிந்தது.

தமிழைக் கற்றார் தமிழ்க் கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார். உண்மை உணர்ந்து பெண் விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் எழுதிக் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடப்பட்டிருப்பார்

ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலப்புலமை அப்படி. ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டு கொண்டிருக்கும். அவ்வளவு ஏன்? ஆசிரியப்பணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான், அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைக்காட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது.

முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.

வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குத்தான் பொருந்தும், பிரிட்டிஷார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூகக் கொடுமைகள் விரட்டியது ஓடினார், ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.

ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் "நல்லதோர் வீணை செய்தே" என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, "சக்தி கொடு" என கெஞ்சத்தான் முடிந்தது,  அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசக்கூட யாருமில்லை, ஒதுக்கினார்கள், விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக் கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.

அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை. உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழ விடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும், வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதப்போரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று, கனவு வேறு, கடமை வேறு, வாழ்க்கை வேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான..சியின் சிறைக்கொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிக்காலமும்.

விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார், விறகு பொறுக்க யானை,  எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.

இறுதிக்காலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழத்தெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்திப்பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை. ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911இல் ஜார்ஜ் மன்னருக்காகதாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கியஅதே பாடல், "ஜன கண மன" எனும் அந்த பெரியப்பாடல், அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 2 நிமிடமாக சுருக்கி "இந்திய தேசிய கீதம்" என அறிவித்து விட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்.

இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும், வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுப் கொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.

ஆனால் "தாயின் மணிக்கொடி பாரீர்" அல்லது "வந்தே மாதரம் என்போம்" போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய "நோபல் பரிசு", பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என பாடிக்கொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது "தேசத்துரோகி" பட்டமும் சிறைத்தண்டனையும்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் "கணல்" அல்லது "உணர்ச்சி" அவர் பாடலில் இல்லை.

இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்துக் கொண்டிருக்கின்றது. அவரது கனவுப்படியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை என்றால் 1947இல் இறந்திருப்பார். பெண் விடுதலைக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும், சாதிக்கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.

அவர் பாஷையில் சொல்வதென்றால் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு". அவர் வைத்த அந்ததீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவது அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிப்பட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மி குலவி தூக்க வைக்கும்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாகவாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதை பாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிப்படும் இந்தியருக்காக‌.

உலகின் கஷ்டத்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி.

இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும் பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.

கோயிலின் தெய்வம் கோபப்படவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம் போல பழம்கொடுக்க "அப்பனே கணேசா" என அருகில் சென்ற பாரதியை லேசாக தாக்கிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11இல் காலமானார்.

பாரதியின் கடைசி காலங்களை அருகிருந்து பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள். அனுதினமும் கோவிலுக்கு சென்று "அப்பனே கணேசா உன்னை வணங்குகின்றேன்" என யானைக்கு பழம் கொடுப்பது பாரதி வழக்கம். அன்றும் அப்படித்தான் பழம் கொடுத்திருகின்றார், யானை தள்ளிவிட்டிருக்கின்றது. அதற்கு மதம் பிடித்த காலமுமல்ல, அது அவரை வேண்டுமென்றே தாக்கவுமில்லை மாறாக எல்லா நாளும் விளையாடுவது போல விளையாடியிருக்கின்றது, ஆனால் அடிபட்டு பாரதி விழுந்துவிட்டார்.

பாரதி விழுந்து அவரை எல்லோரும் சூழ்ந்திருக்கும் பொழுது அந்த யானை மிகுந்த வருத்தத்துடன் அவர் அருகே நின்றதாக குறிப்புகள் சொல்கின்றன‌. அதற்கு அவன் மகா கவிஞன் எனத் தெரியுமா? தேசாபிமானி தெரியுமா?. பழம் கொடுத்து கொஞ்சுபவன் என்ற ஒன்றைத் தவிர அதற்கு என்ன தெரியும்?

யானை தாக்கியதில் இருந்தே அவருக்கு சுகக்கேடு தொடங்கி கொஞ்சநாளில் மரித்தும் போனார் அந்த அறிவுச் சுடர் முதலில் அவனை தாக்கியது அவனின் பார்ப்பனசமூகம், அடுத்து தாக்கியது ஆங்கிலேயன், அடுத்தடுத்து தாக்கியது அவனின் அறிவை புரிந்து கொள்ளாத சமூகம்.

கடைசியாக அதுவும் விளையாட்டாக தாக்கியதுதான் யானை, ஏற்கனவே மனதால் செத்திருந்த பாரதி அதன்பின் உடலால் செத்துவிட்டான். பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை, இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்தப்பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தக்காரன். 100 வருடங்கள் கழித்து போடப்படும் இசைக்கும் கட்டுப்படும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு. ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேசக் கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தப்பட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன். ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக தமிழக மக்களான நாமும் பெருமை அடையலாம்.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய், இந்தியனாய் அஞ்சலி செலுத்துவோம். வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டப்பட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதற்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கப்பட்டான்.

மத்திய அரசு அவனுக்கு மரியாதை செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன பாடலுக்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது. தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லிச்சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது. தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசியக்கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?

அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், அனைத்து இந்தியர்களும் அதனை படிக்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக கடந்த சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் மோடி.

பாரதிக்கான மிகப்பெரும் அங்கீகாரம் அது, அது இன்னும் தொடரவேண்டும், பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும். நலங்கெட அந்த வீணை புழுதியில் எறியப்பட்டாலும் அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீணை அது.

தமிழ்ச்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசபற்றாளனுக்கு "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அவரின் வரிகளுடன் வீர வணக்கம் செலுத்துவோம்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...